என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.
    • முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கழகத்தில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மறுமலர்ச்சி தி.மு.கவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை என் உயிர் தலைவர் வைகோ அவர்களிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன். இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது.

    திராவிட ரத்னா தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்தின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன்.

    இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சகோதரர் துரை வைகோ அவர்கள் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், கழகத் தோழர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    நானும், முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம். கழகத்தைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.
    • இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்தனர்.

    மதிமுக நிர்வாக குழு மேடையில் துரை வைகோவையும், மல்லை சத்யாவையும் வைகோ சமாதானம் செய்து வைத்தார். பின்னர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச சந்தித்து பேசினார்.

    அப்போது" நீரடித்து நீர் விலகாது" என்று மல்லை சத்யா, துரை வைகோ கருத்து வேறுபாடு குறித்து வைகோ விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    துரை வைகோ- மல்லை சத்யா இடையேயான கருத்து வேறுபாடு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவின. துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் விட்டு பேசினார்கள். பிரச்சனையை நாகரிகமாக கையாண்டார்கள்.

    இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்க போவதில்லை என மல்லை சத்யா உறுதிமொழி அளித்துள்ளார்.

    முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கு பக்கபலமாக இருப்பேன் என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளார்.

    ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.

    இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், மதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

    • மதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தின் முடிவில் ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார்.
    • மல்லை சத்யாவை கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

    மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

    மதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தின் முடிவில் ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார்.

    முதன்மை செயலாளர் துரை வைகோவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படாது. அதேபோல், மல்லை சத்யாவையும் கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

    மேலும், துரை வைகோ மல்லை சத்யா இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற கைகோ அறிவுறுத்தி உள்ளார்.

    மதிமுக நிர்வாக கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாலும், வைகோவின் அறிவுறுத்தலையும் ஏற்று துரை வைகோ ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.

    கட்சிக்கா ஒன்றிணைந்து பணியாற்றுவோதம் என துரை வைகோ, மல்லை சத்யா அறிவித்துள்ளனர்.

    • புதுச்சேரி மாநிலத்திலும், வருகிற 1-ந் தேதி வியாழக்கிழமை அன்று "மே தின விழா பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.
    • பொதுக் கூட்டங்களில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் சிறப்புரையாற்றுவார்கள்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "மே" தினத்தைக் கொண்டாடும் வகையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்,

    புதுச்சேரி மாநிலத்திலும், வருகிற 1-ந் தேதி வியாழக்கிழமை அன்று "மே தின விழா பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.

    இந்த கூட்டங்களில் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாம் தி.மு.க.வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
    • எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கின்றோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலை நோக்கு பார்வை வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    ஒரு நாள் கூட எனக்கு ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லை என்கிற நிலை தான் நீடிக்கிறது. கட்சிப் பணியில் கவனம் செலுத்த இயலாத நிலையிலும் கூட காதணி விழாவுக்கும், மஞ்சள் நீராட்டு விழாவுக்கும், இல்லத் திறப்பு, திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் பிடிவாதமாக வந்து மணிக்கணக்கிலோ அல்லது நாள் கணக்கிலோ கிடையாய் கிடந்து அழுத்தம் கொடுத்து இழுத்து செல்வதிலேயே தோழர்கள் குறியாக இருக்கிறார்கள்.

    24 மணி நேரமும் உங்களோடு இருக்க வேண்டும் என்பதிலே எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால் எந்த பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது.

    அலுவலகத்திலே போய் தலைமையகத்தில் காத்திருந்தால் 1 மணி நேரத்தில் பார்வையாளர்களை முடித்துவிடலாம் என்றால் ஒருநாளும் என்னால் முடியவில்லை. அதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

    காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமண விழா போன்றவற்றுக்கு அழைப்பதை நிறுத்துங்கள். கட்சியில் உள்ள அடுத்த நிலையில் இருக்கிற முன்னணி தோழர்களையும், மூத்த பொறுப்பாளர்களையும் அழைத்து செல்லுங்கள் என்று பல முறை வேண்டுகோள் விடுத்தும் அதனை பின்பற்ற தவறும் நிலை எனக்கு கடும் அழுத்தத்தை உருவாக்குகிறது.

    தமிழ்நாட்டு அரசியலில் தேவையற்ற உரையாடல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். சாதிய, மதவாத சக்திகளை ஊக்கப்படுத்துகிறார்கள். தி.மு.க. தலைமையிலான கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நாம் கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்பதால் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிறார்கள்.

    ஏதோ நாம் தி.மு.க.வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

    இந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் ஒரு தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசி யலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை.

    எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலான பேரம் பலிக்கிற இடத்திலே உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது என்பதெல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை.

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கின்றோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலை நோக்கு பார்வை வேண்டும்.

    தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை முதல் வரும் 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

    நாளை முதல் வரும் 24-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை எனினும், ஒரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.

    இன்று முதல் வரும் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துரை வைகோ பதவி விலகலை ஏற்க மதிமுக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர்.
    • நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்.

    சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.

    மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ

    நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்த பதவி விலகலை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏற்காத நிலையில், இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு என கூறப்பட்டது.

    கூட்டத்தில், துரை வைகோ பதவி விலகலை ஏற்க மதிமுக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர்.

    மேலும், துரை வைகோ முதன்மைச் செயலாளராக தொடர வேண்டும் என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் 40 பேர் பேசியுள்ளதாகத் தகவல் வெளியானது.

    இந்நிலையில், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கூறியதாவது:-

    மதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்று முதன் முதலில் கூறியது நான்தான்.

    நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்.

    மதிமுகவில் கடைசி வரை வைககோவின் தொண்டனாக இருந்துவிட்டு போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் கட்சி மீது பா.ஜ.க. ஏவிவிடுவது அருவருக்கத்தக்க செயல்.
    • பா.ஜ.க. அரசு இனிமேலாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலை பெற வேண்டும்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    * காங்கிரஸ் கட்சி மீது அமலாக்கத்துறை சோதனையை ஏவிவிடுவது வெட்கித் தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயல்.

    * அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் கட்சி மீது பா.ஜ.க. ஏவிவிடுவது அருவருக்கத்தக்க செயல்.

    * குஜராத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மக்கள் விரோத பா.ஜ.க. அரசு பற்றிய கருத்துருவாக்கம் பா.ஜ.க.வை மிரள வைத்திருக்கிறது.

    * ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டின்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது பா.ஜ.க.

    * ஆட்சிக்கு வந்ததிலிருந்து ED-யை தனது கூட்டணி கட்சியாக சேர்த்துக்கொண்டு பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது பா.ஜ.க. அரசு.

    * பா.ஜ.க. அரசு இனிமேலாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நமது வரலாறு நாளைய எண்ணத்தை வடிவமைக்க வேண்டும், உண்மை பேசப்பட வேண்டும்.
    • பொய்களை அழித்து உண்மையை தேடுபவர்களுக்கும், மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.

    தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருவதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    * நமது வரலாறு நாளைய எண்ணத்தை வடிவமைக்க வேண்டும், உண்மை பேசப்பட வேண்டும்.

    * பொய்களை அழித்து உண்மையை தேடுபவர்களுக்கும், மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.

    * தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம். லட்சியப் பயணத்தில் வெல்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று தமிழகத்தில் எட்டு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
    • இன்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. இருப்பினும் மழை நின்ற பின்னர் கொளுத்தும் வெயில் மழை பெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத அளவுக்கு செய்து விடுகிறது.

    சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்த கோடை மழை பெய்தது. காலை 8.45 மணியளவில் தொடங்கிய இந்த மழை விட்டு விட்டு தொடர்ச்சியாக மதியம் வரையில் பெய்து கொண்டே இருந்தது. இப்படி கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்தபோதிலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே கடுமையான வெயில் அடிக்க தொடங்கி விட்டது. இதுபோன்ற நிலைதான் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

    இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் எட்டு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. திருத்தணி, மதுரை விமான நிலைய பகுதியில் 103 டிகிரியும், பரமத்தி வேலூர் மற்றும் மதுரை நகர் பகுதியில் 102 டிகிரி வெயிலும் திருச்சியில் 101 டிகிரியும் பதிவாகி இருக்கிறது. ஈரோடு, பாளையங்கோட்டையிலும் 100 டிகிரியும் தாண்டி வெயில் அடித்து உள்ளது. இதே போன்று இன்று காலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

    இரவில் புளுக்கம், பகல் நேரங்களில் கொளுத்தும் வெயில் காரணமாக இரவு நேரங்களில் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவுக்கு அதிக வெப்பம் காணப்படுகிறது. இதன் காரணமாக குளிர்சாதன வசதி கொண்ட அறைகளை தவிர்த்து மற்ற அறைகளில் இருக்கும்போது கடுமையான புழுக்கத்துடன் உடலில் வியர்வை வழிந்தோடும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள்.

    • ஆளுநரை மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தபால்காரர் என முதலமைச்சர் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல.
    • பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார்.

    மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆளுநரை மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தபால்காரர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "ஆளுநரை தபால்காரர் என்று கூறுவது முதல்வருக்கு அழகு அல்ல... " - நயினார் நாகேந்திரன்

    ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு "எனது கமலாலய வேலைகளை நீங்கள் பார்ப்பது கவர்னருக்கு அழகல்ல" என்று சொல்லுங்களேன் நயினார் நாகேந்திரன்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வக்பு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
    • ம.தி.மு.க. சார்பில் வருகிற 26-ந்தேதி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை தமிழ்நாடு அடைந்திருக்கிறது.

    தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமைத் திறனோடு வழி நடத்தும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று ம.தி.மு.க. நிர்வாகக்குழு விரும்புகிறது.

    50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டப் பேரவையில் மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு உயர்நிலைக் குழுவை அமைத்திருக்கிற தமிழ்நாடு அரசுக்கு ம.தி.மு.க. நிர்வாகக் குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், கவர்னர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக உணர்ந்து கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

    கவர்னர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்து விட்டார். எனவே அவரை ஜனாதிபதி தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க. நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது. வக்பு திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும் அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கும் சவால் விடுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும். வக்பு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை பதிவு செய்யாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.

    மேற்கண்டவை உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×