என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி அருகே வேலி பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த நடுசாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 50). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே வேலி பிரச்சினை உள்ளது.

    இதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ராமலிங்கத்தை ராஜேஷ், கல்கி, வேல்முருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாதவார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதேபோல் ராமலிங்கம், அவரது மகன் சிவக்குமார், சுந்தர் ஆகியோர் சேர்ந்து வேல்முருகனை தாக்கினர். இந்த மோதலில் வேல்முருகன், ராமலிங்கம் ஆகியோர் காயமடைந்து பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் ராமலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் ராஜேஷ், கல்கி, வேல்முருகன் ஆகிய 3 பேர் மீதும் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் சுந்தர், சிவக்குமார், ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    சிதம்பரம் நடராஜர்கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையில் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழிமாதம் ஆருத்ரா தரிசம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக் கான மார்கழிமாத ஆருத்ர தரிசனவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி களின் வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் சாமிகள் எழுந்தருளினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளான 4 வீதிகளிலும் வலம்வந்தது. இந்த தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நடராஜர் கோவிலின் முக்கிய வாயிலான கீழகோபுரவாசலில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தேர் திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. தேர் வலம்வரும் 4 வீதிகளிலும் அந்த பகுதி பெண்கள் வண்ண கோலமிட்டிருந்தனர். மேலும் விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆருத்ர தரிசனம் நாளை நடைபெறுகிறது.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் வாகனங்கள் நிறுத்தி வைக்க இட வசதியும் ஏற்படுபத்தப்பட்டிருந்தது. தேர் திருவிழாவை தொடர்ந்து சிதம்பரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    சென்னையில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு நெல்லை நோக்கி புறப்பட்டது.

    இந்த பஸ்சை நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வன்னிகோநந்தல் பகுதியை சேர்ந்த மூர்த்தி(வயது 40) என்பவர் ஓட்டிவந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன்(25) என்பவர் அந்த பஸ்சில் மாற்று டிரைவராக இருந்தார்.

    இந்தநிலையில் அந்த பஸ் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பஸ்சின் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை ஆம்னி பஸ்டிரைவர் முந்திசெல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த செந்தமிழ்செல்வன் தூக்கி வீசப்பட்டார். அவர் ஆம்னி பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கினார். இதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான செந்தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று காலை பரவலாக மழை பெய்ததையடுத்து வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.
    பண்ருட்டி:

    தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காணப்படுவதால் தென் தமிழகம் கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் பலத்த மழை பெய்தது. கடலூர் நகரில் சாரல் மழை பெய்தது.

    பண்ருட்டியில் இன்று காலை 6 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7 மணி முதல் லேசான தூரலுடன் மழை பெய்ய தொடங்கி பின்னர் பலத்த மழையாக பெய்தது.

    மேலும் காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, கண்டரக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர்.

    மக்கள் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி சென்றனர். முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ள நீராக பெருக்கெடுத்து ஓடியது.

    ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், புதுக்குப்பம், சேத்தாம்பட்டு, அம்புஜ வள்ளிபேட்டை, ஆத்தூர், முத்தரசன் பேட்டை, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்தது.

    பண்ருட்டியில் பள்ளி மாணவிகள் மழையில் குடை பிடித்தபடி சென்றனர்.

    பண்ருட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பண்ருட்டி:

    பண்ருட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு பண்ருட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றிவேலன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். 

    நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன், விழுப்புரம் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தமிழ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    புதுச்சேரி மாநில தொழிலாளர் பாசறை தலைவர் ரமேஷ், குறிஞ்சிப் பாடி தொகுதி செயலாளர் இராமச்சந்திரன், குறிஞ்சிப்பாடி தொகுதி தலைவர் திருச்செல்வம், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், பண்ருட்டி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் பிரகாஷ், தொகுதி பொருளாளர் சக்திவேல், அண்ணா கிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், அண்ணாகிராமம் நடுவண் 1 ஒன்றிய செயலாளர் இன்பன், அண்ணாகிராமம் நடுவண் ஒன்றிய துணை செயலாளர் மணிவண்ணன், நெல்லிக்குப்பம் நகர ஒருங்கிணைப்பாளர்கள் ஐயப்பன், கார்த்திகேயன் உட்பட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நெய்வேலி பகுதியில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் சித்ரா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சித்ரா கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

    அதேபோல் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த மணிபாலா (வயது 31) என்பவர் நடைபயிற்சி சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகை பறிக்கப்பட்டது.

    அதுபோல் நெய்வேலி டவுன்ஷிப்பில் தேவகி என்ற பெண்ணிடம் 5 பவுன் நகையும், நெய்வேலி 12-வது வட்டம் ஜானகி என்பவரிடம் 1½ பவுன் நகையும், 20-வது வட்டத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் 4 பவுன் நகையும் பறிக்கப்பட்டது. நெய்வேலி பகுதியில் மொத்தம் 10 பெண்களிடம் 50 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது.

    இது குறித்து அவர்கள் நெய்வேலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் நடத்திய விசாரணையில் பெண்களிடம் நகை பறித்தது நெய்வேலி மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த வசந்தராஜா (24) மற்றும் நெய்வேலியை சேர்ந்த செந்தில்குமார் (22) என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெய்வேலி கோர்ட்டில் நடந்து வந்தது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை நீதிபதி கணேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அரசு வக்கீலாக தேவசுந்தரி ஆஜரானார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வசந்தராஜா, செந்தில்குமார் ஆகியோருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கணேஷ் இன்று உத்தரவிட்டார்.
    கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் நகராட்சியில் தண்ணீரை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை சுத்திகரிக்கும் பொறுப்பினை மட்டும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கி குடிநீர் கட்டணம் வசூலிக்கும் டெண்டரை ரத்து செய்ய கோரியும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீரை அனைத்து இடங்களிலும் கிடைக்க நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலி குடங்களுடன் கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் உதயகுமார், ரமேஷ், பூபதி கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி குடம் மற்றும் மண் பானைகள் கொண்டுவந்து நகராட்சிக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    அப்போது திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் வைத்திருந்த மண் குடத்தை சாலையில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதில் மாநில குழு உறுப்பினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்புராயன் மாவட்ட குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ஸ்டாலின் பால்கி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் இன்று காலை கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதல் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித்தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயனுள்ள கணினி மற்றும் இணைய தள வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.

    மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகரன், பெரிய தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட போராட்டக்குழு தலைவர் ராமன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மண்டல செயலாளர் ஜெயராமன், கடலூர் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் புஷ்ப காந்தன், மாவட்ட தலைவர் பெரியபிள்ளை, மாநில விவசாய சங்க செயலாளர் குமரகுரு, மாவட்ட அமைப்பு செயலாளர் இந்திரகுமார், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட இணைச்செயலாளர் கண்ணதாசன், மூர்த்தி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பயணப்படி அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமாவளவன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் செந்தில்நாதன், மாவட்ட துணைத்தலைவர் அய்யப்பன், மாவட்ட துணை செயலாளர் சங்கர், மாவட்ட இணைச்செயலாளர் சிவலிங்கம், மாவட்ட செய்தி தொடர்பாளர் குமாரசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் கடலூர் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் கமல்ராஜ் நன்றி கூறினார்.
    கடலூர் மத்திய சிறையில் கைதி மரணமடைந்தது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை என்ற மைக்கேல் (வயது 36). ரவுடியான இவர் தாதா மணிகண்டனின் தம்பி ஆவார்.

    கடந்த 15-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஏழுமலை இறந்த தகவல் குறித்து குயிலாபாளையத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மர்மமான முறையில் இறந்துபோன ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழுமலை இறந்து 3 நாட்கள் ஆகியும் நேற்று மாலை வரை கடலூர் ஆஸ்பத்திரிக்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை.

    இதனால் ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ஏழுமலையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மனைவி கோமதி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வந்த பிறகுதான் ஏழுமலையின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஏழுமலையின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 4 நாட்களாகியும் ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் இரவும்-பகலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர் ஜெயிலில் மர்மமாக இறந்த கைதி ஏழுமலையின் மனைவி கோமதி இன்று குடும்பத்தினருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர் கலெக்டரின் உதவியாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தோம். நாங்கள் காரில் இருந்து இறங்குவதற்குள் 2 டாடா சுமோவில் வந்த பத்துக்கும் மேற்பட்ட போலீசார் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் எனது கணவரை அடித்தனர்.

    அப்போது நான் தடுக்க சென்ற போது என்னையும், என் பிள்ளைகளையும் கீழே தள்ளிவிட்டு அடித்தனர். பின்னர் எனது கணவரை அடித்து இழுத்துச் சென்றனர். அதன்பிறகு என் கணவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் வக்கீல் மூலமாக ஆரோவில் போலீஸ் நிலையத்தில் விசாரித்தபோது போலீசார் சரியான முறையில் எங்களுக்கு பதில் தரவில்லை.

    மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் செய்தோம். இந்த நிலையில் காவல்துறையினர் என் கணவரை தாக்கி அடித்து கை மற்றும் கால் உடைத்து உடல் முழுவதும் காயத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    ஆனால் உடலில் காயம் ஏற்படுத்திய போலீசார் என் கணவரை மருத்துவமனையில் சேர்க்காமல் வானூர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று காவலில் அடைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாத காரணத்தினால் செஞ்சி நீதித்துறை நடுவரிடம் என் கணவரை அழைத்து சென்று காவலில் அடைக்க அனுமதி கேட்டுள்ளனர். அப்போது என் கணவர் நடந்தவற்றை அனைத்தும் நீதிபதியிடம் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி கேட்டு உள்ளார். ஆனால் காவல்துறையினர் செஞ்சி நீதிமன்ற நடுவரிடம் பொய்யான காரணங்களைக் கூறி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க அனுமதி வாங்கி விட்டனர்.

    என் கணவருக்கு எந்தவித சிகிச்சையும் செய்யாமல் காவல்துறையினரே உடைக்கப்பட்ட கை மற்றும் காலுக்கு கட்டு கட்டி எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அப்போது மத்திய சிறை நிர்வாகம் எங்களுக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளனர்.

    ஆனால் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மத்திய சிறை காவலர்களிடம் சண்டை போட்டு சட்டத்திற்கு புறம்பாக மத்திய சிறை காவலர்களை மிரட்டி சிறையில் அடைத்து உள்ளது.

    இந்த நிலையில் போதிய சிகிச்சையை காவலர்கள் கொடுக்காததால் என் கணவர் கடந்த 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கடலூர் மத்திய சிறைச்சாலையில் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் சொன்னார்கள்.

    காவல்துறையினர் என் கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு அடித்து கை கால்களை உடைத்து காயங்கள் ஏற்படுத்தி கொலை செய்த மேற்கண்ட காவல்துறையினர் மீது தகுந்த விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் என் கணவர் இழந்ததால் நான் என் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்கின்றோம். எனவே மேற்கண்ட காவலர்களிடமிருந்து அரசிடமிருந்து என்னுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது அப்போது வக்கீல்கள் சுந்தர், திருமேனி, வினோத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் உடன் இருந்தனர். #tamilnews
    ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காந்தல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 28). இவருக்கு திருமணமாகி விட்டது. டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மாமியார் வீடு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தில் உள்ளது. அங்கு பரசுராமன் வேலை வி‌ஷயமாக அடிக்கடி சென்று வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கனிமொழி (26) என்ற இளம் பெண்ணுக்கும், பரசுராமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது பரசுராமன் ஆசைவார்த்தை கூறி கனிமொழியிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் கனிமொழி கர்ப்பமானார். தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் கனிமொழியை சந்தித்து பேசுவதை பரசுராமன் தவிர்த்து வந்தார். இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து பரசு ராமனை கைது செய்தார்.

    குள்ளஞ்சாவடி அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.

    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர், கடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவருடைய பக்கத்து வீட்டில் 6 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

    இதையடுத்து அந்த சிறுமி வீட்டை பூட்டிவிட்டு அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். இதை பார்த்த அந்த பிளஸ்-2 மாணவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

    பின்னர் சிறுமியை அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் வலியால் சிறுமி அலறினாள்.

    அவளது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சிறுமியின் தாய் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த மாணவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    விருத்தாசலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(40)கொத்தனார். இவரது மனைவி வேம்பாயி(36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான மோகன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மேலும் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு, தகராறு செய்தார். வேம்பாயி தர மறுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மோகன் தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற வேம்பாயி மீதும் தீ பரவியது. படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து சென்னை, கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மோகன், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து விருத் தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    ×