search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகிங்"

    • கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
    • ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி கல்லூரி முதல்வர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதன்படி ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல் வேண்டும், ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும்.

    ராகிங் புகார் பெட்டி, ஆலோசனை பெட்டியை அமைத்து ராகிங் கொடுமையை அறவே ஒழிக்க முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வரும், துறை தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் கடந்த 2019-ம் ஆண்டின் அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மகாராஷ்டிர அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இருக்கும் ராகிங் தடுப்பு குழுக்களில் அக்கல்லூரியின் தலைமை மற்றும் துறைசார்ந்த தலைவர்கள், பொதுத்துறை முக்கிய தலைவர்கள், போலீஸ் துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர், மாணவர் இருப்பது போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் ராகிங் குழுக்கள் அமைக்க வேண்டும்.

    இதுதொடர்பாக ஆய்வு செய்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து ராகிங் குறித்த அறிக்கை ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார்.
    • ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    கோவை:

    கோவை பீளமேட்டில் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 18 வயது மாணவர் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி மாணவர் விடுதியில் உள்ள அறையில் இருந்தார். அப்போது அதே கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேர் வந்தனர். அவர் 2-ம் ஆண்டு மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 7 மாணவர்களும் 2-ம் ஆண்டு மாணவரை யாரும் இல்லாத அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 7 பேரும் சேர்ந்து 2-ம் ஆண்டு மாணவரை நிர்வாணப்படுத்தி, மொட்டை அடித்து ராகிங் செய்தனர்.

    மேலும் மாணவரை நிர்வாணப்படுத்தி அவர்களது செல்போன்களில் வீடியோ எடுத்து பணம் கொடுக்கவில்லை என்றால் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினர். மேலும் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர்.

    இது குறித்து மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார். மாணவரின் பெற்றோர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் 2-ம் ஆண்டு மாணவரை ராகிங் செய்தது அந்த கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மணிகண்டன் (வயது 20), நித்யானந்தன் (20), ஐயப்பன் (21), தரணிதரன் (20), சந்தோஷ் (21), வெங்கடேஷ் (20), யாஜீஸ் (21) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் 7 மாணவர்கள் மீதும் ராகிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீசார் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைதான மாணவர்கள் 7 பேரையும் வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி செந்தில்ராஜா உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 7 மாணவர்களையும் கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் தடுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களை இதுபோன்ற ராகிங் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல ராகிங் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்கும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் விசாரணையில், முதலாம் ஆண்டு மாணவரை, 2-ம் ஆண்டு மாணவர்கள் தாக்கியது உறுதியானது.
    • போலீசார் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்து மிரட்டிய 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயது மாணவர். இவர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். இரவில் இவரது அறைக்கு அதே கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள், மாணவரை தங்கள் அறைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். இருந்தபோதிலும் சக மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக தங்கள் அறைக்கு இழுத்து சென்றனர்.

    பின்னர் அறைக்குள் பிடித்து தள்ளிவிட்டு அறையை அடைத்தனர். தொடர்ந்து 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரும் சேர்ந்து, முதலாம் ஆண்டு மாணவரிடம், எங்களுக்கு மது குடிக்க பணம் வேண்டும். நீ பணம் வைத்திருக்கிறாய். உடனே பணத்தை தா என்றனர்.

    அவர் அதற்கு என்னிடம் பணம் இல்லை என கூறியதுடன், நான் எதற்கு தர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2-ம் ஆண்டு மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து வாலிபருக்கு மொட்டையடித்து, அவரது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினர்.

    பின்னர் அதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டனர். தொடர்ந்து அதிகாலை வரை தங்கள் அறையில் அடைத்து வைத்து மாணவரை தகாத வார்த்தைகளால் பேசியும், தாக்கியும் உள்ளனர்.

    அதிகாலைக்கு பிறகு அறையை திறந்து விட்டு, இங்கு நடந்தவற்றை வெளியில் சொல்லக்கூடாது. அப்படி கூறினால் உன்னை கொன்றுவிடுவோம் என மிரட்டலும் விடுத்தனர்.

    அவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என மாணவர் அங்கிருந்து தனது அறைக்கு ஓடி வந்தார். பின்னர் தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் போனில் கூறி அழுதார்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர்கள், உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்தனர். தங்கள் மகன் மொட்டை தலையுடன், காயத்துடன் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், முதலாம் ஆண்டு மாணவரை, 2-ம் ஆண்டு மாணவர்கள் தாக்கியது உறுதியானது. இதையடுத்து போலீசார் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்து மிரட்டிய 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது ராக்கிங் சட்ட பிரிவுகள் உட்பட சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவையில் கல்லூரிகளில் ராகிங் என்பது பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 7 மாணவர்கள் சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்து தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஒவ்வொரு ஆண்டும் எடுத்து வருகிறது
    • ராக்கிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஒவ்வொரு ஆண்டும் எடுத்து வருகிறது. அவ்வகையில், நடப்பாண்டும் கல்லூரிகளில் ராக்கிங் இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ராக்கிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்டு 12-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை ஒரு வாரம் ராக்கிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த 4 நாட்களும், ராக்கிங் எதிர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள், கட்டுரை எழுதுதல், விளம்பர பலகை உருவாக்குதல், லோகோ (இலச்சினை) வடிவமைத்தல் போன்ற போட்டிகளை நடத்தி, அதில் மாணவர்கள், கல்லூரி ஊழியர்களை பங்கேற்க செய்ய வேண்டும்.

    போதிய வசதியிருப்பின் கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தலாம். குறும்படம், ஆவணப்படங்களை திரையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை, பல்கலை கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

    • தனது மகனை ராகிங் செய்து தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
    • 20 மாணவர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்து தாக்கிய சம்பவம் கோழிக் கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புள்ளல்லூரை சேர்ந்தவர் முகமது. இவரது மகன் முகமது மிதுலாஜ். இவர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாணவர் முகமது மிதுலாஜ் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரை, அதே கல்லூரியில் படிக்கும் 20 மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்துள்ளனர். மாணவர் அணிந்திருந்த உடை மற்றும் சிகை அலங்காரத்தை குறிப்பிட்டு கேலி-கிண்டலும் செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் கூறியபடி செய்வதற்கு மாணவர் முகமது மிதுலாஜ் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், முகமது மிதுலாஜை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் முகமது மிதுலாஜ் ராகிங் செய்து கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து, குன்ன மங்கலம் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் செய்தார்.

    அனர் தனது புகாரில், தனது மகனை 20 மாண வர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்தது மட்டு மின்றி, கொடூரமாக தாக்கியுள்ளனர். அதில் எனது மகனுக்கு கண் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், மூக்கில் எலும்பு சேதமடைந்து இருப்பதாகவும் கூறியுள்ள அவர், தனது மகனை ராகிங் செய்து தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ஒருவரை, 20 மாணவர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்து தாக்கிய சம்பவம் கோழிக் கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும் ராகிங்கை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    • ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் தங்கப்பதக்கமே பெற்றாலும் பயன் இல்லை.

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த வீடியோ வெளியானது.

    இதுதொடர்பாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.

    கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது சிஎம்சி தரப்பில் வக்கீல் ஆஜராகி கல்லூரியில் ராகிங் குறித்து புகார் வந்ததும் கல்லூரி முதல்வர் விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் ராகிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக போலீசும் வழக்கு பதிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபணமானால் சட்டப்படி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

    கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும் ராகிங்கை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராகிங் தடுப்பு சட்டங்களை கல்லூரி பின்பற்றி வருகிறது என தெரிவித்தனர்.

    இதை கேட்ட நீதிபதிகள் பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் இது போன்று நடக்காமல் முன்கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு. கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் முக்கியம்.

    ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் தங்கப்பதக்கமே பெற்றாலும் பயன் இல்லை. இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கில் போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை 2 நாட்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

    ×