என் மலர்tooltip icon

    அரியலூர்

    மகனின் திருமணத்தன்று சீர்வரிசைகளை வீட்டில் வைத்துவிட்டு வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியானார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பள்ளிவிடை கிராமத்தை சேர்ந்தவர் பூராசாமி (வயது 55), விவசாயி. இவர் தனது 2-வது மகன் மதியழகனுக்கு திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இதையடுத்து, மண்டபத்தில் உள்ள சீர்வரிசை பொருட்களை தனது வீட்டுக்கு பூராசாமி ஒரு வாகனத்தில் எடுத்து சென்றார். பின்னர் பள்ளிவிடை கிராமத்தில் இருந்து மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    திருமண மண்டபத்தின் அருகே வந்தபோது, ரேஷன் கடை எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பூராசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பூராசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் திருமணத்தன்று விவசாயி விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    கார் குண்டு தாக்குதலில் இறந்தவர் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. பயங்கரவாத தாக்குதல் என்பதால் இங்கிலாந்து முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ளது லிவர்பூல் நகரம். இங்குள்ள பெண்கள் ஆஸ்பத்திரி அருகே நேற்று வாடகை கார் ஒன்று வந்து நின்றது. அதில் டிரைவரும், ஒரு பயணியும் இருந்தனர்.

    கார் நின்ற அடுத்த விநாடி அதில் இருந்து குண்டு வெடித்தது. இதில் கார் சிதறியது. காரில் இருந்த பயணி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கார் டிரைவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் மோசமான நிலையில் இருந்து தப்பித்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.

    இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது. மக்கள் அலறியடித்து ஓடினர். பெண்கள் ஆஸ்பத்திரி உடனடியாக மூடப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்றனர்.

    காரில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. அதன் பிறகு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இது பயங்கரவாத தாக்குதல் என தெரிய வந்தது. பல்வேறு இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது காரில் மர்ம நபர்கள் குண்டுவைத்தது தெரிய வந்தது.

    அவர்கள் யார் என்பதையும் அடையாளம் கண்டனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் உள்ள இடத்தில் ஒரு வீட்டில் அந்த நபர்கள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

    3 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் ஒருவருக்கு 29 வயது, மற்றவர்களுக்கு 26 மற்றும் 21 வயது ஆகும். அவர்கள் பெயர் விவரம் என்ன? போன்ற தகவல்கள் எவற்றையும் போலீசார் வெளியிடவில்லை.

    கார் குண்டு தாக்குதலில் இறந்தவர் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. பயங்கரவாத தாக்குதல் என்பதால் இங்கிலாந்து முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டத்தில் பள்ளி முன்புள்ள தரைக்கடைகளை அப்புறப்படுத்த கோரி போலீஸ் அதிகாரி அலுவலகத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தா.பழூர் ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் சைக்கிள் மற்றும் பஸ் மூலம் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் அந்த பள்ளி வளாகத்திற்கு முன்பாக பழக்கடைகள், இளநீர் கடைகள், பழச்சாறு கடைகள், பூக்கடைகள் போன்றவை உள்ளன. மேலும் பள்ளி முன்பு அசுத்தமான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளி மாணவிகளுக்கும், பள்ளிக்கு அருகே உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பள்ளி எதிரே போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளதால் விபத்து ஏற்படும் வாகனங்கள், மணல் கடத்தி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பள்ளி வளாகத்தையொட்டி நிறுத்தப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே பள்ளி வளாகத்திற்கு முன்பாக உள்ள தரைக்கடைகள் மற்றும் வாகனங்களை அகற்ற வேண்டும், தரைக்கடை நடத்துபவர்களுக்கு மாற்று இடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஏராளமானவர்கள் திரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு, பள்ளி முன்பு உள்ள தரைக்கடைகள், ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தி, மாணவிகளை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இடுக்கியில் உள்ள சிறுதோணி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    பத்தனம்திட்டா:

    கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

    நேற்று இரவு முதல் பரவலாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    தொடர்ந்து கொட்டிவரும் மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 

    கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்கு பகுதியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
    தா.பழூர் டெல்டா பகுதியில் மழைநீாில் மூழ்கியதால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. டெல்டா பாசன பகுதியாக விளங்கும் சாத்தாம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, வாழைகுறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், தா.பழூர், இடங்கண்ணி, சோழமாதேவி, கோடாலிகருப்பூர், உதயநத்தம் ஆகிய ஊராட்சிகளில் சம்பா நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக நெற்பயிர்கள் பெருமளவில் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக கோடாலிகருப்பூர், உதயநத்தம், இடங்கண்ணி உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் உடனடியாக வடிவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள் அழுகும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர் மழை பெய்தால், இந்த ஆண்டு நெல் உற்பத்தி முற்றிலும் கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிக அளவு வெள்ளநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் நீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்ய உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை காப்பதற்கு தேவையான ரசாயன உரங்களையும் தேவைப்படும் உயிர் உரங்களையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடிந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு யூரியா உரம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்த சம்பா பருவத்தில் தொடர்ந்து யூரியா தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், நெற்பயிரை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்க யூரியாவின் தேவை தற்போது மிகவும் அத்தியாவசியமாகிறது. எனவே உரிய அதிகாரிகள் தட்டுப்பாடு இல்லாமல் யூரியா கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு, அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவும், யூரியா வாங்கும்போது கூடுதலாக தேவையில்லாத சில ரசாயன உரங்களை வாங்க விவசாயிகள் வற்புறுத்தப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக அதிகளவில் பெய்து வருகிறது.

    கடந்த மாதம் 25-ந்தேதி பருவமழை தொடங்கிய நாளில் இருந்து 2 வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் அதிகன மழை வரை பெய்தது.

    சென்னையில் இயல்பை விட அதிக மழை பெய்ததால் நகரமே மழை வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு சீராகி விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், மின்சார வாரிய ஊழியர்கள் ஒருங்கிணைந்து மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    சென்னையை போன்றே டெல்டா மாவட்டங்களிலும் மிக பலத்த மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 1½ லட்சம் பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. இதனால் கடன் வாங்கி விவசாய தொழிலை செய்து வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.

    அந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவும், நிவாரண உதவிகளை வழங்கவும் அமைச்சர்கள் குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரும் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக மழை பாதித்த டெல்டா மாவட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்தார். இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரியில் சென்று தங்கினார்.

    இன்று காலை புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடிக்கு சென்றார். அங்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பெரியகங்கணாங்குப்பம், கடலூர், கடலூர் துறைமுகம், குள்ளஞ்சாவடி வழியாக குறிஞ்சிப்பாடிக்கு சென்றார்.

    கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்ய தொடங்கினார். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளன. கெடிலம், தென்பெண்ணை யாறு, மணிமுக்தா நதி, மலட்டா ஆறு, வீராணம் ஏரி, பெருமாள் ஏரி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது. விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.

    பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட மாருதி நகருக்கு சென்று மழையால் பாதித்த வீடுகளை பார்வையிட்டார். அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

     மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகள் வழங்கிய காட்சி

    அப்போது சந்திரா, ஜெயலட்சுமி, அம்சாயாள், சந்திரா, ஜெயஸ்ரீ, சுபா, சீலா, செல்வி, இலக்கியா, சாந்தி, சரோஜா, ஜோதி, கிருஷ்ணவேணி, மலர்விழி, உமா, செல்வி, பழனியம்மாள், புஷ்பவள்ளி ஆகிய 18 பெண்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள மொத்தம் ரூ. 5 லட்சத்து 22 ஆயிரம் அளவுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.

    அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடூர்அகரம் பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரில் மூழ்கிய வயல் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க தங்களது நிலைமையை விவரித்தனர்.

    வீடுகளை இழந்து பரிதவித்த ராஜகுமாரி, சுலோச்சனா, ரமேஷ், கிருஷ்ணவேணி, பார்வதி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதுபோல கால்நடைகளை பறிகொடுத்த ரஞ்சிதா, ராஜசேகரன், அம்சாயாள், கவிதா, தெய்வசிகாமணி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் கொடுத்தார். மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 500-க்கு நிவாரண உதவிகளை அந்த இடத்தில் அவர் வழங்கினார்.

    அதன் பிறகு சிதம்பரம் சென்று காலை சிற்றுண்டி சாப்பிட்டார். பின்னர் வல்லம் படுகை வழியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து சீர்காழி வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். முதலில் புத்தூர் அரசு பாலிடெக்னிக் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வயல் பகுதிகளை பார்வையிட்டார். அங்கு ஏராளமான ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றை ஆய்வு செய்தார்.

    பின்னர் சட்டநாதபுரம், தென்னக்குடி வழியாக தரங்கம்பாடிக்கு சென்றார். அங்கு கேசவன்பாளையத்தில் சுனாமி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சுனாமி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அங்கு வசிப்பர்களை அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்து போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து அந்த பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை கண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுப் பணித்துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்தார். வயல்களில் தேங்கியுள்ள மழை தண்ணீரை அகற்று வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    வேளாங்கண்ணியில் தேனீர் அருந்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைஞாயிறு பகுதியில் மழை தண்ணீரில் மூழ்கி கிடந்த வயல்களை பார்வையிட்டார். பின்னர் நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி கிராமம் பகுதியில் பல நூறு ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி கிடக்கின்றன. அதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதிகாரிகளிடம் கூடுதல் விவரங்களை கேட்டார்.

    அப்போது நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி. செல்வராஜ், கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர். அந்த கிராமத்தில் இருந்து தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவபுலம் பகுதிக்கு சென்றார். அங்கும் ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றையும் பார்வையிட்டார்.

    பலத்த மழை காரணமாக அந்த பகுதியில் 10 பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகள் வழங்கினார். அதன் பிறகு திருவாரூர் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். புழுதிக்குடியில் அரசு சார்பில் 12 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதில் 3 பேருக்கு வீட்டு மனை பட்டா, 3 பேருக்கு பகுதி அளவில் வீடு சேதமடைந்ததற்கான உதவி மற்றும் 3 பேருக்கு கால்நடை இறப்பிற்கான நிவாரண தொகை வழங்கினார். 2 பெண்களுக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகையும், ஒரு பெண்ணுக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகையும் என மொத்தம் ரூ.24 லட்சத்து 82 ஆயிரத்து 275 மதிப்பில் உதவிகளை வழங்கினார்.

    அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக மன்னார்குடிக்கு வந்தார். மன்னார் குடியில் மதிய உணவுக்காக சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். இன்று பிற்பகல் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு தஞ்சை மாவட்டத்துக்கு செல்கிறார். தஞ்சை மாவட்டத்தில் பெயரிகோட்டை பகுதியில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்.

    கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மழை பாதித்த பகுதிகளை பார்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது ஏராளமானவர்களுக்கு அவர் நிவாரண உதவிகளையும் வழங்கி இருக்கிறார்.

    தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்து முடித்த பிறகு சாலை மார்க்கமாக இன்று இரவே சென்னை வந்து சேருகிறார்.


    இதையும் படியுங்கள்...குமரியில் விடிய விடிய மழை- 150 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது
    தர்மபுரியில் இருந்து தக்காளி போன்ற காய்கறிகள் வரத்து குறைந்து போனதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு முன்பு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்ட விலையை விட தற்போது கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் அவரைக்காய் ரூ.120, கேரட் ரூ.55, பீன்ஸ் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.50, கத்தரிக்காய் ரூ.50 என இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது. கிராமப் பகுதியில் இருந்து வரும் உள்ளூர் காய்கறிகள் மழையின் காரணமாக விற்பனைக்கு வரவில்லை.

    சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிபிளவர், ஒட்டன்சத்திரம், தர்மபுரியில் இருந்து தக்காளி போன்ற காய்கறிகள் வரத்து குறைந்து போனதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் லஸ் வழியாகவும், இலகுரக வாகனங்கள் மந்தைவெளி மார்க்கெட் செயின்மேரீஸ் சாலை வழியாகவும் செல்கின்றன.
    சென்னை:

    சென்னையில் கொட்டி தீர்த்த கன மழையால் தேங்கிய வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி இருக்கிறது.

    இன்று காலை வரையில் சென்னையில் உள்ள 36 சாலைகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது. ஈ.வி.ஆர்.சாலை-அழகப்பா சாலை சந்திப்பு, கால்நடை மருத்துவமனை, பிரிக்கிளின் சாலை, மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு (முழுமையாக மூடப்பட்டுள்ளது), சிவசாமி சாலை, ராஜரத்தினம் விளையாட்டு மைதானம், வள்ளுவர் கோட்டம், பள்ளிக்கூட சாலை, ஸ்டெர்லிங் சாலை (லயோலா கல்லூரி வரை), டி.டி.கே.சாலை, எல்டாம்ஸ் சாலை, வடபழனி ராம் தியேட்டர், சூளைமேடு பெரியார்பாதை, 100 அடி சாலை பல்லவா மருத்துவமனை, வடக்கு உஸ்மான் ரோடு பசுல்லா சாலை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

    வாணிமகால் ஜி.என். செட்டி ரோடு, அருணாச்சல சாலை, காமராஜ் சாலை, கஸ்தூரிபா நகர், கற்பகா தோட்டம் பகுதி, விஜயா நகர், மடிப்பாக்கம் சதாசிவம் நகர், குளோபல் மருத்துவமனை அருகில் உள்ள சாலை ஆகிய இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது.

    இந்த சாலைகளில் போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பில் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து தடை செய்யப்படவில்லை.

    அதே நேரத்தில் சென்னையில் உள்ள 8 முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் டாக்டர் சிவசாமி சாலை, செம்பியம் ஜவகர் பகுதி, பெரவள்ளூர் 70 அடி சாலை, புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பட்டாளம் மணிக்கூண்டு, விசாயர்பாடி முல்லைநகர் பாலம், பள்ளிக்கரணை 200 அடி சாலை, சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தலைமை செயலகம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதில் பள்ளிக்கரணை 200 அடி சாலையில் மாநகர பஸ்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மாதவரம் மஞ்சப்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் சாலையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் இன்னொரு பக்கம் உள்ள சாலை வழியாக சென்று வருகின்றன.

    வடபழனி முதல் கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

    மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் லஸ் வழியாகவும், இலகுரக வாகனங்கள் மந்தைவெளி மார்க்கெட் செயின்மேரீஸ் சாலை வழியாகவும் செல்கின்றன.

    சென்னையில் உள்ள 16 சுரங்கப் பாதைகளில் வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை, மேட்லி, துரைசாமி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    காக்கன் சுரங்கப்பாதையில் இரு சக்கர வாகனங்களும், ஆட்டோக்கள் மட்டும் சென்று வருகின்றன.
    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த குமிழியம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(வயது 58). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், இது குறித்து பெற்றோரிடம் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ராஜதுரைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.17 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ராஜதுரை திருச்சி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்
    ஏழுமலையான் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதம் (ஸ்ரவண) திருவோண நட்சத்திரத்தன்று புஷ்ப யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

    திருமலை, திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் ஸ்ரீவேதாந்த ஜெகநாத்ச் ஸ்ரவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான புஷ்ப யாகத்திற்காக இன்று அங்குரார்ப்பணம் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் செய்தனர். ஏழுமலையான் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படும்.

    நாளை (வியாழக்கிழமை)மதியம் 1 மணி முதல் 5 மணி வரை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி, துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களால் புஷ்பயாகம் நடத்தப்படும்.

    வேதமந்திரங்கள் முழங்க 9 டன் மலர்களால் சாமிக்கு புஷ்ப யாகம் நடைபெறும். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    திருப்பதியில் நேற்று 32816 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,459 முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    நத்தம் அருகே 6 வயது சிறுவன் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 3 மகள்களும் ஹரிஹர தீபன் (6) என்ற மகனும் உள்ளனர்.

    ஹரிஹரதீபன் தனியார் பள்ளியின் 2-ம் வகுப்பு படித்து வந்தான். வித்யா 100 நாள் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய வித்யா தனது மகள்கள் மட்டும் இருந்ததைப் பார்த்து மகனை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

    அடிக்கடி வித்யாவின் அக்கா மகன் ராஜேஷ்குமார், உறவினர் பிரியதர்ஷிணி ஆகியோர் வீடுகளுக்கு ஹரிஹரதீபன் விளையாடச் செல்வது வழக்கம் எனவே அவர்களது வீட்டுக்கு சென்று வித்யா தேடிப்பார்த்தார். அங்கும் அவனை காணவில்லை.

    எதேச்சையாக பிரியதர்ஷிணியின் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஹரிஹர தீபன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான் இதை பார்த்ததும் அலறி துடித்த வித்யா அவனை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது.

    இதனையடுத்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 3 மகள்கள் இருந்தபோதும் ஆண் வாரிசுக்காக 4-வதாக ஹரிஹரதீபனை பெற்றெடுத்து ஆசையாக வளர்த்து வந்தனர். ராமகிருஷ்ணன் ஓட்டலில் வேலை பார்த்து வந்த போதிலும் வசதியாகவே இருந்து வந்துள்ளார். இவர்களது பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக உறவினர்கள் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    மேலும் ராமகிருஷ்ணன் வளர்ச்சியிலும் அவர்கள் பொறாமைபட்டு வந்துள்ளனர். இதனால் அவரது உறவினரான அஜய்குமார் (19) என்பவர்தான் கொலை செய்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. எனவே அவரிடம் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அஜய்குமார் தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த கொலை நரபலியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது உறவினர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதத்தில் தான் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ கேரட் ரூ.90-க்கும் சில்லரை கடைகளில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் வந்து கொண்டிருந்த தக்காளியின் வரத்து தொடர் கனமழை காரணமாக குறைந்துள்ளது. இன்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ30-க்கு விற்று வந்த தக்காளி கடந்த 2 நாட்களாகவே திடீரென விலை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் மழையால் ஊட்டியில் இருந்து வரும் கேரட் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ கேரட் ரூ.90-க்கும் சில்லரை கடைகளில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ×