என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நட்புன்னா என்னனு தெரியுமா படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் ரம்யா நம்பீசன், அவர் இசையில் பாட பயம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    ரம்யா நம்பீசனுக்கு வாய்ப்புகள் நிறைய வந்தாலும் பீட்சா, சேதுபதி என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நட்புன்னா என்னனு தெரியுமா? படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அவர் அளித்த உற்சாக பேட்டி:-

    பெரிய ஹீரோக்கள், புது ஹீரோக்கள் பாரபட்சம் இல்லாமல் நடிப்பது ஏன்?

    எனக்கு மார்க்கெட் பற்றி கவலை இல்லை. சேதுபதிக்கு பிறகு அதிகமாக அம்மா கதாபாத்திரங்களே வந்தன. இந்த படம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக வந்தது. முற்றிலும் புதியவர்கள், இளைஞர்கள் என்பதால் ஒப்புக்கொண்டேன். அம்மாவாக நடிப்பதை விட இதுபோன்ற வேடங்களை அதிகம் விரும்புகிறேன். பெரிய ஹீரோ படம் என்றாலே அம்மா வேடங்களாக வருகின்றன.

    கவுரவ தோற்றத்தில் அதிகம் நடிப்பது ஏன்?

    என்னை கவுரவ நடிகையாகவே மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எல்லாம் நண்பர்களுக்காக நடித்தவை. இனி குறைத்துக்கொள்வேன். நான் தேர்ந்தெடுத்து எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வேன்.



    அடுத்து?

    விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் படத்தில் நடித்து வருகிறேன்.

    அந்த படத்துக்கு இளையராஜா இசை. அதில் பாட வாய்ப்பு உண்டா?

    அவர் இசையில் பாட எனக்கு பயம். இளையராஜா 75 நிகழ்ச்சியில் அவர் முன்பு பாடியதே நான் செய்த பாக்கியம்.
    பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி - ராஷ்மிகா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு கசிந்துள்ளது.
    கார்த்தி நடிப்பில் தற்போது ‘கைதி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நிக்கிலா விமல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.



    இது தவிர பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஷிமிகா நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘சுல்தான்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக நடித்து வரும் படத்திற்காக சூர்யா வில்லனிடம் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்.
    அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்கிற படத்தில் நடித்து வருகின்றார்.

    இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். விவேக் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானி பயிற்சி கொடுத்து வருகிறார்.



    ஜானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வியட்நாமில் மாஸ்டர் ஜானியுடன் பயிற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
    மாரி 2 படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. இந்த படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

    ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.



    கடந்த ஆண்டு மே மாதம் பிரான்சில் ரிலீஸான இந்த படம், தமிழில் வருகிற ஜூன் 21-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
    பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் விஜய் - அஜித் ஆகியோர் அரசியல் வருகை குறித்து கூறியிருக்கிறார்.
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மான்ஸ்டர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எலியை மையமாக கொண்ட படம் என்பதால் குழந்தைகள், குடும்பங்கள் ரசிக்கின்றனர். இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ’உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்புக்கு 50 ரூபாய் கொடுத்து வேடிக்கை பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் பாலைவனமாகத் தெரிகிறது. ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு எனக்கு நிறைவேறியிருக்கிறது.



    இந்தப் புது பயணம் தொடரும். என் படத்துக்குக் குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதைத் தவறவிட்டோமே என்று குற்ற உணர்வு வருகிறது. எலியால் தொடங்கிய இந்தப் பயணத்தை இதேபோல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.

    அஜித் விஜய் இருவரையும் இயக்கியுள்ளீர்கள் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “விஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாகச் செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி. இருவருக்கும் வெற்றி பெறும் வல்லமை இருக்கிறது, ஆனால், அரசியலுக்கு வருவதுபற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
    லிசா படத்தில் நடித்துள்ள இளம் நடிகர் சாம் ஜோன்ஸ்-க்கு முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கிறார்.
    ஏமாலி படம் மூலம் அறிமுகமான சாம் ஜோன்ஸ், அந்த படத்தில் நன்றாக நடிக்க தெரிந்த இளம் நடிகர் என்று பெயர் எடுத்தார். அடுத்து தர்மபிரபு, லிசா 3டி படங்களில் நடித்துள்ளார். லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், தர்மபிரபுவில் ஜனனிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

    அஞ்சலியுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:-

    லயோலா கல்லூரியில் பி.காம் படித்த எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்போது லிசாவில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன்.



    பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் இளம் கல்லூரி ஜோடியாக நானும் அஞ்சலியும் வருகிறோம். அவர் எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார்.

    தெலுங்கிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். தர்மபிரபுவில் எமலோகத்தில் யோகி பாபுவும் கீழ் உலகத்தில் நானும் கதாநாயகர்களாக இருப்போம். நான் சின்ன பையனாக இருப்பதால் இளம் கதாநாயகன் வாய்ப்புகள் வருகின்றன. அடுத்து 2 படங்கள் பேசி வருகிறேன். விஜய் சேதுபதி போல் அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். சிவகார்த்திகேயன் போல் ரசிகர்களுக்கு நல்ல எண்டர்டெய்னராகவும் விளங்கவேண்டும் என்பதே என் ஆசை’. இவ்வாறு அவர் கூறினார்.
    ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’ என்ற விழிப்புணர்வு படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை பார்த்து பயப்படுவதாக கூறினார்.
    இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’.

    திரைப்படங்களை சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இணையத்தில் பதிவேற்றப்படுவதை தடுப்பதற்காக ஒரு மணி நேர விழிப்புணர்வு படமாக இது உருவாகியுள்ளது.

    இந்த படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், சினிமா நடிகர்களை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுவதாகக் கூறினார்.

    எத்தனை படங்கள் எடுத்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. படம் ரிலீசாவதற்கு ஒருநாள் முன்பே இணையத்தில் வெளியாகிறது. அவன் சொல்லி அடிக்கிறான்.

    இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான். எத்தனை முறை ஆட்சி மாறினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு, வேறு எந்த ஆட்சியாளர்களும் சினிமாவுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.


    அரசியல்வாதிகளுக்கு சினிமாக்காரர்களை பார்த்து பயம். எங்கே நம்ம இடத்துக்கு இவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம். சினிமாக்காரர்களின் ஓட்டு அரசியல்வாதிகளுக்கு தேவையில்லை.

    அதை அவர்கள் கள்ள ஓட்டாகப் போட்டுக் கொள்வார்கள். பைரசி இணையதளத்துக்கு அரசியல்வாதிகள் தான் ஏஜெண்டாக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இல்லை என்றால் அவர்களால் இத்தனை தைரியமாக செயல்பட முடியாது.

    அரசியலில் நல்லவர்கள் இப்போது இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் தவறாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன். தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ளும் என நினைக்கிறேன். கூடிய விரைவில் நாம் எல்லோரும் காவியை கட்டிக்கொண்டு தான் அலையப் போகிறோம்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விஜய் சேதுபதி தயாரிப்பில், பிஜூ விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சென்னை பழனி மார்ஸ் படம் முழுக்க முழுக்க பயணத்தை மையப்படுத்திய காமெடி படமாக உருவாகி இருக்கிறது.
    ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜூ விஸ்வநாத் அடுத்ததாக முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து சென்னை பழனி மார்ஸ் என்ற ட்ராவல் படமொன்றை உருவாக்கி இருக்கிறார். பிஜூ இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பதுடன், ஒளிப்பதிவு, படத்தொகுப்பையும் கவனித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்திற்க வசனம் எழுதியிருக்கிறார்.

    உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும்  நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை மையப்படுத்திய கதையை ப்ளாக் காமெடி ஜானரில் உருவாக்கியிருக்கிறார்.



    பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ.ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     
    நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாக, விக்னேஷ் ஜெயபால் பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


    யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. 

    இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை துபாயில் நடத்தியுள்ளனர்.

    காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதி ராவ் தனக்கு வந்த காதல் கடிதத்தை தனது அம்மாவிடம் காட்டி பெருமைபட்டதாக கூறியுள்ளார்.
    மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதி ராவ். பாலிவுட், கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தனது காதல் அனுபவங்கள் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் 5ம் வகுப்பு படித்தபோது எனக்கு முதன்முதலாக காதல் கடிதம் வந்தது. அப்பொழுது எனக்கு வெறும் 9 வயது தான். என் சீனியர் ஒருவர் இரண்டு பக்கங்கள் எழுதியிருந்தார். அந்த கடிதம் கிடைத்த வேகத்தில் என்னை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டனர். அந்த கடிதத்தில் நான் ரொம்ப அழகாக உள்ளேன் என்று ஏதேதோ எழுதியிருந்தது.



    வீட்டிற்கு சென்ற உடன் அம்மாவிடம் அந்த கடிதத்தை பெருமையாக காட்டினேன். எனக்கு 9 வயசு தானே. அதனால் அந்த கடிதம் பெரிதாக தெரியவில்லை. எனக்கு 21 வயதில் திருமணம் நடைபெற்றது. எனக்கு எப்படி டேட்டிங் செய்வது என்று தெரியவில்லை என நினைக்கிறேன். அதன் பிறகு படங்களில் நடிக்கத் துவங்கினேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் பட்டியலில் தென் இந்தியாவில் ரஜினிகாந்த், விஜய் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
    இந்தியாவில் திரைத்துறை பிரபலங்கள் தான் அதிகம் பிரபலமாக உள்ளனர். அவர்கள் செய்யும் வி‌ஷயங்கள் உடனே தேசிய அளவில் டிரெண்டாகி விடுகின்றன.

    டி.ஆர்.ஏ என்ற தனியார் அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி அதிக நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் 2019 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் மத்தியில் அதிகம் நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில் அகில இந்திய அளவில் அமிதாப் பச்சன் முதல் இடத்திலும் ஆமீர்கான், சல்மான் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். அக்‌‌ஷய் குமார், ஷாருக்கான் முறையே 4-வது, 5-வது இடங்களில் இருக்கின்றனர்.



    நடிகைகளில் தீபிகா படுகோனே முதல் இடத்திலும் காத்ரீனா கைப், மாதுரி தீட்ஷித் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஐஸ்வர்யா ராய்க்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின் பிரியங்கா சோப்ரா இடம்பெற்றுள்ளார்.

    தென்னிந்தியாவில் ரஜினிகாந்த் முதல் இடத்திலும், விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் விக்ரம் உள்ளார்.

    இந்த பட்டியலில் நடிகர் அஜித் பெயர் இடம் பெறவில்லை. கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முதல் இடத்திலும் சச்சின் தெண்டுல்கர் 2-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் தோனி பெயர் இடம் பெறவில்லை.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.
    சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் உருவாக இருந்தது. சிம்புதேவன் - வடிவேலு இடையேயான கருத்து வேறுபாட்டால் படம் பாதியிலேயே நிற்கிறது. இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

    6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.



    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைப்பதாக கூறப்படுகிறது. 


    சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் விரைவில் துவங்க இருப்பதாக சிம்புதேவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ×