search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: ரவுடிகள் இடையே யார் பெரியவர்? என்ற மோதலில் தீர்த்துக்கட்டப்பட்டார்
    X

    ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: ரவுடிகள் இடையே யார் பெரியவர்? என்ற மோதலில் தீர்த்துக்கட்டப்பட்டார்

    • எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார்.
    • ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசர்(வயது32).ரவுடி. இவர் மீது கொலை, மிரட்டல், அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    நேற்று மாலை எபினேசர் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் என்ற இடத்தில் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் திடீரென ஆட்டோ மீது காரை மோதினர். மேலும் 2 நாட்டுவெடி குண்டுகளையும் ஆட்டோ மீது வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த எபினேசர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட்டம் பிடித்தார். அருகில் உள்ள வயல்வெளியில் ஓடிய எபினேசரை மர்மகும்பல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

    இதற்கிடையே எபினேசர் வந்த ஆட்டோவை ஓட்டிவந்தவர் அங்கிருந்து ஆட்டோவுடன் தப்பி சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. திருமழிசை பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடிக்கும் எபினேசருக்கும் மோதல் இருந்து உள்ளது. இதில் யார்? பெரியவர்? என்று அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் இருதரப்பையும் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், கிரிஸ்டோபர் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனால் எபினேசரும், எதிர்தரப்பு ரவுடியும் மாறிமாறி யார் முந்திதீர்த்துகட்டுவது என்று திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் எபினேசர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு திருமழிசை பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எபினேசர் குற்றவாளி ஆவார். எனவே இந்த கொலைக்கு பழிக்குபழியாக எபினேசர் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் தொழில் அதிபர் பி.பி.ஜி. குமரன்,பா.ஜ.க.பிரமுகர் பி.பி.ஜி.டி சங்கர், கடந்த மாதம் தி.மு.க. பிரமுகர் ஆல்பர்ட் என அனைவரும் வெடி குண்டு வீசியும் வெட்டி கொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×