என் மலர்
அரியானா
- அவரது வீட்டின் வெளியே ஒரு கும்பல் கூச்சல் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தது.
- ரமேஷ் குமார் அவர்களை கண்டித்து சத்தம் போடாமல் இருக்க கூறியுள்ளார்.
அரியானா மாநிலத்தில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் வீட்டின் வெளியே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஹிஸார் பகுதியில் வசித்து வரும் அரியானா காவல்துறையின் துணைஆய்வாளராகப் (SI) பணியாற்றி வந்த 57 வயதான ரமேஷ் குமார் அடுத்த ஜனவரியில் ஓய்வு பெற இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில், அவரது வீட்டின் வெளியே ஒரு கும்பல் கூச்சல் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தது.
ரமேஷ் குமார் அவர்களை கண்டித்து சத்தம் போடாமல் இருக்க கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த கும்பல் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்தது.
ரமேஷ் குமாரை அவரின் வீட்டின் வெளியே வைத்து செங்கல் மற்றும் தடிகளால் அந்த கும்பல் தாக்கியுள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரமேஷ் குமரை தாக்கியவர்கள் அதே குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் ஸ்கூட்டரையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
உயிரிழந்த ரமேஷ் குமாருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அரியானா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.
- பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்.
வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் ஹைட்ரஜன் குண்டு உள்ளது. அதை பயன்படுத்தினால், மோடி ஆட்டம் கண்டுவிடுவார் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பா.ஜனதாவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.
அரியானாவில் ஒரே நபர் 10 வாக்குச்சாவடியில் 22 முறை வாக்களித்து உள்ளார். 22 முறை வாக்களித்த நபரின் புகைப்படம் பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவருடையது.
அரியானாவில் மொத்த வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு உள்ளன. மொத்த வாக்குகளில் 12.5 சதவீத வாக்குகள் திருடப்பட்டுள்ளது. 8-ல் ஒரு வாக்கு அரியானா தேர்தலில் திருடப்பட்டது. முகவரியே இல்லாமல் 93 ஆயிரம் வாக்குகள் இருந்தது.
ஒரே நபர் வெவ்வேறு அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்கு அளித்துள்ளனர். பாதாஸ்பூர் என்ற இடத்தில் 14 முறை ஒருவர் வாக்கு அளித்துள்ளார். வாக்கு திருட்டால்தான் அரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஜனநாயகத்தை அழிப்பதில் பா.ஜனதாவின் புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) ஆகும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இதே மோசடி நடந்தது. அனைத்து கருத்து கணிப்பும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்தால் அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும்.
வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. முக்கிய கண்காணிப்பு கேமரா ஆவணங்களை தேர்தல் ஆணையம் அழித்து உள்ளது. முறைகேடுகளால்தான் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. போலி புகைப்படங்களை நீக்கும் மென்பொருள் வசதி தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஒரே நபர் ஒரே நாளில் பல வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது? வாக்கு திருட்டின் மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
வாக்கு திருட்டில் ஈடுபடும் மோடியும், அமித் ஷாவும் பதவியில் இருக்க தகுதியற்றவர்கள். பிரதமர் மோடி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார். வாக்கு திருட்டு ஒரு தொகுதியிலோ ஒரு மாவட்டத்திலோ மட்டும் அல்ல நாடு முழுவதும் நடக்கிறது.
இவ்வாறு ராகுல்காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். கிரண் ரிஜிஜு "தேர்தல் பீகாரில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி அரியானா பற்றி கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
- வாக்கு திருட்டில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
- 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளியிட்டார்.
அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். .
இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், "தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறின. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளிலிருந்து வேறுபட்டிருந்தன என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஹரியானாவில் இது நடந்ததில்லை.
நீங்கள் பார்க்கப் போகும் இந்தத் தகவலை நான் முதன்முதலில் பார்த்தபோது, அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவல்களை நான் பலமுறை சரிபார்த்தேன்.
ஹரியானாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடி. அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட வாக்குகள் ஆகும். அதாவது எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் போலி வாக்காளராக இருந்திருக்கிறார்
5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலி வாக்காளர்கள் 93 ஆயிரத்து 174 வாக்குகள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது
பாஜக நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் வாக்களித்திருக்கிறார் பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார்
பாஜகவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைவர்கள் ஹரியானாவிலும் வாக்களித்திருக்கிறார்கள் உத்தரபிரதேசத்திலும் வாக்களித்திருக்கிறார்கள் எனக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
- பொதுமக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
- அந்த வாலிபரை எனக்கு தெரியும், தினமும் என்னை பின்தொடர்ந்து வருவான்.
அரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள நூலகத்திற்கு தினமும் படிக்க செல்வது வழக்கம். சிறுமியை வாலிபர் ஒருவர் நோட்டமிட்டு வந்தார். அவரும் நூலகத்திற்கு சென்று வருவார்.
இந்நிலையில் வழக்கம் போல் சிறுமி நூலகத்திற்கு வந்தார். அவர் வருவதை அறிந்து அங்கு காத்திருந்த அந்த வாலிபர் சிறுமியை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரை எனக்கு தெரியும், தினமும் என்னை பின்தொடர்ந்து வருவான். மன ரீதியாக என்னை துன்புறுத்தினான் என்று கூறியுள்ளார்.
சம்பவ இடத்தில் வாலிபர் துப்பாக்கியை விட்டுச்சென்றுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர்.
அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
- பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அவருடன் புகைப்படத்தில் இருந்த இந்தியாவின் ஒரே பெண் ரஃபேல் விமானி ஷிவாங்கி சிங் கவனம் பெற்றுள்ளார்.
அம்பாலா விமானப்படை தளத்தில் உள்ள 'கோல்டன் ஆரோஸ்' என்ற 17வது ஸ்க்வாட்ரனின் ஸ்க்வாட்ரன் லீடராக ஷிவாங்கி சிங் பணியாற்றி வருகிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
ஆரம்பத்தில் அவர் கடினமான மிக்-21 பைசன் விமானங்களை ஓட்டினார். 2020-ல் ரஃபேல் போர் விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயக்கிய இயக்கிய முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.
பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.
இதன் பின்னணியில் ஜனாதிபதி முர்முவுடன் ஷிவாங்கி சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.
இன்று டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் மகள்கள் போர் விமானங்களை இயக்குகின்றனர்" என சிவிங்கி சிங்கை குறிப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
- ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
- அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
ஏப்ரல் 22-ந்தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின்போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்தார்.
இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறக்கும் முதல் இந்திய ஜனாதிபதியாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் சிறப்பு சாதனை படைக்கும் பெண்மணியாகவும் திரவுபதி முர்மு பதிவாகி உள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர். இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார்.
- ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டுள்ளார்.
- வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.
அரியானாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது 3 தங்கைகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 19 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ராகுல் பாரதியின் தொலைபேசியை ஹேக் செய்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டது விசாரணையில் தெரியவந்தது.
வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். இந்த உரையாடலில், பணம் கொடுக்கவில்லை என்றால் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வைரலாக்கிவிடுவேன் என்று சாஹில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராகுல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் குடும்பத்தினரின் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
- பூரன் குமார் தனது ஊழலைக் மறைக்க சாதி அரசியலைக் கையிலெடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் ஒய். பூரன் குமார் ஐபிஎஸ். ரோதக் சரக ஐ.ஜியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் போலீஸ் மையத்தின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே கடந்த வாரம் செவாய்க்கிழமை, புரன் குமார் சண்டிகரில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். தலித் சமூகத்தை சேர்ந்த பூரன் குமார் காவல்துறையில் நிலவிய சாதிய பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பூரன் குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மேலும் ஒரு திடீர் திருப்பமாக, அந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வந்த உதவி துணை ஆய்வாளர் (ஏ.எஸ்.ஐ.) சந்தீப் குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
ரோஹ்தக் சைபர் செல்லில் ஏ.எஸ்.ஐ-ஆக பணிபுரிந்த சந்தீப் குமார், தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன், அவர் மூன்று பக்க கடிதம் மற்றும் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "உண்மைக்காக என் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறேன். நேர்மையின் பக்கம் நின்றதில் நான் பெருமை கொள்கிறேன். தேசத்தை விழிப்படையச் செய்ய இது தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரி பூரன் குமார் ஒரு ஊழல்வாதி என்றும், தனது ஊழல் அம்பலமாகிவிடும் என்ற பயத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சந்தீப் குமார் தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு மதுபான ஒப்பந்ததாரரிடம் இருந்து பூரன் குமாரின் காவலர் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது தான் பிடித்ததாகவும், இந்த விவகாரம் வெளியானபோது, பூரன் குமார் தனது ஊழலைக் மறைக்க சாதி அரசியலைக் கையிலெடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தீப் குமார் தனது வீடியோ செய்தியில், பூரன் குமார் ரோஹ்தக் ரேஞ்சில் பொறுப்பேற்ற பிறகு நேர்மையான அதிகாரிகளைப் புறக்கணித்து, ஊழல்வாதிகளை நியமித்ததாகக் குற்றம் சாட்டினார். அவர்கள் வழக்குப் பதிவேடுகளை முடக்குவது, பாதிக்கப்பட்டவர்களை அழைத்துப் பணத்திற்காக மனதளவில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இடமாற்றங்களுக்காக சில பெண் காவலர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் இந்த விவகாரம் சாதி தொடர்பானதல்ல, முழுக்க முழுக்க ஊழல் தொடர்பானது என்றும் சந்தீப் குமார் பேசியுள்ளார்.
- அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார்.
- அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் ஒய். புரன் குமார். ரோதக் சரக ஐ.ஜியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் போலீஸ் மையத்தின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே புரன் குமார் சண்டிகரில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். புரன் குமாரின் மனைவி அம்னீத்குமாரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அவர் அரியானா அரசில் வெளியுறவு ஒத்துழைப்புத் துறை ஆணையாளர் மற்றும் செயலாளராக உள்ளார்.
அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார். கணவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்து அவர் நாடு திரும்பினார்.
இந்தநிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரியானா மாநில போலீஸ் டி.ஜி.பி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் மீது அம்னீத்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
போலீசில் அம்னீத்குமார் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
டி.ஜி.பி சத்ருஜீத் கபூர், ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் எனது கணவரை பொய்யான புகாரில் சிக்க வைக்க சதித்திட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது சாதாரண தற்கொலை வழக்கு அல்ல.
ஒரு பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியை சக்திவாய்ந்த மேலதிகாரிகளால் திட்டமிட்டு துன்புறுத்தியதன் நேரடி விளைவு ஆகும். அதிகாரம் மிக்கவர்களின் கொடுமையால் உடைந்து போன எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் அம்னீத்குமார் கூறும்போது, பல ஆண்டு களாக எனது கணவர் அவமானம், துன்புறுத்தலை எதிர்கொண்டார். டி.ஜி.பி கபூரின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு அற்பமான புகாரில் தன்னை பொய்யாக சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டப் படுவதாக எனது கணவர் என்னிடம் தெரிவித்து இருந்தார் என்றார். அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சட்லெஜ், பியாஸ், ராவி நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
- பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மூழ்கின. வீடுகள் சேதமடைந்தன.
சண்டிகர்:
வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளதாக மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
சட்லெஜ், பியாஸ், ராவி நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மூழ்கின. வீடுகள் சேதமடைந்தன. கனமழை காரணமாக பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி கனமழையால் கடுமையாக பாதிப்பு அடைந்த பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு நிவாரண உதவியாக 5 கோடி ரூபாய் வழங்கினார்.
இதுதொடர்பாக அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் மிகவும் துயரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் அரியானா அரசாங்கமும், மாநில மக்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதியாக நிற்கிறார்கள். முதல் மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து பஞ்சாப், ஜம்மு காஷ்மீருக்கு தலா 5 கோடி ரூபாய் உதவி அனுப்பப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
- அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது.
- மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், குருகிராம் சாலையில் தேங்கிய மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழையின் பொது வெள்ளநீர் தேங்காமல் இருக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.
- முகமூடி அணிந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- சில குடும்ப உறுப்பினர்களும், பணியாளரும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தனர்.
அரியானா குருகிராமில் இன்று பிரபல யூடியூபரும் பிக் பாஸ் ஓடிடி வெற்றியாளருமான எல்விஷ் யாதவின் வீடு தாக்கப்பட்டது.
அதிகாலை 5:30 மணியளவில், குருகிராமில் உள்ள செக்டார் 57 இல் உள்ள எல்விஷ் யாதவின் வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இருப்பினும், எல்விஷ் யாதவ் அப்போது வீட்டில் இல்லை. எல்விஷின் வீடு கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் உள்ளது.
சில குடும்ப உறுப்பினர்களும், பணியாளரும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
இதில் வீட்டின் ஜன்னல்கள், கூரைகள் ஆகியவை சேதமடைந்தன. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






