என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார்.
    • தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர்.

    இந்தி நடிகை தீபிகா படுகோனே பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷனுடன் நடித்த பைட்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் தீபிகா படுகோனே தனது தங்கை அனுஷா படுகோனவுடன் நேற்று திருப்பதிக்கு வந்தார். அலிபிரி நடைபாதை அருகே தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார். பின்னர் தனது தங்கையுடன் நடைபாதையில் நடந்து சென்றார். தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


    இதையடுத்து போலீசார் மற்றும் விஜிலென்ஸ் போலீசார் தீபிகா படுகோனேவை பலத்த பாதுகாப்புடன் திருப்பதி மலைக்கு அழைத்து வந்தனர். மலைப்பாதையில் உள்ள கோவில்களில் கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தார். 3 மணி நேரம் நடந்து திருப்பதி மலையை அடைந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.


    இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தீபிகா படுகோனே அவரது தங்கை அனிஷா படுகோனே ஆகியோர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 56,049 பேர் தரிசனம் செய்தனர். 26,748 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.97 உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.


    இதைத்தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக சில காலமாக செய்தி பரவி வந்தது.


    இந்நிலையில், இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இந்த படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
    • இவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.


    வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்தி பரவி வந்தது.

    இந்நிலையில், இன்று காலை ஆதிக் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், நடிகர் விஷாலும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2009-ம் ஆண்டு குணால் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் சில காரணங்களால் இந்த உறவு விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து ஐஸ்வர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    • இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா?
    • இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

    கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    இந்தி பேசாதவர்

    இந்தியர் இல்லை என்று

    அரசமைப்பில் இருக்கிறதா?


    இந்தியா என்ற நாடு

    இந்தி என்ற

    சொல்லடியில்தான் பிறந்ததா?


    எல்லா மாநிலங்களிலும்

    புழங்குவதற்கு

    இந்தி மொழியென்ன

    இந்தியக் கரன்சியா?


    இந்தி பேசும் மாநிலங்களிலேயே

    இந்தி கல்லாதார் எண்ணிக்கை

    எவ்வளவு தெரியுமா?


    வடநாட்டுச் சகோதரர்கள்

    தமிழ்நாட்டுக்குள் வந்தால்

    தமிழ் தெரியுமா என்று

    தெள்ளு தமிழ் மக்கள்

    எள்ளியதுண்டா?


    சிறுநாடுகளும்கூட

    ஒன்றுக்கு மேற்பட்ட

    ஆட்சிமொழிகளால்

    இயங்கும்போது

    இந்தியாவை

    ஓர் ஒற்றை மொழிமட்டும்

    கட்டியாள முடியுமா?


    22 பட்டியல் மொழிகளும்

    ஆட்சிமொழி ஆவதுதான்

    வினாத் தொடுத்த காவலர்க்கும்

    விடைசொன்ன

    தமிழச்சிக்குமான ஒரே தீர்வு


    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

    • கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்த படத்திற்கு டோனி ஷார்ட் ஒளிப்பதிவு ;செய்துள்ளார்.

    மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடக்ஷன்ஸ் கே.கந்தசாமி மற்றும் கே. கணேசன் வழங்கும் புதிய படத்தை இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்துள்ளனர். டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள 'வட்டார வழக்கு' திரைப்படம் வட்டார கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட படம் ஆகும்.

    இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழ் சினிமா காணாத காதல் காட்சிகள் போல் இல்லாமல், காதல் வசனங்கள் இல்லாமல், காதலர்கள் நேரிலும் சந்திக்காமல் மலர்ந்த புதுவிதமான காதல் உணர்வை காட்டும் வெளிப்படுத்தும் வகையில், இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

     


    இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மாதம் வரும் டிசம்பர் 29 - ஆம் தேதி இத்திரைப்படம் சக்தி ஃபிலிம் சிக்நேச்சர் நிறுவனத்தால் பெருமையுடன் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு ஒளிப்பதிவு மூடர் கூடம் டோனி ஷார்ட், சுரேஷ் மண்ணியன் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை வெங்கட்ராஜன் செய்திருக்கிறார்.

    • இந்த மாதிரி கதை கொண்ட படங்கள் தான் நல்ல படம்.
    • மக்கள் எல்லா பிரச்சினைகளையும் செய்தியாக கடந்து போகிறார்கள்.

    மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தும் கதையம்சம் கொண்ட படமாக 'பாய்' உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பேரரசு, எது நல்ல படம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும். மக்கள் இன்று எல்லா பிரச்சினைகளையும் வெறும் செய்தியாகக் கடந்து போகிறார்கள். அதற்குத் தீர்வு என்ன என்று பார்ப்பதில்லை. இது பற்றி ஆட்சியாளர்கள் யாரும் யோசிப்பதில்லை."

     


    "ஒரு சிறந்த படம் என்பது எது? நல்ல கதையா? திரைக்கதையா? வசனமா? பாடல்களா? சண்டைக் காட்சிகளா? எந்த திரைப்படம் சமூக பிரச்சினையைச் சொல்கிறதோ அது சிறந்த படம். மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்வது சிறந்த படம் தான். அப்படிப் பார்க்கும் போது பாய் மிகச் சிறந்த படம். இந்த காலகட்டத்தில் நல்ல படங்களை மக்கள் வரவேற்கிறார்கள் கொண்டாடுகிறார்கள்," என்று தெரிவித்தார்.

    கே.ஆர்.எஸ். ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். இத்ரிஸ் படத்தொகுப்புசெய்திருக்கிறார். இப்படத்தை பி.வி.ஆர். பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

    • நடிகர் சூரி ‘விடுதலை 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் மதுரை அம்மன் உணவகத்தையும் நடத்தி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் சூரி மதுரை அம்மன் உணவகத்தையும் நடத்தி வருகிறார்.


    இந்நிலையில், நடிகர் சூரி 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிச்சாங் புயல் – கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்பட நடிகர் சகோதரர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 'தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்" என்று பதிவிட்டுள்ளார்.


    • 'மௌன ராகம்' படத்தில் ரேவதியின் தந்தை கதாபாத்திரத்தில் சந்திரமௌலி-யாக நடித்ததன் மூலம் சங்கரன் பிரபலமானார்.
    • வேலும் மயிலும், தேன் சிந்துதே வானம் உள்ளிட்ட 8 படங்களை இயக்கியுள்ளார்.

    பழம்பெரும் இயக்குனரும், நடிகருமான ரா.சங்கரன் (92) வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

    'மௌன ராகம்' படத்தில் ரேவதியின் தந்தை கதாபாத்திரத்தில் சந்திரமௌலி-யாக நடித்ததன் மூலம் சங்கரன் பிரபலமானார். வேலும் மயிலும், தேன் சிந்துதே வானம் உள்ளிட்ட 8 படங்களை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார்.

    ரா.சங்கரன் மறைவுக்கு பாரதிராஜா எக்ஸ் தள பக்கத்தில்,, "எனது ஆசிரியர் இயக்குனர் ரா.சங்கரன் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

    • பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சலார்’.
    • இப்படம் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார்.



    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து 'சலார்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்று கூறப்படுகிறது.


    இந்நிலையில், 'சலார்' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'சூரியன் குடையா நீட்டி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஒருவரின் முழுபலமாகவும் அதே நேரம் பலவீனமாகவும் இருக்கும் இரண்டு சிறந்த நண்பர்களின் உணர்வுகளையும் எடுத்துக்காட்டுவது போன்று இந்த பாடல் உருவாகியுள்ளது.



    • அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறவுள்ளது.


    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'விடாமுயற்சி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து நடிகர் அஜித் சென்னை திரும்பினார். பின்னர் மீண்டும் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றார். அப்போது அஜித்துடன் நடிகை திரிஷாவும் சென்றார். இதன் மூலம் திரிஷா இந்த படத்தில் நடிப்பது உறிதி செய்யப்பட்டது.


    வைரலாகும் புகைப்படம்

    இந்நிலையில், தற்போது 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, நடிகர் ஆரவ் தனது சமூக வலைதளத்தில் அஜித் மற்றும் அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அர்ஜுன் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கு முன்பு அஜித்- அர்ஜுன் கூட்டணியில் 'மங்காத்தா' திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கைதி'.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், ட்விஸ்டுகளும் இந்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றியது.


    இதைத்தொடர்ந்து, . 'கைதி 2' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 'கைதி 2' திரைப்படம் விரைவில் உருவாகும் என கார்த்தி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், படம் எப்போது தொடங்கப்படும் என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 'கைதி', 'விக்ரம்' திரைப்படங்களில் நடித்த நடிகர் நரேன் 'கைதி 2' திரைப்படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நரேனிடம் 'கைது 2' எப்போது ரிலீஸ் ஆகும்? என்று கேள்வி கேட்கப்பட்டது.


    இதற்கு, "எல்சியூ-வில் அடுத்து வெளியாகப்போகும் படம் 'கைதி 2' தான், ஆனால், அதற்கு முன் எல்சியூ கன்னெக்டுடன் ஒரு 10 நிமிட ஷார்ட் பிலிம் ஒன்றை லோகேஷ் இயக்கவுள்ளார். அதில் நானும் நடித்திருக்கிறேன். எல்சியூ-வின் தொடக்கம் தான் அந்த ஷார்ட் பிலிம். அதன் பின் 'கைது 2' வெளியாகும்" என்று தெரிவித்தார்.

    எல்சியூ (lokesh cinematic universe)-ல் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 'கைதி'. அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', விஜய் நடித்த 'லியோ' போன்ற படங்கள் எல்சியூ-வில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் லிவிங்ஸ்டன் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார்.

    இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த நடிகர் லிவிங்ஸ்டன் 1988- ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், சுந்தர புருசன், என் புருசன் குழந்தை மாதிரி போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தார்.


    அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் சரியான பட வாய்ப்பு இல்லாததால் சின்ன திரையில் களமிறங்கினார். நடிகர் லிவிங்ஸ்டனுக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் ஜோவிகா சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் சின்னத்திரை சீரியல் ஒன்றிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


    லிவிங்ஸ்டன் குடும்பம்

    இந்நிலையில் நடிகர் லிவிங்ஸ்டன் நேர்காணல் ஒன்றில் தான் மதம் மாறியது தொடர்பாக பேசியுள்ளார். அதில், "கிறிஸ்டியனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. இதனால் நான் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் நான் சேர்ந்துவிட்டேன்" என்று கூறினார்.

    இதற்கு நெட்டிசன்கள் பலர் எப்படி ஒரு மதம் போர் அடித்துவிடும்? நீங்கள் உண்மையாக மதத்தை நேசிப்பவர் இல்லை என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ×