

திண்டுக்கல்:
தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணியாளர்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவும் உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி உட்பட்ட பி.வி.தாஸ். காலனி, செல்லாண்டியம்மன் கோவில் வடக்கு தெரு, முனிசிபல் காலனி நெட்டுத்தெரு , சாமியார் தோட்டம், சாஸ்திரி நகர் பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மாநகராட்சியில் 150 நிரந்தர பணியாளர்களும், தனியார் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் 500க்கும் மேற்பட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் தொடர்பான விபரங்கள் கணக்கெடுப்பு பணிகளை மேயர் இளமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன், மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், கவுன்சிலர் கிருபாகரன், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், தங்கவேல், கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாதாள சாக்கடை திட்டத்தில் பணி புரியும் பணியாளர்கள், கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணியாளர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியாளர்கள் என 5 விதமான தொழில்களில் ஈடுபடக் கூடியவர்களின் சுய விபரங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
அதன்பின் கணக்கெடுப்பு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு திரவ கழிவுகளை அப்புறப்படுத்தும் போது நச்சு வாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.