என் மலர்
மகாராஷ்டிரா
- ரியா மிஸ்திரியின் கை, அனம்தா அகமதுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
- ரியாவின் அண்ணன் ஷிவம் மிஸ்திரிக்கு ராக்கி கட்டி, அவரை சகோதரராக ஏற்றுக்கொண்டார்.
ரக்ஷா பந்தன் தினமான இன்று உருக்கமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசிக்கும் 16 வயது அனம்தா அகமது, தனது கை மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு தானம் செய்த ரியா மிஸ்திரி என்பவரின் அண்ணன் ஷிவம் மிஸ்திரிக்கு தனது கைகளால் ராக்கி கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு, 9 வயது சிறுமி ரியா மிஸ்திரி மூளைச்சாவு அடைந்தபோது, அவரது பெற்றோர் உறுப்பு தானம் செய்தனர். அதன்படி, ரியாவின் கை அனம்தா அகமதுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
அனம்தாவின் வலது கை, 2022-ல் மின்சாரம் தாக்கியதால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, அனம்தா தனது குடும்பத்துடன் ரியா குடும்பத்தினர் வசிக்கும் வல்சாத் நகருக்குச் சென்றார்.
அங்கு, ரியா குடும்பத்தினரைச் சந்தித்த அனம்தா, ரியாவின் அண்ணன் ஷிவம் மிஸ்திரிக்கு ராக்கி கட்டி, அவரை சகோதரராக ஏற்றுக்கொண்டார். தனது சகோதரி ரியாவின் கையை கொண்ட அனம்தா தனக்கு ராக்கி கட்டி விட்டபோது 14 வயது சிறுவன் ஷிவம் ஆனந்த கண்ணீர் விட்டான்.
மதங்களை கடந்து ஏற்பட்ட இந்த பிணைப்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரியாவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கார்னியா மற்றும் இடது கை ஆகியவையும் தானமாக வழங்கப்பட்டு, எட்டு பேர் உயிர்கள் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
- இது வெட்கமற்ற செயல் என்றும், ஜனநாயகத்தை கேலி செய்வது என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ள
மகாராஷ்டிர பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், கட்சியின் மும்பை ஐடி பிரிவின் முன்னாள் தலைவருமான ஆர்த்தி சாத்தேவை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்நிலையில் அவர் தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகி நியமிக்கப்பட்டார்.
ஆர்த்தி சாத்தே பிப்ரவரி 2023 முதல் ஜனவரி 2024 வரை கட்சிப் பதவிகளை வகித்தார். பின்னர் அவர் ராஜினாமா செய்தார்.
இது வெட்கமற்ற செயல் என்றும், ஜனநாயகத்தை கேலி செய்வது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, மக்களவை சபாநாயகரிடம் அவசர தீர்மானம் ஒன்றை காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் அளித்தார்.
இருப்பினும், ஆர்த்தி தனது கட்சி உறுப்பினர் பதவியை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராஜினாமா செய்ததாகவும், இப்போது அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாஜக கூறுகிறது.
- தொழில்துறை துறையின் வளர்ச்சி மந்தமாகவும் சீரற்றதாகவும் இருந்தது.
- பணவீக்கம், 2026 நிதியாண்டில் 3.1 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே நீடிக்கும் என ஆர்.பி.ஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* நாணய கொள்கைக் குழு (MPC) நடுநிலை நிலைப்பாட்டைத் தொடர முடிவு செய்தது.
* வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே நீடிக்கும்.
* பருவமழை நன்றாக முன்னேறி வருகிறது. இது பொருளாதாரத்தில் மகிழ்ச்சிக்குரிய தன்மையை கொண்டு வருகிறது.
* தொழில்துறை துறையின் வளர்ச்சி மந்தமாகவும் சீரற்றதாகவும் இருந்தது.
* எதிர்பார்த்தபடி, மையப் (core) பணவீக்கம் 4 சதவீதமாக நிலையாக உள்ளது.
* நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி 6.5 சதவீதமாக தக்க வைத்துக் கொண்டுள்ளது
* வழக்கமான பருவமழையை விட அதிகம், குறைந்த பணவீக்கம் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆதரிக்கிறது.
* நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நிலையான அளவில் தொடர வாய்ப்புள்ளது.
* ஜூன் மாத மதிப்பீட்டில் 3.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், 2026 நிதியாண்டில் 3.1 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
- பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை பற்றி கவலை எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் பகிரப்படுகிறது. அந்த வீடியோக்களில் சில நகைச்சுவையாகவும், சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமையும். அந்த வகையில் தான் Reddit-இல் பகிரப்பட்ட வீடியோ நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதா... இல்லையா.... என்பதை இங்கே பார்ப்போம்....
@Parking-Version9167 என்ற பயனரால் Reddit இல் பகிரப்பட்ட வீடியோ நவி மும்பையில் உள்ள சீவூட்ஸ் நெக்சஸ் மாலில் அமைந்துள்ள 7-Eleven என்ற கடையின் சமையலறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சமையலறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு எலி காபி தயாரிக்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் இருந்தும், மற்றொரு எலி ஐஸ்கிரீம் கூம்பை மெல்லுவதையும் காட்டுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், "ஐயோ! இதைப் பகிர்ந்ததற்கு நன்றி. நான் மீண்டும் அந்த விற்பனை நிலையத்திற்கு வரமாட்டேன். நீங்கள் அந்த வீடியோவை கூகுள் மேப்பிலும் பதிவேற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அக்கடையின் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை பற்றி கவலை எழுப்பி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 7-Eleven நிறுவனம் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை.
- பிடே மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- சாம்பியன் பட்டம் வென்று நாக்பூர் விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மும்பை:
பிடே மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் (19), சாம்பியன் பட்டம் வென்று கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்றார்
சாம்பியன் பட்டம் வென்ற தேஷ்முக் இந்தியா திரும்பினார். நாக்பூர் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, மகாராஷ்டிர அரசு சார்பில் திவ்யா தேஷ்முக்குக்கு பாராட்டு விழா நாக்பூரில் நடந்தது. இதில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு திவ்யாவை பாராட்டியதுடன் ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கை ராஜ்பவனுக்கு வரவழைத்த மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
- 24 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறினார்.
- காவியின் வெற்றி, மதத்தின் வெற்றி, சனாதன தர்மத்தின் வெற்றி, இந்துத்துவாவின் வெற்றி.
2008, செப்டம்பர் 29 அன்று, மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் ஒரு மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
காவலில் சித்திரவதை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், நரேந்திர மோடி உட்பட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களின் பெயர்களை வெளியிடுமாறு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மும்பையில் முதல் முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், அப்போதைய விசாரணை அதிகாரிகளின் நடத்தையை கடுமையாக விமர்சித்தார்.
"உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர்கள் ராம் மாதவ் மற்றும் இந்திரேஷ் குமார் போன்றவர்களின் பெயர்களை வெளியிட அவர்கள் என்னை கட்டாயப்படுத்தினர்.
நான் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்தினால், சித்திரவதை நின்றுவிடும் என்று அவர்கள் கூறினர். ஆனால் நான் பொய் சொல்ல மறுத்துவிட்டேன்" என்று பிரக்யா தாக்கூர் தெரிவித்தார்.
இந்த வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்டதாகவும், ஆதாரமற்றது என்றும், 24 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், இந்த அட்டூழியங்களுக்கு முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம்வீர் சிங் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "காவல்துறையினர் செலுத்திய சித்திரவதையால் என் நுரையீரல் கிழிந்துவிட்டது. அவர்கள் செய்த அட்டூழியங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று அவர் கூறினார்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதில் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
வழக்கில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதை 'காவியின் வெற்றி, மதத்தின் வெற்றி, சனாதன தர்மத்தின் வெற்றி, இந்துத்துவாவின் வெற்றி' என்று பிரக்யா தாக்கூர் விவரித்தது குறிப்பிடத்தக்கது.
- அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
- ஐஐடி கரக்பூரில் நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார்.
மகாராஷ்டிராவின் IIT பாம்பேவில் 26 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ரோஹித் சின்ஹா என்ற அந்த மாணவர், ஐஐடி-பம்பாயில் அறிவியல் பிரிவில் படித்து வந்தார்.
இந்தச் சம்பவம் அதிகாலை 2:30 மணியளவில் நடந்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி, சம்பவத்தின் போது விடுதி மொட்டை மாடியில் இருந்த மற்றொரு மாணவர் இதைக் கண்டதாக கூறப்படுகிறது.
அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முன்னணி கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ஐஐடி கரக்பூரில் நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார்.
இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உச்ச நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க 15 வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- நான் அந்த உத்தரவுகளைப் பின்பற்றாததால் என் மீது போலி வழக்கு பதியப்பட்டது/
- அது எனது 40 ஆண்டுகால வாழ்க்கையை அழித்துவிட்டது.
2008, செப்டம்பர் 29 அன்று, மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் ஒரு மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஆரம்பத்தில் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) இந்த வழக்கை விசாரித்தது, பின்னர் 2011-ல் NIA -க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 குற்றவாளிகள் நேற்று NIA சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த தீர்ப்பை அடுத்து காவி பயங்கரவாதம் என்று ஒன்று கிடையாது என்றும் அதை உருவாக்கியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை கைது செய்ய தனக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையின் (ATS) முன்னாள் அதிகாரி மெஹிபூப் முஜாவர் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பை வரவேற்று அவர் கூறியதாவது, "நான் அப்போது ATS என்ன விசாரணை செய்தது, ஏன் செய்தது என்று சொல்ல முடியாது. ஆனால், ராம் கல்சங்ரா, சந்தீப் தாங்கே, திலீப் பட்டிதார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் போன்ற ஆளுமைகள் குறித்து எனக்கு சில ரகசிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
மோகன் பகவத் போன்ற ஒரு உயர்ந்த ஆளுமையை கைது செய்வது என் சக்திக்கு அப்பாற்பட்டது. நான் அந்த உத்தரவுகளைப் பின்பற்றாததால், என் மீது ஒரு தவறான வழக்கு பதிவு செய்யப்பட்டது, அது எனது 40 ஆண்டுகால வாழ்க்கையை அழித்துவிட்டது " என்று தெரிவித்தார்.
"காவி பயங்கரவாதம் என்று எதுவும் இல்லை. அனைத்தும் போலியானது" என்றும் குறிப்பிட்ட அவர் தனது கூற்றுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் முஜாவர் தெரிவித்தார்.
- எந்த சமையல்காரரும் இவ்வளவு சம்பளம் கேட்பதில்லை.
- மும்பை சமையல்காரர் குறித்த தகவல் அறிந்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த சமையல்காரர் ஒருவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் சமையல் செய்து வருகிறார்.
ஒவ்வொரு வீட்டிலும் தினந்தோறும் சுமார் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார். அதற்குள் குடும்பத்தினர்கள் கேட்கும் அனைத்து உணவுகளையும் ருசியாக செய்து அசத்தி விடுகிறார். இதன் மூலம் மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.
இது குறித்து மும்பையை சேர்ந்த ஆருஷி தோஷி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் சமையல்காரர் பற்றி பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய சமையல்காரரை மும்பை மகராஜ் என்று தான் அழைப்பேன். அவர் எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு நன்கு தெரிந்தவர். அவர் தினமும் 12 வீடுகளில் வேலை செய்து வருகிறார். ஒரு வீட்டுக்கு மாதந்தோறும் ரூ.18000 சம்பளம் வாங்குகிறார்.
எந்த சமையல்காரரும் இவ்வளவு சம்பளம் கேட்பதில்லை. இது நம்ப முடியாததாக இருந்தாலும் அந்த அளவுக்கு கேட்பதற்கு தகுதியும் உடையவர். அந்த அளவிற்கு அவருடைய சமையல் ருசியானது. மேலும் கேட்பதை உடனே செய்து கொடுத்து அசத்தி விடுவார்.
இதனால் இவருக்கு தற்போது அதிக வீடுகளில் வேலைவாய்ப்பு வருகிறது. தற்போது உள்ள நிலையில் நன்கு படித்தவர்கள் கூட இவ்வளவு சம்பளம் பெற முடியாது.
திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கு என்னுடைய சமையல்காரர் மகராஜ் ஒரு உதாரணம் என தெரிவித்துள்ளார்.
மும்பை சமையல்காரர் குறித்த தகவல் அறிந்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இவர் சமையல்காரரா? அல்லது ஏஐ தொழில்நுட்ப எந்திரமா என விமர்சித்துள்ளனர். சமையல்காரர் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாணிக்ராவ் கோகட்டேவின் ராஜினாமா குறித்து பேச்சு எழுந்தது.
- விவசாயிகள் தங்கள் மானியங்களை தவறாகப் பயன்படுத்டுகிறார்கள் என்று பேசியிருந்தார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற கூட்டத்தின்போது தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)-ஐ சேர்ந்த வேளாண் அமைச்சர் மாணிக்ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ சர்ச்சயை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு தண்டனையாக அவரிடம் இருந்து வேளாண் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சகத்தை இப்போது தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சியின் தத்தா பர்னே கையாள்வார். முன்னதாக, அவர் விளையாட்டு அமைச்சகத்தை கையாண்டு வந்தார்.
மாணிக்ராவ் கோகட்டேவின் ராஜினாமா குறித்து பேச்சு எழுந்தது. இருப்பினும் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு, கோகட்டேவின் துறையை மாற்ற முடிவு செய்யப்பட்டது.
வேளாண் அமைச்சராக இருந்த காலத்தில், விவசாயிகள் தங்கள் மானியங்களை தவறாகப் பயன்படுத்டுகிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பல கருத்துக்களை மாணிக்ராவ் கோகட்டே பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.
- மோடி அரசாங்கம் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது உலகம் நினைவில் வைத்திருக்கும்.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்த தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர். அவர்கள் தங்கள் மதத்திற்காக குறிவைக்கப்பட்டனர். வேண்டுமென்றே மோசமான வழக்கு விசாரணையே விடுதலைக்குக் காரணம்.
குண்டுவெடிப்பு நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களையும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்துள்ளது. மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் விடுதலையை நிறுத்தி வைக்குமாறு மோடி மற்றும் பட்னாவிஸ் அரசாங்கங்கள் விரைவாகக் கோரியதைப் போல இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யுமா?
மகாராஷ்டிராவின் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இதை வலியறுத்துமா? 6 பேரைக் கொன்றது யார்?
2016 ஆம் ஆண்டில், வழக்கில் அப்போதைய வழக்கறிஞர் ரோகிணி சாலியன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மென்மையாக நடந்து கொள்ளுமாறு NIA தன்னிடம் கேட்டதாகக் கூறியதை நினைவில் கொள்க.
2017 ஆம் ஆண்டில், NIA, பிரக்யாவை விடுதலை செய்ய முயற்சித்தது என்பதை நினைவில் கொள்க. அதே பிரக்யா 2019 ஆம் ஆண்டு பாஜக எம்.பி.யாக மாறினார்.
மாலேகானில் நடந்த சதித்திட்டத்தை கர்கரே கண்டுபிடித்தார். துரதிர்ஷ்டவசமாக 26/11 தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அவரை சபித்ததாகவும், அவரது மரணம் அவரது சாபத்தின் விளைவாகும் என்றும் பாஜக எம்.பி. கூறினார்.
தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகள் தங்கள் தவறான விசாரணைக்கு பொறுப்பேற்பார்களா? பதில் நமக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
மோடி அரசாங்கம் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது உலகம் நினைவில் வைத்திருக்கும்" என்று தெரிவித்தார்.
- பிரக்யா, துறவறம் ஏற்று உலக உடைமைகளை துறந்ததால் அவரிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
- இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.
மகாராஷ்டிராவில் 2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், சிறப்பு புலனாய்வு நீதிமன்றம் (NIA ) இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டனர்.
குண்டுவெடிப்பு ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் உடையது என நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்றும் குண்டுவெடிப்புக்கு 2 வருடங்கள் முன் பிரக்யா துறவறம் ஏற்று உலக உடைமைகளை துறந்ததால் அவரிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என NIA நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.
குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் வழக்கிலிருந்து விடுதலையான பிரக்யா சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதில் இருந்து என் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டேன்.
17 ஆண்டுகள் துறவற வாழ்க்கை நடத்திய பிறகு மக்கள் என்னை பயங்கரவாதியாகக் கருதினர். நான் துறவியாக இருந்ததால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.
குறைந்த பட்சம் இந்த நீதிமன்றமாவது என் வாதத்தைக் கேட்டது. காவியை பயங்கரவாதி என்று அழைத்தவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். இந்த வழக்கில் வெற்றி பெற்றது நான் அல்ல, காவி தான். இது இந்துத்துவாவின் வெற்றி" என்று பிரக்யா கூறினார்.






