என் மலர்
சினிமா செய்திகள்
- 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2025-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து ராமன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதியன்று செய்தித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம் அவர்கள், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமான இவர், 1950 மற்றும் 1960களில் முன்னணி நாயகியாக விளங்கினார். 200-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் தாயார், மாமியார் போன்ற பல்வேறு துணை வேடங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
2025-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து ராமன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவராவார். 1935 ஏப் ரல் 7-ந்தேதி காரைக்குடியில் பிறந்த இவர், 1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராகத் தொடங்கி, பின்னர் 1970 முதல் 1990 வரை தமிழ் சினிமா வில் மிகவும் வெற்றிகரமான வணிக இயக்குநராக உயர்ந்தார். 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ் திரைப்படத்துறைக்கு அளித்த பங்களிப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற இவர், தமிழ் சினிமாவின் வணிக வெற்றியை தீர்மானித்த மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள எம்.என்.ராஜம், எஸ்.பி. முத்துராமன் ஆகிய இருவருக்கும் ரொக்கப் பரிசாக தலா ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் முதலமைச்சரால் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன்.
- நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சமாதானப்படுத்த அமைதியானார்.
'பத்ரி', 'ரோஜாக்கூட்டம்', 'சில்லுனு ஒரு காதல்' போன்ற படங்களில் நடித்தவர் பூமிகா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வரும் பூமிகா 'யுபோரியா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த இதன் பட விழாவில் பூமிகா பங்கேற்று பேசும்போது ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டார்.
"இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல் என்னால் நிம்மதியாக தூங்கமுடியவில்லை. நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன்" என்று பேசிக்கொண்டே தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டார். இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சமாதானப்படுத்த அமைதியானார். இது நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

'யுபோரியா' படம் சிறுமிகள்- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தப்பட்ட உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். குணசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் பூமிகா, சாரா அர்ஜூன், பிருத்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடத்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானதை அடுத்து படவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
குடும்ப சூழ்நிலை காரணமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த நாயகன் அபிஷன் ஜீவிந்த் மேட்ரிமோனி மூலம் ஒரு பெண்ணை ரெஸ்டாரண்டில் பார்க்க செல்கிறார். அங்கு சென்று பார்க்கும் போது தேடி வந்த பெண் தனது பள்ளி தோழி அனஸ்வரா ராஜன் என தெரிய வருகிறது. தொடர்ந்து திருமணம் குறித்து அபிஷனும், அனஸ்வரா ராஜனும் பேசிக் கொண்டிருக்கும் போது அனஸ்வரா ராஜன் திருமணத்துக்கு அபிஷனிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார்.
திருச்சியில் இருவரும் ஒரே பள்ளியில் படித்த போது அபிஷனுக்கு- காவ்யா அனிலுடனும், அனஸ்வராவுக்கு வேறு ஒரு மாணவருடனும் ஒருதலைக் காதலாக மலர்ந்து காதல் கைகூடாமலேயே பள்ளி வாழ்க்கை முடிந்து விடுகிறது. தங்களது பழைய காதலனையும், காதலியையும் தேடி சென்று சந்திப்போம். அப்புறம் நம் திருமணத்தை பற்றி பேசலாம் என்று சொல்லி, இருவரும் முதல் காதலை தேடி செல்கிறார்கள்.
இறுதியில் அபிஷன், அனஸ்வரா ராஜன் இருவரும் முதல் காதலர்களை சந்தித்தார்களா? இருவருக்கும் திருமணம் நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அபிஷன் ஜீவிந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு இளம் இளைஞனின் குழப்பம், கோபம், பொறாமை, தவிப்பு ஆகியவற்றை மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார். முன்னாள் காதலி காவ்யா குழந்தையுடன் அபிஷனை சந்திக்கும் போது அபிஷன் அவரிடம் காதலை சொல்லும் போது ரசிக்க வைக்கிறது.
நாயகியாக நடித்து இருக்கும் அனஸ்வரா ராஜன் அழகான முகபாவனைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன குறும்பு, சேட்டைகள், கோபம் என கண்களாலேயே அதிகம் பேசி ரசிக்க வைத்து இருக்கிறார்.
பள்ளி வாழ்க்கையில் நடந்த முதல் காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மதன். உணர்வோடு மட்டுமின்றி கலகலப்போடும், ரசனையோடும் சொல்லி இருக்கிறார். பள்ளிப்பருவ காதலை இளம் தலைமுறையினரை மட்டுமின்றி அனைவரையும் பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்லும் விதமாக படத்தை கொடுத்து இருக்கிறார்.
சான்ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். 'அவள் வருவாளா' பாடல் மீண்டும் திரையில் ஒலித்தது இனிமை. ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
மாலைமலர் ரேட்டிங்: 3.5 / 5
கல்லூரி காலத்தில் அடிதடி, போலீஸ் வழக்குகள் என பிரச்சனைகளில் சிக்கியிருந்த நாயகன் லெனின், கல்லூரி முடிந்த பிறகு அந்த வாழ்க்கையை முழுமையாக விட்டு விட்டு, தொழில் மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனது பழைய கல்லூரியில் நடைபெறும் மாணவர் தலைவர் தேர்தல் காரணமாக மீண்டும் கல்லூரிக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.
அடிதடியை தவிர்த்து அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் கல்லூரிக்குள் வரும் லெனின், எதிர்பாராத விதமாக கல்லூரி வளாகத்திற்குள் ஒருவரை கொலை செய்து விடுகிறார். ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருப்பதால், இந்த கொலை குற்றம் அவரது எதிர்காலத்தை முற்றிலும் பாதிக்கும் என்பதால், அதிலிருந்து தப்பிக்க தனது காதலியின் உதவியுடன் ஒரு திட்டத்தை உருவாக்குகிறார். இதற்கிடையில், கொலை செய்யப்பட்டவரை தேடி போலீசும், அவரது ஆதரவாளர்களும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைகிறார்கள்.
இறுதியில் லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி தப்பித்தாரா? அவர் யாரை, எதற்காக கொலை செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளம் தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கல்லூரி மாணவர் காலகட்டமும், அதன் பிந்தைய வாழ்க்கையும் என இரண்டு விதமான மனநிலைகளை தோற்றத்திலும் நடிப்பிலும் வேறுபடுத்திக் காட்ட முயன்றிருப்பது திரையில் தெரிகிறது.
நாயகியாக நடித்துள்ள அஸ்மின், தோற்றத்தில் பெரிதாக ஈர்க்காதபோதிலும், அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தை நேர்மையாக செய்திருக்கிறார். திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் அவரது கேரக்டர், இறுதியில் கவனம் ஈர்க்கிறது.
காமெடி கலந்த வில்லத்தனத்துடன் திரையில் தோன்றும் ஆர்.வி.உதயகுமார், தனது நடிப்பால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் குறைந்த காட்சிகளில் வந்தாலும், தங்களுக்கான இடத்தை சரியாகப் பிடித்துள்ளனர்.
கல்லூரி பின்னணியில் அமைந்த கிரைம் – சஸ்பென்ஸ் திரில்லர் கதையை, பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் பொன். பார்த்திபன். குறிப்பிட்ட பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்து எந்த இடத்திலும் தொய்வின்றி படத்தை நகர்த்தியுள்ள இயக்குநர் கே.ஆர். வினோத், இரண்டாம் பாதியை எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக கையாண்டிருக்கிறார்.
ஒரே கல்லூரி வளாகத்தை மையமாகக் கொண்டு கதை நகர்ந்தாலும், வெவ்வேறு கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன். கைலாஷ் மேனின் இசை, பாடல்களாகவும் பின்னணி இசையாகவும் கதைக்கு துணையாக பயணிக்கிறது.
மாலைமலர் ரேட்டிங்: 2.5 / 5
இந்தியில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் 'கூஸ்கோர் பண்டட்' (Ghooskhor Pandat) என்ற படம் உருவாகி உள்ளது.
நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டதும் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கூஸ்கோர் என்றால் லஞ்சம் வாங்குபவர், பண்டட் என்பது பிரமாணரை குறிக்கும் சொல். எனவே படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசுதோஷ் துபே, நெட்பிளிக்ஸ் நிறுவனதிற்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இந்தப் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
லஞ்சம் என்பது தனிநபர் சார்ந்த குற்றம் என்றும், அதை ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இணைப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரைக் குலைப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'கூஸ்கோர் பண்டட்' ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, உத்தரப் பிரதேச காவல்துறை படக்குழுவினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் படக் குழுவினர் மீது லக்னோ காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இந்தத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பிராமண சமூகத்தை ஊழல்வாதிகளாகக் சித்தரிப்பதை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
'பண்டட்' என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தின் புனைபெயர் மட்டுமே என்றும், எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸை அடுத்து , நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.
- படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்துள்ளார்.
- பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார்.
இயக்குனர் நரேந்திர மூர்த்தியின் க்ரைம் த்ரில்லர் படமான '4 விண்டோஸ்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இளையராஜா சேகர் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, சத்யராஜ் , சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் கூல் சுரேஷ், சச்சு, சேது, மாறன், சரண், வையாபுரி, டிஎம் கார்த்திக், ஸ்ரீநிக்தா, அய்ரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார். என்.எஸ். உதய குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டீசரை நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார். டீசரை பார்க்கும்போது ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே சுழல்கிறது என்ற தோற்றத்தை அளிக்கிறது.
- விபத்தை ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜு, விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று, திருவனந்தபுரத்தில் மணியன்பிள்ளை ராஜு ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்தவுடன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக மணியன்பிள்ளை ராஜு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
விபத்து நடந்த போது அவர் மது போதையில் இருந்தாரா என்பதை கண்டறிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
- அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் அஜித் குமார். நடிப்பு மட்டுமின்றி கார் ரேசிங்கிலும் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். கடந்த சில மாதங்களாக மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கார் ரேசிங்கில் ஈடுபட்டுள்ள போதிலும், கிடைக்கும் நேரத்தில் ரசிகர்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கார் ரேசிங்கை மட்டுமின்றி நடிகர் அஜித் குமாரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடுகின்றனர். இந்த நிலையில், செய்தியாளருக்கு சமீபத்தில் பேட்டியளித்த அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆதரவு குறித்த கேள்விக்கு பதலளித்த அஜித் குமார், "இது எனக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, பெரும்பாலான நேரங்களில் ஒருவர் தனது சவுகரியத்தை விட்டு வெளியே வரும்போது, அவர் அப்படிச் செய்யலாமா, கூடாதா என்பது போன்ற பல விமர்சனங்களும் விவாதங்களும் எழுகின்றன. ஆம், நானும் அதை எதிர்கொள்கிறேன்."
"மலேசியா, துபாய் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுக்கு நன்றி. சர்கியூட் ஆஃப் ஸ்பா-வில் என்னை ஆதரிக்க சுமார் 9000 ரசிகர்களும், நர்பர்கிங்கில் 6000 ரசிகர்களும் வந்திருந்தனர். நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு உறுதிப்படுத்துகிறது."
"உண்மையாகச் சொல்லப்போனால், நான் இதை எனக்காகச் செய்யவில்லை. எனக்கு இந்த விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு. என்னால் முடிந்தவரை நீண்ட காலத்திற்கு ஒரு பந்தய ஓட்டுநராக இருக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன்," என்றார்.
- குட்டி மற்றும் சாரா என இரு வேடங்களில் அதர்வா நடிப்பது உறுதியாகி உள்ளது.
- டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, அதர்வா நடித்துள்ள புதிய படத்திற்கு 'வலை' என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அதர்வா குட்டி மற்றும் சாரா என இரு வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. டீசரில் 'பழி வாங்க முடிவு எடுத்துட்டா இரண்டு குழி வெட்டணும். ஒன்று உங்க எதிரிக்கு, மற்றொன்று உங்களுக்கு' என்ற வசனம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
கடற்கரையில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரூபா மஞ்சரி, வாணி போஜன், முரளி ஷர்மா, ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், அர்ஜெய், அருள் டி சங்கர், இமான் அண்ணாச்சி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெப்சி வி.எஸ். பால முரளி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.
காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் இன்று வெளியானது. படம் வெளியான நிலையில், வித் லவ் படக்குழுவினர் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றிற்கு படத்தின் முதல் காட்சியை காண சென்றனர். அப்போது ரசிகர்களிடம் உரையாடிய நடிகை அனஸ்வரா ராஜன், மேடையில் கண்கலங்கினார்.
திரையரங்கில் பேசிய அன்ஸ்வரா ராஜன், "எல்லோருக்கும் வணக்கம், ரொம்ப சந்தோஷமா இருக்கு, என்ன சொல்றதுனு தெரியல. என்னால சொல்ல முடியல. இந்தப் படத்தின் முதல் நாள், முதல் காட்சியை காண வந்த உங்களுக்கு நன்றி. இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுங்க," என்று கூறும் போதே கண்கலங்கினார். உடனே திரையரங்கில் இருந்த ரசிகர்கள் அவரது பெயரை கூறி ஆரவாரம் செய்தனர்.
- ஒரு குடியிருப்பு தளத்தில் நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்களே கதைக்கருவாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
- தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் ஆரி அர்ஜூனன். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் பிரபலமும் ஆனார். இவர் தற்போது நடித்துள்ள படம் 'போர்த் ப்ளோர்' (Fourth Floor).
எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கி மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக ஆரி அர்ஜுனன் நடிக்க, கதாநாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். மேலும், பவித்ரா, இயக்குனர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு குடியிருப்பு தளத்தில் நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்களே கதைக்கருவாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை வருகிற 27-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், 'போர்த் ப்ளோர்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தற்கொலைகளை சுற்றி நிகழும் சம்பவங்களே திரில்லராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- நீலகண்டா திரைப்படம் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
- இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, "மாஸ்டர் மகேந்திரன்" என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்றியுள்ளார்.

இதுதவிர, சமீப காலங்களில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய அளவில் மற்ற மொழி திரைப்படங்களிலும் மகேந்திரன் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் "நீலகண்டா" திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
நீலகண்டா திரைப்படத்தை ஸ்ரீனிவாசுலு மற்றும் வேணு கோபால் சார்பில் எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அனில் இனமடுகு நிர்வாக தயாரிப்பும், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரவன் ஜி குமார் மேற்கொண்டுள்ளார். நீலகண்டா திரைப்படத்திற்கு மார்க் பிரசாந்த் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு மற்றும் சிவகார்த்திக் தன்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை மற்றும் அவனது வாழ்க்கையை புரட்டி போடும் எதிரியை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையமாக கொண்ட அதிரடி ஆக்ஷன் ஜானரில் சொல்லும் கதையம்சம் கொண்டிருக்கிறது.
நடிகர் மகேந்திரனின் திரைப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று வெளியாவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






