என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பெண்களை அடிமையாக நினைக்கின்ற நடத்துகின்ற காலம் ஒன்று இருந்தது. கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பெண்களும் இழிவானவர்கள்”
    • 8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் விழாவில் பேசியதாவது:

    சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் ஒரு நிருபர், மக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் கொடுக்கப்பட்ட பிறகு என்ன செய்வீர்கள், என்று கேட்கிறார்.

    "காசு இல்லாததால் மருந்து மாத்திரை சாப்பிடுறதில்ல.. இனி மாத்திரை வாங்குவேன்" என்று ஒரு பாட்டி சொல்கிறார்கள்.

    இன்னொரு பெண்மணி சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், "தினமும் ஒருவேளைதான் சாப்பிடுகிறேன்.. இந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா... காலையில ரெண்டு இட்லி சாப்பிடுவேன்" என்று சொன்னார்கள்.

    இந்த இரண்டு பதிலும் எனக்கு நெகிழ்ச்சியை தந்தாலும், காலத்திற்கும் எண்ணி நான் பெருமைப்படுகிற மாதிரியான ஒரு பதிலை, நாம் எந்த நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோமோ அதை ஒரு வரியில் சொல்கின்ற மாதிரி இன்னொரு பெண்மணி ஒன்று சொன்னார்…

    "சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடந்து போவேன்" என்று அவர் சொன்னார். அதாவது, "சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடப்பேன்" என்று அவர் சொன்னார். இதைவிட இந்தத் திட்டத்திற்கும், எனக்கும் வேறு என்ன பெருமை வேண்டும்?

    இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கப் போகின்றது. நாள்தோறும் உதிக்கும் உதயசூரியன் போல உங்களுடைய இந்த உதயசூரியன் ஆட்சியும் உங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்க இந்த ஆயிரம் ரூபாய் பயன்படப்போகின்றது. இது தி.மு.க.வுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதி! மிகவும் முக்கியமான வாக்குறுதி!

    "இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள். இவர்களால் தர முடியாது" என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர் மூச்சாக வைத்து வாழுகின்ற சிலர் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை. அதுனால்தான், நிதி நிலைமையை ஓரளவுக்கு சரி செய்துவிட்டு இப்போது கொடுக்கின்றோம். இதையும் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின் என்று தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு நன்றாக தெரியும். சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி. இந்த விழா காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல-தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாவட்டங்களில், நகரங்களில் நடந்துகொண்டு இருக்கிறது.

    நான் போட்ட ஒரு கையெழுத்து, பலரது வாழ்க்கையை மாற்ற போகிறது என்ற அந்த உரிமையை எனக்குக் கொடுத்தவர்களே நீங்கள்தான்!

    மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். மக்களுக்காகதான் பயன்படுத்துவேன். இந்த இரண்டு திட்டங்கள், நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்தத் திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் உழைக்கக்கூடிய பெண்களுடைய உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்!

    இரண்டாவது நோக்கம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கிடைக்கப் போகின்றது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் பெண்கள் வாழ உறுதுணையாக இருக்கும்.

    உழவுக் கருவிகளை கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறினால்கூட பெண்களுடைய உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கங்களாலும், பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டார்கள்.

    பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தினுடைய உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பெண்களை அடிமையாக நினைக்கின்ற நடத்துகின்ற காலம் ஒன்று இருந்தது. கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பெண்களும் இழிவானவர்கள்" என்றெல்லாம்கூட எழுதி வைத்திருந்தார்கள்.

    இன்றைக்கு மானமும், அறிவும் உள்ள யாரும் அந்த மாதிரி பேசுவதில்லை. பெண் உடல்ரீதியாக எதிர்கொள்ளுகின்ற இயற்கை சுழற்சியைகூட தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தார்கள். ஓரமாக ஒதுக்கி வைத்தார்கள். படிக்கக் கூடாது-வேலைக்கு போகக்கூடாது-வீட்டுப்படியை தாண்டக்கூடாது அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்று பழமைவாத சிந்தனைகளை வைத்து பெரும்பான்மை பெண்ணினத்தை முடக்கி வைத்தார்கள். இது அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மட்டுமில்லை, உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அனுபவித்த துன்பம்!

    8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது. ஆனாலும், குழந்தைத் திருமணங்களை ஆதரித்து பேசுகின்ற பிற்போக்குவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மேல் வெறுப்பு, தீராத கோபம்... ஏனென்றால்..? சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. அப்படி செய்தால், அது சட்டபடி குற்றம். கைம்பெண் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

    பெண் குழந்தைகள் அனைவரும் படிக்க பள்ளி-கல்லூரிக்கு வந்து விட்டார்கள். இனி, உனக்கு படிப்பு எதுக்கு என்று சொல்ல முடியாது. நீ வேலைக்கு போகக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. இந்தச் சமூக சீர்திருத்த காலத்தை உருவாக்கியதுதான் திராவிட இயக்கம்!

    இன்றைக்கு பள்ளிகளில், கல்லூரிகளில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக படிக்கிறார்கள். அதுவும் நன்றாக படிக்கிறார்கள். அனைத்து வேலைகளுக்கும் பெண்கள் வந்துவிட்டார்கள். இந்த பாலினச் சமத்துவத்தை கொண்டு வந்து பெண்ணும், ஆணும் சரிநிகர் என்று உயர்த்தியதுதான் நம்முடைய திராவிட மாடல்!

    இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தந்தை பெரியார் சொன்ன மாதிரி, ஆணை விடவும் உயர்ந்தவர்களாக பெண்களை உயர்த்துவதுதான் திராவிட மாடல்!

    "எங்கள் அம்மா இல்லை என்றால் நான் இல்லை" என்று எத்தனையோ சாதனை மாணவிகள் பேட்டி தருவதை பார்த்திருக்கின்றோம்.

    ஒரு ஆணினுடைய வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளுடைய கல்வி, உடல்நலம் காக்கவும், ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பெண்கள் உழைத்திருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது? ஆனால் 'ஹவுஸ் ஒய்ஃப்' என்று சிலர் சாதாரணமாக சொல்லிவிடுவார்கள்.

    'உங்கள் மனைவி வேலைக்கு போகிறார்களா?' என்று கேட்டால், "இல்லை" என்று மட்டும் சொல்லாமல் "வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள்" என்று சிலர் சொல்வார்கள். வீட்டில் சும்மாவா நீங்கள் இருக்கிறீர்கள்? வீட்டில் பெண்களால் சும்மா இருக்க முடியுமா? வீட்டில் பார்க்கின்ற வேலைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் மகளிருக்கான உரிமையை கொடுக்கவேண்டும், அவர்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று உருவாக்கிய திட்டம்தான் இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

    தாயின் கருணை! மனைவியின் உறுதுணை! மகளின் பேரன்பு! இவையெல்லாம் ஒருவருக்கு கிடைத்துவிட்டால், அதைவிட வேறு செல்வம் தேவையில்லை! உண்மையில், உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும் தான்! என்னுடைய தாய் தயாளு அம்மையார், கருணையே வடிவானவர்கள். சிறிய வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்னைக்கு மழை வரக் கூடாது என்று வேண்டிக் கொள்வார்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • தாய் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' எனறு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது.
    • எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

    காஞ்சிபுரம்:

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என்னுடைய அரசியல் பயணத்துக்கு எத்தனையோ உந்துசக்திகள் இருக்கலாம் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி இருந்தது. இந்த காஞ்சி மாநகர் ரொம்ப சின்ன வயதில், கோபாலபுரம் வீதியிலே, இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

    அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்னுடைய வழக்கம். 1971-ம் ஆண்டு அண்ணாவின் கல்லறையிலே மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அண்ணா சதுக்கத்தில் இருந்து அண்ணா சுடரை கையில் ஏந்தி தொடர் ஓட்டமாக நானும் நண்பர்களும் புறப்பட்டு காஞ்சீபுரம் வந்து கழக மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கையில் அண்ணா சுடரை நான் ஒப்படைத்தேன்.

    இன்றைக்கு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் எடுத்து வந்த சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட தமிழ் சமுதாயத்தை காக்க கூடிய திராவிட சுடரை ஏந்தி வந்துள்ளேன்.

    அவரது கொள்கைகளை ஏற்று வாழ்வதால்தான் தமிழ் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைக்க இங்கு வந்துள்ளேன். இந்த திட்டத்தை நான் தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேராக நான் கருதுகிறேன்.

    தாய் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' எனறு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்த பெயர் நீடிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணா துரை தான் ஆள்கிறான் என்றார்.

    அதே போல் இன்றைக்கு மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

    இந்த 2½ ஆண்டில், எத்தனை திட்டங்கள், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி பெற விடியல் பயணத் திட்டம், பசியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி கற்க வரும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குகிற புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம், இந்த திட்டங்களை தொடங்கிய நாட்களில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியில் இப்போது இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் உரிமைத் திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்.
    • தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் கடைசி பக்கத்தில், 'தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்' என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்த நிலையில், பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தாலும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அந்த பட்டியலில் இடம்பெறாமலேயே இருந்து வந்தது.

    இந்த நிலையில், தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி (இன்று) தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.

    தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. இது அந்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

    மேலும், நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆவண சரிபார்ப்பில் தகுதியான பயனாளியாக இருந்தால், அவர்களும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

    • சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
    • பாம்புக்குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம், எந்த ஆவணங்களும் இல்லை.

    ஆலந்தூர்:

    தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சென்னை வாலிபர் ஒருவர் 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் அந்த கூடையில் சோதனை செய்தபோது, அரிய வகை பைத்தான் எனப்படும் 15 மலைப்பாம்பு பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்கா அணில் ஆகியவை உயிருடன் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வகை பாம்புகள் விஷமற்றவை ஆனால் ஆபத்தானவை. வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில், குளிர்பிரதேசங்களில் இருக்கக்கூடியவை ஆகும். அணில் குட்டி ஆப்பிரிக்க கண்டத்தில் அடர்ந்த காடுகளில் வசிக்கக்கூடியது. சுமார் ஒன்றரை அடி நீளம் வரை வளரக்கூடியது.

    பாம்புக்குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம், எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மலைப்பாம்பு குட்டி, அணில் ஆகியவை எந்த நாட்டில் இருந்து வந்ததோ? அதே நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்து உள்ளனர். அவை நாளை அதிகாலை, சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகிறது. இதற்கான விமான செலவுகள் அனைத்தையும் அதனை கடத்தி வந்த வாலிபரிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    • கடந்த சிலமாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கடைகளில் போலிபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • கைத்தறி சேலை எனக் கூறி விற்பனையில் ஈடுபட்டதால் கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பட்டுகள் மிகவும் பிரபலமானவை. இதனை பயன்படுத்தி சிலர் காஞ்சிபுரம் பட்டு என்று போலியான பட்டுக்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சிலமா தங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கடைகளில் போலிபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை பரிசோதனைக்காக அனுப்பி இருந்தனர். மேலும் விசைத்தறிகளில் தயார் செய்யப்பட்ட சேலைகளை கைத்தறி சேலை எனக் கூறி விற்பனையில் ஈடுபட்டதால் கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால் பட்டுச்சேலை பரிசோதனை முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை என்று இதனை உடனடியாக வெளியிட வேண்டும் கைத்தறி சேலை நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து கைத்தறித்துறை இயக்குனரிடம் கேட்டபோது பட்டுச் சேலை பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்தவுடன் வெளியிடப்படும் என்றார்.

    • பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
    • அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 12 மாத பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். வரும் 22-ந்தேதி பிற்பகல் 5 மணி வரை அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100-யை அரசுடமையாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் செலுத்திவிட்டு அதற்கான செலானை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    விண்ணப்பத்தில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்தும் செலுத்தலாம்.

    பதிவேற்றம் செய்யப்பட்ட செலான் நகல் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து அதில் சுய கையொப்பமிட்டு பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் அல்லது கொரியர் மூலம் மட்டுமே 22.09.2023 தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடி போதையில் பஸ்சில் ஏறிய நபரை பஸ் டிரைவர் காட்ரம்பாக்கம் ஜங்ஷன் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.
    • டிரைவரின் தலையில் பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு மர்ம நபர் தப்பிச்சென்று விட்டார்.

    சோமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (வயது 52), சென்னை மாநகர அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சைதாப்பேட்டையில் இருந்து அமரம்பேடு நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்சை ஓட்டிச்சென்றார். அமரம்பேடு சென்றடைந்த பின்னர் அங்கு இருந்து மீண்டும் சைதாப்பேட்டைக்கு பஸ் புறப்பட்டது. அப்போது குடி போதையில் பஸ்சில் ஏறிய நபரை பஸ் டிரைவர் காட்ரம்பாக்கம் ஜங்ஷன் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.

    பின்னர் டிரைவர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி அந்த பகுதியில் பாட்டிலில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற போது டிரைவரின் தலையில் பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு மர்ம நபர் தப்பிச்சென்று விட்டார்.

    இது குறித்து டிரைவர் குமார் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் டிரைவரை தாக்கிய நபர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து. பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு நேரில் சென்று திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.
    • வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 1 கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் 15-ந் தேதி காலை 10 மணிக்கு நடை பெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு நேரில் சென்று திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். அவருக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் தொடக்க விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீபெரும்புதூர் மணிகூண்டு அருகில் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பேண்டு வாத்தியம்-மேள தாளம்- அதிர் வேட்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய கழகத்தினர் அனைவரும் திரளாக திரண்டு நின்று, எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை தொடர்ந்து பிள்ளை சத்திரம் அருகில் செண்டை மேளம் - பேண்டு வாத்தியம் - அதிர் வேட்டுகள் முழங்க வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    அடுத்து, வாலாஜாபாத் வடக்கு - தெற்கு ஒன்றியம், காஞ்சிபுரம் வடக்கு - தெற்கு ஒன்றியம், காஞ்சிபுரம் மாநகரம் ஆகியவற்றின் சார்பில் வழியெங்கும் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    மொத்தத்தில் ஸ்ரீபெரும்புதூர் நகரில் இருந்து விழா நடைபெறும் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானம் வரை 40 கி.மீ. தூரத்திற்கு வழி நெடுகிலும் பெரும் கூட்டமாக நின்று வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரில் இருந்து - காஞ்சிபுரம் வரை வழியெங்கும் சாலையின் இருமருங்கிலும் கழக கொடி, தோரணங்களும், வரவேற்பு பதாகைகளும், பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அமைத்து, காஞ்சிபுரம் மாநகரில் இதுவரை, இதுபோன்ற கோலகலமான வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்றது இல்லை என்ற அளவிற்கு மிகவும் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிற 15-ந் தேதி காலை 8.30 மணிக்கெல்லாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதனாத்தில் அலைகடலென திரண்டு குவிந்திட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.

    • ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
    • அனைவரும் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

    காஞ்சிபுரம்:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப். 1-ந் தேதி முதல் செப். 30-ந் தேதி வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக முதல் வாரத்தில் பிரத்யேக தாய்ப்பால் புகட்டுதல் மற்றும் இணை உணவு அளித்தல், இரண்டாவது வாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் மற்றும் ஊட்டச்சத்து, முன்பருவக் கல்வி, யோகா, உள்ளூர் உணவு போன்ற ஆயுஷ் நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின் பற்றுதல் நடைபெறுகிறது.

    மூன்றாவது வாரத்தில் என் மனம் என் நாடு மற்றும் பழங்குடியினரை மையமாகக் கொண்டு ஊட்டச்சத்து உணர்திறன் நிகழ்ச்சியில் நான்காவது வாரத்தில் ரத்தசோகை பரிசோதனை, சிகிச்சை, ஒட்டுமொத்த ஊட்டச் சத்து நடவடிக்கைகள் மற்றும் சமுதாய தோட்டங்கள் அமைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் மற்ற துறைகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கி ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி வாசித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவரும் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) க.சங்கீதா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார திட்ட உதவியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
    • ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    இந்து சமய அறநிலைய துறை சார்பில் கோவில்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.

    அதன்படி காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட 3 ஜோடிகளுக்கு குமரக்கோட்டம் முருகன் கோவிலில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. .எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் திருமணம் செய்து கொண்ட 3 ஜோடிகளுக்கும் தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதில் துணை ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, திருக்கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • விழா மேடை அமைக்கும் பணிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    காஞ்சிபுரம்:

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்ட தொடக்க விழாவுக்கான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுப் பணித்துறையினரால் மேற்கொள்ளப்படும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கால் கோள் விழா இந்த மாதம் 29-ந் தேதி நடக்கிறது.
    • பெங்களூர் சாலை காரையில் உள்ள விடுதலை பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் தங்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது.

    விடுதலை பறவைகள் கட்சி நிறுவன தலைவர் டெல்லி ராஜா சமூக நல அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பெங்களூர் சாலை காரையில் உள்ள விடுதலை பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் தங்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக கால் கோள் விழா இந்த மாதம் 29-ந் தேதி நடக்கிறது.

    தங்க சிலை அமைக்க தமிழகம் முழுவதும் விடுதலை பறவைகள் கட்சி சார்பில் பல்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் தங்க சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்கள் என்று கட்சியின் நிறுவன தலைவர் டெல்லி ராஜா கூறினார்.

    ×