என் மலர்tooltip icon

    ஈரோடு

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 29-ந்தேதி கோபி வருகிறார். அன்று தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் உருவச்சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
    கோபி:

    கோபி வாய்க்கால் ரோட்டில் டி.எஸ். ராமன், சரோஜினிதேவி விடுதிகள் உள்ளன. இதை முன்னாள் கோபி நகர்மன்றத் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியமான ஜி.எஸ்.லட்சுமணன் நிறுவினார்.

    இந்த விடுதியில் இவருடைய உருவச்சிலை இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வரும் 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் உருவச்சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலை வகிக்கிறார். டெல்லி அகில இந்திய ஹரிஜன் சேவக் சங் தலைவர் சங்கர்குமார் சன்யால், கோபி ஹரிஜன் சேவக் சங் தலைவர் வெங்கடேஸ்வரன், முன்னாள் மாணவ, மாணவிகள் பேரவை தலைவர் தொட்டு குண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    முன்னதாக தமிழ்நாடு ஹரிஜன் சேவக் சங் தலைவர் மாருதி வரவேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை டி.எஸ்.ராமன், சரோஜினிதேவி விடுதி முன்னாள் மாணவ, மாணவிகள், விடுதி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த திருமணமான வாலிபர் திடீரென மாயமானது குறித்து அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அரவிந்த் (வயது 24). திருமணமாகி மனைவி உள்ளார்.

    வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பிறகு வீடு திரும்பவில்லை. மாயமாகி விட்டார்.

    காணாமல் போன அன்று இரவு 10 மணிக்கு அரவிந்த் தனது மனைவியிடம் போன் செய்து நான் நீல்கிரிஸ் அருகே எல்.ஐ.சி அலுவலகம் முன்பு இருக்கிறேன். 10 நிமிடத்தில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று கூறினாராம். ஆனால் அவர் இதுவரை வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து அரவிந்த் தந்தை ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் மனு அளித்துள்ளார்.
    அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உறவினருடன் திருமணத்துக்கு சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி மஞ்சு கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனபாக்கியம் (வயது 55).

    இவர் தனது கணவரின் அண்ணன் காசியண்ணனுடன் ஒரு திணமணத்துக்கு சென்று விட்டு அம்மாபேட்டை அந்தியூர் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே வந்தனர். அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து பெங்களூர் செல்வதற்காக ஒரு ஈசர் லாரி வந்தது. அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு மக்கள் கூட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் மீது மோதமல் இருக்க லாரியை வலது புறமாக திருப்பினார். இதில் நிலை தடுமாறி எதிரே வந்து கொண்டு இருந்த காசியண்ணன் இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காசியண்ணன் மற்றும் தனபாக்கியம் தூக்கி வீசப்பட்டனர்.

    அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தனபாக்கியம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    காசியண்ணன் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்ரசக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அம்மாபேட் டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சேரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கொடுமுடி மடேஸ்வரர் கோவிலில் இன்று தாலி கட்டும் நேரத்தில் பெண் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி திருமணத்தை திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கொடுமுடி:

    கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இன்று திருமண முகூர்த்த நாள் என்பதால் பரப்பரப்பாக காணப்பட்டது.

    திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 34). இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக கடந்த 2 மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    இவருக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று இருவருக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு கொடுமுடி கோவிலில் ராகு-கேது பரிகாரம் செய்யப்பட்டது. பிறகு திருமணத்துக்காக மாப்பிள்ளை மணமேடையில் அமர்ந்திருந்தார்.

    திருமணத்துக்கு பெண்ணை அழைத்து வந்து அமர வைத்தனர். மாப்பிள்ளை மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதற்காக முயன்றார். அப்போது மணப்பெண் மாப்பிள்ளையை தாலி கட்ட விடாமல் கையை பிடித்து தட்டி விட்டார். இதனால் மாப்பிள்ளை மற்றும் இரு வீட்டார் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ‘‘மாப்பிள்ளை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு திருமணம் வேண்டாம்’’ என்றார் மணப்பெண். இதையடுத்து இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பக்ரீத்தொழுகை நடத்தப்பட்டது.
    ஈரோடு:

    இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் தான் பக்ரீத் திருநாள் ஆகும்.

    இறைவனின் அருளை பெறுவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாளாகவும் இந்நாள் விளங்குகிறது.

    இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இன்று பக்ரீத் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலயே எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகைகளில் ஈடுப்பட்டனர்.

    பக்ரீத்தையொட்டி ஆட்டை பலியிட்டு அதை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். இரண்டாவது பங்கை உறவினர்களுக்கு கொடுத்தனர். மூன்றாவது பங்கை தங்களுக்கு வைத்து கொண்டனர்.

    ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஈரோடு மாவட்ட அரசு காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று ஈரோடு மாநகரில் உள்ள ஜானகியம்மாள் லே-அவுட் பள்ளிவாசல்,புது மஜித் வீதியில் உள்ள சுல்தான் பேட்டை பள்ளிவாசல், அசோகபுரம் , திருநகர் காலனி, கே.எஸ்.நகர், சம்பத்நகர், டவுண் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பள்ளிவாசல், மரப்பாலம், ரெயில்வே காலனி, முத்தம்பாளையம், திண்டல் புதுகாலனி, பெரிய அக்ரஹாரத்தில் உள்ள ஈத்கா மைதானம் என மாநரில் உள்ள 43 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போன்று சத்தியமங்கலத்தில் உள்ள போட்டு வீராம்பாளையத்தில் 1,500 இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையும் நடந்தது. புளியம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போன்று பெருந்துறை, கோபி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 250 பள்ளிவாசல்களிலும் , 42 ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது.

    கொடுமுடியில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

    இதனையொட்டி ஈரோடு- கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் இருந்து ஹஸ்ரத் முகமது யாசின், ஹஸ்ரத் சாதிக் பாட்சா தலைமையில் முத்தவல்லி அபுபக்கர் முன்னிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலம் கொடுமுடி பழைய பஸ் நிலையம் வழியாக சென்று சுல்தான் பேட்டையில் உள்ள சுல்தான் மாகல்லா பள்ளிவாசலுக்கு வந்தனர். பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள மண்டபத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பக்ரீத் பண்டிகையையொட்டி கோபியில் முஸ்லிம்கள் பங்கேற்ற ஊர்வலம் இன்று நடந்தது. ஈரோடு- சத்தி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளி வாசல் முன்பு இந்த ஊர்வலம் தொடங்கியது.

    கடை வீதி, மார்க்கெட் வழியாக சென்ற இந்த ஊர்வலம் ஈத்கா பள்ளி வாசலில் முடிவடைந்தது. அங்கு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பக்ரீத்தொழுகை நடத்தப்பட்டது.

    பெருந்துறையில் குன்னத்தூர் ரோட்டில் உள்ள மஜித் வீதியில் உள்ள மசூதியிலும். இதேபோல் புதிய மசூதியிலும் இன்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    பெருந்துறை சிப்காட் தொழில் பேட்டையில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும் பாலோனோர் முஸ்லிம்கள் ஆவார்கள்.

    இவர்களும் இன்று பக்ரீத்தையொட்டி சிறப்பு தொழுகை நடத்த திரண்டனர். ஆனால் மசூதியில் போதிய இடம் இல்லாததால் இந்த 2 மசூதியிலும் ஷிப்டு முறையில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தினர்.

    ஒரு ஷிப்டுக்கு 1000 பேர் என அவர்கள் சிறப்பு பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர்.  #tamilnews
    ஒளிரும் ஈரோடு சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வார பணி துவங்கப்பட்டது.
    ஈரோடு:

    ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் ஈரோடு மாவட்டத்தில் 30 குளம், குட்டை, ஏரி, ஓடை, தடுப்பணைகள், கால்வாய் மற்றும் அணைக்கட்டு போன்ற நீர் நிலைகளை (மொத்தம் 120 ஏக்கர் பரப்பளவு) சுத்தம் செய்து, தூர் வாரி, ஆழப்படுத்தி மற்றும் அகலப்படுத்தி அதிக அளவில் நீர் சேமிக்க வழிவகை செய்துள்ளது.

    இந்த நிலையில் மொடக்குறிச்சி வட்டம், கணபதிபாளையம் அருகே உள்ள 22 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொளத்துபாளையம் குளத்தை தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. ஒளிரும் ஈரோடு அமைப்பின் செயலர் கணேசன், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தனர்.

    தூர்வாரும் பணியின் மூலம் கொளத்துபாளையம் குளம் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படுகிறது. பருவமழை மற்றும் கீழ் பவானி கால்வாய்கள் மூலம் உபரி நீர் சேமிக்கப்பட்டு அருகில் உள்ள கிணறுகள், ஆழ்துளை போர்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு பயனுள்ளதாக அமையும்,

    மேலும் குடிநீர் தட்டுப்பாடு முழுவதும் நீங்கும் நிலை ஏற்படும். இந்த திட்டம் ரூ.20 லட்சம் செலவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

    கதிரம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மூலக்கரை தடுப்பணையின் கரைகளில் பனை விதைகள் மற்றும் வேப்ப விதைகள் ஊன்றும் பணி தொடங்கப்பட்டது.

    ஒளிரும் ஈரோடு அமைப்பின் துணை தலைவர் வெங்கடேஸ்வரன், அறங்காவலர்கள் சுந்தரம், தர்மராஜ், செயலர், ரவுண்ட் டேபிள்-211 அமைப்பு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதுவரை மூன்று நீர் நிலைகளில் சுமார் 5000 பனை விதைகள் மற்றும் 3000 வேப்ப விதைகள் நடப்பட்டுள்ளன. ஒளிரும் ஈரோடு அமைப்பு இதுவரை தூர்வாரிய 30 நீர் நிலைகளின் இரு கரைகளிலும் மற்றும் காலிங்கராயன் கால்வாய் இரு கரைகளிலும் பனை விதைகள் மற்றும் வேப்ப விதைகள் ஊன்றுவதற்க்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மண் அரிப்பு தடுக்கப்பட்டு கரைகள் பலப்படுகிறது. இயற்கை பாதுகாக்க வழிவகுக்கப்படுகிறது. #tamilnews
    அந்தியூர் அருகே பிளஸ்-2 மாணவன் மாயமான சம்பவம் குறித்து போசலீசார் விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வருகின்றனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வெள்ளையம் பாளையத்தை சேர்ந்தவர், தங்கவேல், கூலி வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் தமிழரசன் (வயது 17). இவர் அந்தியூர் அரசுபள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்வீட்டிற்கு வரவே இல்லை.

    இதனால் பெற்றோர் நண்பர்கள்,உறவினர்கள் வீட்டில் தேடியும் தமிழரசன் கிடைக்கவில்லை.அதனால் தமிழரசனின் தந்தை தங்க வேல் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் போரில் அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை தேடி வருகின்றனர்.

    மேலும் என்ன காரணத்திற்காக வீட்டை விட்டு மாணவன் வெளியேறினார் என்று போசலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    ஈரோடு பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் பெரிய கொடிவேரி வீரசென்னனூர் பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 40) குமார் சம்பவத்தன்று தனது நண்பர் மணியுடன் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தார்

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பார்க்செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினார். குமார் பின்னால் ஒரு முதியவர் நின்று கொண்டு இருந்தார் அப்போது குமார் பின்னால் நின்று கொண்டிருந்த முதியவர் திடீரென குமார் பையில் இருந்த பணத்தை திருடி கொண்டு ஓடினார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் திருடன் திருடன் என கூச்சலிட்டார்

    அந்த வழியாக வந்தவர்கள் அந்த முதியவரை மடக்கிப் பிடித்தனர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதியவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் அந்த அந்த முதியவர் ஈரோடு சம்பத் நகரைச்சேர்ந்த ராஜேந்திரன் என தெரிய வந்தது இதையடுத்து அந்த முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியுள்ளார்.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பார்வையிட்டார்.

    பிறகு அந்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 375 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் கே.சி. கருப்பணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது நிருபர்கள் அமைச்சரிடம் சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதே? என்று கேட்டனர்.

    அதற்கு பதிலளித்து அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியதாவது:- பொதுப்பணித்துறை நமது முதல் அமைச்சரிடம் உள்ளது. எனவே முதல்வர் தகுந்த முடிவை எடுப்பார். ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம். உரிய தீர்வு வரும்.

    இவ்வாறு அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறினார்.
    ஈரோடு சென்னிமலை அருகே சுதந்திர தினம் அன்று ஈ.வெ., ராமசாமி தேசியக்கொடியை எரித்த தற்சார்பு விவசாய சங்க தலைவர் கைதுக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த பசுவபட்டி பகுதியை சார்ந்தவர் பொன்னையன் (வயது 62). இவர் தற்சார்பு விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

    இவர் கடந்த ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் அன்று முகநூலில் ஈ.வெ., ராமசாமி தேசியக்கொடியை எரிப்பதை போல படம் வெளியிட்டிருந்தார்.

    இதனையடுத்து ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சிவசுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட எஸ்.பி சக்தி கணேசனிடம் இது குறித்து புகார் செய்திருந்தார். அதில் சமூக வலைதளங்களில் தற்சார்பு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் தேசிய கொடியை தீ வைத்து எரிப்பது போல பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது தேசதுரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

    இந்நிலையில் சென்னிமலை இன்ஸ்பெக்டர் பொன்னையன் மீது இரண்டு பிரிவுகளில் (153,504),சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, தேசிய சின்னங்களை அவமதிப்பது ஆகிய 2 பிரிவுகளில் தேச விரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனையடுத்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கைது நடவடிக்கைக்காக பசுவபட்டியில் உள்ள பொன்னையன் வீட்டுக்கு சென்றார். அவர் வீட்டில் இல்லாததால் தேச விரோத வழக்கின் கீழ் பொன்னையனை கைது செய்ய தீவிரமாக தேடி வந்த நிலையில் சென்னிமலை போலீசார் அவரை கைது செய்து பெருந்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது காவல் நிலைய பிணையிலேயே விடுவிக்கலாம் என நீதிபதி குமாரவர்மன் கூறினார். ஆனால் அரசுதரப்பு வழக்கறிஞர் பொன்னையன் வெளியே வந்தால் ஆர்ப்பாட்டம், போராட்டம் என பொது அமைதிக்கு ஊறுவிளைவிப்பார் என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதனால் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி குமாரவரமன் உத்தவிட்டார். இதனையடுத்து பொன்னையன் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    சத்தியமங்கலம் அருகே லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் தொழில் அதிபர் பரிதாபமாக இறந்தார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் (வயது 63). இவர் விண்ணப்பள்ளியில் நூல் மில் மற்றும் சத்தியமங்கலத்தில் தங்கும் விடுதி வைத்து நடத்தி வந்தார். பாலு நேற்று காலை சத்தியமங்கலத்தில் உள்ள தனது தங்கும் விடுதிக்கு சென்றுவிட்டு பெட்ரோல் பங்குக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சத்தியமங்கலம்-கோவை ரோட்டில் எஸ்.ஆர்.டி. கார்னர் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பாலுவின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இறந்த பாலுவுக்கு சரோஜா (53), லதா (46) ஆகிய 2 மனைவிகளும், தேவி (27), சிவபிரியா (25), தீபிகா (18) ஆகிய 3 மகள்களும் உள்ளார்கள். 
    கொடுமுடி அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகில் இச்சிப்பாளையத்தில் அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. நேற்று இரவு 9.30 மணிக்கு சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் (51) எழுத்தர் வைத்தி(45) இருவரும் சங்கத்தின் ‌ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்துள்ளார்கள்.

    அப்போது அங்கு அருகில் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்து இரவு நேரத்தில் சங்கத்தை திறப்பதன் அவசியம் என்ன என்று சங்கத்தை முற்றுகை இட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் விரைந்து வந்து சங்க செயலாளாளர் பரமேஸ்வரனிடம் விசாரனை நடத்தினர்.

    ஈரோடு கூட்டுறவு துணைப்பதிவாளர் இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்திட சில ஆவணங்களை உடனடியாக கொண்டு வரச் சொல்லி உள்ளார் அதற்காக தான் வந்தோம் என்று கூறியதை உறுதி செய்த பிறகு சங்க உறுப்பினர்களிடம் கூறி ஆவணங்களை எடுத்துக் செல்ல அனுமதித்தனர்.

    இதுகுறித்து சங்க உறுப்பினர்கள் கடந்த 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 18 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் இதுவரையிலும் வழங்கப்படவில்லை எனவே தான் இந்த நிலையில் இரவு நேரத்தில சங்கம் திறக்கப்பட்டதால் எங்களுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது அதனால் தான் அனைவரும் ஒன்று திரண்டோம் என கூறினார்கள்.

    இதனால் அந்தப் பகுதியில் கமர் 3 மணி நேரம் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. #tamilnews
    ×