search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலையில்லா திண்டாட்டம்"

    • வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது
    • அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது

    வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது. அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    அனந்த நாகேஸ்வரனின் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.
    • யாரும் கலைந்து செல்லாததால் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    போபால்:

    மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் வேலையில்லாத் திண்டாட்டத்தை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடந்தது.

    இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர் காங்கிரசார் கலந்துகொண்டு மாநில அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதையடுத்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். யாரும் கலைந்து செல்லாததால் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    இதுதொடர்பாக, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. அரசு பதவியேற்ற முதல் ஆண்டிலேயே 2 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதி அளித்தது. இதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. ஆனால் ஆன்லைன் சூதாட்டத்தைச் சட்டப்பூர்வமாக்கி உள்ளது. இது வேலை செய்யாது.

    வேலை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.

    • நாம் கனவு காணும் இந்தியாவின் அடையாளம் என்னவாக இருக்கும் என்று இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்?
    • உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப உணர்வுபூர்வமான விஷயங்கள் அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி:

    இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12, ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி நேற்று நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    நாம் கனவு காணும் இந்தியாவின் அடையாளம் என்னவாக இருக்கும் என்று இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்? வாழ்க்கையின் தரமா அல்லது உணர்ச்சிகள் மட்டும்தானா? ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பும் இளைஞர்களா அல்லது வேலை செய்யும் இளைஞர்களா? அன்பா அல்லது வெறுப்பா?

    இன்று, உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப உணர்வுபூர்வமான விஷயங்கள் அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

    அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்துக்கு மத்தியில், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஆனால் அரசாங்கமோ அமிர்த காலம் கொண்டாடுகிறது.

    அதிகாரத்தின் ஆணவத்தில் போதையில் இருக்கும் பேரரசர், அடிப்படை யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்.

    அதனால்தான், இந்த அநீதிப் புயலில் நீதியின் சுடரை எரிய வைக்க, சுவாமி விவேகானந்தரின் போதனைகளிலிருந்து உத்வேகம் பெற்று, நீதிக்கான உரிமை கிடைக்கும் வரை, கோடிக்கணக்கான இளம் 'நியாயோதா'க்கள் என்னுடன் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். உண்மை வெல்லும், நீதி வெல்லும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    • 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பியூன் வேலைக்கான நேர்காணலுக்கு அதிகாலையிலேயே திரண்டு வந்தனர்.
    • 2022-ம் ஆண்டு உள்ள தகவல்களின் படி கேரளாவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 5.1 லட்சமாக உள்ளது.

    கொச்சி:

    இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் என பெயர் பெற்ற கேரளாவில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாக இருப்பதை அங்கு நடந்த ஒரு சம்பவம் எடுத்து காட்டி உள்ளது.

    அங்கு அரசு அலுவலகத்தில் காலியாக உள்ள பியூன் வேலைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கான நேர்காணல் தேர்வு எர்ணாகுளத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் வேலைக்காக திரண்டனர். பியூன் வேலையில் சேருவதற்கு அடிப்படை தகுதி 7-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். ஆனால் நன்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு மாதம் ரூ.23 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

    அரசு வேலை, நல்ல சம்பளம் என்பதால் இந்த வேலைக்காக என்ஜினீயரிங், பி.டெக். படித்து முடித்தவர்கள், பட்டதாரிகள் என 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பியூன் வேலைக்கான நேர்காணலுக்கு அதிகாலையிலேயே திரண்டு வந்தனர்.

    என்ஜினீயரிங், பி.டெக் போன்ற படிப்புகள் படித்து விட்டு வேலை கிடைக்காமல் உணவு டெலிவரி, கால்டாக்சி டிரைவர் வேலைகள் செய்வதற்கு பதிலாக இந்த வேலை பாதுகாப்பானது என்பதாலும், அரசு வேலை என்பதாலும் இதில் சேர ஆர்வமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    நேர்காணலுக்கு வந்திருந்த கொச்சியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் கூறுகையில், கேரள அரசின் மின்வாரியம் போன்ற நிறுவனங்களில் எங்களை நியமித்தால் சம்பளம் இன்னும் அதிகமாக இருக்கும். அதாவது ரூ.30 ஆயிரத்திற்கு மேல் கிடைக்கும் என்பதால் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாக கூறினார்.

    தொடர்ந்து நடைபெற்ற சைக்கிள் ஓட்டும் தேர்வில் 101 பட்டதாரிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களுக்கு இன்னும் சில தேர்வுகள் உள்ளன. அவற்றையும் கடந்த பிறகுதான் தரவரிசை பட்டியல் தயாராகும். அதன்பிறகே வேலை யாருக்கு கிடைக்கும் என்பது அறிவிக்கப்பட உள்ளது.

    பல லட்சங்கள் செலவு செய்து 4 முதல் 5 ஆண்டுகள் வரை பட்டப்படிப்பு படித்து முடித்தாலும், தகுதியான வேலை கிடைக்காததால் சாதாரண பியூன் வேலை என்றாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்துள்ளதை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது. அந்த அளவுக்கு வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022-ம் ஆண்டு உள்ள தகவல்களின் படி கேரளாவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 5.1 லட்சமாக உள்ளது. இதில் 3.2 லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள். மற்ற மாநிலங்களை விட இது அதிகமாகும்.

    • அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
    • கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது.

    பீஜிங்:

    உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் கூறி உள்ளது. இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சுமார் இரு மடங்கு அதிகம் ஆகும்.

    இதற்கு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று ஒரே குழந்தை திட்டம். இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னும் உள்ளது.

    சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் உலகளாவிய வினியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மற்ற நாடுகளின் வெற்றிகரமான முயற்சிகளில் இருந்து சீனா உரிய முடிவை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • உத்தரபிரதேசத்தில் ‘சி’ பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
    • 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    புதுடெல்லி

    நாட்டின் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு மத்திய பா.ஜ.க. அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து சாடி வருகிறது.

    அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேச மாநிலத்தில 'சி' பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வேலையில்லாத இளைஞர்களின் வேதனைக்குரலை அரசு காது கொடுத்து கேட்கிறதா?

    நாங்கள் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளோம். எங்களுக்கு வேறு வழியில்லை.

    கடந்த 8 ஆண்டு கால மத்திய அரசின் பாரம்பரியமாக வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு 8 சதவீதமாம். இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதத்திற்கான மத்திய நிதி அமைச்சக ஆய்வு அறிக்கை, வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×