என் மலர்tooltip icon

    கேரளா

    • பங்குனி உத்திரம் ஆராட்டு 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    2-ந் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இந்த திருவிழா 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 11-ந் தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.

    சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.

    சபரிமலையில் கடந்த மாத பூஜையின் போது பக்தர்கள் 18-ம் படி ஏறி வந்தவுடன் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இனி வரும் பூஜை நாட்களிலும் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.

    • ரெயில் தண்டவாளத்தில் 24 வயது உளவுத்துறை (ஐபி) அதிகாரி மேகா இறந்து கிடந்தார்.
    • இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கேரளாவில் மத்திய உளவுத்துறை துறை (IB) இளம் பெண் அதிகாரி ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று (திங்கள்கிழமை) காலை, திருவனந்தபுரத்தில் உள்ள பெட்டா ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் 24 வயது உளவுத்துறை (ஐபி) அதிகாரி மேகா இறந்து கிடந்தார்.

    பெட்டா காவல்துறையினரின் கூற்றுப்படி, மேகா, பத்தனம்திட்டாவில் உள்ள கூடல் பகுதியை சேர்ந்தவர். பெட்டா அருகே பேயிங் கெஸ்ட்டாக வசித்து வந்தார். அவரது மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

    ஒரு பெண் ரெயில் தண்டவாளத்தில் குதிப்பதைக் கண்டதாக ரெயில் லோகோ பைலட் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேகாவின் பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரோன்கள், காமிராக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று படப்பிடிப்பு.
    • அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்திற்குள் துப்பாக்கிகள், டிரோன்கள், காமிராக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று படப்பிடிப்பு நடத்திய ஆவண படக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வரு மாறு:-

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அரணாமலை அருகே உள்ள மாப்பிளா தாளமுடி வன மண்ட லத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் உரிய அனுமதி பெறாமல் அத்துமீறி சென்று படப்பிடிப்பு நடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில் அதிகாரிகள் வினோத், ரிஜேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அப்போது தடை செய்யப பட்ட வனப்பகுதிக்குள் ஆவணப்பட குழுவினர் போலி துப்பாக்கிகள், புகை துப்பாக்கிகள், டிரோன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தினர். இதையடுத்து படப்படிடிப்பு நடத்தியவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.

    அவர்களிடமிருந்து படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காமிராக்கள், டிரோன்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், ஆவணப் படங்கள் எடுக்கும் குழுவினர் என்றும், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    ஆவணப்படம் எடுப்பதற்காக கேரளா வந்த அவர்கள், இங்குள்ளவர்கள் சிலரின் உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்று படப்பிடிப்பு நடத்தி இருக்கின்றனர். அவர்கள் சென்ற பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் படப்பிடிப்பை நிறுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து ஆவண பட குழுவினரான ஐதராபாத்தை சேர்ந்த ஹரிநாத், சைதன்ய சாய், ரமேஷ்பாபு, ரேவந்த் குமார், கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரி, அபிராஜ், பவன் பி. நாயர், பிரவீன் ராய், மற்றொரு ஸ்ரீஹரி, சருண் கிருஷ்ணா, அதுல், முகமது அப்துல் மஜீத், சஞ்சல் பிரசாத் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் ஹரிநாத் என்பவர் தான் ஆவண படத்தின் இயக்குனராக செயல்பட்டுள்ளார். கைதானவர்களின் மீது தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

    • கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே. சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்தது.
    • சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே.சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

    இதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ராஜீவ் சந்திரசேகா் வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.

    இப்பதவிக்கு ராஜீவ் சந்திரசேகா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்தில் கட்சியின் கவுன்சில் கூட்ட நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளர் மற்றும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, கேரள மாநில பாஜக தலைவராக ராஜீவ் சந்திரசேகரன் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தோ்வான ராஜீவ் சந்திரசேகா், மத்திய பாஜக கூட்டணி அரசில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா், நீா் வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளாா்.

    பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜீவ் சந்திரசேகா் பணியாற்றி உள்ளார். கடந்த மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. 

     

    • கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் அனைத்து வளங்களும் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான நிலப்பகுதி வனம் மற்றும் நீர்நிலைகள் நிறைந்தவையாக திகழ்கிறது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் அங்கு இருப்பதால் கடவுளின் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இப்படிப்பட் பெருமைகள் நிறைந்த கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டுமன்றி சடடவிரோத போதை மருந்தாக இருக்கும் எம்.டி.எம்.ஏ. பயன்பாடும் அதிகமாக இருக்கிறது.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் கடத்தல்காரர்களிடம் கோடிக்கணக்கில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் சிக்குவதே அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். போதைப் பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

    அவர்கள் மட்டுமின்றி தற்போது பள்ளி மாணவர்களும் அதிகளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் மிகவும் எளிதாக கிடைக்கிறது.

    தொடக்கப்பள்ளி வகுப் பறைகளை கூட போதை பொருட்கள் எளிதில் சென்றடைவதால் குழந்தை கள் போதை பழக்கத்தில் சிக்கி வரும் அதிர்ச்சி தகவல் சமீபத்திய ஆய்வு ஒன்றில் வெளியாகியிருக்கிறது.

    கேரளாவில் குழந்தைகள் போதை பழக்கத்திற்கு உள்ளாவது குறித்து கோட்டயத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் ஆலோசகர் அலீஷா சனிஷ் வேதனையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    எங்களின் மையத்தில் மறுவாழ்வு பெற்ற 210-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இரண்டாம் வகுப்பிலேயே 70 சதவீதம் பேர் போதை பழக்கத்திற்கு உள்ளானது தெரியவந்தது.

    இந்த மையத்தில் போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட போராடுகிறார்கள்.

    எங்கள் மையத்திற்கு வந்த 12 வயது சிறுவன் ஒருவன் மழலையர் பள்ளியில் படிக்கும் போதே ஹாஷிஸ் எண்ணையை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறான். கிளர்ச்சி அல்லது விரக்தி காரணமாக அந்த சிறுவன் அதனை பயன்படுத்தத் தொடங்க வில்லை.

    தன்னை விட பெரிய குழந்தைகள் பயன்படுத்தியதை பார்த்து, தானும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயன்படுத்த விரும்பி இருக்கிறார். பின்பு அதனை பயன்படுத்தியிருக்கிறார். அது கொடுத்த உணர்வு அவருக்கு பிடித்திருக்கிறது. அதனால் அதனை பயன்படுத்தியிருக்கிறார்.

    இப்படித்தான் பல குழந்தைகள், சிலர் பயன்படுத்துவதை பார்த்து ஆர்வம் காரணமாக தாங்களும் பயன்படுத்தி போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ஆர்வத்தின் காரணமாக போதை பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை போன்று போதைப் பொருள் வாசனை பிடித்து அடிமையாகுபவர்களும் இருக்கிறார்கள். கோட்டயம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் சம்பவத் தன்று பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்திருக் கிறான்.

    அப்போது அவனின் மீது வித்தியாசமான வாசனை வந்ததை அவனது தந்தை கண்டுபிடித்தார். அந்த வாசனையை மறைக்க அந்த சிறுவன் 'மா' இலைகளை தின்றபடி இருந்திருக்கிறார். இந்த வித்தியாசமான பழக்கத்தை சிறுவனின் பெற்றோர் கவனித்தனர். அவனது செயல்பாடு மற்றும் பேச்சில் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததையும் பார்த்தனர்.

    ஒரு நாள் அந்த சிறுவன் தனது இளைய சகோதரருடன் சண்டையிட்டார். அப்போது தனது சகோதரனின் மீது அந்த சிறுவன் கத்திரிக்கோலை வேகமாக வீசினார். அந்த கத்திரிக்கோல் அங்கிருந்த டி.வி. மீது விழுந்தது. டி.வி.யின் ஸ்கிரீன் உடைந்தது. சிறுவனின் அந்த ஆக்ரோஷ செயலை பார்த்த பெற்றோர் பீதியடைந்தனர்.

    இதையடுத்து அந்த சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். சிறுவனின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டதில் அவனுக்கு போதை பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து விடுபட அவனுக்கு சிகிச்சை பெற செய்திருக்கின்றனர்.

    போதை பழக்கத்திற்கு அடிமையாகும் சிறுவர்கள் மூர்க்கத்தனமாக மாறி விடுவதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதாக ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போதைப் பொருள் பயன்பாடு ஒருவருக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்று திருவனந்தபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் டிபின்தாஸ் கூறியிருப்பதாவது:-

    எம்.டி.எம்.ஏ. போன்ற போதை பொருட்கள் பயன்பாடு கடந்த ஆண்டில் கஞ்சாவை முந்தியுள்ளது. இது ஒருவரது உணர்வை மட்டும் மாற்றாது. அவரது தன்னிலையை அழிக்கிறது.

    கடந்த ஆண்டில் எங்களின் மையத்தில் 36 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதித்தோம். மேலும் போதை பழக்கத்ததால் புற்று நோயாளிகளாகிய 47 பேருக்கு சிகிச்சையும் அளித்தோம்.

    18 முதல் 22 வயதுடைய 116 இளைஞர்கள் உள்நோயா ளியாகவும், 80 பேர் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர். மொத்தமாக கடந்த ஆண்டு எங்களிடம் 530 பேர் நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆவர்.

    பலர் தங்களது இளைமை காலங்களில் போதை பழக்கத்திற்க அடிமையானவர்கள். மேலும் பலர் பள்ளி படிப்பு காலத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அவர்கள் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாத நிலைக்கு சென்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர் பிரான்சிஸ் மூத்தேடன், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற பள்ளி மாணவிகளும் வரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:-

    பள்ளி மாணவிகள் அதிரப்பள்ளி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பள்ளி நேரத்தில் செல்கின்றனர். தங்களின் நண்பர்களுடன் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். பின்னர் மாலையில் வீட்டுக்கு வழக்கம்போல் திரும்பி வந்து விடுகின்றனர்.

    திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி. அதுபோன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அனைவருமே போதை பழக்கத்திற்கு சென்று விடுவதில்லை. சிலர் அந்த பழக்கத்திற்கு தள்ளப்படு கிறார்கள்.

    முதலில் போதைப் பொருளை இலவசமாக கொடுக்கிறார்கள். அதன்பிறகு விலைக்கு வாங்க வைக்கிறார்கள். போதைப் பொருள் விற்பனைக்கு பள்ளி மாணவிகள் இழுக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆகவதற்கு முன்னதாகவே கடத்தல்காரர்களாக மாறி விடுகிறார்கள். இது ஒரு தீய சுழற்சி.

    போதைப்பொருள் பயன்பாடு ஆரம்ப காலத்தில் ஒருவரின் மூளை வளர்ச்சியை நிரந்தரமாக மாற்றும். ஒரு குழந்தைக்கு மரபணு பாதிப்பு இருந்தால் 18 வயதுக்கு பிறகு போதை பழக்கத்தில் இருந்து வெளியேற முடியாது. அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் போதை பழக்கத்துக்கு அடிமையாகலாம். மேலும் அவர்களுக்கு மனநல கோளாறுகளும் ஏற்படலாம்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    பள்ளி குழந்தைகள் தொடக்கக்கல்வி படிக்கும் போதே, போதை பழக்கத்தில் சிக்குவது பற்றி வெளியாகியிருக்கும் தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா விசாரணை.
    • துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் புனியம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது49). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், பா.ஜ.க.வில் உள்ளூர் நிர்வாகியாக இருக்கிறார்.

    அவருடைய நண்பர் சந்தோஷ். கட்டிட ஒப்பந்த தாரரான அவர் பல புதிய கட்டிடங்களை கட்டி வந்துள்ளார். அவ்வாறு மாதமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டு கட்டிடத்திற்கு ராதா கிருஷ்ணனை நேற்று இரவு அழைத்துச் சென்றார்.

    அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சந்தோஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராதாகிருஷ்ணனை சுட்டார். இதில் அவரது மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    இந்தநிலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், சத்தம் வந்த கட்டிடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். சந்தோஷ் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தார்.

    உயிருக்கு போராடிய ராதாகிருஷ்ணனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். ராதாகிருஷ்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சந்தோசை கைது செய்தனர்.

    அப்போது அவர் குடி போதையில் இருந்துள்ளார். இதனால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ராதா கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின் றனர்.

    சந்தோஷ் எதற்காக ராதாகிருஷ்ணனை துப்பாக் கியால் சுட்டு கொன்றார்? என்பது உடனடியாக தெரிய வில்லை. அவர் பா.ஜ.க.வில் இருப்பதால் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆனால் முதற்கட்ட விசா ரணையில் அவரது கொலைக்கு அரசியல் காரணம் இல்லை என்பது தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொலைக்காக காரணம் குறித்து சந்தோசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சந்தோஷ் வைத்திருந்த துப்பாக்கி காட்டு பன்றிகளை சுடுவதற்கு பயன்படுத்தக்கூடியது ஆகும். அவர் காட்டுப்பன்றிகளை சுடும் குழுவில் இருப்பதால், துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்துள்ளார். அதனை பயன்படுத்தி நண்பரான ராதாகிருஷ்ணனை சந்தோஷ் கொலை செய்து விட்டார்.

    பா.ஜ.க. பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கைது செய்யப்பட்ட 2 பெண்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • கடத்தலில் தொடர்புடைய வேறு நபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு வரக் கூடிய விமானங்களில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுகிறது.

    இதுபோன்ற கடத்தலை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சில பயணிகள் சட்டவிரோதமாக விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் போதை பொருட்களை கடத்துவது நடந்தபடியே இருக்கிறது.

    இந்தநிலையில் பாங்காங்கில் இருந்து கொச்சி வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் கலப்பின கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானம் இரவில் கொச்சி வந்ததும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர்.

    அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மாடல் அழகியான மான்வி சவுத்ரி, டெல்லியை சேர்ந்த ஒப்பனை கலைஞர் சிபத் ஸ்வாந்தி ஆகிய இருவரும் 15 கிலோ கலப்பின கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் நடத்தப்படும் சோதனையில் கண்டுபிடிக்க முடியாத வகையில் 'மேக்கப்' பொருட்கள் இருந்த பெட்டியில் மறைத்து வைத்துகொண்டு வந்துள்ளனர். ஆனால் சுங்கத்துறையினர் அதனை கண்டு பிடித்துவிட்டனர். இதையடுத்து மாடல் அழகி மற்றும் பெண் ஒப்பனை கலைஞர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் கடத்தி கொண்டுவந்த ரூ4.5கோடி மதிப்புள்ள கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பெண்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கலப்பின கஞ்சாவை ஒரு கும்பலுக்கு கொடுப்பதற்காக கொச்சிக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

    மாடல் அழகியிடம் இருந்து கஞ்சாவை வாங்குவதாக கூறிய நபர்கள் யார்? என்று சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய வேறு நபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரளா கையெழுத்திடவில்லை.
    • கேரளாவுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும்

    கேரளாவின் பொதுக் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கேரளா கல்வி அமைச்சர் சிவன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய பங்கின் நிலுவைத் தொகை முறையே ரூ.280.58 கோடி மற்றும் ரூ.513.54 கோடி என்றும், 2025-26 ஆம் ஆண்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட தொகை ரூ.654.54 கோடி என்றும் தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், கேரளாவின் கல்வி நிதிக்கான பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதற்கும் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும் கேரளாவைப் பாராட்டும் மத்திய அரசு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

    • கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு குறைந்துள்ளதால் கேரளாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளன.
    • மத்திய அரசு எவ்வளவு நெருக்கடிகளை கொடுத்தாலும் கேரளா சிறப்பாக செயல்படுகிறது

    நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் போலவே கேரளா மாநிலமும் மத்திய அரசு கொடுக்கும் நிதி நெருக்கடிகளை எதிர்த்து வலுவாக எதிர்த்துப் போராடும் என்று கேரளா நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்துள்ளார்.

    கேரளா சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய நிதியமைச்சர் பாலகோபால், "மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு குறைந்துள்ளதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளன.

    பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது மத்திய அரசின் அக்கறையின்மை அணுகுமுறையால், நிதி ரீதியாக வலுவான நிலையில் இருந்த தெலுங்கானா போன்ற மாநிலங்கள் கூட இப்போது மத்திய அரசின் நிதிக் கொள்கையால் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

    மத்திய அரசு எவ்வளவு நெருக்கடிகளை கொடுத்தாலும் கேரளா சிறப்பாக செயல்படுகிறது. பல்வேறு சவால்களை சந்தித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸைப் போலவே, கேரளாவும் வலுவாக முன்னேறும்" என்று தெரிவித்தார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    இதையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம் சுனிதா வில்லியம்சை மீட்க சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது.

    இந்நிலையில்,க்ரு டிராகன் விண்கலம், நேற்று இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார்.
    • போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரசேரூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபூர்(வயது23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கோட்டக்கல் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    வசதி படைத்தவர் போன்று காட்டிக் கொண்டதால் அப்துல் கபூருடன் அந்த மாணவி நெருங்கி பழகி வந்துள்ளார். அதனை பயன்படுத்தி பல இடங்களுக்கு மாணவியை அப்துல் கபூர் அழைத்துச் சென்றுள்ளார்.

    ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார். இதனால் அந்த மாணவி போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். அதனை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்ற அப்துல்கபூர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    அந்த நேரத்தில் மாணவியை நிர்வாணமாக வீடியோவும் எடுத்திருக்கிறார். மாணவி பிளஸ்-1 படித்த கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான 5 ஆண்டுகளாக அப்துல் கபூரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபடி இருந்திருக்கிறார்.

    இந்தநிலையில் போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது தன்னை வாலிபர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி வரும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    மேலும் தன்னை அந்த வாலிபர் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்திருப்பதாகவும் கூறினார். அதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி கோட்டக்கல் போலீஸ் நியைத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிந்தனர்.

    மாணவிக்கு போதை மருந்து கொடுத்து சீரழித்த அப்துல் கபூர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்துல் கபூரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்கின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.
    • பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

    திருச்சூர்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அருகே மந்தாரத்தொடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 57). இவரது உறவினர்கள் சதானந்தன், விசாலாட்சி, ருக்மணி, கிருஷ்ண பிரசாத். இவர்கள் 5 பேரும் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சதானந்தன் ஓட்டி சென்றார்.

    அவர் செல்போனில் கூகுள் மேப் பார்த்தவாறு பாலக்காடு நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். திருச்சூர் அருகே கொண்டாழி-திருவில்யா மலை ஆகிய 2 பகுதிகளை இணைக்கும் காயத்ரி ஆற்றின் குறுக்கே எழுண்ணுள்ளத்து கடவு பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.

    பின்னர் கார், நீரில் மூழ்க தொடங்கியது. ஆற்றில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நபராக 5 பேரும் மீட்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் மூலம், ஆற்றில் இருந்து கார் மீட்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
    • பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது. கோவிலின் தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவிலில் விளக்கேற்றினார்.

    ஐயப்பன் கோவிலில் முதன்முறையாக பக்தர்கள் 18-ம் படி ஏறியதும் கொடிக்கம்பம் வழியாக நேரடியாக சென்று தரிசனம் செய்யும் புதிய நடைமுறை நேற்று அமல்படுத்தப்பட்டது. அதன்படி 18-வது படியில் ஏறிய பக்தர்கள், கொடிக் கம்பம் மற்றும் பாலிக்கல் மண்டபம் மற்றும் மேம்பாலம் வழியாக செல்லாமல், நேரடியாக கோவிலின் முன்புறம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதன்மூலம் பக்தர்கள் 30 முதல் 50 விநாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்தனர். மேலும் இந்த முறை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவியது. 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். அதன்பிறகு பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

    2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 11-ந்தேதி ஆராட்டு விழா நடைபெற உள்ளது.

    ×