search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தில் சிக்கிய அழகம்மாளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வந்தபோது எடுத்த படம்
    X
    வெள்ளத்தில் சிக்கிய அழகம்மாளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வந்தபோது எடுத்த படம்

    மங்களமேடு அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்பு

    மங்களமேடு அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள வசிஷ்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அழகம்மாள் (வயது 75). தற்போது இவர்கள் வசிஷ்டபுரம் ஊராட்சியை சேர்ந்த ரெட்டிகுடிக்காடு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை அழகம்மாள், விறகுகள் சேகரிக்க வெள்ளாற்றுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தொழுதூர் அணைக்கட்டில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் அகரம்சிகூர் வெள்ளாற்றின் இரு கரையிலும் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அழகம்மாள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்.

    இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன் ஆகியோர் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் வசந்தராஜன், சிறப்பு நிலை அலுவலர் நடராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், கலைஅமுது, பாட்ஷா ஜான் ஆகியோர் ஆற்றில் இறங்கி, ரப்பர் டியூப் போன்றவற்றை பயன்படுத்தி நடு ஆற்றில் தவித்த அழகம்மாளை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் அழகம்மாள் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×