என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ஓ.பி.எஸ். புரட்சி பயணத்தின் தொடக்கமாக இந்த பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது.

    இதைத் தொடர்ந்து தன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க மாவட்டம்தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து, இந்த சந்திப்புக்கு 'புரட்சி பயணம்' என்று பெயரிட்டார். இதன் துவக்கமாக இன்று காஞ்சிபுரம் அருகே கலியனூர் பொதுக்கூட்டத்தில் பேச திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. இன்றைய பொதுக்கூட்டம் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், வேறொரு நாளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்று இருக்கும் பண்ரூட்டி ராமச்சந்திரன் அறிவித்து இருக்கிறார்.

    • மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
    • தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    காஞ்சிபுரம்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது குன்றத்தூர் அருகே உள்ள சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் தேங்கிய தண்ணீரை சுத்தப்படுத்தி சப்ளை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிக்கராயபுரம், மலையம்பாக்கம் பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கடந்த சில நாட்களாக பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர் பகுதியில் விட்டு,விட்டு பலத்த மழைகொட்டி வருகிறது. இதனால் கல்குவாரிகளில் கூடுதலாக தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சி பகுதிகளில் பருவமழையை முன்னிட்டு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    பின்னர் சிக்கராயபுரம் மற்றும் மலையம்பாக்கத்தில் உள்ள செயல்படாத கல்குவாரியில் தேங்கி நிற்கும் மழைநீர் பகுதியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார். அப்போது அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கல்குவாரிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
    • ரஜினிகாந்தை ஓ.பி.எஸ். சந்தித்த உடனே, ஊடகங்களில் அவை மிகப்பெரிய செய்தி ஆகி உள்ளன.

    காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் பயன்படுத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோக்களுடன் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓ.பி.எஸ். அணியினர் அதனை கண்டு கொள்ளாமல் அ.தி.மு.க. பெயரையும் கட்சி கொடியையும் பயன்படுத்தி வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

    அந்த வகையில் காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் பயன்படுத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

    இதன் பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருவது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரை சந்தித்து மனு அளித்தனர். அதில் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாத நபர்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். அதை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த புகார் மனுவை அ.தி.மு.க.வினர் கடந்த 31-ந் தேதி அளித்திருந்தனர். ஆனால் அது தொடர்பாக போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. கொடிகள் மற்றும் சின்னத்தை காஞ்சிபுரம் முழுவதும் கட்டியுள்ளனர். இது தொடர்பாக ஓ.பி.எஸ். அணியின் துணை ஒருங்கிணைப்பாளரான ஜே.சி.டி.பிரபாகர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

    ரஜினிகாந்தை ஓ.பி.எஸ். சந்தித்த உடனே, ஊடகங்களில் அவை மிகப்பெரிய செய்தி ஆகி உள்ளன. தமிழகத்தில் ஒரு மாற்றம் வரப்போகிறது, ஒரு ஏற்றம் வரப்போகிறது. நாளை இந்த தமிழகம் எதிர்பார்க்கும் மாற்றமும், ஏற்றமும் அளிக்கும் கூட்டமாக இது அமையும்.

    ரஜினிகாந்துடன் நடைபெற்ற சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து ஓ.பி.எஸ். அறிவிப்பார். ஒரு மணி நேரம், தமிழகத்தில் மக்கள் விரும்பும் இரு பெரும் தலைவர்கள் சந்திக்கும் பொழுது, எல்லாவற்றையும் பேசியிருப்பார்கள் அதில் 'அரசியலுக்கு பஞ்சம் இருக்காது' என கருதுகின்றேன்.

    டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா கலந்து கொள்வார்களா என்கிற கேள்விக்கு பதில் அளிக்கையில், அவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் கலந்து கொள்வார்கள். இதுதான் உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. தனிக்கட்சி துவங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புரட்சி பயணம் முடியும் பொழுது, மக்கள் யாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், யார் பக்கம் இந்த கட்சி இருக்கிறது என்பதை இந்த நாடு பார்க்கப்போகிறது.

    தி.மு.க.வுக்கு சரியான பதிலடியை, கொடுக்கும் கூட்டமாக நாளை நடைபெற உள்ள கூட்டம் அமையும். தி.மு.க.வுக்கு எதிராக தொடுக்கப்பட்டு உள்ள அம்புகள் எல்லாம் நிச்சயமாக தெரிய வரும். 40 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் போட்டியிடும். ஓ.பி.எஸ். தொண்டர்களின் தலைவராக நிச்சயமாக அவர் தலைமை ஏற்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காஞ்சிபுரம் களியனூரில் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • காஞ்சிபுரம் செல்லும் பன்னீர்செல்வம் அங்குள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து வணங்குகிறார்.

    காஞ்சிபுரம்:

    அ.தி.மு.க.வில் தலைமை பதவி யாருக்கு என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.

    இதைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வரும் பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் விரைவில் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

    ஓ.பி.எஸ். தொடங்கப்போகும் புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. புரட்சித் தலைவி அ.தி.மு.க. உள்ளிட்ட பெயர்களை வைப்பதற்காக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரசார பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறார்.

    இதற்காக காஞ்சிபுரம் களியனூரில் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுகிறார். 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை முன்பு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதன் காரணமாக வழிநெடுக ஓ.பி.எஸ்.சை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இன்று பிற்பகலில் காஞ்சிபுரம் செல்லும் பன்னீர்செல்வம் அங்குள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து வணங்குகிறார்.

    பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இன்றைய பிரசார பயண பொதுக்கூட்டத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக ஓ.பி.எஸ். அணியின் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் உள்ள உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். அவர்களை வழிநடத்துவதற்காக தனி அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    அதற்கான தொடக்கமாகவே இன்றைய பொதுக்கூட்டம் அமையும். இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் என்ன பேசப் போகிறார் என்பதை அரசியல் களமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் முக்கிய காரணமாக இருப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காஞ்சிபுரத்தில் இன்று பிரசார பயணத்தை தொடங்க உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த வாரம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இதே போன்று பிரசார பயண பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதற்கான பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. வருகிற 9-ந் தேதி பன்னீர்செல்வத்தின் மனைவி 2-வது ஆண்டு நினைவு நாளாகும். அது முடிந்த பிறகு பன்னீர்செல்வம் பிரசார பயணத்தில் தீவிரம் காட்ட உள்ளார்.

    அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களை திரட்டி தனது பலம் என்ன என்பதையும் அவர் காட்ட இருக்கிறார்.

    இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்துள்ளார்.

    இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பொதுக்கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    குன்றத்தூர்:

    சென்னையை அடுத்த புழல் காவாங்கரையை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான காரில் நேற்று அதிகாலை தனது நண்பர் கணபதி என்பவருடன் தாம்பரத்தில் இருந்து வேங்கடமங்கலம் கிராமத்திற்கு சென்று தங்களது நண்பரை பார்த்துவிட்டு தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் புழல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.

    இதை பார்த்ததும் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். அதற்குள் காரின் முன் பகுதி தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயை அணைக்க போராடினார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் உள்ள பேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

    • புதிய ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் பூசிவாக்கம் லெனின்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்னழுத்த குறைபாடு காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதடைவதாகவும் அதனால் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, திம்மையன்பேட்டை, ஏகனாம்பேட்டை, பூசிவாக்கம், வெண்குடி என 5 கிராமங்களில் ரூ.40 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு அதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

    வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்துகொண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஏகனாம்பேட்டை கிராமத்திற்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதிக்கு வந்தபோது கிராம மக்கள் திரண்டு வந்து எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து தற்போது தான் தனக்கு தெரிய வருகிறது. அதனால் உடனடியாக புதிய ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். அதன் பேரில் முற்றுகையிட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி சுந்தரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் பூசிவாக்கம் லெனின்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி வேடபாளையம் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் (வயது 40). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி டிலைலா (33). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    அருளுக்கும் டிலைலாவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. நேற்று முன்தினம் நீ வேண்டுமானால் உன்னுடைய தாய் வீட்டுக்கு போ என்று மனைவி டிலைலாவிடம் சொல்லிவிட்டு அருள் பள்ளிகூடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

    மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து அருள் வீட்டுக்கு வந்தார். அவரது மனைவி மற்றொரு அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு 7 மணி அளவில் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் டிலைலா தூக்கு போட்டதாக கூறப்படுகிறது.

    இதை பார்த்த அவரது மகள் தந்தை அருளிடம் வந்து கூறினார். உடனடியாக அறைக்குள் சென்று தூக்கில் தொங்கிய டிலைலாவை கீழே இறக்கி உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து உத்திரமேரூர்போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    • விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
    • நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது45). கல் குவாரியில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி(35). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீதர் மதுகுடித்து வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் மதுபோதையில் வந்த ஸ்ரீதர் மனைவியிடம் கடும் வாக்குவாதம் செய்தார். பின்னர் கணவன் -மனைவி இருவரும் தூங்கிவிட்டனர்.

    எனினும் ஆத்திரத்தில் இருந்த ஸ்ரீதர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதிகாலை 4 மணிஅளவில் எழுந்த ஸ்ரீதர் தூங்கிக்கொண்டு இருந்த மனைவி செல்வராணியின் தலையில் அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கிப்போட்டார். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வராணி துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு எழுந்த அவர்களது குழந்தைகள் தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு பயத்தில் அலறினர்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், சாலவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எடமச்சி பஸ் நிறுத்தம் அருகே நின்ற ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட செல்வராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆவணங்கள் சரியாக உள்ள நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • ரேணுகாதேவியை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மதுராந்தோட்டம் தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 60). இவர் அதே பகுதியில் தனது பெயரில் உள்ள 460 சதுர அடி நிலத்தை தனது மகன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்தார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி மகன் பெயரில் மாற்றம் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். நீண்ட நாட்களாக பெயர் மாற்றம் செய்யாமல் அலைக்கழித்ததால் மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டர் ரேணுகாதேவியிடம் கேட்டபோது, ரூ.15 ஆயிரம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தருவதாக தெரிவித்தார்.

    ஆவணங்கள் சரியாக உள்ள நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மீதி ரூ.5 ஆயிரம் தருவதாக கூறுமாறு தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை சுந்தரிடம் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட ரேணுகாதேவியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

    அதன்படி மநாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற சுந்தர், பில் கலெக்டர் ரேணுகாதேவிக்கு போன் செய்தபோது, ஆலடிதோப்பு பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் அங்கு வருமாறு தெரிவித்தார்.

    இதனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு அங்கு சென்று ரேணுகாதேவியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை சுந்தர் கொடுத்தார்.

    அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கீதா தலைமையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரேணுகாதேவியை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை செய்தபோது, சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் ரேணுகாதேவியை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் விநாயகா நகரில் குடியிருப்பு பகுதியில் மாதவரத்தைச் சேர்ந்த கெவின் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பற்றி எரிந்து கரும் புகை வெளியேறியது. தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகே இருந்த வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கு விசாரணை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
    • இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அம்பத்தூர்:

    மீஞ்சூரை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். காலையில் மாணவி வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்றபோது அங்கு பேனாவில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் தனது தாயாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குளியல் அறையில் இருந்த பேனா கேமிராவை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.

    விசாரணையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தொழிலாளியான வெங்கடாசலபதி(30) என்பவர் மாணவி வீட்டில் உள்ள குளியல் அறையில் பேனா கேமிராவை மறைத்து வைத்தது தெரியவந்தது.

    ஏற்கனவே மாணவியின் குடும்பத்தாரிடம் வெங்கடாசலபதி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த மோதலில் குளியல் அறையில் பேனா கேமிரா பொருத்தி படம் பிடித்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து வெங்கடாசலபதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

    இதுகுறித்து மாணவியின் தாய் கூறும்போது, இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் அந்த வாலிபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது என்றார்.

    • கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காஞ்சிபுரம் மாவட்ட சங்கத்தின் தலைவர் ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே தமிழ்நாடு வங்கியை உருவாக்கக் கோரியும், மாவட்ட, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20சதவீத ஊதிய உயர்வு வழங்கக் கோரியும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட மத்திய, பெரிய காஞ்சிபுரம், நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை மாநில சங்க பொதுச்செயலாளர் சர்வேசன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட சங்கத்தின் தலைவர் ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×