என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எதிர்காலத் தலைமுறையினரை அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான்.
    • தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பத்தாண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவற்றில் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத தமிழக அரசு, கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் நாள் 243 என்ற எண் கொண்ட அரசாணையை பிறப்பித்து, அவர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பறித்திருக்கிறது.

    ஆனால், சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தின. அதைத் தொடந்து அக்கோரிக்கையை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. அக்குழுவினர் ஆசிரியர் அமைப்புகளுடன் மூன்று கட்ட பேச்சு நடத்தினர்.

    அதில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக எந்த பேச்சும் நடத்தப்படவில்லை. மூவர் குழுவில் இடம் பெற்றிருந்த மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இப்போது அக்கோரிக்கை குறித்து மீண்டும் கருத்துக் கேட்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 20 மாதங்களாக எந்தத் தீர்வும் காணாமல், இனி கருத்துக் கேட்டு சிக்கலைத் தீர்க்கப் போவதாக அரசு கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.

    எளிதில் நிறைவேற்றக்கூடிய பல கோரிக்கைகளையும் நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி நிறைவேற்ற மறுக்கிறது தமிழக அரசு. தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் அந்த வழக்குகளை உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். ஆனால், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு தமிழக அரசுக்கு மனமில்லாதது தான் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.

    எதிர்காலத் தலைமுறையினரை அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான். அதிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இதில் சிறப்புப் பங்கு உண்டு. இத்தகைய பெருமை கொண்ட ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும்.

    எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் அவர்களின் அடுத்தக்கட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர்.
    • நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில்,

    நாளை செப்டம்பர் 11...

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாள்!

    அதை நினைக்கும்போது எனது மனதில் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன.

    தியாகி இமானுவேல் சேகரனார் போற்றுதலுக்கு உரியவர்.

    ஆங்கிலம், இந்தி, ரஷிய மொழி உள்ளிட்ட 7 மொழிகளை கற்றறிந்தவர்.

    தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர். இவ்வளவு சிறப்பு மிக்க இவரது நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

    அந்த நிலையை மாற்றி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த இராமதாசு தான். அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய சில மாதங்களில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக மதுரை அனுப்பானடியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற என்னிடம் சிலர் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வரலாம் என்று கூறினார்கள். ஆனால், அங்கு செல்வது சரியானதல்ல என்று வேறு சிலர் கூறினார்கள். ஆனால், இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வருவது என்று தீர்மானித்து விட்டேன். கூட்டம் முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுடன் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு பயணித்தேன்.

    நானும், பா.ம.க. நிர்வாகிகளும் பரமக்குடி சென்றடைவதற்கு முன்பாகவே அங்குள்ள 5 முனை சாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு இது குறித்து தகவல் தெரியும் என்பதால் அவர்கள் தங்களின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து ஆட்களைக் கூட்டி விட்டனர். பரமக்குடியில் கூடி நின்றவர்களில் ஒரு பிரிவினர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அங்கிருந்தவர்களில் பலர் என் மகிழுந்தின் கார் மீது ஏறிக் கொண்டனர். எங்கள் மகிழுந்துகளைத் தொடர்ந்து ஏராளமான தானிகளிலும் பலர் அணிவகுத்து வந்தனர். அதனால் எங்களின் பயணம் அறிவிக்கப்படாத ஊர்வலமாகவே மாறி விட்டது.

    நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி. ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த மாவீரனின் நினைவிடம் பராமரிப்பின்றி கிடந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாதவாறு ஒரே துர்நாற்றம் வீசியது. கழிவு நீர் தேங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் பன்றிகளின் கழிவுகள் தான் நிரம்பிக் கிடந்தன. இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த எனது கண்களில் நினைவிடத்தின் அவலநிலையைக் கண்டு கண்ணீர் கசிந்தது.

    அந்த இடத்திலேயே இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக எனது சொந்தப் பணம் ரூ. 15 லட்சத்தை மதுரையைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி ஒருவரிடம் கொடுத்து நினைவிடத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அந்த நிர்வாகியை பின்னாளில் வட தமிழகத்தில் உள்ள வந்தவாசி சட்டப்பேரவைத் தேர்தலில் நிறுத்தி, தேர்தலுக்கான செலவை முழுவதும் கட்சி சார்பில் செய்து அவரை சட்டப்பேரவை உறுப்பினராக்கி அழகு பார்த்தேன்.

    எனது சொந்தப் பணத்தில் இமானுவேல் சேகரனாரின் நினைவிடம் தூய்மைப்படுத்தப்பட்டு, கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டு அழகூட்டப்பட்டது. அதன்பின்னர் அடுத்து வந்த அவரது நினைவிடத்திற்கு சென்று நான் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்தினேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று ஆணையிட்டேன். அதன்பிறகு தான் அவரது நினைவிடத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள். இமானுவேல் சேகரனார் 1957-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அதன்பின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் அஞ்சலி செலுத்தியதில்லை. அவரது நினைவிடத்தை நான் சீரமைத்து, மரியாதை செலுத்திய பிறகு தான் அங்கு மற்ற தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள்.

    இதற்கெல்லாம் முன்பாகவே 29.02.1988-ஆம் நாள் புதுச்சேரியில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி 17&ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் வன்னியர் சங்கம் சார்பிலும், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் நடத்தப்பட்ட அனைத்துக் கடிதத் தொடர்புகளிலும் இராமநாதபுரம் மாவட்டம் இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் மாவட்டம் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது நினைவுகூரத் தக்கதாகும்.

    இந்த நினைவுகளுடன் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாளில் அவருக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் கண்ட கனவுப்படியே தேவேந்திரகுல வேளாளர்களின் முழுமையான விடுதலைக்காக போராட அனைவரும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • குற்றாலத்தை அடுத்த ஐந்தருவி பகுதியில் தண்ணீர் மெல்ல மெல்ல அதிகரித்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குண்டாறு மற்றும் அடவிநயினார் அணை பகுதிகளில் கனமழை பெய்தது.

    தென்காசி:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைப்பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. சேர்வலாறு அணை பகுதியில் 1 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நகர் பகுதிகளை பொறுத்தவரை செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சில இடங்களில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ந்த காற்று வீசியது. ஒரு சில இடங்களில் இரவில் லேசான சாரல் அடித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் சீசன் முடிவுற்ற நிலையிலும் அவ்வப்போது பெய்யும் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. சில நாட்களாக மழை இல்லாததால் நீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் நேற்று இரவில் திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக குற்றாலத்தை அடுத்த ஐந்தருவி பகுதியில் தண்ணீர் மெல்ல மெல்ல அதிகரித்தது. திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டு, மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டதால் இரவு முழுவதும் மட்டுமின்றி இன்று காலை வரை தடை நீட்டிக்கப்பட்டது.

    அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையிலும் குற்றாலம் பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மற்ற அருவிகளில் குளிப்பதற்கு எவ்வித தடையும் இல்லாததால் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சீராகும் பட்சத்தில் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குண்டாறு மற்றும் அடவிநயினார் அணை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. குண்டாறில் 6.2 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கரஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    • அணையில் தற்போது 85.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 11 ஆயிரத்து 736 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 10 ஆயிரத்து 706 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    அணையில் தற்போது 85.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • போலீசார் ஆத்துக்குறிச்சி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள ஒவ்வொரு வீடாக சல்லடைப்போட்டு தேடினார்கள்.
    • சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 36). இவருடைய மனைவி ரம்யா. இவர்களது 3 வயது ஆண் குழந்தை சஞ்சய். அங்குள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்தான்.

    இவர்களின் எதிர்வீட்டில் வசிப்பவர் தங்கம்மாள்(49). இந்த 2 குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்டவை தொடர்பாக சிறிய, சிறிய தகராறுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று காலையில் சஞ்சய் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தான். பின்னர் பெற்றோர் தங்களது குழந்தையை அங்கன்வாடிக்கு அழைத்து செல்வதற்காக தேடினார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து விக்னேஷ் ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில், போலீசார் ஆத்துக்குறிச்சி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள ஒவ்வொரு வீடாக சல்லடைப்போட்டு தேடினார்கள்.

    அப்போது, தங்கம்மாள் வீட்டிற்குள் போலீசார் நுழைந்தனர். அதை அறிந்த அவர் தனது வீட்டின் பின்பக்கமாக தப்பி ஓடினார். உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை பிடித்தனர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வாஷிங் மெஷினை திறந்து பார்த்தனர்.

    அதில் சாக்கு மூட்டையில் கட்டி இருந்த சஞ்சயை பிணமாக மீட்டனர். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி துடித்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தங்கம்மாளின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் இறந்துவிட்டார். இதனால் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. தங்கம்மாள் மகனின் துக்க நிகழ்ச்சிக்கு விக்னேஷ் குடும்பத்தினர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் தனது மகன் இறந்ததற்கு விக்னேஷ் குடும்பத்தினர் செய்வினை வைத்ததே காரணம் என்றும், இதனால் அவரது குடும்பத்தினரை பழிவாங்க தங்கம்மாள் காத்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    நேற்று காலையில் தங்கம்மாள் வீட்டின் முன் சஞ்சய் விளையாடிக் கொண்டு இருந்தான். அவனை வீட்டிற்கு அழைத்து சென்ற தங்கம்மாள் ஒரு சாக்கு மூட்டையில் போட்டு கட்டினார். பின்னர் வாஷிங் மெஷினில் போட்டு மூடியைக்கொண்டு மூடினார். இதில் மூச்சுத்திணறிய குழந்தை பரிதாபமாக இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தங்கம்மாளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ராதாபுரம் அருகே சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் போட்டு மூடி 3 வயது குழந்தை படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தனர்.
    • சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதூர்த்தியை யொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் விநாயகர் கையில் லட்டு வைத்து பூஜைகள் நடந்தன. நேற்று இந்த சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தனர்.

    முன்னதாக சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அதே ஊரை சேர்ந்த மூக்கன் (வயது 45) என்பவர், ஒரு லட்டை ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

    இதனால் ஆச்சரியம் அடைந்த கிராம மக்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் எனவும், இந்த ஆண்டு ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

    லட்டை ஏலம் எடுத்த மூக்கன் வெளியூரில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறாராம்.

    • 2 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் இந்த தொழிற்சாலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
    • ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்.பி. நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனம் ஜேபிஎல்.

    தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிராஸ்சிஸ்கோவில் 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதன்பின் சிகாகோ சென்றார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்.பி. நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜே.பி.எல். (JABIL) நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமையும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் இந்த தொழிற்சாலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    முன்னதாக,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலகளாவிய உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பார்ச்சூன் 1000 நிறுவனங்களில் ஒன்றாகும்.

    இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் யூக்லிட்டில் அமைந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    விஷய் பிரிஷிஷன் நிறுவனமானது செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் இஸ்ரேல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டு உள்ளது, அங்கு ரெக்டி பையர்கள், டையோட்கள், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மின்தடையங்கள், மின் தேக்கிகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்க நாட்டின், பென்சில்வேனியாவின் மால்வெர்னில் அமைந்து உள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டி யூசர்ஸ்உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இச்சந்திப்பின்போது, விஷய் பிரிஷிணன் நிறுவனத்தின் ஷிர்வர் ஸ்டீபன், சென்னையில் அமைந்துள்ள தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதன்மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், தங்கள் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

    விஸ்டியன் நிறுவனமானது போர்டு மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அமெரிக்க நாட்டின் மிச்சிகனில் உள்ள வான் ப்யூரன் டவுன் ஷிப்பைத் தலைமையிடமாகக் கொண்டு, 17 நாடுகளில் இயங்கி வருகிறது.

    இது வாகனங்களின் காக்பிட் அனுபவத்தை மேம்படுத்தும் மின்னணு தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

    இந்நிறுவனம் மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுகல், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்லோ வாக்கியா, ருமேனியா, பல்கேரியா, ஹங்கேரி, துனிசியா, இந்தியா, சீனா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உற்பத்தி மற்றும் பொறியியல் மையங்களை கொண்டுள்ளது. போர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ், பி.எம்.டபிள்யூ. போன்ற உலகின் பெரும் வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகன மின்னனுவியல் பாகங்களை தயாரித்து அளித்து வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், விஸ்டியன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    • சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளார்.

    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தி திணிப்பு தொடர்பாக நடைமுறையில் இல்லாத விஷயங்களை கூறுகிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவாக்கிய முதல் தேசிய கல்விக் கொள்கையில், அனைத்து இந்தியர்களுக்கும் இந்தி கட்டாயம் என கூறப்பட்டது. 2-வதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உருவாக்கி தேசியக் கல்விக் கொள்கையில் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாக இந்தியை உருவாக்கும் வகையில், அதை கற்கவும், பயன்படுத்தவும் ஊக்க அளிக்கப்பட்டது.

    ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ல், தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மக்கள் மீதும் இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா அல்லது காங்கிரஸ் கட்சியா?.

    பிரதமர் மோடி தாய் மொழிக்கு என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பலாம். என்னுடைய தாய் மொழி தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி பல்வேறு பெருமைகளை சேர்த்துள்ளார். ஐ.நா. சபையில் முதல் முறையாக தமிழ் மொழியில் பேசிய பிரதமர் என்ற பெயரை பெற்றவர் மோடி. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என ஐ.நா சபையில் உரையாற்றினார். மேலும், பாரதியாரின் நினைவாக அவரது பிறந்த நாள், டிசம்பர் 11-ந்தேதியை தேசிய மொழிகள் தினமாக அறிவித்தார்.

    காசி தமிழ் சங்கம் மற்றும் சவுராஷ்டிர தமிழ் சங்கம் ஆகிய இரண்டு கலாச்சாரங்களின் சங்கமத்தை உருவாக்கினார். திருக்குறளை குறைந்தது 100 மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற லட்சியத்தின் ஒரு பகுதியாக 13 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார். செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவினார். முன்பு எப்போதும் இல்லாத வகையில், தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளார்.

    தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்தை மேம்படுத்துவதற்காக, ரூ.24 கோடி செலவில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் (CICT) புதிய வளாகத்தை நமது பிரதமர் திறந்து வைத்தார். வட இலங்கையில் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாக்க, நமது பிரதமர் அவர்கள் ரூ.120 கோடியில் யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தை நிர்மாணிக்க அனுமதித்தார்.

    நமது பிரதமர் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தனது சுற்றுப்பயணத்தின்போது பிரான்சின் செர்ஜி நகரில் புனித திருவள்ளுவருக்கு ஒரு சிலையை அறிவித்தார், அது டிசம்பர் 2023 இல் நிறுவப்பட்டது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி பிராந்திய மொழிகளை வளர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகளில் 10 சதவீதம் கூட காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது.
    • கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது என தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சென்னையில் வீடுகளின் முன் அனுமதியின்றி 'நோ பார்க்கிங் ' போர்டுகள், தடுப்புகளை வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னையில் பல வீடுகளின் முன் அனுமதியின்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளையும் அகற்ற கோரி நந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
    • அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    • பெண்ணுக்கு தான் தாய், தந்தை எங்கு இருந்தாலும், எங்கு போனாலும் பாசம்.
    • நாமும் பாசமாக இருந்தால் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி முப்பெரும் விழா நடந்தது.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்திருந்தால் மகன்களாகவே பிறப்பார்கள், யாராவது புண்ணியம் செய்து இருந்தால் பெண் குழந்தைகள் பிறக்கும்.

    பெண்ணுக்கு தான் தாய், தந்தை எங்கு இருந்தாலும், எங்கு போனாலும் பாசம்.

    இதை பொதுவாக கூறுகிறேன், தப்பாக கூறவில்லை, இது இயல்பு.

    இதை நாம், நானும் மாற்றிக்கொள்ள வேண்டும் . நாமும் பாசமாக இருந்தால் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

    அரசு பள்ளியில் கடந்த கால ஜென்மம் குறித்து பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்காந்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற விழாவில் பேசிய பேச்சு மீண்டும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×