என் மலர்
காஞ்சிபுரம்
- பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது.
- எந்திரங்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.
காஞ்சிபுரம்:
பாராளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராமத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிலிருந்து, முதல் நிலை சரிபார்ப்பு முடிவுற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலிருந்து, அலுவலர்களுக்கு பயிற்சியும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் ஆகியவை, மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பொது மக்களின் விழிப்புணர்வுக்காக, வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.
- வெறி நாயை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக்குபேட்டை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை நடுத்தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சாலியர் தெருவிற்கு செல்லும் குறுக்கு சந்து பகுதியில் வெறி நாய் ஒன்று திரிகிறது.
இப்பகுதியில் தனியார் பட்டு ஜவுளியகம் உள்ளதால் பட்டு சேலை எடுக்க வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை, வெறி நாய் கடித்து வருகிறது.
இதுவரை உள்ளூர் மற்றும வெளியூர்வாசிகள் என மொத்தம் 15 பேரை, இந்த வெறி நாய் கடித்துள்ளதாக இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். எனவே அச்சுறுத்தும் வெறி நாயை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக்குபேட்டை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வெறி நாய் ஒன்று சுற்றி வருகிறது. அதே கிராமத்தை சேர்ந்த பிரபாவதி (வயது 67) என்பவரை கடித்து உள்ளது. அதே நாளில் அடுத்தடுத்து தட்சணாமூர்த்தி, கவிதா, கோமளா உள்ளிட்ட ஏழு பேரை வெறி நாய் கடித்துள்ளது. தொடர்ந்து அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
- மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம்:
மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக குன்றத்தூர் தாலுகாவில் பெரும் பகுதியும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மேவலூர் குப்பம், சிவன் தாங்கல், கச்சிப்பட்டு ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1.37 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை கிடைக்க இருக்கிறது.
- பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து போரட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள சுமார் 20 கிராமங்களில் 3 ஆயிரத்து 774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியாள நாள் முதலே கிராமமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து போரட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள், பணியாற்ற உள்ளனர். மேலும் இந்த அதிகாரிகளின் கீழ் 24 தாசில்தார்கள், 24 துணை தாசில்தார்கள், சர்வேயர், வருவாய் ஆய்வாளர்கள், 326 வருவாய் துறை ஊழியர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிலம் எடுப்புக்காக பணியாற்ற உள்ளனர். நில எடுப்புக்கு நியமிக்கப்பட உள்ள மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்களில் முதற்கட்டமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் நாராயணன் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும் நில எடுப்பு அலுவலகம் செயல்பட இடம் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
- ஏரியின் ஒருபகுதியில் 1300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
- வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் அமைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருநின்றவூர்:
மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.
எனினும் திருநின்றவூர் நகராட்சியில் ஈசா ஏரியையொட்டி உள்ள ராமதாஸ்புரம் பெரியார் நகர், முத்தமிழ் நகர், பாரதியார் தெரு, கம்பர் தெரு, ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் அமைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி அலுவலர்களுக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டனர்.
இதேபோல் கொட்டாமேடு பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை கால்வாய் அமைத்து கல்வெட்டு மூலம் வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. இதனையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, கனமழையால் திருநின்றவூர் நகராட்சிக் குட்பட்ட 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈசா ஏரி 11.5 அடி உயரம் நிரம்பியது. இதனால் ஏரியின் ஒருபகுதியில் 1300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டிற்கு பிறகு மிச்சாங் புயலினால் 2 நாட்களில் 68 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலமும், கொட்டமேடு பகுதியில் தனியாக கால்வாய் அமைத்தும் வெளியேற்றப்படுகிறது என்றார்.
- சட்ட நன்னடத்தை அலுவலர் தயாளன் உடன் இருந்தனர்.
- பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறை உள்ளது. இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனரா? என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது கிளை சிறை கண்காணிப்பாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் மெர்லின் ஜெயா , மாவட்ட நீதி குழும உறுப்பினர் மற்றும் சமூக பணியாளர் சக்திவேல், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சுரேஷ் , சட்ட நன்னடத்தை அலுவலர் தயாளன் உடன் இருந்தனர். ஆய்வின் போது கைதிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்தனர்.
- செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வரதராஜபுரம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரத்தூர் ஏரியில் நீர் திறனை உயர்த்தி 4 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வேண்டும்.
மிச்சாங் புயல் காரணமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மத்திய குழுவிடம் வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அதில் வெள்ளத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
2015-ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு மாநில அரசு மாவட்ட நிர்வாகம் நீர் வழித்துறை அடையாறு ஆற்றை அகலப்படுத்துவது கரைகளை பலப்படுத்துவது, மதகுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. ஆனாலும் வெள்ள சேதத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை.
எதிர்காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களிடம் தெரிவித்து கொள்கிறோம்.
அடையாறு ஆறு மற்றும் கரைகளை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும். அடையாறு ஆற்றை 10 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்டதாக அமைக்க வேண்டும். அடையாறு ஆற்றின் இருபுறமும் ஒரு சில இடங்களில் மட்டும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆற்று பகுதி அனைத்து இருபுறத்திலும் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண் டும். தற்போதுள்ள தடுப்பு சுவர் உயரத்தில் இருந்து கூடுதலாக 4 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும். மழைக்காலங்களில் ராட்சத மோட்டார் பம்புகள் அமைத்து குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீரை ஆற்றில் விட வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வரதராஜபுரம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் அடையாறு ஆற்றில் விடுவ தற்கு பதிலாக முட்டுக்காடு வழியாக கடலுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரியை 4 அடிக்கு குறையாமல் தூர்வார வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தூர்வார வேண்டும். இதனால் ஏரியின் கொள்ளளவு அதிகரிக்கும். அதிகபடியாக தண்ணீர் வெளியேற்றத்தை தடுத்தும் அடையாற்றின் மேல் வெளிவட்ட சாலையில் கட்டப்பட்ட பாலம் அகலம் குறைவாக உள்ளதால் ராயப்பா நகர் பகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது.
எனவே ராயப்பா நகரில் கூடுதல் பாலம் அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரத்தூர் ஏரியில் நீர் திறனை உயர்த்தி 4 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வேண்டும்.
கடந்த காலங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ள வரதராஜபுரம் பகுதி முழுவதும் தரமான சாலைகள் அமைக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு சிறப்பு சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை குழுவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். இதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து வெள்ளத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
- ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
- ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.
ஸ்ரீபெரும்புதூர்:
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியும் முழு அளவில் நிரம்பி காணப்பட்டது.
இந்த ஏரியின் மதகு பகுதி சேதம் அடைந்து இருந்ததால் பாதுகாப்புக்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இந்த தண்ணீர் நடுவீரப்பட்டு, திருவஞ்சேரி கிராமங்களுக்குள் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். அப்போது கிராமம் முழுவதும் ஏரி தண்ணீர் புகுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து 2 கிராமங்களில் இருந்தவர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். திடீரென ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். உடனடியாக ஏரியின் உடைந்த கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி சரிசெய்யப்பட்டது. எனினும் ஏரியில் இருந்த சுமார் 50 சதவீத தண்ணீர் வெளியேறி விட்டது. இந்த ஏரி சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சுற்றி உள்ள கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக நடுவீரப்பட்டு ஏரி இருந்தது. இந்த நிலையில் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏரிக்கரை தானாக உடைந்ததா? அல்லது வேறு யாரேனும் உடைத்து விட்டனரா?என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடுவீரப்பட்டு ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தண்ணீர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஏரிக்கரை உடைந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
- நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
- 45 ஏரிகள் 25 முதல் 49 சதவீதத்துக்கு மேலும். நிரம்பி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
இதில் 632 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 111 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 121 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் 45 ஏரிகள் 25 முதல் 49 சதவீதத்துக்கு மேலும். நிரம்பி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தற்காலிக கரை இதுவரை 5-வது முறையாக உடைந்துள்ளது.
- வருடம்தோறும் ஏரியில் இருந்து நீர் வெளியேறிய பிறகு மணல் அடுக்குவதால் எந்த நன்மையும் இல்லை.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ஒரத்தூர் ஏரியின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி 3 ஆண்டு முன்பு தொடங்கியது. ஆனால் அந்த பணி இன்னும் முழுமையாக முடிவடையாமல் உள்ளது.
இந்நிலையில் இந்த நீர்த்தேக்கம் பணியின் போது ஏரியில் உள்ள நீர் வெளியேறாமல் இருப்பதற்கு தற்காலிக கரை அமைக்கப்பட்டது. தற்போது பெய்த மழையில் நீர்த்தேக்கம் அருகே உள்ள தற்காலிக கரை உடைந்து மழைநீர் வீணாக வெளியேறியது. தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை வைத்து உடைந்த கரையை சீரமைத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இந்த தற்காலிக கரை இதுவரை 5-வது முறையாக உடைந்துள்ளது. ஒவ்வொரு மழைகாலத்திலும் இந்த தற்காலிக கரை குறிப்பிட்ட இடத்திலேயே உடைந்து ஏரி நீர் முழுவதும் வெளியேறுகிறது. அப்படி வெளியேறி வரும்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டை அடுக்குவதும் வாடிக்கையாக உள்ளது.
வருடம்தோறும் ஏரியில் இருந்து நீர் வெளியேறிய பிறகு மணல் அடுக்குவதால் எந்த நன்மையும் இல்லை. அரசு பணம்தான் வீன். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தற்காலிக கரை தொடர்ந்து ஒரே பகுதியில் உடைவது குறித்து அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.
- செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
- அரசு ஆவணங்களை இழந்த பொது மக்கள் நகல் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குன்றத்தூர் வட்டத்தில் மிச்சாங், புயலின் தாக்கத்தால் மிக அதிக கனமழை பொழிந்து ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றின் நகல் சான்றிதழ்களை பெறுவதற்காக விண்ணப்பிக்க இன்று(11-ந்தேதி) முதல் முதல் 10.01.2024 வரை காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
முகாம்கள் குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மாங்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கொளப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வரதராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. எனவே மிச்சாங் புயலினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சான்றிதழ்கள் மற்றும் அரசு ஆவணங்களை இழந்த பொது மக்கள் நகல் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
- அதிர்ச்சி அடைந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இது குறித்து சோமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கன மழையால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வெள்ளநீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்த விஜயலட்சுமி இரண்டாம் மாடியில் வசித்து வந்த சரத்குமார், கார்த்திக், சரத் பாபு, அருண் ஆகிய குடும்பங்களை சேர்த்தவர்கள் தங்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு மீட்பு குழுவினர் மூலம் படகில் சென்று அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது முதல் தளத்தில் இருந்த விஜயலட்சுமி வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதைபோல இரண்டாம் மாடியில் வசித்து வரும் சரத்குமார் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், கார்த்திக் என்பவர் வீட்டில் 5 பவுன் நகை, சரத் பாபு வீட்டில் 11 பவுன் நகை, அருண் வீட்டில் 10 பவுன் நகை என மொத்தம் 5 வீட்டில் 53 பவுன் நகைகளை பீரோவை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இது குறித்து சோமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து பீரோ மற்றும் சுவற்றில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
இது சம்பவம் குறித்து தகவல் வரதராஜபுரம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து முகாமில் தங்கி இருந்த மக்கள் முகாமிலிருந்து வீடுகளுக்கு படையெடுக்க தொடங்கினர்.






