என் மலர்
ஈரோடு
- தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- பெற்றோருக்கும் இன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை என குறுஞ்செய்தி பள்ளி நிர்வாகம் சார்பாக அனுப்பப்பட்டது.
ஈரோடு:
நாடு முழுவதும் சமீப காலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி என தெரிய வந்தது.
இந்நிலையில் இன்றும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று காலை 8.15 மணிக்கு பள்ளியின் இணையதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் விடுதியிலும் மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டனர்.
காலை 8.15 மணி என்பதால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து விட்டனர். பள்ளி வாகனங்களில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் பெற்றோருக்கும் இன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை என குறுஞ்செய்தி பள்ளி நிர்வாகம் சார்பாக அனுப்பப்பட்டது.
இதை பார்த்து குழப்பம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்து வந்தனர். மாணவ, மாணவிகள் பெற்றோருடன் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விடுதியில் தங்கி படித்த மாணவ, மாணவிகள் அவசரமாக தங்களது பொருட்களுடன் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அருகே உள்ள பள்ளி மைதானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். இது குறித்து அவர்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு போலீசார், அதிவிரைவு படை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்றனர்.
பள்ளியின் ஒவ்வொரு பகுதியாகவும், ஒவ்வொரு வகுப்பறையாகவும் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதனையிட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்று பார்வையிட்டு பள்ளியின் வரைபடத்தையும் பார்வையிட்டார். முன்னெச்சரிக்கையாக பள்ளியின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- மேக கூட்டங்கள் சிவப்பு நிறங்களில் காட்சி அளித்தது.
- பொதுமக்கள் பலர் பக்தி பரவசம் அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் மறைகிறது. இதனால் சுமார் 7 மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் சூரியன் மறையும் போது மேக கூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது.
ஒரு சில இடங்களில் சூரியன் மறையும் நேரத்தில் மேக கூட்டங்கள் சிவப்பு நிறம் மற்றும் பல்வேறு நிறங்களில் காட்சி அளித்தது.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சி கோட்டை மலைப்பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மேக கூட்டங்களில் சிவலிங்கம் தோன்றுவது போன்று காட்சியளித்தது.
நேரம் செல்ல, செல்ல சிவப்பு நிறத்தின் நடுவே சிவலிங்கம் இருப்பது போல் தனியாக தோன்றியது. இதனை கண்ட பொதுமக்கள் பலர் பக்தி பரவசம் அடைந்தனர். வானில் சிவபெருமான் தோன்றி காட்சி அளித்து வருகிறார் என ஒருவருக்கொருவர் பேசி கொண்டனர்.
இந்த காட்சியை அந்த பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டனர். மேக மூட்டங்களில் சிவலிங்கம் தோன்றிய காட்சியை அந்த பகுதிகளில் உள்ள மக்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்கள் அந்த படத்தை பார்த்து சிவன் நேரில் தோன்றியது போன்றே காட்சியளிக்கிறது.
மேலும் பனிலிங்கத்தை காண்பது போன்று காட்சியும் மனதில் தோன்றுகிறது என ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- மக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் இருந்து கொண்டே உள்ளது.
- வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர்.
அந்தியூர்:
ஈரோடு ரெயில் நிலையம் அருகே காளை மாட்டு சிலை ரவுண்டானா உள்ளது. இந்த பகுதி ஈரோட்டின் மைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எப்போது பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வழியாக கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பகுதியாக அமைந்துள்ளதால் பஸ்கள், கார், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.
அதே போல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம், கடை வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வானங்கள் பெரும்பாலும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறது. கொல்லம் பாளையம், சோலார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் செல்லும் மக்கள் காளை மாட்டு சிலை வழியாக சென்று வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் இருந்து கொண்டே உள்ளது.
மேலும் இந்த ரவுண்டானா பகுதியில் தமிழர்களின் வீர விளையாட்டை குறிக்கக்கூடிய ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் காளை மாட்டை வாலிபர் அடக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிலை ஈரோட்டின் மையப்பகுதியில் மிகவும் கம்பீரமாக இருந்து வருகிறது. இந்த சிலை ஈரோட்டின் நினைவு சின்னமாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் காளை மாட்டை அடக்கும் இந்த சிலையை முதியவர் ஒருவர் கயிறு கட்டி இழுத்து கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் காளையை அடக்குபவரிடம் அவர் பேசுவது போன்றும் அவர் தொடர்ந்து காளை மாட்டு சிலையை கயிறு கட்டி சுற்றி கொண்டே இருந்தார்.
இந்த வீடியோ தற்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் ஈரோட்டில் இருக்கும் காளை மாட்டின் உரிமையாளர் கிடைத்து விட்டார் என்றது போன்ற பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவில் முதியவர் காளையை அடக்குபவரிடம் பேசுவது போன்றும்காளை மாட்டை அடக்கியதற்கு பாராட்டு தெரிவிப்பது போன்றும் காட்சி பதிவாகியுள்ளது.
அந்த முதியவர் மது போதையில் இருந்தாரா? என தெரியவில்லை. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர். இதையடுத்து அந்த முதியவர் அங்கு இருந்து சென்று விட்டார்.
- இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பெரியார் காலத்தில் திராவிடம் என்ற அரசியல் தேவைப்பட்டது.
ஈரோடு:
ஈரோட்டில் நடைபெற்ற குடியரசு சுயமரியாதை நூற்றாண்டு விழா மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தாலும் பெரியார் குடும்பத்தை சார்ந்தவர். காங்கிரசில் இருந்தாலும் தன்மான தலைவர் என பெயர் பெற்றவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியார் பகுத்தறிவு பகலவனாக இந்தியா முழுவதும் இருக்கிறார்.
இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமே பெரியாரை உற்று நோக்குகிறது. அவரின் கருத்துக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.பெரியார் கடவுள் மறுப்பாளர், பார்பனர் எதிர்பாளர் என செய்தி பரப்பட்டுள்ளது. இது அவரின் கொள்கையும் கோட்பாடும் அல்ல. இவற்றை வலுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ராஜ தந்திரம்.
பார்ப்பன எதிர்ப்பு என்பது பெரியாரில் இருந்து தோன்றியது அல்ல. அதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே கவுதமபுத்தர் எதிர்த்துள்ளார். இவரின் வரிசையில் தான் பெரியார் வந்துள்ளார். பெரியார் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தான் காங்கிரசில் இருந்து வெளியே வந்தார்.
பெரியார் எளிய மக்களுக்காக காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருந்து வெளியே வந்தவர். இந்தியாவில் 2 மரபினராக ஆரியம், திராவிட இருந்தது. ஆரிய எதிர்ப்பாக இருந்தது பெரியாரின் காலத்தில் பார்ப்பின எதிர்பாக இருந்தது. சனாதனம் என்பது கோட்பாடு, கல்வி, உரிமை, உழைப்பு, சுரண்டப்பட்ட நிலம், பறிக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி அதிகாரம் வழங்க குறிப்பிட்ட இடம், ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவை சமூக நீதியின் கோட்பாட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. திராவிடம் என்று சொன்னதால் தான் தமிழர் என்ற உணர்வு வரவில்லை என்பது அரசியல் மூடத்தனம். காந்தி இருந்த காலத்தில் சாதி, மதம், மொழியை மறந்து பிரிட்டிஷை இந்தியராக எதிர்த்தோம். பெரியார் காலத்தில் திராவிடம் என்ற அரசியல் தேவைப்பட்டது.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது வரலாற்று பிழை. பா.ஜ.க.வினர் குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை மக்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் பாடம் புகட்டியுள்ளனர்.
இது பெரியார் தொடங்கி வைத்த சமத்துவ போராட்டத்தின் விளைச்சல். 1938-ல் பெரியார் இந்தியை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் 1965-ல் போராட்டம் வெடித்திருக்காது. இப்போது நாம் இந்தி பேசக்கூடிய சமூகமாக மாறி இருந்திருந்தால் மோடியின் வித்தை எடுபட்டிருக்கும். உன்னாலும் போராட முடியும், சாதிக்க முடியும், வாழ்ந்து காட்ட முடியும், நீதிபதி, முதலமைச்சர், பிரதமராக முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் பெரியார் தான்.
தலித்துகள் இங்கு முதலமைச்சராக முடியாது என நான் சொன்னது எனது வேட்கையில் சொல்லவில்லை. இயலாமையால் உலறவில்லை. இன்றைக்கு இருக்கிற சமூக இருப்பு எவ்வாறாக உள்ளது, சாதிய கட்டமைப்பு எவ்வாறு வலுமையாக உள்ளது. அவற்றை தகர்க்கின்ற சூழல் இன்னும் கனியவில்லை. எனவே இதை தகர்க்க ஜனநாயக சக்திகள் தயாராக வேண்டும் என்கிற எச்சரிக்கையை கொடுக்கின்ற உரை.
மாநில அரசுகளிடம் சமூகங்களை இட ஒதுக்கீடு என்ற பெயரில் கூறு போடுகிற அதிகாரத்தை தருவது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை கொடுத்துள்ளது. இது குறித்த விமர்சனம் தான் என் மீது எதிர்மறையாக கருத்து உருவாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் பொறுத்தவரை அருந்ததியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீட்டை முதலில் இருந்து ஆதரித்துள்ளது.
தமிழகத்தில் ஓ.பி.சி சமூகத்தில் உள்ள சிறுபான்மையினர் முதல்வராக வர முடிகிறது, தமிழர் அல்லாதவர் முதலமைச்சராக வர முடிகிறது. பெரும்பான்மைச் சமூகமாக இருக்கக்கூடிய முக்குலத்தோர், வன்னியர், நாடார், கவுண்டர் முதல்வராக வர முடியவில்லை. இதுவும் ஒரு அரசியல். ஒரு தலித் முதலமைச்சர் ஆக வர முடியாது என்ற சோசியல் ஸ்ட்ரக்சர் (சமூக கட்டமைப்பு) இங்கு உள்ளது. இந்திய குடியரசுத் தலைவராக பழங்குடியினர், தலித் வகுப்பைச் சேர்ந்தவர் வரமுடியும் ஆனால் பிரதமராக வர முடியுமா? விடுதலை சிறுத்தைகள் பெரியாரின் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட பெரியார் இயக்கம்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பெரியாரை கொண்டு சேர்த்தது திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகளும் தான். அம்பேத்கர் இயக்கங்கள் பெரியாரை ஓ.பி.சி தலைவராக பார்த்ததை உடைத்தது விடுதலை சிறுத்தைகள் தான். சமத்துவத்தை நிலை நாட்டும் வரை பெரியார் தேவைப்படுகிறார்.
பெரியாரின் அரசியல் சமூக நீதி மற்றும் சமத்துவ அரசியல். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான எதிர்ப்பு அரசியல் இல்லை. இதை தான் தலித் இந்த மண்ணில் முதலமைச்சராக முடியாத நிலை உள்ளது என கூறினேனே தவிர எனது ஏக்கம் மற்றும் இயலாமையால் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
- ஓடும் ரெயிலில் சண்முகவேலனிடம் பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
ஈரோடு:
மன்னார்குடியில் இருந்து கோவை வரை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி கோவையை சேர்ந்த சண்முகவேலன் என்பவர் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்து உள்ளார்.
அப்போது ஈரோடு ரெயில் நிலையம் வந்த போது ரெயிலில் இருந்த சண்முகவேலின் விலை உயர்ந்த மொபைல் மற்றும் நவரத்திரன மாலை, நவரத்தின கல் மோதிரம், டிராவல் பேக் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.
சண்முகவேல் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சண்முகவேலன் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ஈரோடு ரெயில்வே போலீசார் இச்சம்பவம் தொடர்பாக மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள வெளி பகுதியில் இருந்த பூங்காவில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் அங்கும், இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ராமசாமிபுரம், 2-வது தெருவை சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது 48) என தெரிய வந்தது.
மேலும் ஓடும் ரெயிலில் சண்முகவேலனிடம் பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து சங்கரபாண்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மொபைல், நவரத்தின கற்களை உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது சங்கரபாண்டியன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சங்கரபாண்டியன் மீது ஏற்கனவே சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகள், சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு, கழுகுமலை போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், சிவகாசியில் 1, ராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் 1, தூத்துக்குடியில் 3 திருட்டு வழக்குகள், தென்காசியில் 1 திருட்டு வழக்கு என மொத்தம் 22 திருட்டு வழக்குகள் சங்கர பாண்டியன் மீது நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சங்கரபாண்டியன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- மார்க்கெட்டில் கடந்த 5 நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் சந்தை பஸ் நிலையம் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் 170-க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்கள் தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தினசரி சந்தை வியாபாரிகளை வாரச்சந்தை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தைக்கு இடம் பெயரும் படி நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதனால் வியாபாரிகள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும் வியாபாரிகள் சங்கத்தினருக்கு முன்னுரிமை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் தினசரி மார்க்கெட் முன்பு அறிவிப்பு பிளக்ஸ் போர்டு வைத்தனர். மேலும் தினசரி மார்க்கெட்டில் கடந்த 5 நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையாளரிடம் 192 பேருக்கு நகராட்சி வாரச்சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் கடைகள் ஒதுக்கி தரக்கோரி மனு அளித்தனர். நகராட்சி ஆணையாளர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த நிலையில் நேற்று தினசரி வியாபாரிகளுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி அதிகாரிகள் திடீரென நள்ளிரவு 11 மணி அளவில் வந்து தினசரி மார்க்கெட் சந்தையின் கேட்டை பூட்டு போட்டு சீல் வைத்தனர். அப்போது உள்ளே ஒரு பெண் உட்பட 5 விவசாயிகள் சிக்கிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கேட்டை பூட்டினாலும் கேட்டின் முன்பு உள்ள இடங்களில் வியாபாரிள் அதிகாலையில் காய்கறிகளை போட்டு வியாபாரம் செய்து விடுவார்கள் என்று அப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான செப்டிக் டேங்க் வாகனம், குப்பைகள் எடுத்துச் செல்லும் வாகனங்களை நிறுத்தி வைத்தனர்.
இதனையடுத்து அங்கு திரண்ட 100-க்கு மேற்பட்ட தினசரி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட காய்கறி மூட்டைகளை பஸ் நிலையம் வளாகத்தில் பஸ் செல்லும் வழியில் வைத்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தினசரி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், புளியம்பட்டி இன்ஸ்பெக்டரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை டி.எஸ்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. வியாபாரிகள் காய்கறி மூட்டைகள் சாலைகளில் போட்டு வைத்துள்ளதால் காய்கறிகள் வீணாகி உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று காலை தினசரி வியாபாரிகள் சங்கத்தின், சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் மற்றும் வியாபாரிகள் தினசரி மார்க்கெட் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வியாபாரிகளின் கோரிக்கைகளுக்காக புளியம்பட்டி பஸ் நிலையம் மற்றும் சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள பகுதியில், கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. இதனால் புளியம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் தொடர்ந்து புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் வியாபாரிகள் கூறியவாறு பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை என்றால் காய்கறி மூட்டைகளுடன் தினசரி வியாபாரிகள் சாலை மறியல் செய்வதாக கூறுகின்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என சுமார் 150-க்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.
- விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப் பாளையம் கிராமத்தில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சென்றவாரம் ஊர் கவுண்டரின் 2 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் இன்று விடியற்காலையில் மலைக்காரி ஆயா அலமேலு என்பவரின் 5 ஆடுகளை பல நாய்கள் சேர்ந்து கடித்து கொன்றுள்ளது. எனவே காட்டுப்பாளையம் பிரம்மதேசம் புதூர் பகுதியில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுவதால் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாய்க்கால் சீரமைப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
- கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. வாய்க்கால் சீரமைப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
எனவே நீர் திறப்பை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர். தொடக்கத்தில் 250 கன அடியாக இருந்த தண்ணீர் திறப்பு தற்போது 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நேற்று மாலை 57-வது மைலைக் கடந்த நிலையில் 47 ஆவது மைல் பகுதியாக உள்ள நல்லாம்பட்டியில் உள்ள மழைநீர் வடிகால் பாலத்தில் நேற்று மாலை விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சிறிது சிறிதாக அதிகரித்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது.
தொடர்ந்து விரிசல் அதிகரித்தால் மழைநீர் கால்வாய் உடையும் அபாயம் இருப்பதாக கருதி அப்பகுதி விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டது.

வாய்க்காலில் கசிவு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
இது குறித்து மழைநீர் வடிகால் விரிசலை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் இரவோடு இரவாக தொடங்கினர்.
இதுக்கு அடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், நல்லாம்பட்டி வாய்க்காலுக்கு அடியே மழை நீரும் வாய்க்கால் கசிவு நீரும் வடிந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை உள்ளது.
இந்த சுரங்கப்பாதையின் வழியாக மழை பெய்யும் போதும் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும் போதும் வழக்கமாக தண்ணீர் வெளியேறுவது வழக்கம் தான். இதைத்தான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதாக சிலர் வதந்தி கிளம்பி விட்டிருக்கிறார்கள். தற்போது சுரங்கப்பாதைக்குள் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை கண்டுபிடித்து அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை நல்லாம்பட்டி அருகே ஒட்டங்காடு பகுதியில் கீழ்பவானி கால்வாயின் 47வது மைலில் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள கசிவு பகுதியை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த மழைநீர் வடிகால் மிகவும் பழமையானது.இந்தாண்டு மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணிக்கு போதிய அவகாசம் இல்லை. அடுத்தாண்டு இந்த வடிகாலை சீரமைக்க திட்டம் உள்ளது.

கீழ் பவானி வாய்க்காலில் இருந்து வெளியேறும் கசிவு நீர்
இதில் எப்போதும் தண்ணீர் செல்லும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தாண்டு சற்று கூடுதலாக செல்வதாக சந்தேகம் எழுந்ததால் இடையில் நிறுத்தி சீரமைக்கும் பணியானது முடிக்க வேண்டும் என்பதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
தற்காலிகமாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்விற்கு குறைந்த பட்சம் 15 நாட்கள் ஏற்படும் என்பதால் தற்காலிக பணிகள் மூலம் இந்த போகத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால் உள்ளது. அவற்றில் எந்தவித பாதிப்பும் இல்லை. இனி தண்ணீர் செல்லும் போது மழைநீர் வடிகாலில் கசிவு ஏற்பட்டால் அங்கும் தற்காலிக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழ்பவானி கால்வாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதன் கசிவு நீரை பயன்படுத்தும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் கூடுதலாக கசிவு சென்றுகொண்டிருக்கிறது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முழு ஒத்துழைப்பு அளித்த விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் பாராட்டுகிறோம்.
- ஒரு சிலர் நிலம் தர விருப்பம் இல்லாமல் இருந்தார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் முதலாவது நீரேற்று நிலையத்தில் இன்று வீட்டு வசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. அதன் பிறகு பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் விவசாயிகள் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பவானி அடுத்த காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து உபரி நீரை பம்ப் செய்ய 3 மோட்டார் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவில்லை. இதனால் பைப்லைன் போடப்படவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை விரைவுப்படுத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த 3 முதல் மோட்டார் பம்ப் ஹவுஸ் பகுதிகளில் இடம் வாங்கப்பட்டது. அதன் பிறகு பணிகள் துரித படுத்தப்பட்டு கடந்த ஜனவரி 2023 முடிவடைந்தது. ஆனால் பவானி ஆற்றில் உபரி நீர் வரவில்லை. தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் வருகிறது. நேற்று ஆயிரம் கன அடி வந்தது.
காலிங்கராயன் அணைக்கட்டு பகுதி கால்வாயில் இருந்து 1.5 டிஎம்சி மொத்தம் உள்ள 6 நீரேற்று நிலையங்கள் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் பகுதியில் உள்ள 1045 குளங்களுக்கும் அனுப்பப்படும். முக்கிய பைப் லைன் 8 அடி விட்டம் உள்ளது. அது 105 கிலோமீட்டர் உள்ளது. இதை தவிர குளங்களுக்கு செல்லும் பீடர் லைன் சுமார் ஆயிரத்து 65 கிலோ மீட்டர் உள்ளது. நாங்கள் சோதனை செய்தபோது சில இடங்களில் பழுதடைந்து இருந்தது. அதை எல்லாம் நாங்கள் சரி செய்தோம். கீழ்பவானி பாசன கால்வாய்க்கு 15-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதிலிருந்து வரும் கசிவு நீர் 10 அல்லது 15 நாட்களுக்குள் காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதிக்கு வந்துவிடும். அதன் பிறகு தொடர்ந்து 70 நாட்களுக்கு இங்கிருந்து 1.5 டிஎம்சி நீர் 1045 குளங்களிலும் நிரப்பப்படும். இதை தவிர பவானி ஆற்றில் பெய்த மழையால் தற்போது அணைக்கட்டு பகுதிக்கு உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மொத்தமுள்ள 1045 குளங்களில் 1020 குள ங்களுக்கு நீர் சென்றுவிடும். ஒரு சில இடங்களில் பைப் லைனில் பழுது உள்ளதால் அங்கு தண்ணீர் செல்லவில்லை. அதுவும் சரி செய்யப்பட்டு விடும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏன் இதை திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கேட்டுள்ளார். உபரி நீர் தற்போது தான் வந்துள்ளது. அதனால் தான் திட்டத்தை இப்போது துவக்கி வைத்துள்ளோம். உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வராமல் இருந்தால் இத்திட்டத்தை துவக்கி வைத்து குளங்களுக்கு நீர் அனுப்ப முடியாது. ஒரு தடை ஏற்பட்டிருக்கும்.
அப்போது அரசை அண்ணாமலை குறை சொல்வார். எனவே தான் இந்த அரசு கவனமாக உபரி நீர் வந்த பிறகு திட்டத்தை துவக்கி வைத்துள்ளது. இந்த அரசு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், விவசாயிகள் பயனடைய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டது. விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட நிலங்களுக்கு நட்ட ஈடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஒரு சிலர் நிலம் தர விருப்பம் இல்லாமல் இருந்தார்கள். அவரிடம் பேசி நிலத்தை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கென்று தனி அரசாணை வெளியிடப்படும். இன்னும் சில தினங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்பட்டு விடும். மற்ற திட்டத்தைப் போல் அல்லாமல் இத்திட்டத்தில் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்த விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் பாராட்டுகிறோம். முழுமையாக பணிகள் முடிந்துள்ளது. ஒரு சில பணிகள் பாக்கி உள்ளன. ஒப்பந்ததாரர் லாசன் ட்யூப்ரோ நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு திட்டத்தை பராமரிக்கும் பணியையும் மேற்கொள்ளும். சில குளங்கள் விடுபட்டுள்ளன.
அந்த குளங்களுக்கு திட்டத்தின் மூலம் நீர் வழங்கும் வாய்ப்பு இல்லை. இப்போது வரும் நீரை கொண்டு 1045 குளங்களுக்கு நீர் நிரப்பப்படும். விடுபட்ட குளங்களுக்கு என்றால் தனியாக திட்டம் போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள், மாணவர்கள் பல்வேறு அமைப்பினர் மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி வேண்டியும், மருத்துவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 400 மருத்துவமனைகள், 2 ஆயிரம் மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பாக தனியார் மருத்துவமனை முன்பு போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று தீவிர சிகிச்சை பிரிவு தவிர மற்ற அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் நடைபெறவில்லை.
இதனால் இன்று அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பணி புரிந்து வருகின்றனர்.
- கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- மர்ம நபர் தன் முகத்தை மறைக்கவோ, முகமூடி அணியவோ இல்லை.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி-சத்தியமங்கலம் சாலை கள்ளிப்பட்டி பகுதியில் சாலையோரம் பல வணிக கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.
இந்நிலையில் சாலையோரத்தில் உள்ள உரக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர்கள் இன்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்றனர். அப்போது 2 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது டேபிள் டிராயரில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கோமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பூட்டி இருந்த உரக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகளுக்கு டிப்டாப் உடையணிந்த மர்ம நபர் ஒருவர் வந்தது பதிவாகி இருந்தது. அந்த மர்ம நபர் தன் முகத்தை மறைக்கவோ, முகமூடி அணியவோ இல்லை. அக்கம் பக்கம் பார்த்து நோட்டமிட்டவாறே கடைகளில் அமர்ந்து அடுத்தடுத்து உள்ள 2 கடையின் சட்டர்களையும் இரும்பு கம்பி கொண்டு நெம்பி 2 கடைகளுக்குள் சென்று பணத்தை கொள்ளையடித்து சென்றது சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி உள்ளது.
இந்த காட்சி தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் பிடித்து கைது செய்வதோடு, இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- பாலம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
- கனரக வாகனம் நீண்ட வரிசையில் நின்றுள்ளன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பொழிந்தது. நள்ளிரவு 2 மணி வரை பொழிந்த இந்த மழையால் செலம்பூர் அம்மன் கோவிலில் இருந்து எண்ணமங்கலம் செல்லும் பாதையில் பேச்சுப்பாறை பாலம் காற்றாற்று ஓடை நீரால் ஏற்கனவே உடைந்திருந்த நிலையில் இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு இருந்த பாலம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
எண்ணமங்கலம் கிராமத்தில் 2 வீடுகளில் தண்ணீர் புகுந்திருந்தது. விடிய ற்காலை 4 மணி அளவில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் செட்டி நொடி பள்ளம் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனம் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வாகனம் என சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் கனரக வாகனம் நீண்ட வரிசையில் நின்றுள்ளன.
மேலும் சம்பவ இடத்திற்கு பவானி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் பாபு, சரவணன், நெடுஞ்சாலை ஆர்.ஐ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஜே.சி.பி. உதவியுடன் சாலையில் உள்ளமண் சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகி ன்றார்கள். நெடுஞ்சாலை துறையுடன் பர்கூர் காவல் துறையினரும் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.






