search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பைகள்"

    • 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
    • நேற்று முன் தினம் காங்கயம் நகரப் பகுதியில் 180 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தல் மற்றும் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    காங்கயம் நகர வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் நேற்று காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன், நகராட்சி வருவாய் அலுவலர் ஆனந்தராஜன் ஆகியோர் தலைமையில் காங்கயம் பஸ் நிலையம், கடைவீதி உள்பட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் இந்த நெகிழிப்பை பயன்படுத்தியதற்காக 13 கடைகளுக்கு ரூ.3500 சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர். நேற்று முன் தினம் காங்கயம் நகரப் பகுதியில் 180 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

    • உணவகங்கள், கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • சுமார் 100 கிலோ பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு, சப் இன்ஸ்பெக்டர் சஜிவ் ஆகியோர் தலைமையில், அனைத்து உணவகங்களிலும், கடைகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 100 கிலோ பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின்போது சிவகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின் ராஜாசிங், சுகாதார மேற்பார்வையாளர்கள் குமார், இசக்கி, பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.
    • 9 கடை உரிமையாளர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கண்ணாரதெரு, திருவாரூர் சாலை ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பெயரில் சுகாதார அலுவலர் சுரேஷ் தலைமையில்சு காதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கர் ராஜ், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

    அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் (நெகிழி) பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட 9 கடை உரிமையாளர்களுக்கு என மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

    மேலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவதை மீண்டும் கண்டறியப்பட்டால்கடைகளுக்கு சுகாதார அலுவலர்கள் மூலம் சீல் வைத்து, கடைகளின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என நகராட்சி அலுவலர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளதாக வேலூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது.
    • துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளதாக வேலூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாலிதீன் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,300 அபராதம் விதித்து பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு உலைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் துணிப்பையை அறிமுகப்படுத்தியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு பரவலாக அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்ச துணிப்பை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. விழிப்புணர்வும் பரவலாக இருந்தது.

    இந்தநிலையில் தருமபுரி மாவட்டத்தில் தற்போது திருவிழாக்காலம் என்பதால் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உலைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தர்மபுரி நகரப் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. காய்கறி கடைகள், பிளாட்பார கடைகள், இறைச்சி கடைகள், உணவகங்கள், தள்ளுவண்டி உணவகங்கள், பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் அரசு தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் தாராளமாக புழக்கத்தில் இருந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

    தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் வாங்கி வரும் தின்பண்டங்கள், உணவு வகைகளை தவிர சிகிச்சை பிரிவுக்கு தேவையான மருந்து வகைகள் உள்ளிட்டவைகளை பிளாஸ்டிக் கவர்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    மருத்துவமனையில் தின்பண்டங்கள் உணவு உள்ளிட்டவைகளை பயன்படுத்திய பிறகு பிளாஸ்டிக் பைகளை ஆங்காங்கே வீசி எரிவதால் மருத்துவமனை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகிறது. இது மட்டுமின்றி நகரப் பகுதி மற்றும் தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட நகரங்களில் தெருவில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகளை நிறைந்து காணப்படுகிறது.

    இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:

    இந்தியாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாள் ஒன்றுக்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவை கணக்கிட்டால், எதிர்காலத்தில் இந்தியா பெரும் சுகாதார கேடை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு பெரும்பாலான மளிகைக் கடைகள், உழவர் சந்தை, ஜவுளிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறைந்த நிலையில் இந்த நடைமுறை ஒரு சில மாதங்கள் மட்டுமே பின்பற்றப்பட்டது. பின்னர் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.

    பிளாஸ்டிக் பைகள் பயன் பாட்டை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். மாநில அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் துணிப்பையை அறிமுகப்படுத்தியது.

    தற்போது தர்மபுரி மாவட்டத்தில் ஆடித் திருவிழாக்கள் கொண்டாடப் பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை பயன்படுத்தி விட்டு மக்கள் ஆங்காங்கே வீசிச்செல்கின்றனர். எளிதில் மக்காத இதுபோன்ற பிளாஸ்டிக் பைகள் மண்ணின் வளத்தை சிதைத்து விடும். தருமபுரி நகரப் பகுதிகளிலும் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து 15 வார்டுகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

    • மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பல்வேறு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • கடைகளில் பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகள், தள்ளுவண்டி கடை களில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன் படுத்துவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நெகிழி இல்லா நெல்லை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பல்வேறு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி மாநகரில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட 4 மண்டலங்க ளிலும் மாநகராட்சி சுகாதா ரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்த லின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி முதல் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப் பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாதம் 18-ந்தேதி வரை சுமார் 3 மாத காலங்களில் இந்த மண்டலத்தில் மட்டும் கடைகளில் இருந்து சுமார் 2 டன் வரையிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1 லட்சம் அபராத தொகை யாக வசூலிக்கப்பட்டு மாநகராட்சி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

    இதுபோல் மற்றும் 3 மண்டலங்களிலும் சேர்த்து சுமார் ரூ.1 லட்சம் வரை பிளாஸ்டிக் பைகளுக்கான அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாநகரப் பகுதியில் உள்ள கடைகளில் பணியாளர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
    • 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் அவர்கள் மொத்தமாக பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.

    அதிரடி சோதனை

    இதையடுத்து கமிஷனர் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டுதலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் மாநகரப் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மேஸ்திரி சிவக்குமார், முருகன், பாலமுருகன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மனோஜ், முத்துராஜ், மாரியப்பன், சேக் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் டவுண் சத்தியமூர்த்தி தெரு, தெற்கு ரத வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த வியாபார கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுகாதார அலுவலர் இளங்கோ 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    மேலப்பாளையம்

    அதேபோல் மேலப்பாளையம் சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சங்கர், பரப்புரையாளர்கள் கலை செல்வி, மாயாண்டி, வேலு பிரபாகரன் , மரிய பாக்கியம், எல் சி எப் பணியாளர்கள் வேல்முருகன், முகமது சபி ஆகிய குழுவினர் மேலப்பாளையம் நேருஜி ரோடு, நேதாஜி சாலை பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் 15 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


     


    மேலப்பாளையத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார்,ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பழக்கடையில் சோதனை நடைபெற்றது.

    மேலப்பாளையத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார்,ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பழக்கடையில் சோதனை நடைபெற்றது.

    • நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • சுமார் 247 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரித்த குச்சிப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராம்குமார், துப்புரவு ஆய்வாளர் சையத் காதர் ஆகியோர் அடங்கிய நகராட்சி குழுவினர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், துருகம் சாலை, குளத்து மேட்டு தெரு ஆகிய பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், உணவகம், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 129 கடைகளில் ஆய்வு செய்தனர்.

    இதில் சுமார் 247 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரித்த குச்சிப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவ்வாறு பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த 13 கடை உரிமையாளர்களுக்கு ரூ.14 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது எனவும் வரும் காலங்களில் மீண்டும் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். அப்போது தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
    • 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் .

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றும் முயற்சியாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்த 01.01.2019 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது கன்னி யாகுமரி மாவட் டத்தில் நன்கு குறைந்து வருகிறது. இருப்பினும், சில உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்கும் கடைகள் ஆகியவற்றில் அரசின் தடை ஆணையை மீறி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது தெரியவருகிறது.

    அனைத்து உணவகங்கள் டீ கடைகள் , மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் முதலிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட ஒருமுறை பயன்ப டுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக்கூடாது என இதன்மூலம் எச்ச ரிக்கப்படுகிறது. ஆய்வின் போது, தடையை மீறி அவ்வாறு உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும், 3-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும் என்பது இதன்மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    செய்தித்தாள் முதலிய அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொருட்களை பாதுகாக்கவோ, பொட்டல மிடவோ பயன்படுத்தக்கூ டாது. சூடான வடை, சம்சா போன்ற தின்பண்டங்களை செய்திதாளில் வைத்து எண்ணெய்யை பிழிந்து சாப்பிடும் பொழுது செய்தித்தாளில் படிந்தி ருக்கும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பன், காட்மியம் . தாலேட் போன்ற கடின உலோகங்களும் சேர்ந்து உண்ணும்பொழுது உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.

    அவை தொடர்ச்சியாக உடலில் சேரும்பொழுது ஜீரண மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன .

    எனவே செய்தித்தாள் மற்றும் அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொ ருள்களை சேமித்து வைப்பதோ , பொட்டலமிட்டு வழங்குவதோ மற்றும் உணவு பொருள்களை உண்ண வழங்குவதோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது .

    அவ்வாறு உபயோ கப்படுத்துவது கண்டறியப் பட்டால் அபராதம் விதிக்கப் படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும்.

    டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது, அச்சிடப் பட்ட தாள்களில் வடை, சம்சா கொடுப்பது போன்றவை தொடர்பாக பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம் .

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பையை உபயோகிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பேருராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் முன்னிலை வகித்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை நிறுத்திவிட்டு மஞ்சள் பை உபயோகிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி அமைப்பின் மாநில தலைவர் நம்புதாளை பாரீஸ் தலைமை தாங்கினார். பேருராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் முன்னிலை வகித்தார். பெண்கள் உயர்நிலை பள்ளி ஆசிரியை காஞ்சனாஅனைவரையும் வரவேற்றார். வழக்கறிஞர் ஆசிக், பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி, சமூக ஆர்வலர் எஸ்டியார் சீனிராஜன், மாலிக், தலைமை காவலர் ரமேஷ் உட்பட பலர் மஞ்சள் பைகளின் நன்மைகளையும், நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்கின் தீமைக ளையும் விளக்கி பேசினர்.

    இதில் தொண்டி எவரெஸ்ட் நகைக்கடை யினர் வழங்கிய மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    • உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
    • 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தினா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.இதில் அவிநாசி சாலை, ஆஷா் நகா், தாராபுரம் சாலை, பி.என்.சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தினா்.

    இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய 3 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.மேலும் கெட்டுப்போன கோழி இறைச்சி 4 கிலோ, சாயமேற்றப்பட்ட கோழி இறைச்சி 3 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.மேலும், சுகாதாரமின்றி செயல்பட்ட 4 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    சிவகாசி,

    சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்த காரணமாக சில மாதங்கள் மட்டும் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவில் குறைந்தது.

    மக்கள் துணிப்பைக்கு மாறிக்கொண்டிருந்த நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் நிலை தொடங்கியது. தற்போது தமிழகத்தில் 95 சதவீத கடைகளில் மறுசுழற்சிக்கு வாய்ப்பில்லாத பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    தொழில் நகரமாக விளங்கும் சிவகாசியிலும் பிளாஸ்டிக் கவர் பயன்பாடுகள் அதிகரித்தது. இதை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாண்டியராஜ், முத்து பாண்டி, மேற்பார்வையாளர் முத்துராஜ் மற்றும் ஊழியர்கள் கடைவீதி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ஒரு குடோனில் 500 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உரிமையாளர் ரவீந்திரனுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அதிகாரிகள் சிவகாசி பி.எஸ்.எஸ்.ஏ. ஆறுமுகம் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு 1500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் சந்திரசேகருக்கு ரூ. 20 ஆயிரம் விதிக்கப்பட்டது. சிவகாசியில் நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கிலோ பிளாஸ்டிக் கவர், பொருட்களின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×