என் மலர்
காஞ்சிபுரம்
- தனபால் தறித்தொழில் மற்றும் கேட்டரிங் வேலை செய்து வந்தார்.
- 3 மகள்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசிப்பதால் இவர்களுடன் தொடர்பில் இல்லை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 60). தறித்தொழில் மற்றும் கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவர்களுக்கு 5 மகள்கள் பிறந்து 2 மகள்கள் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். 3 மகள்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசிப்பதால் இவர்களுடன் தொடர்பில் இல்லை.
ஒரு மகள் மட்டும் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனிமையில் விரத்தியான மனநிலையில் இருந்த தனபால் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வாசலில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெட்ரோல் நிரப்ப வந்த வாலிபர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- தப்பி ஓடிய வாலிபர்களை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரத்தி சென்று 3 பேரில் ஒருவரை பிடித்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க்குக்கு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்புவதாகவும், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் வழங்குமாறும் கூறியுள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் தங்களுக்கு பணம் வந்த பிறகே பெட்ரோல் நிரப்ப முடியும் என கூறியுள்ளார்.
இதன் காரணமாக பெட்ரோல் நிரப்ப வந்த வாலிபர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் வெங்கட் என்பவரின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய வாலிபர்களை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரத்தி சென்று 3 பேரில் ஒருவரை பிடித்தனர்.
மேலும் அரிவாளால் வெட்டுப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் வெங்கட்டை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் விரைந்து வந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வையாவூர் கிராமத்தை சேர்ந்த கோபி (24) என்பதும், அவருடன் வையாவூரை சேர்ந்த ஸ்ரீராம், சிறுவாக்கத்தைச் சேர்ந்த ஜீவா ஆகிய 3 பேரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த தாலுகா போலீசார் தப்பி ஓடிய வாலிபர்கள் ஸ்ரீராம் மற்றும் ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி ஆல்பர்ட்ட கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
- கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் குமுதா டோம்னிக். இவரது மகன் ஆல்பர்ட். தி.மு.க.வில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளராக இருந்தார். மேலும் ஏ.டி.கே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் எச்சூர் ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கழிவு பொருட்களை மொத்தமாக எடுக்கும் தொழிலும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்வது, தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தேவையான மண், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மாலை ஆல்பர்ட், சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலை சிப்காட் சாலையோரத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் ஆர்பர்ட்டை கொடூரமாக கொலை செய்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 4தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக கடந்த 7-ந்தேதி குரோம்பேட்டையை சேர்ந்த பிரணவ், தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் ,மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் குமார்,ஆகிய 3 பேர் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக எச்சூரை சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.ப. நிர்வாகி சுரேஷ், சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் செந்தில்குமார் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.இதில் தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி ஆல்பர்ட்ட கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள புதிய நிறுவனங்கள் அமைக்கும் கட்டுமான பணியை செந்தில்குமார் மேற்கொண்டு வந்தார். இங்கு மண் கொட்டி நிரப்பும் பணியினை ஆல்பர்ட் செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் ஆல்பர்ட்டிற்கு முறையாக கணக்கு சொல்லாமல் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆல்பர்ட் தனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டு உள்ளார். இதனால் அதே மண் நிரப்பும் பணியினை எச்சூரை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சுரேஷுக்கு கொடுக்கபட்டதாக தெரிகிறது.
இதனால் ஆல்பர்டிற்கும் சுரேஷூக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் சுரேசும், செந்தில்குமாரும் தாம்பரத்தில் உள்ள கூலிப்படையினைரை ஏவி ஆல்பர்ட்டை கொலை செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதையடுத்து பா.ம.க. பிரமுகர் சுரேஷ், செந்தில்குமார், மதுரையை சேர்ந்த சுந்தர்,ஆனந்த வினோத், எச்சூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் தினேஷ் ,சந்துரு, தாம்பரம் பகுதியை சேர்ந்த மாதவன், சபரிசன் வயது, அரவிந்த்க், அஸ்வின் மற்றும் 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என மொத்தம் 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ள நிலையில் மேலும் 14 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தொழில் போட்டியில் கூலிப்படை ஏவி தி.மு.க.பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடி ஏற்றினார்.
- நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் வழங்கினார்.
காஞ்சிபுரம்:
நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, போலீசார் மற்றும் ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் 60 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 55 ஆயிரத்து 40 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் மூவர்ண பலூன், வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தாசில்தார் புவனேஸ்வரன் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பில் சுதந்திர தினவிழா ஆலபாக்கம் ஊராட்சியில் உள்ள வேன்பாக்கம் அரசினர் தொழில் பயிற்சி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.
செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். நகரமன்ற துணை தலைவர் அன்பு செல்வன், நகராட்சி ஆணையர் இளம்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ஆப்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து இனிப்புகளை வழங்கினார். மேலும் அரசின் பல்வேறு துறையின் மூலம் 29 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 191 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆப்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 22 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிக்குமார், மீனாட்சி, உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, துணை கலெக்டர் சுகபுத்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி, பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், செயலாளர் முனுசாமி, பொருளாளர் தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் பல கலந்து கொண்டனர்.
போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றினார். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ரவி தேசியகொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், பொன்னேரி நகராட்சியில் தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தலைவர் சம்பத், ஜெகநாதபுரம் ஊராட்சியில் தலைவர் மணிகண்டன், மாதவரம் ஊராட்சியில் தலைவர் சுரேஷ், ஆண்டார் குப்பம் ஊராட்சியில் ஆர்த்தி ஹரி பாபு, பஞ்செட்டியில் தலைவர் சீனிவாசன், பெரிய கரும்பூரில் தலைவர் பாக்கியலட்சுமி, வேலூர் ஊராட்சியில் தலைவர் சசிகுமார், காட்டுப்பள்ளியில் தலைவர் சேதுராமன், கொடூரில் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், நாலூரில் தலைவர் சுஜாதா ரகு, வாயலூரில் தலைவர் கோபி, காட்டாவூரில் தலைவர் மங்கை உமாபதி, பெரும்பேட்டில் தலைவர் ராஜேஷ், பிரளையம் பாக்கத்தில் இலக்கியா கண்ணதாசன், சிறுவாக்கத்தில் தலைவர் சேகர் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டன.
- ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியம்மாள் கணவர் கண்முன்பே துடிதுடித்து இறந்தார்.
- போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி முனியம்மாள் (வயது19). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். புருசோத்தமனின் சொந்த ஊர் சிங்கப்பெருமாள் கோவில் ஆகும். திருமணமான பின்னர் அவர் மனைவியுடன் ஆர்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலைபார்த்து வந்தார். புருசோத்தமனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது குடித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவும் புருசோத்தமன் மதுபோதையில் வந்தார். மேலும் மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதனை மனைவி முனியம்மாள் கண்டித்ததால் மோதல் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த புருசோத்தமன் அருகில் இருந்த கத்தியால் மனைவி முனியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியம்மாள் கணவர் கண்முன்பே துடிதுடித்து இறந்தார்.
இதனை பார்த்து பயந்து போன புருசோத்தமன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
இதற்குள் சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் தப்பி ஓட முயன்ற புருஷோத்தமனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை மாகரல் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அவர்களது 3 குழந்தைகளும் தாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
- வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.
மேலும், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவல கங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
அவர்களுக்கு பதிலாக வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
- உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம் பகுதியில் சாலைகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும் , அச்சுறுத்தும் வகையிலும் சுற்றி திரிந்த ஏராளமான கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அப்போது வட்டாட்சியர் புவனேஸ்வரன், கவுன்சிலர்கள் கார்த்திக், குமரன், சங்கர் உடன் இருந்தனர்.
- தனி கோர்ட்டு வாசலில் வைத்து தனிப்படை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
- போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா டோமினிக். இவருடைய மகன் ஆல்பர்ட் (வயது 30). இவர் ஶ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்தார். இவர் அங்கு இருக்கக்கூடிய 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் எடுக்கும் பணி செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி எச்சூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகில் காலி இடத்தில் குடிசையில் ஆல்பர்ட் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி முகம் மற்றும் தலை பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் யார்? கூலி படை கும்பலா? அல்லது இவர்களுக்கு தொடர்புடைய நபர்களா? என போலீசார் தனி படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரனவ் (வயது 20), மண்ணிவாக்கம் ஆறுமுகம் (21), மேற்கு தாம்பரம் தினேஷ்குமார் (21) ஆகியோர் தாம்பரம் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் 3 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைவதற்கு செல்லும் தகவல் தனி படை போலீசாருக்கு கிடைத்தது. தனி கோர்ட்டு வாசலில் வைத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
3 பேரும் தாம்பரம் பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர்.
- குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. 2-வது பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மூர்த்தியின் முதல் குழந்தை சக்திவேல் (வயது 3) தனது தாயை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை தனது மனைவி குள்ளம்மாள், மகள் சவுந்தர்யா (6) மற்றும் மூர்த்தியின் மகன் சக்திவேல் ஆகியோருடன் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில கடந்த 8-ந்தேதி இரவு 8 மணியளவில் குழந்தைகள் சக்திவேல், சவுந்தர்யா ஆகியோரை காணவில்லை.
இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்பேரில் காணாமல் போன 2 குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்க காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.
விசாரணையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காணாமல் போன குழந்தைகளை அழைத்து செல்வதை போல் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடைபெற்ற தீவிர விசாரணையில் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் காஞ்சிபுரம் நகரத்தில் உளள பல்வேறு தெருக்கள், சந்துகள் வழியாக வாலாஜாபாத் தாலுகா அஞ்சூர் கிராமத்திற்கு அழைத்து சென்றது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் துரிதமாக அஞ்சூர் கிராமத்திற்கு சென்று அங்கு ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.
குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன்(60) கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் தப்பியோடிய லட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
- பெண் ஒருவர் சிறார்களை அழைத்துச் செல்வது போல் சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது.
- பெண்மணியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் தாலுக்கா, வெங்கச்சேரி அடுத்த ஆதவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இருளர் சமுதாய கர்ப்பிணி பெண் காமாட்சி (வயது 28) என்பவருக்கு கடந்த செய்வாய் கிழமை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில், சுகப்பிரசவம் ஏற்பட்டது. காமாட்சியின் கணவர் மூர்த்தி , 4 வயது மகன் சக்திவேல் ,மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை, அவருடைய மனைவி குள்ளம்மா, அவருடைய 7 வயது மகள் சௌந்தர்யா ஆகியோர் காமாட்சிக்கு உதவிகள் செய்வதற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு நலப்பிரிவு பிரிவு அருகே தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி ஒருவர், மூர்த்தி, ஏழுமலை, குள்ளம்மா மற்றும் சிறார்களுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். செவ்வாய் கிழமை மாலை 7 மணி அளவில் சிறார்களை அழைத்துக் கொண்டு உணவு வாங்கி தருவதாக அந்த பெண்மணி அழைத்து சென்றார். சென்று வந்த பின்னர் அந்த பெண்மணி, மூர்த்தி என அனைவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர்.
புதன் கிழமை காலை பிள்ளைகளை காணாததால் பதறி அடித்துக் கொண்டுபோய் , மனைவி காமாட்சி இடம் தகவல் கூறினர். காமாட்சி அங்குள்ள செவிலியர்கள் மூலமாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். அதன் பெயரில் விரைந்து வந்த விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் மூர்த்தி கூறும் போது, மூன்று நாட்களாக ஒரு பெண்மணி எங்களுடன் பழகினார். அவர்தான் என் பிள்ளைகளை கடத்திச் சென்று விட்டார் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மகப்பேறு நலப்பிரிவு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண்மணி சந்தேகத்துக்கடமான நிலையில் மகப்பேறு நலப்பிரிவு அருகே வந்து செல்வது கண்டறியப்பட்டது. அதில் அவருடைய முகம் சரியாக தெரியவில்லை. ரெயில்வே சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை சுற்றிலும் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள சுமார் 200 கேமராக்களை புதன் கிழமை மதியத்திலிருந்து காவல்துறையினர், ஆய்வு செய்தனர். பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கேமராக்களை ஆய்வு செய்த போது தான் ஒரு பெண்மணி இரண்டு சிறார்களையும் அழைத்து கொண்டு பேருந்து நிலையம் வழியாக ஆடிசன் பேட்டை வரை செல்லும் காட்சி கண்டறியப்பட்டது.
அந்த கேமரா புட் பேஜில் கடத்திய பெண்மணியின் முகம் சரியாக தெரியாததால் முகத்தை கண்டறியும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தபோது சிறார்களை கடத்திய அந்த பெண்மணியின் முகம் தெளிவாக காணப்பட்டது. அதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிறார்களை அழைத்துச் செல்வது போல் சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து பெண்மணியின் புகைப்படத்தை நேற்று இரவு காவல்துறையினர் வெளியிட்டனர். அக்காட்சிகளை கொண்டு சிறார்களை கடத்திய பெண்மணியை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையிலும், மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர் தலைமையிலும், ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தல்காரியை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர்.
கடத்திய பெண்மணி பற்றிய விவரங்கள் தெரிந்தால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் : 044-27236111, 9498181232.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 949810026.
- பலத்த காயம் அடைந்த ஏகாம்பரம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது45), எலக்ட்ரீசியன். இவர், மோட்டார் சைக்கிளில் ஆயப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ஏகாம்பரம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.
- பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், உத்திரமேரூர் நெடுஞ்சாலையி்ல் உள்ள வெங்கடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.
இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி காமாட்சி (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காமாட்சியை பிரசவத்திற்காக மூர்த்தி 4 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
காமாட்சியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் காமாட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மூர்த்தியும் அவரது 3 வயது மகன் சக்திவேலும் உடன் இருந்தனர்.
இந்த நிலையில் காமாட்சிக்கு உதவி செய்வதற்காக மூர்த்தியின் சகோதரர் அண்ணாமலையின் மனைவி குலாம்மாள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் அவரது 6 வயது மகள் சவுந்தர்யாவும் உடன் வந்தாள்.
மூர்த்தியும், குலாம்மாளும் காமாட்சியை கவனித்து கொள்ள மருத்துவமனைக்குள் சென்ற நிலையில் சக்திவேலும், சவுந்தர்யாவும் மருத்துவமனை வளாகத்தில் விளையாடி பொழுதை போக்கினார்கள். இரவில் அவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே வராண்டாவில் பெற்றோருடன் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மர்ம பெண் சக்திவேலுடனும், சவுந்தர்யாவுடனும் நெருங்கி பழகினார். அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையின் பல்வேறு இடங்களையும் சுற்றி காண்பித்தார். மூர்த்தியும், குலாம்மாளும் பேறு கால பிரிவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம பெண் சக்திவேல், சவுந்தர்யா இருவரையும் தனது அருகில் படுக்க வைத்துக் கொண்டார். இரண்டு நாட்கள் தங்களுடன் இருந்ததால் மூர்த்தியும் அந்த பெண்ணை நம்பிவிட்டார். நேற்று காலை அந்த மர்ம பெண்ணும், இரண்டு குழந்தைகளும் மாயமாகி இருந்தனர்.
இதையறிந்து மூர்த்தியும், குலாம்மாளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை வளாகம் முழுக்க தேடி பார்த்தனர். மர்ம பெண் பற்றி மருத்துவமனையில் விசாரித்தபோது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.
உணவு வாங்கி கொடுத்து பாசமாக கவனித்து கொண்ட அந்த மர்ம பெண் இரு குழந்தைகளையும் கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி இது தொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மர்ம பெண் பற்றி அறிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. சில சி.சி.டி.வி. கேமராக்கள் மட்டுமே இயங்கின. அதில் உள்ள காட்சிகளை பார்க்க முயற்சி செய்த போது மின்சார தடை காரணமாக பதிவுகள் அனைத்தும் அழிந்து போயிருப்பது தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சி உதவிகள் கிடைக்காததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சுற்றி வந்த மர்ம பெண் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அந்த பெண் திட்டமிட்டு குழந்தைகளுடன் பழகி கடத்தி சென்றிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
சில இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்து உள்ளன. ஆனால் செவ்வாய்க்கி ழமை இரவு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பலத்த மழை பெய்ததால் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் இரண்டு குழந்தைகளை கடத்திய மர்ம பெண் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த பெண் 2 குழந்தைகளையும் எங்கே கடத்தி சென்றிருப்பார் என்பதும் தெரியவில்லை. அந்த பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.






