என் மலர்
செய்திகள்

விராலிமலை அருகே கிணற்று மண்ணை அள்ளிய தகராறில் விவசாயி அடித்துக்கொலை
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த தேன்கணியூர் அருகே உள்ளது கடைக்கான்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 44). இவரது பெரியப்பா மகன் சின்னையா (65). இவர்கள் விவசாய தொழில் செய்து வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் சொந்தமான கிணறு அதே பகுதியில் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த கிணறு தூர் வாரப்பட்டு அதில் தோண்டப்பட்ட மண் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை அள்ளுவதில் அவர்களுக்கிடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் மணிவேல் நேற்று சின்னையாவுக்கு தெரியாமல் வாகனத்தில் மண்ணை அள்ளிச் சென்றுள்ளார். இதனை அறிந்த சின்னையா மணிவேலிடம் கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக நேற்று இரவு மீண்டும் மணிவேலுக்கும், சின்னையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக கைகளாளும், கட்டையாலும் தாக்கிக் கொண்டனர்.
இதில் சின்னையா கட்டையை எடுத்து மணிவேலின் நெற்றியில் அடித்ததில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனே அவரது உறவினர்கள் மணிவேலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர், மணிவேல் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவேலை அடித்துக்கொன்ற சின்னையாவை கைது செய்தனர். கொலையுண்ட மணிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிணற்று மண்ணை அள்ளிய தகராறில் உறவினரை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






