search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fisherman's Village"

    • மீன்பிடி ஏலதாரர்கள் மீன்களின் எடை பெருக்கத்திற்காக அணை நீரில் கழிவுகளை கொட்டி வருவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.
    • வைகை அணை நீர்பிடிப்பை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேனி:

    தேனி மாவட்டம், வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மீன்பிடி ஏலம் பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி ஏலதாரர்கள் மீன்களின் எடை பெருக்கத்திற்காக அணை நீரில் கழிவுகளை கொட்டி வருவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சக்கரைபட்டி கிராம பகுதியில் உள்ள வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி நகர பொதுச்செயலாளர் பொன்மணி தலைமையில், மீனவர் பழனியாண்டி மற்றும் கிராம மக்கள் கருப்பு கொடியுடன் அணை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் வைகை அணையில் மீன் பிடி ஏலத்தை ரத்து செய்ய கோரி கையில் கருப்பு கொடி ஏந்தி, நீரில் நின்று கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் மீன் பிடி நிலத்தை ரத்து செய்யாவிட்டால் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே போராட்டம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் போலீசார் மற்றும் பெரியகுளம் தாலுகா, தென்கரை வருவாய் ஆய்வாளர் அம்பிகா ஆகியோர் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து பெரியகுளம் தாசில்தார் அர்ஜூனன் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, வைகை அணை நீரில் இறங்கி போராட்டம் நடத்தி வருபவரிடம் உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தற்போது தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சம்பவம் வைகை அணை நீர்பிடிப்பை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும்

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரை பகுதிக்கும் பரவியதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தாசில்தார் மதிவாணன். மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன், சுற்றுச்சூழல் அதிகாரி லிவிங்ஸ்டன் ஆகியோர் நேரில் பழவேற்காடு கடற்கரை மற்றும் ஏரிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரை சேகரித்து பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் செல்லாமல் இருந்த மீனவர்கள் தற்போது கடலில் எண்ணெய் கழிவு கலப்பால் 20நாட்களாக வாழ்வாதாரம் பாதித்து தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி, கோட்டைக்குப்பம் ஊராட்சி, தாங்கல் பெரும்புலம் ஊராட்சி அவுரிவாக்கம் ஊராட்சி, பழவேற்காடு ஊராட்சி ஆகிய ஊராட்சி மீனவர் கிராமங்களின் கூட்டமைப்பு சார்பில் 33 கிராம மீனவர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து 33 மீனவ கிராம பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், பழவேற்காடு கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவினால் மீன்கள், இறால்கள் நண்டுகள் உற்பத்தி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    ×