search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுகு"

    • மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பல்வேறு வழிபாடுகளை செய்வது வழக்கம்.
    • பரிகார நிவர்த்தி செய்யும் வகையில் கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்துவது என முடிவு செய்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட திம்மராயன்பாளையம், இலுப்பம்பாளையம், வச்சினாம்பாளையம், கிச்சகத்தியூர், மூலத்துறை, பழத்தோட்டம், லிங்காபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன.

    அங்கு அவர்கள் போதிய அளவுக்கு மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பல்வேறு வழிபாடுகளை செய்வது வழக்கம்.

    இந்நிலையில் சிறுமுகை திம்மராயன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியம்மா என்பவரின் தோட்டத்தில் ஒரு கழுகு இறந்த நிலையில் கிடந்தது. பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கழுகின் உடலை பார்வையிட்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று விவசாய நிலத்தில் கழுகு இறந்து கிடப்பது சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களுக்கும் நல்லது இல்லை என்று பொது மக்கள் கருதினர். எனவே இதற்கு பரிகார நிவர்த்தி செய்யும் வகையில் கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்துவது என முடிவு செய்தனர்.

    இதையடுத்து இறந்த கழுகுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கழுகின் உடலை எடுத்து செல்ல பாடை கட்டப்பட்டது. அதில் கழுகை வைத்து தோளில் சுமந்து ஊர்வலமாக பவானி ஆற்றங்கரைக்கு எடுத்து சென்றனர்.

    அங்குள்ள ஒரு பொது இடத்தில் சாஸ்திர சம்பிரதாயபடி கழுகை எரியூட்டி வழிபட்டனர். பின்னர் கழுகின் அஸ்தி பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவர் கூறுகையில் கருடன் (கழுகு) விளைநிலத்தில் இறந்து கிடந்தால் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களில் மழை பொழியாது.

    இதனால் விவசாயம் பாதிக்கப்படும்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விளைநிலத்தில் இறந்து கிடந்த கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்தினோம். பின்னர்தான் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து விவசாயம் செழித்தது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கழுகு இறந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே கழுகுக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்கு நிகழ்ச்சிகளை செய்து தரிசனம் செய்து வழிபட்டு உள்ளோம் என்று கூறினார்.

    • பாம்பை பிடுங்குவதற்காக பெக்கியின் கையை கழுகு கடுமையாக தாக்கியது
    • இரு வழியிலும் தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் கணவர் செய்வதறியாது திகைத்தார்

    வெட்ட வெளியில் நடந்து செல்லும் போது வானிலிருந்து காகிதங்கள், கற்கள் மற்றும் இலைகள் போன்றவை ஒருவர் மேல் விழுவது சகஜம். ஒரு சிலரை மின்னல் தாக்கியதை கேள்விபட்டிருக்கிறோம்.

    ஆனால் அபூர்வமான தாக்குதலுக்கு உள்ளானார் அமெரிக்காவில் ஒரு பெண்.

    அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தின் ஹார்டிண் கவுன்டியிலுள்ள நகரம் ஸில்ஸ்பி. தன் கணவருடன் இங்கு வசித்து வருபவர் பெக்கி ஜோன்ஸ் (64). இவரும் இவர் கணவரும் தங்களுக்கு சொந்தமான பட்டறையில் சில வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது பெக்கி திறந்த வெளியில் நடந்து கொண்டிருந்தார்.

    அப்போது பெக்கியின் மீது வானத்திலிருந்து திடீரென ஏதோ விழுந்தது. என்னவென்று பார்த்த போதுதான் அது ஒரு பாம்பு என அவர் உணர்ந்தார்.

    உடனே பயத்தில், "கடவுளே காப்பாற்று" என அலறியவாறே அவர் அதனை உதறி தள்ள முயற்சித்தார். ஆனால் பாம்பு பெக்கியின் வலது கையை சுற்றி கொண்டு அழுத்தியது. பெக்கி கத்திக் கொண்டே கைகளை காற்றில் உயர தூக்கி உதறிக் கொண்டேயிருந்தார்.

    ஆனால் பாம்பு அவரை விட்டு விலகாமல் அவர் முகத்தை தாக்கியது. அவர் அணிந்திருந்த கண்ணாடியையும் தாக்கியது.

    சிறிது நேரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு பழுப்பு-வெள்ளை நிற கழுகு, பெக்கியின் கையை தாக்கியது.

    இரு வழியிலும் தாக்குதலுக்கு உள்ளானார் பெக்கி. அவர் கணவர் செய்வதறியாது திகைத்தார்.

    தான் கவ்விக் கொண்டு போன பாம்பை தவற விட்டதால் அந்த பாம்பு பெக்கி மேல் விழுந்திருக்கிறது.

    பெக்கியின் கையிலிருந்த தனது உணவான அந்த பாம்பை பிடுங்குவதற்காக கழுகு அவர் கையை, தனது கால் நகங்களால் பிராண்டி, குத்தி காயங்களை ஏற்படுத்தியது.

    ஒரு வழியாக அந்த கழுகு கடைசியில் அவர் கையிலிருந்து அதன் இரையை மீட்டு கொண்டு பறந்தது.

    உடனடியாக அவர் கணவர், பெக்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கழுகின் கால் நகங்களாலும் அலகாலும் ஏற்பட்ட காயங்களுக்கு பெக்கி அங்கு சிகிச்சை பெற்றார். பாம்பு தாக்கியதால் அவர் அணிந்திருந்த கண்ணாடி மிகவும் சேதமடைந்திருந்தது.

    இச்சம்பவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது:

    "இது மிகவும் மோசமான தாக்குதல். நான் இறந்து விடுவேன் என்றே நினைத்தேன். இச்சம்பவம் நடந்ததிலிருந்து எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. பாம்பை கழுகு கவ்வி கொண்டு செல்வதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் இச்சம்பவம் எனக்கு நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் ஒரு புதிய அனுபவம் ஆகும்."

    இவ்வாறு பெக்கி தெரிவித்தார்.

    பாம்பு, கழுகு என இரு வகை உயிரினங்களால் ஒரே நேரத்தில் பெக்கி தாக்கப்பட்டதும் அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் குறித்து பலரும் வியந்து வருகின்றனர்.

    • வண்டலூர் பூங்கா கொண்டு செல்லப்பட்டது
    • ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கழுகுகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரிமாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வந்த ஓகி புயலின் போது காற்றின் திசையால் அடித்து வரப்பட்ட சினேரியஸ் இனத்தை சேர்ந்த அரிய வகை கழுகு ஆசாரிபள்ளம் அருகில் விழுந்து கிடந்துள்ளது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் உடலில் காயத்துடன் பறக்க முடியாத நிலையில் இருந்த இரண்டு வயதான கழுகை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து குணமானதும் அதனை தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பல்லுயிரன பூங்காவில் விசாலமான இரும்பு வலை பின்னிய கூண்டில் விட்டனர். 2 நாள்களுக்கு ஒரு முறை மாமிச இறச்சியும், தண்ணீரும் கொடுத்து 5 வருடமாக பாதுகாத்து வந்தனர்.

    கூட்டமாக வானில் சுதந்திரமாக பறந்து திரியும் கழுகை ஒரே இடத்தில் அடைத்து வைத்திருப்பது அதன் சுதந்திரத்தை பாதிக்கும் என்பதால் அதை கழுகுகள் வாழும் பகுதியில் கொண்டு விட மாவட்ட வனத்துறை முயற்சி மேற்கொண்டு வந்தது.ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூரில் இருக்கும் கழுகுகள் சரணாலயத்தில் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

    பின்பு அதை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் குழுவினர் ஆலோசனை பெற்று அதன் படி திட்டமிடப்பட்டது.சாலை அல்லது ரயில் மூலம் கொண்டு சென்றால் பயண நேரம் அதிகமாகும் இதனால் கழுகின் உயிர் ஆபத்து வந்து விட கூடாது என முடிவு செய்து விமானத்தில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் நாய் பூனை தவிர மற்ற விலங்குகள் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால் தமிழக வனத்துறை மூலம் மத்திய விமான துறை அமைச்சகம் மூலம் பேசி அனுமதி பெறப்பட்டது.

    இதனையடுத்து கழுகை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக பிரத்தியேக பைபரில் ஆன கூண்டு தயார் செய்து அதில் வைத்து கொண்டு செல்ல நடவடிக்கைகள் நேற்று உதயகிரி கோட்டையில் வைத்து நடைபெற்றது.மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலையில் கழுகை கொண்டு செல்ல அது 5 வருடமாக வாழ்ந்து வந்த இடத்தில் உள்ள மண் புளி இலை தரையில் உள்ள புல் ஆகியவற்றை கூண்டுக்குள் வைத்தனர்.பின்னர் கழுகிற்காக அமைக்கபட்ட தண்ணீர் தொட்டி அதனுள் வைக்க பட்டது. கழுகை பராமரித்து வந்த ஊழியர் ராஜா பைபர் கூண்டுக்குள் கொண்டு விட்டார்.

    கோட்டைக்கு வெளியே தயாராக நின்ற ஏசி காரில் பத்திரமாக புறப்பட்டு சென்றது.உதயகிரி கோட்டையில் இருந்து சென்ற கழுகு இன்று மதியம் வண்டலூர் பூங்காவிற்கு சென்று அங்கு 3 நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு நவம்பர் 3-ம் தேதி சென்னை ஏர் இந்தியா விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூரில் உள்ள கழுகுகள் சரணாலயத்தில் ஒப்படைக்க படுகிறது.

    ×