என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • காலையில் அருகே உள்ள கடையில் பால் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
    • அதிகாலை நேரத்தில் சாலையின் குறுக்கே அடிக்கடி கால்நடைகள் செல்கின்றன.

    ஆலந்தூர்:

    நங்கநல்லூர், 18வது தெருவில் மழை நீர் வடிகால்வாய் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முழுமையாக நடைபெறாமல் ஆங்காங்கே சிறிய சிறிய பள்ளங்களாக மூடப்படாமல் இருக்கிறது.

    இந்த நிலையில் உள்ளகரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது84) காலையில் அருகே உள்ள கடையில் பால் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றதாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த முதியவர் ஜெயராஜ் மோட்டார் சைக்கிளோடு அருகில் மழைநீர் வடிகால்வாய் பகுதியில் விழுந்தார். இதில் அவர் மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஜெயராஜ் தவறி விழுந்து இடத்தில் கால்வாய் பணி நடைபெறுகிறது. ஆனால் இது முடிவடையாமல் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதேபோல் பல இடங்களில் கால்வாய் பணி முடியாமல் உள்ளன. அதிகாலை நேரத்தில் சாலையின் குறுக்கே அடிக்கடி கால்நடைகள் செல்கின்றன என்றார்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலையின் குறுக்கே மாடு சென்றதால் விபத்தில் ஜெயராஜ் இறந்து போனதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எனினும் இதுபற்றி விசாரித்து வருகிறோம் என்றார்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • நிரந்தரமாக சீரமைத்து சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதி வழியாக செல்லும் பாலாற்றின் குறுக்கே வாலாஜாபாத்தையும் அவளூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைப்பாலம் உள்ளது.

    இந்த தரைப்பாலத்தின் வழியாக அவளூர், அங்கம்பாக்கம், கண்ணடியன் குடிசை, கணபதிபுரம், மல்லிகாபுரம், தம்மனூர், காம்மராசபுரம், காவாந்தண்டலம், நெய்யாடு பாக்கம், வள்ளி மேடு, இளையனார் வேலூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வாலாஜாபாத்திற்க்கு வந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அன்றாட பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் சேதமடைந்தது.

    பின்னர் இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், நிரந்தரமாக சீரமைத்து சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தை சீரமைத்து தர நெடுஞ்சாலை துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் பாலாற்றின் குறுக்கே மாற்றுப்பாதை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டுவிட்டு, சேதம் அடைந்த வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது.

    சேதமடைந்த தரைப்பாலத்தின் பகுதிகளில் மழை வெள்ளம் செல்வதற்கு வசதியாக மிகப்பெரிய குழாய்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு அதன் மீது சாலை அமைக்க வசதியாக கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்பே தரைப்பாலம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினர் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார்.
    • ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசர்(வயது32).ரவுடி. இவர் மீது கொலை, மிரட்டல், அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    நேற்று மாலை எபினேசர் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் என்ற இடத்தில் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் திடீரென ஆட்டோ மீது காரை மோதினர். மேலும் 2 நாட்டுவெடி குண்டுகளையும் ஆட்டோ மீது வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த எபினேசர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட்டம் பிடித்தார். அருகில் உள்ள வயல்வெளியில் ஓடிய எபினேசரை மர்மகும்பல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

    இதற்கிடையே எபினேசர் வந்த ஆட்டோவை ஓட்டிவந்தவர் அங்கிருந்து ஆட்டோவுடன் தப்பி சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. திருமழிசை பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடிக்கும் எபினேசருக்கும் மோதல் இருந்து உள்ளது. இதில் யார்? பெரியவர்? என்று அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் இருதரப்பையும் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், கிரிஸ்டோபர் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனால் எபினேசரும், எதிர்தரப்பு ரவுடியும் மாறிமாறி யார் முந்திதீர்த்துகட்டுவது என்று திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் எபினேசர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு திருமழிசை பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எபினேசர் குற்றவாளி ஆவார். எனவே இந்த கொலைக்கு பழிக்குபழியாக எபினேசர் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் தொழில் அதிபர் பி.பி.ஜி. குமரன்,பா.ஜ.க.பிரமுகர் பி.பி.ஜி.டி சங்கர், கடந்த மாதம் தி.மு.க. பிரமுகர் ஆல்பர்ட் என அனைவரும் வெடி குண்டு வீசியும் வெட்டி கொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • காரணை தாங்கல் என்னும் இடத்தில் சென்ற போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வந்தது.
    • அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் பகுதியில் பிரபல நிறுவனத்தில் புல்லட் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது. இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு புல்லட் மோட்டார்சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொழிற்சாலையில் இருந்து 88 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் கண்டெனர் லாரியில் ஜார்க்கண்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கண்டெய்னர் லாரி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் காரணை தாங்கல் என்னும் இடத்தில் சென்ற போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வந்தது.

    இதனை கவனித்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு கிழே இறங்கினார். சிறிது நேரத்தில் கண்டெய்னர் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்ட புதிய புல்லட் மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. மற்ற மோட்டார் சைக்கிள்களும் தீயினால் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தீவிபத்துக்கான காரணம் குறித்து ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.
    • நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் பெரும்பாலானவை பாசனத்துக்கு கை கொடுப்பதாக உள்ளன.

    இந்த ஏரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளி நாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள் வந்து செல்வது வழக்கம். உணவு மற்றும் இன பெருக்கத்துக்காக வரும் இந்த பறவைகள் சில மாதங்கள் ஏரிகளில் தங்கி இருந்துவிட்டு மீண்டும் பறந்து சென்று விடும்.

    தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 6 ஏரிகளில் அதிகளவு வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவை கள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.

    அந்த வகையில் வந்துள்ள இந்த பறவைகள் வழக்கத்தை விட கூடுதல் ஏரிகளில் தங்கி உள்ளன. ஒரகடம், நாவலூர், மணிமங்கலம், ஆதனூர் ஏரிகளிலும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்திருப்ப தை பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    வெளிநாட்டு பறவைகளில் எந்தெந்த வகை பறவைகள் தற்போது வந்துள்ளன என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு 190-க்கும் மேற்பட்ட அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    நாவலூர் ஏரியில் வெளிநாட்டு வகை வாத்துக்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு புதிய வகை பறவைகள் வந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை சில கிராம மக்கள் பிடிப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பறவை ஆராய்ச்சியாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர். சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் அரிய வகை பறவைகளை பிடித்து கூண்டுகளில் அடைத்து சிலர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை இன ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் அன்றைய தினம் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

    அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் விவரம் வருமாறு:-

    புழுதிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சங்கர், மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தி.வி.லதா, அத்திவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.மீனாட்சி, பாப்பாநல்லூர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். சுகந்தி, மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கிரேஸ் பெட்ரீ ஷியா மாலினி,

    செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ம.சச்சி தானந்தம், காரணை புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.இரா. சூரியகலா, மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ச.நாகராஜி, ஊரப்பாக்கம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ந.புவனேஸ்வரி ஆகியோருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் அ.ஷேக் தலைமை அகமது, வாலாஜாபாத் ஒன்றியம் பூதேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. சுந்தர ராசன்,

    குன்றத்தூர் ஒன்றியம், சிக்கராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, கீழ்க்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.மழலை நாதன், வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரா. சொர்ணலட்சுமி,

    குன்றத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.ஆ.வசந்தி, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எஸ்.பி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் அ.சுந்தரராஜன், குன்றத்தூர் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை நூருல் குதாயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ஓ.பி.எஸ். புரட்சி பயணத்தின் தொடக்கமாக இந்த பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது.

    இதைத் தொடர்ந்து தன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க மாவட்டம்தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து, இந்த சந்திப்புக்கு 'புரட்சி பயணம்' என்று பெயரிட்டார். இதன் துவக்கமாக இன்று காஞ்சிபுரம் அருகே கலியனூர் பொதுக்கூட்டத்தில் பேச திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. இன்றைய பொதுக்கூட்டம் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், வேறொரு நாளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்று இருக்கும் பண்ரூட்டி ராமச்சந்திரன் அறிவித்து இருக்கிறார்.

    • மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
    • தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    காஞ்சிபுரம்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது குன்றத்தூர் அருகே உள்ள சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் தேங்கிய தண்ணீரை சுத்தப்படுத்தி சப்ளை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிக்கராயபுரம், மலையம்பாக்கம் பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கடந்த சில நாட்களாக பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர் பகுதியில் விட்டு,விட்டு பலத்த மழைகொட்டி வருகிறது. இதனால் கல்குவாரிகளில் கூடுதலாக தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சி பகுதிகளில் பருவமழையை முன்னிட்டு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    பின்னர் சிக்கராயபுரம் மற்றும் மலையம்பாக்கத்தில் உள்ள செயல்படாத கல்குவாரியில் தேங்கி நிற்கும் மழைநீர் பகுதியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார். அப்போது அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கல்குவாரிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
    • ரஜினிகாந்தை ஓ.பி.எஸ். சந்தித்த உடனே, ஊடகங்களில் அவை மிகப்பெரிய செய்தி ஆகி உள்ளன.

    காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் பயன்படுத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோக்களுடன் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓ.பி.எஸ். அணியினர் அதனை கண்டு கொள்ளாமல் அ.தி.மு.க. பெயரையும் கட்சி கொடியையும் பயன்படுத்தி வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

    அந்த வகையில் காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் பயன்படுத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

    இதன் பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருவது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரை சந்தித்து மனு அளித்தனர். அதில் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாத நபர்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். அதை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த புகார் மனுவை அ.தி.மு.க.வினர் கடந்த 31-ந் தேதி அளித்திருந்தனர். ஆனால் அது தொடர்பாக போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. கொடிகள் மற்றும் சின்னத்தை காஞ்சிபுரம் முழுவதும் கட்டியுள்ளனர். இது தொடர்பாக ஓ.பி.எஸ். அணியின் துணை ஒருங்கிணைப்பாளரான ஜே.சி.டி.பிரபாகர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

    ரஜினிகாந்தை ஓ.பி.எஸ். சந்தித்த உடனே, ஊடகங்களில் அவை மிகப்பெரிய செய்தி ஆகி உள்ளன. தமிழகத்தில் ஒரு மாற்றம் வரப்போகிறது, ஒரு ஏற்றம் வரப்போகிறது. நாளை இந்த தமிழகம் எதிர்பார்க்கும் மாற்றமும், ஏற்றமும் அளிக்கும் கூட்டமாக இது அமையும்.

    ரஜினிகாந்துடன் நடைபெற்ற சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து ஓ.பி.எஸ். அறிவிப்பார். ஒரு மணி நேரம், தமிழகத்தில் மக்கள் விரும்பும் இரு பெரும் தலைவர்கள் சந்திக்கும் பொழுது, எல்லாவற்றையும் பேசியிருப்பார்கள் அதில் 'அரசியலுக்கு பஞ்சம் இருக்காது' என கருதுகின்றேன்.

    டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா கலந்து கொள்வார்களா என்கிற கேள்விக்கு பதில் அளிக்கையில், அவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் கலந்து கொள்வார்கள். இதுதான் உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. தனிக்கட்சி துவங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புரட்சி பயணம் முடியும் பொழுது, மக்கள் யாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், யார் பக்கம் இந்த கட்சி இருக்கிறது என்பதை இந்த நாடு பார்க்கப்போகிறது.

    தி.மு.க.வுக்கு சரியான பதிலடியை, கொடுக்கும் கூட்டமாக நாளை நடைபெற உள்ள கூட்டம் அமையும். தி.மு.க.வுக்கு எதிராக தொடுக்கப்பட்டு உள்ள அம்புகள் எல்லாம் நிச்சயமாக தெரிய வரும். 40 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் போட்டியிடும். ஓ.பி.எஸ். தொண்டர்களின் தலைவராக நிச்சயமாக அவர் தலைமை ஏற்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காஞ்சிபுரம் களியனூரில் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • காஞ்சிபுரம் செல்லும் பன்னீர்செல்வம் அங்குள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து வணங்குகிறார்.

    காஞ்சிபுரம்:

    அ.தி.மு.க.வில் தலைமை பதவி யாருக்கு என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.

    இதைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வரும் பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் விரைவில் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

    ஓ.பி.எஸ். தொடங்கப்போகும் புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. புரட்சித் தலைவி அ.தி.மு.க. உள்ளிட்ட பெயர்களை வைப்பதற்காக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரசார பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறார்.

    இதற்காக காஞ்சிபுரம் களியனூரில் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுகிறார். 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை முன்பு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதன் காரணமாக வழிநெடுக ஓ.பி.எஸ்.சை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இன்று பிற்பகலில் காஞ்சிபுரம் செல்லும் பன்னீர்செல்வம் அங்குள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து வணங்குகிறார்.

    பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இன்றைய பிரசார பயண பொதுக்கூட்டத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக ஓ.பி.எஸ். அணியின் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் உள்ள உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். அவர்களை வழிநடத்துவதற்காக தனி அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    அதற்கான தொடக்கமாகவே இன்றைய பொதுக்கூட்டம் அமையும். இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் என்ன பேசப் போகிறார் என்பதை அரசியல் களமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் முக்கிய காரணமாக இருப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காஞ்சிபுரத்தில் இன்று பிரசார பயணத்தை தொடங்க உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த வாரம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இதே போன்று பிரசார பயண பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதற்கான பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. வருகிற 9-ந் தேதி பன்னீர்செல்வத்தின் மனைவி 2-வது ஆண்டு நினைவு நாளாகும். அது முடிந்த பிறகு பன்னீர்செல்வம் பிரசார பயணத்தில் தீவிரம் காட்ட உள்ளார்.

    அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களை திரட்டி தனது பலம் என்ன என்பதையும் அவர் காட்ட இருக்கிறார்.

    இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்துள்ளார்.

    இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பொதுக்கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    குன்றத்தூர்:

    சென்னையை அடுத்த புழல் காவாங்கரையை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான காரில் நேற்று அதிகாலை தனது நண்பர் கணபதி என்பவருடன் தாம்பரத்தில் இருந்து வேங்கடமங்கலம் கிராமத்திற்கு சென்று தங்களது நண்பரை பார்த்துவிட்டு தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் புழல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.

    இதை பார்த்ததும் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். அதற்குள் காரின் முன் பகுதி தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயை அணைக்க போராடினார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் உள்ள பேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

    • புதிய ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் பூசிவாக்கம் லெனின்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்னழுத்த குறைபாடு காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதடைவதாகவும் அதனால் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, திம்மையன்பேட்டை, ஏகனாம்பேட்டை, பூசிவாக்கம், வெண்குடி என 5 கிராமங்களில் ரூ.40 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு அதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

    வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்துகொண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஏகனாம்பேட்டை கிராமத்திற்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதிக்கு வந்தபோது கிராம மக்கள் திரண்டு வந்து எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து தற்போது தான் தனக்கு தெரிய வருகிறது. அதனால் உடனடியாக புதிய ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். அதன் பேரில் முற்றுகையிட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி சுந்தரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் பூசிவாக்கம் லெனின்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×