என் மலர்tooltip icon

    அரியலூர்

    தா.பழூர் ஒன்றியம் முழுவதும் சிறுசிறு குளங்கள் மற்றும் ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி அணைக்கு செந்துறை மற்றும் அரியலூர் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் அணையின் மொத்த உயரமான 4.75 மீட்டர் உயரத்தில் 4.47 மீட்டர் உயரத்திற்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் சுத்தமல்லி அணையின் முழு கொள்ளளவான 226.8 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 365 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து ஏற்கனவே ஸ்ரீபுரந்தான் பெரிய ஏரி, கோவை தட்டை ஏரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஏரிகள் நிறைந்து விட்டன. எனவே உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 175 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக பொன்னார் பிரதான கால்வாயில் இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிந்தாமணி ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு வருகிறது. குறிச்சி மதகில் பொன்னர் தண்ணீரும், சிந்தாமணி ஓடை தண்ணீரும் ஒன்றாக கலந்து குறிச்சி கலிங்கு வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது.

    தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளான காசுடையான் ஏரி, அணைக்குடி ஏரி, சித்தேரி, சுக்கிரன் ஏரி மற்றும் பூவோடை ஆகிய ஏரிகள் அதன் முழு கொள்ளளவில் 85 முதல் 90 சதவீத அளவிற்கு நிரம்பி உபரி நீர் செங்கால் ஓடை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது.

    தா.பழூர் ஒன்றியம் முழுவதும் சிறுசிறு குளங்கள் மற்றும் ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
    குடிசை அமைத்த மக்களுக்கு வேறு இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அவிநாசி:

    அவிநாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்

    இதற்கிடையில், தெக்கலூர் அய்யன் கோயில் கருவேலங்காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: 

    தெக்கலூர் காமநாயக்கன்பாளையம் பகுதியில் 100 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பல தலைமுறைகள் கடந்த நிலையில் ஒரே இடத்தில் நான்கு குடும்பங்களாக இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருகிறோம். 

    வீட்டுமனை பட்டா கேட்டு மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, தற்போது தெக்கலூர் அருகே அய்யன் கோயில் பின்புறம் அரசு நிலத்தில் குடிசை அமைத்துள்ளோம் என்றனர்

    இதுகுறித்து வட்டாட்சியர் ராகவி கூறுகையில்:

    இந்த இடம் வண்டி பாதை அல்லது குட்டை புறம்போக்கு என்று வருவாய் பதிவேட்டில் உள்ளதாக தெரிகிறது. இது குறித்த ஆய்வும் நடைபெற்று வருகிறது. குடிசை அமைத்த மக்களுக்கு வேறு இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தநிலையில் இன்று 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    வி.கைகாட்டியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி பகுதியை சேர்ந்த 10 வயது மாணவன் ஒருவன் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். கொசுக்கடியால் மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டடுள்ளது. அந்த மாணவனை பெற்றோர் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதியானது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், சாக்கடை கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அடைப்புகளையும் அகற்றி சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி முருகன் கோயில். முருகனின் பிரார்த்தனைத் தலங்களில் முதன்மையானது குன்றக்குடி.
    சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே 
    ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப் 
    பாடுங் கவுரி பவுரிகொண்டா டப்பசுபதிநின் 
    றாடும் பழுது பரமாயிருக்கு மதீதத்திலே    - கந்தரலங்காரம்

    தூய்மையே இன்பம் தருவது.
    தூயமனம் உடையவர்கள் உலகம் முழுவதும் எல்லையற்ற பரம்பொருளின் அம்சமே நிறைந்திருக்கிறது என்று அனைத்திலும் பேரின்ப வடிவையே காண்பர்.அவனின் பாதார விந்தங்களைப் பற்றினால் மனதிலுள்ள அழுக்குகள் நீங்கும். அதற்கு ஒரே வழி இறைவனின் நாமத்தை எந்நேரமும் சொல்லிக் கொண்டே இருப்பதுதான்.அருணகிரியார் முருகனிடம், :அப்பா, நான் கர்மவினையின் காரணமாக உன்னை மறந்து மாயையில் சிக்கித் தத்தளிக்கிறேன். செய்ய வேண்டியதைச் செய்யாமல் தவிக்கிறேன். அரை நிமிஷ நேரம் மட்டும் சரண கமலாலயத்தை நினைக்க முடியாத மூடன், மட்டி நான்” என்கிறார். இறைவனை நினைக்க, தவம் செய்யக் காட்டுக்குப் போக வேண்டியதில்லை.

    சீவனொடுக்கம் பூதனொடுக்கம் தேற உதிக்கும் பரஞான 
    தீபவிளக்கம் காண எனக்குன் சீதள பத்மம் அருள்வாயே “ என்று வேண்டுகிறார் அருணகிரியார். ஐம்புலன்களும் ஒடுங்கும் இடத்தில் ஞானஒளி தோன்றும். அது ஒடுங்கும் இடம் முருகனின் பாதார விந்தமே. உணவை யும், உடலையும் ஒதுக் குவதால் பலனில்லை. மனதை முருகனின் பாதங்களில் நிலை பெறச் செய்ய வேண்டும். அப்படி இருந்தால் பழவினைகள் நம்மைத் தீண்டாது. உலகத் துன்பங்கள் அண்டாது. கர்ம வினைகளைத் அனுபவித்துத் தீர்க்க வேண்டும். ஆனால் முருகா என்றால் அந்த வினை நம்மை அதிகம் துன்புறுத்தாது. 

    முருகனைத் தேடி அலைய வேண்டியதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே கந்தா என்று அழைத்தால் கடிது ஓடி வருவான் கார்த்திகேயன். தன் பக்தர்களின் இதயத்தில் வாசம் செய்யும் முருகன் குடி இருப்பது கோயிலில் அல்ல. அழைத்தவர் குரலுக்கு அவர் இருக்கும் இடம் தேடி ஓடி வருவேன் என்று மயில் மீதேறி வருகிறான் குமரன். காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரரை தன் குலதெய்வமாகக் கொண்டு வாழ்ந்த மருது பாண்டியரை தன் வசம் ஈர்க்க அவர் இருக்கும்  இடம் தேடி வந்தான் குன்றக்குடி குமரன்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி முருகன் கோயில். முருகனின் பிரார்த்தனைத் தலங்களில் முதன்மையானது குன்றக்குடி. மலையே மயிலாகக் காட்சி அளிப்பது இதன் சிறப்பு.
    முருகனின் வாகனமான மயில் அவரின் சாபத்தின் காரணமாக மலையானதாக புராணங்கள் கூறுகிறது. ஒருமுறை அசுரர்கள், பிரம்மாவின் வாகனமான அன்னமும், மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனுமே வேகமாகப் பறக்கக் கூடிய வர்கள், மயிலைவிடச் சக்தி படைத்தவர்கள்  என்று பெருமை பேசியதாக மயிலிடம் போய்க் கூற கோபமடைந்த மயில் பிரமாண்ட ரூபம் எடுத்து அன்னத்தையும், கருடனையும் விழுங்கி விட்டது. 

    பிரம்மாவும், மகா விஷ்ணுவும் முருகனிடம் முறை யிட, கோபமடைந்த குமரன் மயிலிடமிருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்து, மயிலின் கர்வத்தை அடக்க, மலையாகப் போகும்படி சாபம் இட்டார். தன் தவறை உணர்ந்து மயிலும், குன்றக்குடி வந்து மலையாக மாறி முருகனை நினைத்துத் தவம் இருந்தது. தவறை உணர்ந்து, வருந்துபவர்களை மன்னித்து அருள்வது இறைவனின் இயல்பு அல்லவா? முருகனும் மயிலின் தூய்மையான தவத்தில் மகிழ்ந்து அதற்குச் சாப விமோசனம் அளித்தார். இந்த மலையின் மீதே எழுந்தருளி அருள் புரிந்தார். தன் நோயைத் தீர்த்த குன்றக்குடி முருகனின் ஆலயத்தை பெரிய மருதுவே செப்பனிட்டுக் கொடுத்தார். திருப்பணிகளைக் கவனிக்க இங்கே ஒரு அரண்மனையையும் நிறுவினார். 

    “வீர மருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே!
    ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே”- என்று குன்றக்குடி பாமாலை புகழ்கிறது. தீர்த்தக் குலத்தைச் செப்பனிட்டு, நான்கு புறமும் படித்துறைகள் கட்டினார். அது மருதாவூரணி என்று அழைக்கப் படுகிறது. பெரிய ராஜகோபுரம் பெரிய மருதுவால் கட்டப்பட்டதே. மூலவர் சன்னதியில் மயில் மண்டபம், உற்சவர் சன்னதியில் அலங்கார மண்டபம் கட்டி சுற்றுச் சுவர் எழுப்பினார்.
    உற்சவ மூர்த்திக்கு தங்கக் கவசம், தைப்பூச விழாவிற்கு தேர், காடன் செட்டியார் பெயரில் அன்னதான சத்திரமும் கட்டினார் பெரிய மருது. முருகனிடம் அளவில்லாத அன்பு செலுத்திய மருது சகோதரர்கள் உற்சவமூர்த்திக்கு எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தில் இரு தூண்களில் கை கூப்பியபடி சிலை வடிவாக நிற்பது என்றும் அழியாத கலைச் சின்னமாகும்.

    புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படும் குன்றக்குடி, மலைக்கோயில், கீழ்க்கோயில் என்று இருபகுதிகளாக உள்ளது.  மலைக்கோயிலின் நுழைவாசல் மயிலின் தோகைபோல் தோன்றுவதால் அங்குள்ள பிள்ளையார் தோகையடி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். படி ஏறும்போது இடும்பன் சன்னதி, வல்லப கணபதி சன்னதிகள் உள்ளது. மலைக் கோயில் வாசலில் முருகனின் படைத்தளபதி வீரபாகு காட்சி அளிக்கிறார். தெற்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. மலி மீது வெளிப் பிரகாரம் மட்டும்தான் உள்ளது. அதில் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ணகணபதி, பைரவர், நடராஜர் சோமஸ்கந்தர், விசாலாட்சி சன்னதிகளும், வடகிழக்கில் நவக்கிரக சன்னதிகளும் உள்ளது.

    கருவறையில் சண்முகநாதர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார் முருகன். ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன், சுகாசன நிலையில்,வலதுகாலை மடித்து, இடதுகாலை தொங்கவிட்டு மயில் மீது அமர்ந்திருக்கும் காட்சி கண்ணுக்கு விருந்து.
    இங்கு தேவியர் இருவரும், முருகனின் இருபுறமும் தனித்தனியே மயில்கள் மீது வீற்றிருப்பது இத்தலத்திற்கே உள்ள சிறப்பு.  எனவே இங்கு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் இணைபிரியாமல் வாழ்வார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது. பல குடும்பங்களுக்குக் குலதெய்வமாக விளங்குகிறான் குன்றக்குடி முருகன். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இங்கு வந்து காவடி எடுத்து நன்றி செலுத்துகிறார்கள்.

    வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்றவை இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து “முருகா, நீயே காப்பு” என்று தத்து கொடுக்கும் வழக்கம் இங்கு நிலவுகிறது.
    தவள மதிய மெறிக்குந் தணலாலே 
    சரச மதனன் விடுக்குங் கணையாலே
    திவளு மணிகள் கிடக்குந் திருமார்பா 
    திகழு மயிலின் மலைக்கண் -- - - - -பெருமாளே 
    என்று பாடுகிறார் அருணகிரியார்.

    சந்திரனின் ஒளியாலும், மதனன் விடுக்கும் கணையாலும் நான் மயக்கமடையலாமா? ஒளி வீசும் அழகிய மணி மாலைகளை அணிந்து மயூரகிரி மலை மீது வாழும் பெருமாளே உன்னை நினைப்பதே எனக்கு இன்பம் என்று பாடுகிறார். 
    “சாடும் சமரத் தனிவேல்” என்னும் பாடலில் மனமானது கண்டபடி சுற்றித் திரியும் இயல்புடையது, அப்படிப் பட்டவர்கள் தங்கள் மனதை முருகப்பெருமானின் திருவடி களில் நிலை பெறச் செய்ய வேண்டும். அறநெறிகளிலிருந்து மாறுபட்டவர்களையும், தீய வினைகள் புரிபவர்களையும் அழிக்கும் வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனை நினைப்பவர்கள், அனைத்து யுகங்களும், உலகமும், முடிவுற்ற பின்னரும்,ஆடல் வல்லான் ஆனந்தத் தாண்டவம் நடத்தும் இறுதிக் காலத்திலும் மேன்மையுடன் விளங்குவார்கள் என்கிறார்.

    “சாடும் தனிவேல் முருகன் சரணம் 
    சூடும்படி தந்தது சொல்லுமதோ 
    வீடும் சார்மாமுடி வேதமும் வெங் 
    காடும் புனமும் கமழும் கழலே” என்கிறார் கந்தர் அனுபூதியில்.
    பரம்பொருளின் இலக்கணத்துடன், உருவம் இன்றியும், உருவமுடனும், இதுதான் என்று கூற இயலாத தனிப்பொருள் முருகன். தேவர்களால் துதிக்கப்பட்ட நின் சரணார விந்தங்களை என் தலைமேல் வைத்து அருளிய நின் கருணைக்கு நான் எப்படி நன்றி செலுத்துவேன் என்று உருகுகிறார்.

    குன்றக்குடி முருகனை நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும், அவன் எந்நேரமும் நம்மைக் காக்கும் எண்ணத்துடன் இருக்கிறான். தன் அடியவர்கள் மூலம் நம்மை ஆட்கொள்ள தன்னிடம் இழுக்கிறான். பெரிய மருதுவை தன்னிடம் ஈர்த்தது போல் நம்மையும் அவனிடம் இழுத்துக் கொள்கிறான்.

    அவனின் கருணையை நாம் உணராதிருந்தாலும், கந்தனே நமக்கு அதைக் காட்டி அருளுகிறான். அவனின் சரணம் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. உயிர்க் காற்றாய் அவனின் நாமமே எங்கும் நிறைந்திருக்கிறது. காற்று இல்லாமல் சுவாசிக்க முடியாது என்பதைப் போல் முருகனின் நாமம் இல்லாவிட்டால் நாமும் இல்லை. உலக இயக்கமும் இல்லை. குன்றக்குடி முருகன், நோய் தீர்க்கிறான். கல்யாணத் தடையை நீக்குகிறான். நம் அனைத்து வினைகளையும் நீக்கி தன் கரங்களுக்குள் நம்மை வைத்துக் காக்கிறான்.

    ஒருமுறை சிவகங்கை சீமையை அரசாண்ட மருது சகோதரர்களில் பெரிய மருதுவுக்கு முதுகில் ராஜபிளவை என்ற கட்டி வந்தது. எத்தனை வைத்தியம் செய்தும் பலனில்லை. அப்போது, முருக பக்தர் ஒருவர் வந்து நீறு பூசினால் சரியாகும் என்று கூற, காடன் செட்டியார் என்பவர் வந்து குன்றக்குடி முருகனை நினைத்து நீறு பூச, பிளவை சரியானது. சுற்றிலும், புதர் மண்டிக் கிடந்த கோயிலை நன்றியுடன் பெரிய மருதுவே செப்பனிட்டு, திருப்பணிகள் செய்து கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

    திருச்சி மத்திய சிறையில் இருந்த செல்வகணபதி, விஜயனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் வழங்கினர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூரை சேர்ந்தவர் செல்வகணபதி (வயது 20). இவர் ஆசை வார்த்தை கூறி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் செல்போனில் சிறுமியின் புகைப்படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செல்வகணபதியிடம் கேட்டதற்கு, அவர் சிறுமியின் செல்போன் படங்களை வைத்து கொண்டு மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வகணபதியை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மற்றொரு சம்பவம்....

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், அய்யலூரை சேர்ந்தவர் விஜயன் (35). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதற்காக சென்றபோது, அங்கு ஒரு சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுத்து வந்த சிறுமியை விஜயன் பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, விஜயனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் செல்வகணபதி, விஜயன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று செல்வகணபதி, விஜயன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த செல்வகணபதி, விஜயனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் வழங்கினர்.
    அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும், பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசு பணமும் அரசு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

    இது குறித்து எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    பொங்கல் விழாவை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும், முழு கரும்பும் வழங்கி வந்தோம்.

    ஆனால் தி.மு.க. அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    அதன்பிறகு உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்புக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

    தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால் பொங்கல் தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை.

    முக ஸ்டாலின்

    அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும், பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் எனறு தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்...முதல்-அமைச்சரை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

    தா.பழூரில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீரை கடந்து செல்வதால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் மேலத்தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இந்த தெருவை கடந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

    மேலும் தா.பழூர் பகுதிக்கான ரேஷன் கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மின்வாரிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் விஸ்வநாதர் கோவில் ஆகியவையும் இந்தப் பகுதியிலேயே உள்ளன. இதனால் அலுவலகங்கள் மற்றும் கோவிலுக்கு இந்த பாதையை கடந்து செல்லும்போது முதியவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.

    மேலும் தண்ணீர் வடிவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் மேலத்தெருவில் உள்ள தார் சாலை சிதிலமடைந்து போக்குவரத்திற்கு பயன்பாடற்ற சாலையாக மாறிவிட்டது. குண்டும், குழியுமாக இருக்கும் இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று அச்சத்தால் பிள்ளைகளை பெற்றோர்கள் தயக்கத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் பள்ளியின் அருகில் மழைநீர் தேங்கி, டெங்கு போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளதால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே பள்ளி செல்லும் பாதையில் நீர் தேங்காமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மங்களமேடு அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள வசிஷ்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அழகம்மாள் (வயது 75). தற்போது இவர்கள் வசிஷ்டபுரம் ஊராட்சியை சேர்ந்த ரெட்டிகுடிக்காடு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை அழகம்மாள், விறகுகள் சேகரிக்க வெள்ளாற்றுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தொழுதூர் அணைக்கட்டில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் அகரம்சிகூர் வெள்ளாற்றின் இரு கரையிலும் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அழகம்மாள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்.

    இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன் ஆகியோர் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் வசந்தராஜன், சிறப்பு நிலை அலுவலர் நடராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், கலைஅமுது, பாட்ஷா ஜான் ஆகியோர் ஆற்றில் இறங்கி, ரப்பர் டியூப் போன்றவற்றை பயன்படுத்தி நடு ஆற்றில் தவித்த அழகம்மாளை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் அழகம்மாள் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    விக்கிரமங்கலம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சந்திர பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ்(வயது 35). கூலித் தொழிலாளி. பூர்வீக சொத்தில் இவருக்கு சேரவேண்டிய சொத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதைக் கண்ட உறவினர்கள் பாக்யராஜை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் பாக்யராஜின் மனைவி பார்வதி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கொரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல் தெரு வாரியாகவும், வார்டு வாரியாகவும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாரியாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பெறத் தகுதியான நபர்களில் 73 சதவிகித  மக்களுக்கு முதல் தவணை  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவிகிதம் தகுதி வாய்ந்த நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி மருந்தே,  கொரோனா பெரும் தொற்றிற்கு எதிரான முதன்மைக்  கேடயம் என்பதை கருத்திற்கொண்டு தகுதி வாய்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி அவரவர்தம் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் வாரம்தோறும் ஒரு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது.  மேலும், இதர நாட்களிலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ நிலையங்களிலும்  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

    தகுதி வாய்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் கிடைத்திடும் வகையில் வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பதிலாக, வாரம்தோறும் இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது.

    தகுதி வாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை விரைவில் வழங்கிடும் நோக்கில் இதுவரை கொரோனா  தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல் தெரு வாரியாகவும், வார்டு வாரியாகவும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாரியாகவும்  தயாரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், சிறப்பு தடுப்பூசி  தற்காலிக முகாம்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு,  பொது இடங்களிலும், அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும்  வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும்  சிறப்பு முகாம்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரையும்,  அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்படும். திங்கட்கிழமை தவிர இதர நாட்களில் அரசு மருத்துவ நிலையங்களில் தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும்.

    இந்த சிறப்பு முகாம்கள் குறித்து  ஊடகங்கள் வாயிலாகவும், தானிகள் (ஆட்டோ) மூலமாகவும் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    தடுப்பூசி செலுத்த வரிசையில் நிற்கும் மக்கள்

    இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கிட  தலைமைச் செயலாளர் அவர்களால் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நாளை (17.11.2021) காணொலி வாயிலாக  கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே அரசுதுறைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன்  ஒருங்கிணைந்து செயல்படவும்,  கொரோனா தடுப்பூசி தகுதியான அனைத்து மக்களுக்கும் கிடைத்திடும் வகையில்,  பொதுமக்கள்  முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மீன்சுருட்டி அருகே தங்கம் என நினைத்து அடகு கடையில் இருந்த நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள், அவை கவரிங் என்று தெரிந்ததால் முந்திரி காட்டில் வீசிச்சென்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(வயது 49). இவர் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வீட்ைடயொட்டி மளிகைக்கடை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் அடகு கடையில் கவரிங் நகைகளை வைத்தும் அவர் விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் வெங்கடேசன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டில் தூங்க சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவசர, அவசரமாக அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மேலும் அங்கிருந்த கவரிங் நகைகள் அனைத்தையும் தங்க நகைகள் என நினைத்த அவர்கள், தங்களுக்கு சரியான வேட்டை என்ற மகிழ்ச்சியில் அவற்றை திருடியுள்ளனர். பின்னர் நகைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு, அவற்றுடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    அப்போது சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேசன், வெளியே வந்து பார்த்தபோது அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கவரிங் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் கடை மற்றும் வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடி மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களுக்கு, அவை தங்கமில்லை கவரிங் என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த அவர்கள் ஆத்திரத்தில் அங்குள்ள முந்திரி காட்டுப்பகுதியில் கவரிங் நகைகளை வீசிச்சென்றது, போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தூக்கி வீசப்பட்ட கவரிங் நகைகளை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனினை (6ஜிபி+128ஜிபி) இந்தியாவில் ரூ. 21,999 துவக்க விலையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி+128ஜிபி மாடல் வெளியாகி இருக்கிறது. புதிய வேரியண்ட் விலை ரூ. 23,499 ஆகும். 

    இந்த வேரியண்ட் ஆசம் பிளாக், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ32

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ32 மாடலில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3, புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
    ×