search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விமானத்தில் கடத்தி வரப்பட்ட 15 மலைப்பாம்பு குட்டி-ஆப்பிரிக்க அணில் பறிமுதல்
    X

    விமானத்தில் கடத்தி வரப்பட்ட 15 மலைப்பாம்பு குட்டி-ஆப்பிரிக்க அணில் பறிமுதல்

    • சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
    • பாம்புக்குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம், எந்த ஆவணங்களும் இல்லை.

    ஆலந்தூர்:

    தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சென்னை வாலிபர் ஒருவர் 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் அந்த கூடையில் சோதனை செய்தபோது, அரிய வகை பைத்தான் எனப்படும் 15 மலைப்பாம்பு பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்கா அணில் ஆகியவை உயிருடன் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வகை பாம்புகள் விஷமற்றவை ஆனால் ஆபத்தானவை. வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில், குளிர்பிரதேசங்களில் இருக்கக்கூடியவை ஆகும். அணில் குட்டி ஆப்பிரிக்க கண்டத்தில் அடர்ந்த காடுகளில் வசிக்கக்கூடியது. சுமார் ஒன்றரை அடி நீளம் வரை வளரக்கூடியது.

    பாம்புக்குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம், எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மலைப்பாம்பு குட்டி, அணில் ஆகியவை எந்த நாட்டில் இருந்து வந்ததோ? அதே நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்து உள்ளனர். அவை நாளை அதிகாலை, சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகிறது. இதற்கான விமான செலவுகள் அனைத்தையும் அதனை கடத்தி வந்த வாலிபரிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×