search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இட ஒதுக்கீடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும்.
    • வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடியிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார்.

    2004-ம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. பாராளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும்.

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

    இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.

    ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். அதை தி.மு.க. விரைவில் உணரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.
    • பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றைப் பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்" என்று பல்கலைக்கழக மானியக்குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்லாயிரக்கணக்கான பணி இடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருந்தார்கள். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 12.12.2022 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்குப் பதில் அளித்த ஒன்றிய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் "பின்னடைவு காலிப் பணியிடங்களையெல்லாம் உடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது என்றும்; 2019-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு பணியிடமும் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.

    அதுமட்டுமின்றி, மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி. பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231 இடங்களும்; 620 இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 இடங்களும்; 1,357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 இடங்களு ம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்றும்; எஸ்.டி. பிரிவினருக்கு அது போலவே 123 பேராசிரியர், 232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.

    ஓ.பி.சி. பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 இடங்களும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 இடங்களும்; 2332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 இடங்களும் நிரப்பப்படவில்லை என்றும், ஐ.ஐ.டி.-களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11,170 ஆசிரியர் பதவிகளில் 4,502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், ஐ.ஐ.எம்.களில் எஸ்.சி. பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்துவிட்டு இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டுவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    அதன் அடிப்படையிலேயே, இப்போது பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு விதிகளை வகுத்திருக்கிறது. பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் தற்குறிகளாக மாற்ற முயற்சிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இதனை வலியுறுத்தி அனைத்து ஜனநாயக சக்திகளும் களமிறங்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் சரியான இட ஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பேட்டியளித்தார்.
    • பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இந்தியா கூட்டணியை பலவீனப் படுத்த நினைக்கிறார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறிய தாவது:-

    நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சரியான இட ஒதுக்கீடு வழங்க முடியும். தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்களை அரசு கொள்ளையடித்து வருவதாக பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவில்கள் அரசின் கட்டுப் பாட்டில் தான் இருந்தன. இந்திய வரலாறு குறித்து மோடிக்கு சரியாக தெரியாது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இந்தியா கூட்டணியை பலவீனப் படுத்த நினைக்கிறார். பட்டாசு பிரச்சினை தொடர்பாக விரைவில் முதல்-அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தமிழகம், பாண்டிச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது. விருது நகர், கன்னியாகுமரி தொகு தியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் அந்த தொகுதி களை ஒதுக்குமாறு வலியு றுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தருமபுரி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
    • தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிட்-இல் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருச்சி Division-களில் Retail Outlet Dealers ஆக பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ப்பட்டுள்ளது. அதில் சிசி-1 எனக் குறிப்பிட்டிருக்கும் பிரிவு களில் தகுதியான முன்னாள் படைவீரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்க www.petrolpumpdealerchayan என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வரும் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். மேலும் விபரங்களுக்கு 0427-2274545, 0427-2274555 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், விண்ணப்பத்திருப்பின் அதன் விவரத்தினை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மருத்துவக்கல்லுரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையில் புதுவை அரசு ஒதுக்கீடாக 370 இடங்கள் உள்ளது.

    இவற்றில் 2023-24 எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தரவரிசை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 162 மாணவர்களும், கேரளாவை சேர்ந்த 36 மாணவர்களும் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இதற்கிடையே இருவேறு மாநிலங்களில் இரட்டை குடியுரிமை அடிப்படையில் தற்போது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கு புதுவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுதொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசையிடம் சமூக அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றுள்ளது புதுவையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இப்பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தந்த மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    • மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்
    • பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    அதேபோல உடற்தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படாததால், தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கி புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.

    மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரைகள் போன்றவை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 26-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

    • மாணவர்களுக்கான கல்வி சேர்க்கை உரிய விதிமுறைக்குட்பட்டு நடைபெற வேண்டும்.
    • கல்லூரிகளின் முதல்வர்களை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    திருப்பூர்

    திருப்பூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநில மாணவரணி செயலாளர் பாலு சுப்பிரமணியம் முன்னிலையில் பல்லடம் அரசு கலைக் கல்லூரி .எல் .ஆர் .ஜி. கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்களை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசாணை 161 விதியின்படி மாணவர்களுக்கான கல்வி சேர்க்கை உரிய விதிமுறைக்குட்பட்டு நடைபெற வேண்டும். அதேபோல் மாணவர்கள் சேர்க்கையின் போது இட ஒதுக்கீட்டு முறையை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    நிகழ்ச்சியின் போது திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் முனைவர் கிரிஷ் சரவணன், மாவட்ட அமைப்பு செயலாளர் மணிகண்ணன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் நந்தகோபால், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், ஊடகப் பேரவை ரவிசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், ஒன்றிய தலைவர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சாமிநாதன், மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.  

    • அலங்கியம் ,தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 5000 கடிதங்கள் முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
    • மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி,ஒன்றிய தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற கோரி அலங்கியம் தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2,000 கடிதங்களை பா.ம.க. அலங்கியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில்மாவட்ட செயலாளர் அ. ரவிச்சந்திரன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அலங்கியம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பிரமணி,ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கவிதா உள்ளிட்ட50க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து அலங்கியம் தபால் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியில் கடிதங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில்,அலங்கியம் ,தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 5000 கடிதங்கள் முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்துஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ெரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு ஒரு நிமிடம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதில் தாராபுரம் நகரச்செயலாளர் பிரவீன்,நகர இளைஞர் அணி குருநாதன், இளைஞர் அணி பொறுப்பாளர் பொன்ராஜ், தாராபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் பொதிகை ரங்கநாதன், நகரத் தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் அமராவதி,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பானுமதி மற்றும் சாரதாமணி,ராஜாமணி,மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி,ஒன்றிய தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற போராட்டம் நடத்தினர்.
    • பா.மக.வினர் காட்டுமன்னார்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று தாபால் நிலையம் வந்தடைந்தனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் ஒன்றிய, நகர பா.ம.க சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவேற்றக் கோரி தமிழக முதல்-அமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தலைவருக்கும் தபால் மூலம் 20 ஆயிரம் மனு அனுப்பும் போராட்டம் காட்டு மன்னார்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் நகர செயலாளர்டாக்டர் அன்பு சோழன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னாதாக பா.மக.வினர் காட்டுமன்னார்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று தாபால் நிலையம் வந்தடைந்தனர். அதன் பின்னர் தபால் நிலைய அதிகாரிகளிடம்சுமார் 20 ஆயிரம் மனுக்களை மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் முன்னிலையில் தபால் தலை ஒட்டிகொடுத்தனர்.

    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் அமர்வு தீர்ப்பளித்தது.
    • உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை கையாண்டு வரும் அஜய்பிரபுவை மூலனூர் பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

     தாராபுரம்:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அளித்த சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் அமர்வு தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் பல்வேறு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் பங்கேற்று தங்கள் வாதங்களை முன் வைத்தனர். அதுபோல திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த வக்கீல் அஜய் பிரபுவும் பங்கேற்றார். எந்தவித பெரிய பின்புலமும் இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை கையாண்டு வரும் அஜய்பிரபுவை மூலனூர் பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    • சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு போதுமான அளவு நியாயமானதுதான்.
    • தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது.

    பாட்னா :

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.

    இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவரும், பீகார் மாநில முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், பாட்னாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் 50 சதவீதம் என்ற இட ஒதுக்கீடு உச்ச வரம்பினை நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு போதுமான அளவு நியாயமானதுதான். நாங்கள் எப்போதுமே இட ஒதுக்கீடுக்கு ஆதரவானவர்கள். ஆனால் 50 சதவீத இட ஒதுக்கீடு என்னும் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இந்த உச்ச வரம்பானது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் (ஓபிசி), மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (இபிசி) மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் வாய்ப்புகளை இழக்கச்செய்கிறது.

    தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (ஓபிசி), மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (இபிசி) அவ்வாறு அவர்களுடைய மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.

    இவ்விரு வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வசதி கிடைப்பதற்கு ஏதுவாக 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பினை உயர்த்தினால் நல்லது.

    பல்வேறு சமூகக்குழுக்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பை புதிதாக மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஆண்டு பிரச்சினையை பிரதமர் மோடியிடம் எடுத்துச்சென்றோம்.

    ஆனால் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. நாங்கள் அந்த கணக்கெடுப்பை நடத்தி இருக்கிறோம். ஆனால் இதை தேசிய அளவிலும் செய்ய வேண்டியது அவசியம். சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது பற்றி சிந்திக்க வேண்டும்.

    இவவாறு அவர் கூறினார்.

    இதுபற்றி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அரவிந்த் குமார் சிங் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், " ஏழைகளான உயர்சாதியினர் இட ஒதுக்கீடு பெறுவதில் மரியாதைக்குரிய முதல்-மந்திரி மகிழ்ச்சியாக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர், அவர்களின் தற்போதைய கூட்டணிக்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளத்தின் மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார். 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு அகற்றப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அரசியல் சாசன வரம்புக்குட்பட்டு பீகாரில் அதைச்செய்யுங்கள். நாங்கள் வரவேற்கிறோம்" என கூறினார்.

    50 சதவீத இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பினை அகற்ற வேண்டும் என்ற குரலை முதலில் எழுப்பியவர் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ. 10 லட்சத்தில் மேஜைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் நமது முதல்வர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், ராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் அருகிலுள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இருக்கைகள் வழங்கும் விழா தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    சேத்தூரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளிக்கு சுண்ணாம்பு அடித்தல், குடிநீர்த் தொட்டி மற்றும் மின் விளக்கு, மின் விசிறி வசதி மற்றும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு பதில் அளித்த எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் மின் விளக்கு , மின் விசிறி வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும், பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர் தொட்டி அமைத்து தரப்படும் என்றும், கல்வி அலுவலரிடம் பேசி விரைவில் ஆண்டு விழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேசிய எம்.எல்.ஏ., முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியகளின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார், அதன்விளைவாக மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி வளர்ச்சி பெற்று மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் நமது முதல்வர்.

    அனைத்து துறையிலும் கல்வியிலும் சிறந்து விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான். அதற்கு முதல்வர் எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பார் என்றார்.

    விழாவில் தலைமை ஆசிரியர்கள் சுந்தரராஜன், சிவகுமாரி, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர் சிங்கப்புலிஅண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரிமாரிச்செல்வம் , ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×