என் மலர்tooltip icon

    டெல்லி

    • வீட்டு வாடகைப்படியை சரியாக கணக்கிட மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளை பற்றிய புரிதல் அவசியமாகிறது.
    • வீட்டு வாடகைப்படி அந்த நகரத்தின் வகையைப் பொறுத்தது. நகரங்கள் X, Y, மற்றும் Z என்று பிரிக்கப்படுகின்றன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு ஊழியர்க ளின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.

    அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது வீட்டு வாடகைப்படியும் அதற்கு ஏற்றார்போல் உயர்த்தப்படும். ஆனால், இதுவரை வீட்டு வாடகைப் படி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    இது குறித்து ருத்ரா மற்றும் ருத்ரா சட்ட அலுவலக நிறுவனர்களில் ஒருவரான சஞ்சீவ் குமார் கூறுகையில்,

    "வீட்டு வாடகைப்படியை சரியாக கணக்கிட மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளை பற்றிய புரிதல் அவசியமாகிறது. பொதுவாக வீட்டு வாடகைப்படியானது ஊழியர் எந்த வகை நகரத்தில் வசிக்கிறார் என்பதை பொருத்ததே" என்று கூறினார்.

    வீட்டு வாடகைப்படி அந்த நகரத்தின் வகையைப் பொறுத்தது. நகரங்கள் X, Y, மற்றும் Z என்று பிரிக்கப்படுகின்றன. இதில் 7-வது சம்பள கமிஷன் அகவிலைப்படி 25 சதவீதத்தை எட்டிய போது அடிப்படை சம்பளத்தில் X, Y, மற்றும் Z நகரங்களுக்கு முறையே வீட்டு வாடகைப்படியானது 27சதவீதம், 18சதவீதம் மற்றும் 9சதவீதம் என முன்பு கொடுக்கப்பட்டு வந்தது.

    பிறகு தற்போது அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு வீட்டு வாடகைப்படி விகிதங்களை முறையே X, Y மற்றும் Z நகரங்களில் அடிப்படை சம்பளத்தில் 30சதவீதம், 20சதவீதம் மற்றும் 10 சதவீதம் என திருத்தியுள்ளது.

    ஆகவே ரூ.35 ஆயிரம் அடிப்படை சம்பளம் பெறக் கூடிய மத்திய அரசு ஊழியர்கள் இனி, X நகரவாசியாக இருக்கும் பட்சத்தில் வீட்டு வாடகைப்படி ரூ.10 ஆயிரத்து 500 வழங்கப்படும். Y நகரவாசிகளுக்கு வீட்டு வாடகைப்படி ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். Z நகரவாசிகளுக்கு வீட்டு வாடகைப்படி ரூ.3 ஆயிரத்து 500 வழங்கப்படும்.

    • சுதந்திரத்துக்கு பிறகு 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், நாடு முழுவதும் 479 தொகுதிகளில் போட்டியிட்டது.
    • பா.ஜனதாவின் வளர்ச்சியாலும், மாநில கட்சிகளில் ஆதிக்கத்தாலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைந்தது.

    காங்கிரஸ்...

    1885-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்சி, இந்திய சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்தியது என்ற பெருமையும் அதற்கு உண்டு.

    இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை ஆட்சி செய்தது.

    சுதந்திரத்துக்கு பிறகு 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், நாடு முழுவதும் 479 தொகுதிகளில் போட்டியிட்டது. 364 இடங்களில் வெற்றியை பெற்றது.

    இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு 1984-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி தலைமையில் 517 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 414 தொகுதிகளை கைப்பற்றி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் இந்த சாதனையை இதுவரை வேறு எந்த கட்சிகளும் முறியடிக்கவில்லை. ஏன்... காங்கிரஸ் கட்சி கூட அந்த சாதனையை மீண்டும் நிகழ்த்தவில்லை.

    அதேபோல் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 529 தொகுதிகளில் போட்டியிட்டது. இதுதான் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிகபட்சமாக போட்டியிட்ட தொகுதியாகும்.

    இதுவரை நடைபெற்றுள்ள 17 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 முறை 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும், ஒரு முறை 500 இடங்களிலும் போட்டியிட்டது. 11 முறை 400-க்கும் அதிகமான தொகுதிகளில் களம் கண்டு உள்ளது.

    இதுவரை பல வெற்றி தோல்விகளை கண்டபோதிலும், காங்கிரஸ் கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களிலேயே போட்டியிட்டுள்ளது.

    பா.ஜனதாவின் வளர்ச்சியாலும், மாநில கட்சிகளில் ஆதிக்கத்தாலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி, கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது.

    ஆட்சியை இழந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், வாழ்வா...சாவா என்ற நிலையில் 18-வது பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தமுறை வெறும் 330 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

    இதுதான் அந்த கட்சி போட்டியிடும் மிக குறைந்த எண்ணிக்கையாகும்.

    மொத்தம் 543 தொகுதிகளில், ஆட்சி அமைக்க தேவையான அந்த 'மேஜிக்' எண்ணிக்கை 272 வேண்டும். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி 330 தொகுதிகளிலேயே போட்டியிடுகிறது.

    மேலும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்காளம், பீகார், தமிழகம் ஆகிய 5 மாநிலங்கள் 249 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது.

    இந்த மாநிலங்களில் எல்லாம், அங்குள்ள மாநில கட்சிகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதில் மேற்கு வங்காளம் தவிர மற்ற 4 மாநிலங்களில் காங்கிரஸ், அந்தந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. எனவே அவர்கள் கொடுக்கும் எண்ணிக்கையிலேயே போட்டியிட வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தில் தனித்தே போட்டி என்று அறிவித்துவிட்டார். இதனால் அங்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சியுடன் மட்டும் கூட்டணி உள்ளது.

    கணிசமான தொகுதிகளை கொண்ட இந்த 5 மாநிலங்களில், மிக சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு, வெற்றி சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுகிறது.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    இந்தமுறை காங்கிரஸ் குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டாலும், வெற்றி என்பது நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. நாங்கள் இந்த தேர்தலை இந்தியா கூட்டணி என்ற பெயரிலேயே சந்திக்கிறோம். எனவே 2004-ம் ஆண்டு ஏற்பட்டது போன்ற சூழல் 2024-ம் ஆண்டும் ஏற்படும்.

    உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியுடனும், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனும், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடனும் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு அவர்களுடன் தொகுதி பங்கீட்டில் நாங்கள் விட்டுக்கொடுத்துள்ளோம். இது எங்களது தேர்தல் வியூகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு திரிபுரா தொகுதியில் மாநில முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேவ் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கிறார்.
    • மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி மகாராஷ்டிரத்தின் நாக்பூர் தொகுதியில் களம் காண்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்ட தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

    இதில் முக்கியமாக, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரேயொரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதைத்தவிர மகாராஷ்டிரா, அசாம், அருணாசல பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு உட்பட்ட சில தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடக்கிறது.

    இந்த முதற்கட்ட தேர்தல் 8 மத்திய மந்திரிகள், 3 முன்னாள் முதல்-மந்திரிகள், ஒரு முன்னாள் கவர்னரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமைந்து உள்ளது.

    அந்தவகையில் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கிறார்.

    இவர் போட்டியிடும் தென் சென்னை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. கவர்னர் மாளிகையில் இருந்து பாராளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.

    மேற்கு திரிபுரா தொகுதியில் மாநில முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேவ் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கிறார். இந்த தொகுதியில் இவருக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் ஆஷிஷ் குமார் சகாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    அருணாசல் மேற்கு தொகுதியில் அந்த மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான நபம் துகி களமிறக்கப்பட்டு உள்ளார். ஆனால் இந்த தொகுதியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு 4-வது முறையாக மீண்டும் களமிறங்கி உள்ளார். இதனால் களம் சூடுபிடித்து இருக்கிறது.

    மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் போட்டியிடும் அசாமின் திப்ரூகார் தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருக்கும் இவரும் முன்னாள் முதல்-மந்திரி ஆவார்.

    மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி மகாராஷ்டிரத்தின் நாக்பூர் தொகுதியில் களம் காண்கிறார். கடந்த தேர்தல்களில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து வரும் கட்காரி, இந்த முறையும் வெற்றிக்கோட்டை தொடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அவரை எதிர்த்து தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அ.ராசா களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மும்முனைப்போட்டி நிலவும் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யான் பா.ஜனதா வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். அந்த தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஹரிந்திர மாலிக், பகுஜன் சமாஜ் வேட்பாளர் தாராசிங் பிரஜாபதி ஆகியோர் இவருக்கு கடும் சவால் அளித்து வருகின்றனர்.

    மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் போட்டியிடும் ராஜஸ்தானின் பீகானேர் தொகுதியும் கவனிக்கத்தக்க தொகுதியாக மாறியிருக்கிறது.

    மேலும் காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்கி இருக்கும் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங், ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் ஆகியோரும் நாளைய தேர்தலில் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் ஆவர்.

    தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்த வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந்தேதி தெரியவரும்.

    • தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டி.
    • தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்ளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்.
    • உங்களைப் போன்ற அணியினர் எனக்கு பெரும் சொத்து.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "இது சாதாரண தேர்தல் அல்ல, மக்களின் ஆசீர்வாதத்துடன், பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக" குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, வேட்பாளர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் வாழ்த்தியுள்ளார்.

    கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், "எனது சக காரியகர்த்தாவுக்கு. ராம நவமியின் நன்னாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்... ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்ததற்கு உங்களை வாழ்த்துகிறேன். தமிழகம் முழுவதும் பா.ஜனதாவின் அடிமட்ட இருப்பை வலுப்படுத்தவும், சட்ட அமலாக்கம், நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை முன்னிறுத்துவதில் நீங்கள் உண்மையிலேயே முக்கிய பங்காற்றியுள்ளீர்கள். உங்கள் அர்ப்பணிப்புள்ள தலைமையால் கோவைக்கு மகத்தான பலன் கிடைக்கும்.

    "மக்களின் ஆசியுடன், நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற அணியினர் எனக்கு பெரும் சொத்து. ஒரு அணியாக, தொகுதி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபடுவோம்" என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.
    • முதல் கட்டமாக மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தலானது ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

    தமிழ்நாடு, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

    தமிழகத்தில் 39 தொகுதி, உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகள் உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகள் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
    • வருகிற 23-ந்தேதி வரை கெஜ்ராவலுக்கு நீதிமன்றம் காவல் அளிக்கப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 15-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்ற காவல் மூலமாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. மேலும், இது போன்று மனுக்கள் தாக்கல் செய்யக் கூடாது எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் திறமையான டெல்லி அரசை நடத்த ஜெயிலில் இருந்து அரவிந்த கெஜ்ரிவால் டெல்லி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கேபினட் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்ற மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான தவறான, பரபரப்பான தலைப்புகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதைத் தடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்தியாவின் அரசமைப்பு அல்லது எந்தவொரு சட்டமும் முதல் மந்திரிகள், பிரதமர் மந்திரிகள் உள்ளிட்ட மந்திரிகள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்த நடத்த தடைவிதிக்கவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தேர்தல் நெருங்கிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காங்கிரஸ் பற்றி சந்திரசேகர ராவ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கடந்த 5-ம் தேதி தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.எஸ்.ஆர். தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நாய்களின் மகன்கள் என்றும், விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.500 போனஸ் வழங்காவிட்டால் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டையை கடிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். சந்திரசேகர ராவின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி மூத்த துணை தலைவர் ஜி. நிரஞ்சன், ஏப்ரல் 6 அன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புகார் தொடர்பாக ஏப்ரல் 18-ம் தேதி காலை 11 மணிக்குள் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவரிடமிருந்து பதில் வரவில்லை என்றால் ஆணையத்தின் உரிய நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.
    • இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

    ராம நவமியை முன்னிட்டு அயோத்தியா ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது.

    கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.

    ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம்...

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளை பொறுத்தவரை இந்த வழக்கை மிகவும் சாதுர்யமாக எடுத்துச் செல்கிறார்கள்.
    • ஜாபர் சாதிக்கின் செல்போன் உரையாடல்களில் பண விவகாரங்கள், பணபரிமாற்றங்கள் பற்றியும் பேசப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    புதுடெல்லி:

    ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குக்கு நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக முதல்கட்ட குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

    இந்த வழக்கில், சூடோபெட்ரின் வேதிப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்ட கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இதில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அவசரம் அவசரமாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளை பொறுத்தவரை இந்த வழக்கை மிகவும் சாதுர்யமாக எடுத்துச் செல்கிறார்கள். வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட இயக்குனர் அமீரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, வழக்கை வலுப்படுத்துவதற்கான ஆதாரங்களை அதிகரிக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது.

    இதன்பிறகுதான் ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரிகளை கோர்ட்டில் அனுமதி பெற்று பதிவு செய்துள்ளனர். அவை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. செல்போனில் பதிவானது அவரது குரல்தான் என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என காத்திருக்கிறார்கள். அதற்கு முன்னதாக செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளிலும் கவனமாக இருக்கிறார்கள்.

    ஜாபர் சாதிக்கின் செல்போன் உரையாடல்களில் பண விவகாரங்கள், பணபரிமாற்றங்கள் பற்றியும் பேசப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுபற்றி அவருடன் பேசிய நபர்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    குரல் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்ததும் சம்பந்தப்பட்ட அந்த நபர்களிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள். இதன்படி இயக்குனர் அமீரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் குரல் பரிசோதனை அறிக்கைகளைப் பெற்று, அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க பூனைபோல காத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • சத்தீஸ்கரின் கான்கெர் பகுதியில் பாதுகாப்பு படை என்கவுண்டர் நடத்தியது.
    • இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இன்று மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நக்சல்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் நக்சல்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்தனர்.

    இந்த என்கவுனட்ரில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், சத்தீஸ்கரில் 29 நக்சல்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நடவடிக்கையை தங்கள் வீரத்தால் வெற்றிகரமாக செய்த அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகளில் 2 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.
    • ஜெயிலில் இருக்கும் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இடம் பிடித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி மீடியாக்களில் தோன்றி பேட்டியளித்து வருகிறார்.

    இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது. அந்த பட்டியலில் 40 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    முக்கியமாக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் இடம் பெற்றுள்ளது. ஜெயிலில் இருக்கும் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங், மாநிலங்களவை எம்.பி. சஞ்ச் சிங், ராகவ் சதா, சந்தீப் பதக் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    சுனிதா கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்காக ஜார்க்கண்ட் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் எனத் தகவல் தெரிவிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்தியா கூட்டணி கடந்த மாதம் 31-ந்தேதி டெல்லியில் பேரணி நடத்தினர். அப்போது சுனிதா கெஜ்ரிவால், கல்பனா சோரன் ஆகியோரை சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ளன. இதில் இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 24 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

    ×