search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணக்கெடுப்பு பணி"

    • மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.
    • 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு முழுவதும் தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    முன்னாள் மாவட்ட வன அலுவலர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பேராசிரியர்கள் அசோக், கீர்த்திவாசன், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, வனத்துறை அலுவலர்கள் ரஞ்சித், இளஞ்செழியன் ஆகியோருடன் தன்னார்வலர்கள், மாணவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.

    இந்த கணக்கெடுப்பில் குமரிப்புறா, மாங்குயில், கதிர்குருவி, அரசவால் ஈப்பிடிப்பான் ஆகிய இப்பகுதிக்கான சிறப்பு அரிய வகை பறவைகள், மயில், மாடப்புறா, மணிப்புறா, செண்பகம், சுடலைகுயில், பொன்முதுகு மரங்கொத்தி உள்பட 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 

    • அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவும் உள்ளது.
    • 5 விதமான தொழில்களில் ஈடுபடக் கூடியவர்களின் சுய விபரங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணியாளர்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவும் உள்ளது.

    திண்டுக்கல் மாநகராட்சி உட்பட்ட பி.வி.தாஸ். காலனி, செல்லாண்டியம்மன் கோவில் வடக்கு தெரு, முனிசிபல் காலனி நெட்டுத்தெரு , சாமியார் தோட்டம், சாஸ்திரி நகர் பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மாநகராட்சியில் 150 நிரந்தர பணியாளர்களும், தனியார் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் 500க்கும் மேற்பட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் தொடர்பான விபரங்கள் கணக்கெடுப்பு பணிகளை மேயர் இளமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன், மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், கவுன்சிலர் கிருபாகரன், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், தங்கவேல், கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பாதாள சாக்கடை திட்டத்தில் பணி புரியும் பணியாளர்கள், கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணியாளர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியாளர்கள் என 5 விதமான தொழில்களில் ஈடுபடக் கூடியவர்களின் சுய விபரங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    அதன்பின் கணக்கெடுப்பு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு திரவ கழிவுகளை அப்புறப்படுத்தும் போது நச்சு வாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    • தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முதுகுளத்தூர்

    மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்ச கத்தின் வழிகாட்டுதலின் பேரில் மக்களியல் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் காந்தி கிராமம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து நடத்தும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பேரூ ராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகரசேதுபதி, கிராமப்புற செவிலியர்கள் இந்திரா, சந்தியா மற்றும் களப்பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

    இதில் குடிநீர் வடிகால், வீட்டின் தன்மை, மக்களின் வாழ்வியல், தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, தடுப்பூசி, ஊட்டச்சத்து, கருவறுதல், குடும்ப கட்டுப் பாடு சேவைகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, சுகா தாரம் மற்றும் சமூக நல திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

    இந்த பணிகள் 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்தார்
    • அடையாள அட்டை பெற தகுதியுடையவர்களா என ஆய்வு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

    மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் துறை அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களின் குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர்.

    அவர்களின் ஊனம் குறித்த தகவல்கள் மேலும் இவர்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவர்களா அல்லது அடையாள அட்டை பெற தகுதியுடையவர்களா என்பதை நேரில் ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்ரிதக்கா பகுதியில் நேற்று வருவாய் கோட்ட அலுவலர் பானு அப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார்.

    துறை அலுவலர்களை கண்காணித்து ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விவரங்களை சேகரித்தார். ஆய்வின்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • 460 வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்துக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி, மற்றும் உடுமலை, அமராவதி என உள்ளிட்ட 6 வனசரகங்கள் உள்ளன.

    இதில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை மற்றும் அரிய வகையான பறவைகளும் என பலதரப்பட்ட வனவிலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டுக்கான மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கும் உடுமலை வனக்கோட்டத்திற்கும் உட்பட்ட 6 வனச்சரகங்களில் 115 நேர்கோட்டுப் பாதை அமைக்கப்பட்டு 460 வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கணக்கெடுப்பு பணியின் போது மாமிச உண்ணி, தாவர உண்ணி சார்ந்த வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    • முதுமலை புலிகள் சரணாலயம், 124 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது.
    • கணக்கெடுப்பு பணி வருகிற 28-ந்தேதி வரை நடக்கும்.

    ஊட்டி,

    தமிழகத்தில் உள்ள சரணாலயங்களில் குறிப்பிடத்தக்கது முதுமலை புலிகள் சரணாலயம். முதுமலை புலிகள் சரணாலயம், 124 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு புலி, வரையாடு, யானை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    முதுமலை சரணாலயத்தில் பருவமழைக்கு முன்பாக வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நடப்பது வழக்கம். இதற்காக 100-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சிகள் தரப்பட்டு உள்ளன.

    முதுமலை புலிகள் சரணாலயத்தில் இன்று காலை முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அப்போது வனவிலங்குகளின் எச்சம், நகக்கீறல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுப்பு அமையும் என்று தெரிகிறது.

    இதுதொடர்பாக முதுமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதுலையில் பருவமழைக்கு முன்பான வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளது. இது வருகிற 28-ந்தேதி வரை நடக்கும். முதுமலை சரணாலயத்தில் பருவமழைக்கு முன்பான கணக்கெடுப்பு பணிகள் முடிந்தபிறகு, இதற்கான அறிக்கை தேசிய புலிகள் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்து உள்ளனர்.

    • பிளாக் கவுண்ட் முறையில் 15 கிலோமீட்டர் நடந்து நேரடியாக யானைகள் கணக்கிடப்படும்.
    • யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு நடைபெறும்.

    உடுமலை :

    ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அளவில் நடைபெறும். அதன்படி தென்னிந்தியாவில் கோவா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் 19ந் தேதி வரை நடைபெறுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுகளிலும் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    முதல் நாளான இன்று பிளாக் கவுண்ட் முறையில் 15 கிலோமீட்டர் நடந்து நேரடியாக யானைகள் கணக்கிடப்படும். நாளை இரண்டு நேர்கோட்டு பாதையில் நடந்து யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு நடைபெறும். நாளை மறு நாள் நீர் நிலைகளுக்கு அருகில் இருந்து நேரடியான முறையில் யானைகளின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்படும் .கணக்கெடுப்பு பயிற்சிக்காக களப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் தரவு சேகரிப்பு புத்தகம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் வனக்கோட்ட வன உதவி பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ் ராம் தலைமையில் இப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் உடுமலை பேட்டை வனச்சரகஅலுவலர், அமராவதி வனச்சரக அலுவலர், கொழுமம் வனச்சரக அலுவலர் மற்றும் வந்தரவு வனத்துறை அலுவலர், உயிரியலாளர் மகேஷ் குமார், வனவர்கள் ,வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வருகிற 13-ந் தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பார்கள்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள, புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கடமான், ராஜநாகம், கருமந்தி, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தாண்டுக்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் சூழலியலாளர் ஸ்ரீதர், உயிரியலாளர் ஆக்னஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம், வனவர் ஜாக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொசுவலை, மழை கோர்ட், டார்ச் லைட், செல்போன் மற்றும் உபகரணங்களை துணை இயக்குனர் ரமேஷ்வரன் கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார். அதன்பின் வனத்துறை ஊழியர்கள் 79-க்கும் மேற்பட்டடோர் அடங்கிய 21 குழுவினர், களக்காடு, திருக்குறுங்குடி , கோதையாறு வனசரகங்களுக்கு சென்று கணக்கெடுப்பு பணியை தொடங்கினர். இவர்கள் வருகிற 13-ந் தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பார்கள்.

    பின்னர் இந்த தகவல்கள் தேசிய புலிகள் ஆணை யத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
    • பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் வருகிற 11.1.2023 வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

    இந்த கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும் பொதுமக்கள் எவரேனும் பள்ளி செல்லா , இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@yahoo.co.in என்ற என்ற இ-மெயில் முகவரி அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி துவங்கியது, இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சிகளிலும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    கொரோனா பாதிப்பு குறைந்த பின் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். மாநில அரசும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுத்து வருகிறது.ஒன்று முதல் பிளஸ் 2 வரை, 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யவும், தொடர்ந்து அனைவரும் கல்வியை தொடரவும், பள்ளி கல்வித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அவ்வகையில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவரை கண்டறிந்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்சி மையம் வாயிலாக கல்வி பயில ஏற்பாடு செய்யப்படுகிறது.

    அதன்படி நடப்பாண்டு மொபைல்ஆப் வாயிலாக இக்கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்காக பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தொடர்ந்து ஒரு மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பள்ளிக்கு செல்லாதவர்கள், இதுவரை பள்ளிக்கே வராத மாணவர்கள், 8-ம் வகுப்புக்கு முன்னரே பள்ளியை விட்டு இடை நின்ற மாணவர்கள் கண்டறியப்படுவர்.இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சிகளிலும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல ெரயில்வே நிலையம், பஸ் நிலையம், உணவகம், மார்க்கெட், குடிசை பகுதியில் உள்ள குழந்தைகள் மீதும் சிறப்புக்கவனம் செலுத்தப்படும். வருகிற 11-ந்தேதி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தங்களுடைய வியாபார இடத்துக்கே வந்து புகைப்படம் எடுத்து கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து உடுமலை நகராட்சித் தலைவா் மு.மத்தீன், ஆணையா் சத்யநாதன் ஆகியோா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவுற்றவுடன் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையை அரசின் பல்வேறு உதவித் திட்டங்களுக்கும், பாரத பிரதமரின் சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வங்கியில் கடனுதவி பெறவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கணக்கெடுப்பு பணிக்கு வியாபாரிகள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, குடியிருப்பு முகவரி குறித்த ஆதாரத்துடன் தயாா் நிலையில் இருக்குமாறும், தங்களுடைய வியாபார இடத்துக்கே வந்து புகைப்படம் எடுத்து கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு நகரமைப்பு பிரிவிலோ அல்லது சமுதாய அமைப்பாளா்களையோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பாலம் அமைய உள்ள இடம், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்.
    • வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலைகளில் இருந்து வரும் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க பி.என்., ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக பி.என்., ரோட்டில் பயணிக்க பல்வேறு ரக வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

    மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கணக்கெடுப்பு, ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா கூறியதாவது:-

    கணக்கெடுப்பு பணி முடிந்து, விரிவான அறிக்கை மற்றும் கருத்துரு தயாரித்து நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு விபரங்களை சமர்பிக்கப்படும். அதன்பின், பாலம் அமைய உள்ள இடம், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்.

    பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் சிக்னலில் இருந்து பாண்டியன் நகர் வரையுள்ள 5 கி.மீ., தூரத்துக்கு உயர்மட்ட பாலம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. பாலம் அமையும் போது வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×