என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெகத்ரட்சகன் எம்.பி, சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை இன்று திருக்குவளையில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெகத்ரட்சகன் எம்.பி, சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இத்திட்டத்தின்படி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 56,272 மாணவ- மாணவியர்களுக்கும், நகராட்சி பகுதிகளில் 5,567 பேர் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 3,051 பேர் என மொத்தம் 64,890 மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள்.

    காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் பி. எம். குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    திருவிடந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் ஒன்றிய தலைவர் இதயவர்மன், துணை தலைவர் சத்தியா சேகர், எம்.எல்.ஏ. பாலாஜி, சப் கலெக்டர் லட்சுமிபதி, பையணூர் சேகர், ஊராட்சி தலைவர் அமுதா குமார், ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு, திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது.
    • நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது. ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை 30 மாதத்திற்கும் மேலாக கால தாமதமாகி வருகிறது. இதனை உடனடியாக ஆணையாக வெளியிட வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் படி கருணை ஓய்வூதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • விபத்தில் பாலியான பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை, டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது31). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் பாஸ்கர் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் இடதுபுறம் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார்.

    இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பாஸ்கர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் பாலியான பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பலத்த மழை இல்லாமல் சாரல் மழையாக பெய்தது.
    • காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது.

    காஞ்சிபுரம்:

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு மற்றும் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், செங்குன்றம், புழல், அயனாவரம், கோயம்பேடு, கோடம்பாக்கம், போரூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மீனம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது.

    பலத்த மழை இல்லாமல் சாரல் மழையாக பெய்தது. சில இடங்களில் சுமார் அரைமணிநேரம் மழை வெளுத்து வாங்கியது.

    இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலி முகமது பேட்டை, பாலு செட்டி சத்திரம், தாமல், வாலாஜாபாத், பரந்தூர், மாகரல், ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலையும் மழை பெய்தது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் அவதி அடைந்தனர்.

    திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை, திருத்தணி, ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்துவாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    • போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் நியூ காலனியை சேர்ந்தவர் பிரபு (வயது.33) ஆட்டோ டிரைவர். புலியூர் தைலமர காட்டு பகுதியில் மரத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கழுக்குன்றம் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
    • ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏ.ஏகவள்ளி அன்னப்பன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த வாரணவாசி ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், அளவூர் திருவள்ளுவர் தெருவில் தனியார் நிறுவனம் சார்பாக சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.பிரேமா மோகனசுந்தரம் தலைமை தாங்கி குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி க.மோகன சுந்தரம், தொழிலதிபர்கள் எம்.வினோத் குமார், எம்.பிருத்திவிராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏ.ஏகவள்ளி அன்னப்பன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிறுமிகளை அழைத்து வந்தது அவர்களது தாயா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    • சிவகாஞ்சி போலீசார் மீட்கப்பட்ட 2 சிறுமிகள் குறித்து வேலூரில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், ரெயில்வே சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் இருக்கும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் 2 மற்றும் 4 வயதுடைய 2 பெண்குழந்தைகளுடன் ரெயில்வே சாலை, பகதூர் கான் பேட்டை தெருவழியாக நடந்து சென்றார்.

    திடீரென அந்த இளம்பெண் 2 குழந்தைகளையும் நடுரோட்டில் விட்டு மாயமானார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைகள் இருவரும் தவித்தனர். அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் சாலையோரம் நீண்ட நேரமாக நின்று அழத்தொடங்கினர்.

    இதனை கண்டு சந்தேகம் அடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விசாரித்த போது தங்களது தாய் தண்ணீர் எடுத்து வருவதாக கூறி சென்று உள்ளார் என்று தெரிவித்தனர். குழந்தைகளுடன் வந்த தாய் அவர்களை தவிக்க விட்டு மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 சிறுமிகளையும் மீட்டு விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்களது பெயர் தீக்ஷிகா (வயது 4), ஏரிகா (வயது 2) என்றும் தாய் ரம்யா, தந்தை சதீஷ் எனவும் தெரிவித்தனர். மேலும் தங்களது தாத்தா ஆறுமுகம், பாட்டி அமுதா எனவும் அவர்கள் வேலூரில் வசிப்பதாகவும் தெரிவித்தனர். தாய் ரம்யாவுடன் வந்தபோது தண்ணீர் வாங்கிவருவதாக கூறி சென்றதாக சிறுமிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிவகாஞ்சி போலீசார் மீட்கப்பட்ட 2 சிறுமிகள் குறித்து வேலூரில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வேலூரில் சிறுமிகள் மற்றும் தாய் மாயமானது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்பது தெரிந்தது. மேலும் சிறுமிகள் தங்களது தகவல் குறித்து மாறி, மாறி கூறுவதால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    சிறுமிகளை அழைத்து வந்தது அவர்களது தாயா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் மாயமான இளம்பெண் 2 குழந்தைகளுடன் வருவது பதிவாகி உள்ளது. இந்த புகைப்படத்தை காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் அனுப்பி விசாரித்து வருகிறார்கள். இதுவரை மீட்கப்பட்ட சிறுமிகள் யார்? அவர்களது பெற்றோர் யார்? சிறுமிகளுடன் வந்த இளம்பெண் யார்? என்று எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்க வில்லை. இதைத்தொடர்ந்து சிறுமிகள் 2 பேரும் சென்னை பரங்கிமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மீட்கப்பட்ட சிறுமிகள் 2 பேரும் நலமாக உள்ளனர். அவர்கள் தங்களது தாயுடன் வந்ததாகவும், சொந்த ஊர் வேலூர் எனவும் தெரிவித்தனர்.

    ஆனால் வேலூரில் சிறுமிகள் மாயமானது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. மேலும் சிறுமிகளை தாய் தவிக்க விட்டு சென்றது ஏன்? என்பதும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுமிகளுடன் வந்த இளம்பெண் அவர்களது தாயா? அல்லது வேறு யாராவதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து அந்த இளம்பெண்ணை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் போலீசார் இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களும் தகவல் தெரிவித்து உள்ளனர் என்றார்.

    • கார் மோதியதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • புகைப்பட கலைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள கவரை தெருவில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா காஞ்சிபுரம் பாவாஜி தெருவில் இரவு 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சாமி ஊர்வலத்தில் பின்தொடர்ந்து நடந்து சென்றனர். கோவில் விழாவை படம் பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த புகைப்படகலைஞர் வெங்கடேசனை (வயது50) ஏற்பாடு செய்து இருந்தனர். அவர் அம்மன் வீதி உலா, பக்தர்கள் கூட்டத்தை படம் பிடித்தபடி சென்றார். அப்போது சாலையில் எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் புகைப்பட கலைஞர் வெங்கடேசன் மற்றும் சாமி தரிசனம் செய்தவர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், இசைக்கலைஞர்கள் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புகைப்பட கலைஞர் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். மேலும் 15 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிலில் ஆடி மாத திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.

    காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். விசாரணையில் அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பது தெரிந்தது. அவரை விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாமி ஊர்வலத்தில் பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து புகைப்பட கலைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றி சென்ற போது முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்துள்ள பெரும்புலிபாக்கம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இதில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றி சென்ற போது முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதை அடுத்து மற்றொரு ஆம்புலன்ஸ் மூலமாக இவர்கள் பெங்களூர் அனுப்பப்பட்ட நிலையில் விபத்தான ஆம்புலன்சை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது திடீரென ஆம்புலன்ஸ் முன் பகுதி வெடித்து சிதறி ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயை அனைத்து ஆம்புலன்சை சாலை ஓரம் அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
    • சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன காஞ்சிபுரம் திருச்சோலை தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 75). இவருக்கு முரளிதரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமுதாய கரையோடு வாழ்ந்தவரான திருவேங்கடம், தான் இறந்து போனால் தனது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கிட வேண்டும் என தனது மகன் முரளிதரன் மற்றும் குடும்பத்தாரிடம், நண்பர்களிடமும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவேங்கடத்தின் கடைசி ஆசையை நிறை வேற்றிடும் வகையில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலந்து ஆலோசனை செய்த குடும்பத்தினர் முதியவர் திருவேங்கடத்தின் உடலை வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு தானம் வழங்க முடிவு செய்து, தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

    அதன்படி திருவேங்க டத்தின் உடலுக்கு உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினர் சம்பிரதாயம் முறைப்படி இறுதி சடங்குகளை செய்த பின்னர் சிறிது தூரம் முதியவர் திருவேங்கடத்தின் உடலை எடுத்துச் சென்று தயாராக இருந்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆம்பு லன்சில் ஒப்படைத்தனர். சமூக அக்கறையோடு வாழ்ந்த முதியவரின் கடைசி ஆசைப்படி, மருத்துவக் கல்லூரிக்கு முதியவரின் உடலை குடும்பத்தினர் தானமாக வழங்கிய சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்று பள்ளியில் விடுவதற்குள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகின்றனர்.
    • மாணவர்கள் பள்ளிக்கு இடையூறு இல்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குன்றத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி நடத்தப்பட்டு வரும் நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தினமும் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியிலேயே நகராட்சி அலுவலகம் உள்ளது. தினமும் காலையில் கட்டிட வேலைக்கு செல்லும் பெண்களும், ஆண்களும் இந்த சாலையின் இரு பகுதியிலும் ஆக்கிரமித்து நிற்கின்றனர்.

    அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இந்த சாலையின் ஓரம் நிறுத்தி வைத்து இருப்பதால் தினந்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    அது மட்டுமின்றி காலை, மாலை இருவேளைகளிலும் பள்ளி மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்று பள்ளியில் விடுவதற்குள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகின்றனர். அது மட்டுமின்றி தற்போது இந்த பள்ளி வளாகத்திலேயே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால் இடம் நெருக்கடி ஏற்பட்டு ஒரு வழியில் மட்டுமே மாணவர்கள் செல்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு இடையூறு இல்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதற்கட்டமாக 771 முகாம்களும், 2-ம் கட்டமாக 240 முகாம்களும் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • சிறப்பு முகாம்கள் ஏற்கனவே முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்ட முகாம்கள் நடைபெற்ற இடங்களில் நடத்தப்பட உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பபதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.

    முதற்கட்டமாக 771 முகாம்களும், 2-ம் கட்டமாக 240 முகாம்களும் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது "வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும்'', முதற்கட்ட முகாம் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்க தவறிய பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் ஏற்கனவே முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்ட முகாம்கள் நடைபெற்ற இடங்களில் நடத்தப்பட உள்ளன. எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், மேற்கண்ட தகுதிவாய்ந்த பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பு முகாமில் விண்ண ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×