search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "container truck"

    • கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
    • மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணக்கட்டுகள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கு சென்றது. கண்டெய்னர் லாரியில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த கண்டெய்னர் லாரிக்கு முன்னும் பின்னும் 2 வாடகை கார்களில் கடலூர் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு வாகனங்களுடன் கண்டெய்னர் லாரி புதுச்சேரி மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவே முன்னால் பாதுகாப்புக்கு போலீசார் சென்ற காரின் டிரைவர் திடீர் பிரேக் பிடித்தார்.

    இதனால் பின்னால் கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் பின்பக்கம் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்த போலீசார் உயிர்தப்பினர். அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயுடன் விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    பொதுமக்களும் போலீசார் நடுரோட்டில் துப்பாக்கியுடன் நிற்பதை கண்டு என்ன ஏதேன்று விசாரிக்க தொடங்கினார்கள்.

    சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனடியாக மாற்று வாகனம் ஏற்பாடு செய்து அதில் ஏறி, கண்டெய்னர் லாரியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.
    • மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள அதானி பெர்த்தில் கண்டெய்னர் லாரியை டிரைவர் குமரேசன் என்பவர் இன்று அதிகாலை ஓட்டி சென்றார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது. உடனடியாக அங்கிருந்த துறைமுக பணியாளர்கள், டிரைவர் குமரேசனை மீட்டனர். காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரணை தாங்கல் என்னும் இடத்தில் சென்ற போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வந்தது.
    • அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் பகுதியில் பிரபல நிறுவனத்தில் புல்லட் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது. இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு புல்லட் மோட்டார்சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொழிற்சாலையில் இருந்து 88 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் கண்டெனர் லாரியில் ஜார்க்கண்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கண்டெய்னர் லாரி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் காரணை தாங்கல் என்னும் இடத்தில் சென்ற போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வந்தது.

    இதனை கவனித்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு கிழே இறங்கினார். சிறிது நேரத்தில் கண்டெய்னர் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்ட புதிய புல்லட் மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. மற்ற மோட்டார் சைக்கிள்களும் தீயினால் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தீவிபத்துக்கான காரணம் குறித்து ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். #VelloreAccident #ChennaiAccident #CarTruckAccident
    வாலாஜா:

    வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சென்னையைச் சேர்ந்த இவர்கள் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்தது.

    சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பனையூர் கும்மிடிகான் தோப்பு என்ற இடத்தை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 40). சோழிங்கநல்லூர் மீன்மார்க்கெட்டில் கோழிக்கடை நடத்தி வந்தார். இவருடைய உறவினர் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இறந்துவிட்டார். அவருடைய காரிய நிகழ்ச்சிக்காக சாதிக் அலி நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் ஆரணிக்கு சென்றிருந்தார். காரியம் முடிந்ததும் மாலையில் அனைவரும் ஊருக்கு திரும்பினர். காரை சாதிக் அலி ஓட்டி உள்ளார்.



    நேற்று இரவு 7 மணியளவில் வேலூர் மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியை தாண்டி வன்னிவேடு ஊராட்சி பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோட்டின் ஓரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று தேசியநெடுஞ்சாலைக்கு வந்து எதிர்திசையில் திரும்பியது.

    இதை பார்த்ததும் சாதிக் அலி காரை நிறுத்த முயன்றார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதைபார்த்த பொதுமக்கள் சென்று அவர் களை மீட்க முயன்றனர்.

    ஆனால் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருந்ததால் மீட்கமுடியவில்லை. அதைத்தொடர்ந்து வாலாஜா போலீஸ் நிலையம் மற்றும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

    காருக்குள் 2 பெண்கள் உள்பட 6 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே இருந்த இடத்திலேயே பிணமாக கிடந்தனர். 6 பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், ராணிப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் சாதிக் அலி, அவருடைய மனைவி பர்வீன் (35), மகன் மகபூப்பாஷா (15), சாதிக் அலியின் தந்தை அன்வருதீன் (70), தாய் அலாமாபீ (65) மற்றும் பர்வீனின் உறவினர் அகமதுபாஷா (60) என்பது தெரியவந்தது. 6 பேரின் உடல்களும் வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    சேர்க்காடு அருகே நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிப்காட்:

    சேர்க்காடு அருகே நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    வேலூர் மாவட்டம் பொன்னையை அடுத்த சி.என்.பட்டடையை சேர்ந்தவர் குமார் (வயது 55), மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி ஈடுத்துராணி (50), மகன் கார்த்தி (30). இவர்கள் அனைவரும் தற்போது ஆம்பூர் அருகே மாதனூரில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சேர்க்காட்டில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் உள்ள சியோன்மலையில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குமார், ஈடுத்துராணி, கார்த்தி மற்றும் 3 பெண்கள், 4 குழந்தைகள் ஆகியோர் ஆம்பூரில் இருந்து ஒரு காரில் நேற்று வந்தனர். காரை குமார் ஓட்டி வந்தார்.

    அந்த கார், சேர்க்காட்டில் இருந்து சியோன்மலைக்கு பகல் 1.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது திடீரென மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் குமார், ஈடுத்துராணி, கார்த்தி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆம்பூர் சாணாங்குப்பத்தை சேர்ந்த மெகர்சிலின் என்பவரின் மனைவி தமிழ்செல்வி (30), கார்த்தியின் மனைவி மெர்சி (28), ராஜேஷ்குமார் என்பவரின் மனைவி சங்கரி (28), மகன் சந்தோஷ்குமார் (7), மகள் மதுமிதா (5), கார்த்தியின் மகள் மெர்லின் (3), மகன் டேவிட்சன் (2) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் மேல்பாடி போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுமிதா பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×