என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது. 

    கொரோனா சிகிச்சையில் இருந்து 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சையில் 11ஆயிரத்து 133 பேர் `டிஸ்சார்ஜ்'ஆகி உள்ளனர். தற்போது 61 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 154 ஆக உள்ளது.
    விராலிமலை அருகே கிணற்று மண்ணை அள்ளிய தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த தேன்கணியூர் அருகே உள்ளது கடைக்கான்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 44). இவரது பெரியப்பா மகன் சின்னையா (65). இவர்கள் விவசாய தொழில் செய்து வந்தனர்.

    இவர்கள் இருவருக்கும் சொந்தமான கிணறு அதே பகுதியில் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த கிணறு தூர் வாரப்பட்டு அதில் தோண்டப்பட்ட மண் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை அள்ளுவதில் அவர்களுக்கிடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில் மணிவேல் நேற்று சின்னையாவுக்கு தெரியாமல் வாகனத்தில் மண்ணை அள்ளிச் சென்றுள்ளார். இதனை அறிந்த சின்னையா மணிவேலிடம் கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக நேற்று இரவு மீண்டும் மணிவேலுக்கும், சின்னையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக கைகளாளும், கட்டையாலும் தாக்கிக் கொண்டனர்.

    இதில் சின்னையா கட்டையை எடுத்து மணிவேலின் நெற்றியில் அடித்ததில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனே அவரது உறவினர்கள் மணிவேலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர், மணிவேல் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவேலை அடித்துக்கொன்ற சின்னையாவை கைது செய்தனர். கொலையுண்ட மணிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிணற்று மண்ணை அள்ளிய தகராறில் உறவினரை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழாநிலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 57). இவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உத்தரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலைச்சிவபுரியில் வீட்டில் நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து வழக்கில் 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியை சேர்ந்தவர்கள் லட்சுமணன் மற்றும் ரமணப்பிரியன. இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் திருச்சி மற்றும் சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டை பராமரிக்க மேலைச்சிவபுரியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் பராமரித்து வந்தார்.

    இதில் சரஸ்வதி கடந்த 18-ந் தேதி வீட்டில் வேலையை முடித்து விட்டு, வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 1½ பவன் தங்கம்,2 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ஒரு இன்வெர்ட்டர், ஒரு பேட்டரி உள்ளிட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளர். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடையம் சேகரிக்கப்பட்டது. மேலும் சேகரிக்கப்பட்ட தடயம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரம்புவயல் வீரப்பன் மகன் பழனியப்பன் (வயது 39) என்பவரது கைரேகை பொருந்தியது. மேலும் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் தேவகோட்டை நித்ரவயல் தேர்போகியை சேர்ந்த சின்னத்துரை மகன் அரவிந்த் (26), ஜெயராஜ் மகன் மணிவண்ணன் (28) ஆகியோருடன் சேர்ந்து லட்சுமணன் வீட்டின் கொள்ளையடித்தை ஒப்பு கொண்டார்.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து பேட்டரி, இன்வெர்ட்டர், 2 கிலோ வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் அனைத்தும் மீட்டு வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். கொள்ளையர்களை துரிதமாக பிடித்த பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு உள்ளிட்ட தனிப்படை போலீசாரை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே வாய் பேச முடியாத மூதாட்டிக்கு ரத்தம் கொடுத்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சிவாவுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி ரத்த தான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 61). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் உடல் நலக்குறைவால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இவருக்கு அவசியம் ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதையறிந்த தன்னார்வலர் அமைப்பினர் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டனர். இதையடுத்து கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான செம்பட்டூர் அரசுப்பள்ளியின் ஆசிரியர் சிவா ரத்தம் அளிக்க முன்வந்தார். அவரது நண்பர் வீரமாமுனிவர் உதவியுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த சிவா ரத்தம் வழங்கினார். சிவாவுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி ரத்த தான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

    பொன்னமராவதி அருகே, மூதாட்டியிடம் 11 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள பகவாண்டிப்பட்டி ஊராட்சி காயாம்புஞ்சை பகுதியை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கழிப்பறை செல்ல வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கு கத்தியுடன் நின்ற மர்ம நபர், பஞ்சவர்ணம் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 11 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் பஞ்சவர்ணம் புகார் அளித்தார். புகாரின்பேரில், மூதாட்டியிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்டனர்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான விசைப்படகு, நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். சமீபத்தில் உருவான புரெவி புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன்பேரில், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    தற்போது நிலைமை சீரடைந்து உள்ளதால் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 273 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சைமன் மகன் கான்ஸ்டன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (38), பாண்டு (50), மோகன் (44) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறை பிடித்தனர்.

    மேலும், அவர்களது விசைப்படகை கயிறு மூலம் கட்டி இலங்கைக்கு இழுத்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரிமளம் அருகே மது விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவை சேர்ந்த கலைச்செல்வன் மகன் அஜய் (வயது 22) என்பவர் அரிமளம் ஒன்றியம் கல்லுகுடியிருப்பில் மாரியம்மன் கோவில் பின்புறத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். 

    இதையடுத்து அரிமளம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியை சேர்ந்தவர்கள் லட்சுமணன் (வயது 62), ரமண பிரியன் (60) சகோதரர்களான இவர்கள் இருவரும் திருச்சி மற்றும் சென்னையில் வசித்து வருகின்றனர். மேலைச்சிவபுரியை சேர்ந்த சரசு என்பவரை வீட்டை பராமிக்க நியமித்துள்ளனர். 

    இந்தநிலையில், நேற்று முன்தினம் சரசு பணிகளை முடித்துவிட்டு மாலையில் வீட்டின் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றுள்ளார். பின்னர் மர்ம நபர்கள் சுற்றுச் சுவர் வழியாக ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து 1½ பவுன் தங்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு இன்வெர்ட்டர், ஒரு பேட்டரி உள்ளிட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று வி்ட்டனர்.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில், பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பூனத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 34). பெயிண்டர். இவர், கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.

    இதுகுறித்து, அந்த சிறுமியின் பெற்றோர், கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி பாக்யராஜை கைது செய்து மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பாக்யராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி டாக்டர் சத்தியா தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
    புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முபாரக் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நெல்லை பைசல் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
    அன்னவாசல் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் சவுந்தர்யா (வயது 20). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து அன்னவாசல் போலீசில் கருப்பையா கொடுத்த புகாரின் அடிப்படையில், மாயமான சவுந்தர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.
    ×