என் மலர்
நீலகிரி
- கனமழை பெய்துவரும் பகுதிகளில் தேசிய-மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அவசர காலங்களில் உதவி தேவைப்பட்டால் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரோட்டோரம் நின்ற மரங்கள் பல இடங்களில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்ப ட்டது.
தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் சம்பவ இடங்களுக்கு சென்று மரங்களை அகற்றி வருகிறார்கள். ஊட்டி-எமரால்டு சாலையில் ஒரு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து உயர் அழுத்த மின்கம்பம் மீது விழுந்தது. இதன்காரணமாக மஞ்சனகோரை, முத்தோரை பாலாட், முள்ளிக்கூரை, கப்பத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இரவில் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கின.
சேரம்பாடி-சுல்தான் பத்தேரி சாலையில் கப்பாலா பகுதியில் நள்ளிரவு சாலையோரம் இருந்த பலாமரம் சாலையின் குறுக்கே சாய்ந்து மின் கம்பங்கள் மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது. குந்தலாடி அருகே சாலையோர மரத்தின் கிளைகள் மின்கம்பியில் முறிந்து விழுந்ததது. இதில் அந்த பகுதியில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.
சேரங்கோடு அருகே சின்கோனா பகுதியில் சாலையோர மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் சாலையில் விழுந்தன. அப்போது அந்த வழியாக காரில் சென்ற பாரதிராஜா என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதேபோல மாவட்டத்தின் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கார், ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் வாகனங்களும் சேதம் அடைந்தன.

கூடலூர் அருகே பாண்டியாறு பகுதியில் உள்ள டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதமடைந்தது. அந்த குடியிருப்பில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
தேவாலா, பாண்டியார் டான்டீ, தொழிலாளர்கள் குடியிருப்பில் சிவன் என்பவரின் வீட்டு சுவர் இரவில் இடிந்து சேதம் அடைந்தது.
கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மழை பெய்வதால் பந்தலுார் தாசில்தார் சிராஜூநிஷா, சமூக பாதுகாப்பு திட்டம் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் கவுரி தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் மழையால் நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா காட்சி முனை, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், கேரன்ஹில் ஆகிய சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக இன்றும் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் பகுதிகளில் தேசிய-மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் உதவி தேவைப்பட்டால் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
- நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- நீலகிரிக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதேபோல், கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மசாவட்டங்களுக்கும் இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- அபாயகரமான பகுதிகளை 43 மண்டல குழுக்கள் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
தென்னிந்திய கடலோர பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நிவாரண முகாம்களும் தயார் செய்யப்பட்டு உள்ளது.
மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்புக்குழுவினர் நீலகிரி மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். அவர்களுடன் தீயணைப்பு, வருவாய், காவல்துறையினரும் முகாமிட்டு உள்ளனர்.
மேலும் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. நீலகிரியில் நேற்றும், இன்றும் மழை மிதமான அளவிலேயே பெய்துள்ளது. மழை அதிகரிக்கும்பட்சத்தில் சுற்றுலாதலங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது.
மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் அபாயகரமான பகுதிகளை 43 மண்டல குழுக்கள் கண்காணித்து வருகின்றனர். மழையின் தீவிரத்தை பொறுத்து சுற்றுலாதலங்களை மூடுவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு உடனடியாக அறிவிக்கப்படும். நீலகிரிக்கு சுற்றுலா வர திட்டமிடும் மற்றும் வந்துள்ள சுற்றுலாபயணிகள் மழை சம்பந்தமான வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை அறிந்து கொண்டு அதற்கேற்ப பயணங்களை திட்டமிட வேண்டும் என்றார்.
அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கமாண்டர் கோபிநாத் தலைமையில் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர். கமாண்டர் கோபிநாத் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் 283 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் அபாயகரமான மரங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். பேரிடா் மீட்புக் குழுவினா் 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா். நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடங்களுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளோம். தீயணைப்பு, வருவாய்த் துறையினருடன் இணைந்து அவ்வப்போது மழை வெள்ளம், இயற்கை சீற்றம் குறித்த தகவல்களை பகிா்ந்து வருவதால் அதி கனமழையை எதிா்கொள்ள தயாராக உள்ளோம் என்றாா்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 7 செ.மீ. மழை கொட்டியது. அவலாஞ்சியில் 6 செ.மீ, சேரங்கோட்டில் 5, தேவாலாவில் 5, அப்பர்பவானியில் 4 செ.மீ. மழையும் பெய்து இருந்தது.
கோவை மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்படும் வால்பாறை, மேட்டுப்பாளையம் பகுதிக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர்.
மழை எச்சரிக்கையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் இன்றும், நாளையும் மூடப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பில்லூர் அணையில் நீர்மட்டம் உயரும்போது உபரிநீர் வெளியேற்றம் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமத்தூர் பகுதியில் இருந்து சமயபுரம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சினம்பா ளையம் உள்ளிட்ட ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 19 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வால்பாறை தாலுகா சின்னக்கல்லாரில் 5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
- ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூன் 14) விடுமுறை அறிவிப்புக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 430 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழைக்கு பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மண்சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
சில வாரங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் ஆந்திர கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
மாவட்டம் முழுவதும் 253 பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை கண்காணிப்பதற்கு என மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 430 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ள முகாம்களுக்கு சென்று தங்குமாறும் அறிவுறுத்தி வருகிறது.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மழையில் மண்சரிவு, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள பொக்லைன் எந்திரங்கள், மின்சார வாகனங்கள், மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் உள்ளனர். மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க 1077 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மழை பாதிப்புகள் ஏதாவது இருந்தால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மாவட்டத்தில் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் பேரிடர் உபகரணங்களுடன் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றனர்.
- புலி நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து வருகின்றனர்.
- பொதுமக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
ஊட்டி:
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவனல்லா பகுதியில் உலா வரும் புலி கடந்த சில நாட்களில் இரண்டு மாடுகளை தாக்கி கொன்றது.
பகல் நேரத்தில் உலா வந்த அந்த புலியை சிறுவன் உள்ளிட்ட சிலர் பார்த்துள்ளனர். அச்சமடைந்த பொதுமக்கள், புலியைப் பிடிக்க வலியுறுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து, வனச்சரகர் தனபால் தலைமையில் 20 வன ஊழியர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 24 தானியங்கி கேமராக்கள் வைத்துள்ளனர். மேல்கம்மநல்லி கிராம மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் தங்கள் வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து சென்று வருகின்றனர்.
புலி நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில், நேற்று காலை முதல் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள முட்புதர்களை வன ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில் புலி நடமாட்டம் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முட்புதர்கள் அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தானியங்கி கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகவில்லை. பொது மக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
- 2 நாள் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் நீலகிரியில் மழை பெய்ய தொடங்கியது.
- ஒரு மணி நேரத்திற்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.
ஊட்டி:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், மண் சரிவுகளும் ஏற்பட்டது.
மழையின் தாக்கம் அதிகரித்ததால், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் கோடைசீசன் பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து விட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரியை மழை மிரட்டி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை சற்று குறைந்து இருந்தது. மிதமான வெயில் அடிக்க தொடங்கியதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் 2 நாள் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் நீலகிரியில் மழை பெய்ய தொடங்கியது.
ஊடடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான குந்தா, காந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காற்றுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது.
சூறாவளி காற்றுக்கு ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதிக்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு பின்பு அங்கு போக்குவரத்து தொடங்கியது.
தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் முதல் காந்திப்பேட்டை வரை மரங்கள் விழும் அபாயம் இருக்கிறது.
சாரல் மழையால் காலநிலை மாறி குளிர் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சுவர்ட்டர் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து கொண்டனர். சாரல் மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் காட்டேரி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.இதனை தொடர்ந்து அணை திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நீர் காட்டேரி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகள் காரில் இருந்தபடியே பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- மாணவர்கள் சென்று வர இலவச வாகன வசதி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.
- ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி:
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் ஆங்கில புலமைக்காக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறார்கள்.
இதனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து விட்டது.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
மாணவர்கள் வருகை குறைந்து வரும் நிலையில், பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி வருகின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கீழுர் என்ற பகுதி உள்ளது. இங்கு கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் இந்த பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இதையடுத்து ஊர் பொது மக்கள் மற்றும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் முயற்சியால் பள்ளி 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 42 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை தொடர்ந்து அதிகரிக்க ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
மாணவர்களின் கல்வி நலனில் மட்டும் அக்கறை செலுத்தினால் போதாது என நினைத்த ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தற்போது பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரை செலுத்துவதாக உறுதி அளித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்ந்தால் பள்ளி நிர்வாகம் சார்பில் அந்த மாணவரின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
மேலும் 5-ம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும், ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
6-ம் வகுப்பிற்கு ரூ.5 ஆயிரம், 7-ம் வகுப்பிற்கு ரூ.4 ஆயிரம், 8-ம் வகுப்பு சேர்ந்தால் ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பில் சேர்வோருக்கு ரூ.2 ஆயிரமும் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
இதே பள்ளியில் பயிலும் இந்த மாணவர்கள் 10-ம் வகுப்பு முடித்து செல்லும் போது அந்த டெபாசிட் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1 செட் சீருடை, டிரக் சூட்-1 செட், ஸ்கூல் பேக், காலணி, நோட்டு புத்தகங்கள், மாணவர்கள் சென்று வர இலவச வாகன வசதி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.
தற்போது பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இந்த பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியைகள் மோனிஷா, வள்ளி உள்ளிட்ட ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இதுபோன்று ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க எடுத்து வரும் முயற்சிக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
- இந்தாண்டு கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதிவரை மலர் கண்காட்சி நடைபெற்றது.
- இ-பாஸ் நடைமுறை மேலும் தொடருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் வெளியூர்-வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனாலும் கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் குளிரான காலநிலையை அனுபவிப்பதற்காக மேலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதங்களில் கோடை சீசனை கொண்டாட ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.
மேலும் சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி, புகைப்பட கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை காணவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டு கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதிவரை மலர் கண்காட்சி நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 1.84 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து உள்ளனர்.
இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 362 பேர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை கடந்த 2 மாதங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்திருந்தனர்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை கடந்த 2 மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
கோடை சீசனை கொண்டாட அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் கோடைக்காலத்தில் நீலகிரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்தாண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் முறையை அறிமுகம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் கடந்தாண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் ஊட்டி வருவதற்கு இ-பாஸ் எடுத்து வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்தாண்டு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதை தவிர்த்தனர். இ-பாஸ் நடைமுறை மேலும் தொடருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இ-பாஸ் நடையாலும், கடந்த 26-ந்தேதி முதல் மழை பெய்த நிலையிலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து கொண்டே வருவதால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மட்டும் நம்பி தொழில் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கவலை அடைந்து உள்ளனர்.
- கடந்த ஒரு வார காலமாக மழை கொட்டி வந்த நிலையில் நேற்று முதல் மழையின் அளவு குறைந்து விட்டது.
- சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படும். இந்த ஆண்டும் கோடைவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.
சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்து மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் நீலகிரியில் உள்ள முக்கிய சாலைகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
அத்துடன் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி, சூட்டிங் மட்டம் உள்பட 10க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
தொடர் மழையாலும், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழை கொட்டி வந்த நிலையில் நேற்று முதல் மழையின் அளவு குறைந்து விட்டது.
மழை குறைந்ததை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. பலத்த காற்று வீசுவதால், வனத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் மட்டும் திறக்கப்படவில்லை. குன்னூர் பகுதியில் மழை ஓய்ந்ததால் அங்குள்ள லேம்ஸ்ராக் காட்சி முனை, டால்பின்நோஸ் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன.
சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கினர்.
அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் 6 நாட்களுக்கு பிறகு நேற்று படகு சவாரி தொடங்கியது. படகு இல்லத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்றும், நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மழை நின்றதாலும், சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கோடை விழாவின் இறுதி நிகழ்வாக இன்று முதல் முறையாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.
- பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மலர் செடிகள் பூத்துக் குலுங்கி வருகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி, பழ கண்காட்சி நடந்து முடிந்துள்ளது. கோடை விழாவின் இறுதி நிகழ்வாக இன்று முதல் முறையாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.
மலைபயிர்கள் கண்காட்சியை முன்னிட்டு இளநீர், நுங்கு, பாக்கு உள்ளிட்டவற்றை கொண்டு பூங்காவின் நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நுங்கு, இளநீர், பனைமர ஓலைகளை கொண்டு மலைகிராம குடிசை, பனை ஓலைகளில் சேவல், கோழி உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர முந்திரி பருப்பை பயன்படுத்தி ஆடு, மாடு மற்றும் மாட்டு வண்டி, விவசாயி தென்னை மரம் ஏறுவது போன்ற உருவம், ஏர் கலப்பை, ஆட்டு உரல் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்கு, தேயிலை போன்றவற்றை கொண்டும் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மலர் செடிகள் பூத்துக் குலுங்கி வருகிறது. இன்று தொடங்கிய கண்காட்சியானது வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து விட்டது. தற்போது மழை ஓரளவு குறைந்து விட்டதால் இன்று தொடங்கும் மலைபயிர்கள் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
- அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து கடந்த 6 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது.
மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் கொட்டிய கனமழைக்கு இதுவரை 130-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் முறிந்து விழுந்துள்ளன. சாலைகள், குடியிருப்பை யொட்டிய பகுதிகள் என பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
இன்றும் தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
நேற்று பெய்த மழைக்கு, ஊட்டி நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட குருத்துக்குளி, பசவகல் பகுதிகளில் 7 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மேலும் சேதமடைந்துள்ள வீடுகளுக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும், தங்குவதற்கு போதிய இட வசதி மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
ஊட்டி-கூடலூர் சாலையில் தவளமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு இரவு நேர போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தவளை மலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் மரங்களின் இடுக்கில் சிக்கியுள்ளதையொட்டி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், கோட்ட பொறியாளர்(தேசிய நெடுஞ்சாலைத்துறை) செல்வன், உதவி கோட்ட பொறியாளர்(தேசிய நெடுஞ்சாலைத்துறை) எழிலரசன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) முகமது ரிஸ்வான், நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப் உடன் இருந்தனர்.
கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. 6 நாட்களாக பெய்து வரும் மழையால் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுப்பாறையில் மரம் முறிந்து விழுந்ததால் 6-வது நாளாக அந்த கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.
கடந்த ஒரு வார காலமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். காந்தி நகர் பகுதியில் நேற்று ஒரு மரம் முறிந்து விழுந்தது. அந்த மரத்தை மக்களே வெட்டி அப்புறப்படுத்தினர்.
இடைவிடாது பெய்து வரும் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை உள்ளது. மழையுடன் கடும் குளிரும் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அவலாஞ்சி-114, அப்பர் பவானி-102, பந்தலூர்-65, சேரங்கோடு, நடுவட்டம்-52, ஓவேலி-48, கூடலூர், எமரால்டு-49, அப்பர் கூடலூர்-46, கிளைன் மார்கன்-44, குந்தா-43, பாடந்தொரை-37, செருமுள்ளி-36, தேவாலா-31.






