என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதி திட்டம்"

    • முக்கிய நகரங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    • சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது பற்றியும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குண்டு வைப்பதற்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளான சிராஜ், அமீர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேலும் பலர் இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இதனை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது பற்றியும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் உயர் அதிகாரிகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    பொதுமக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    • கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஐதராபாத்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள், விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    இதற்கு பதிலடி தரும் வகையில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் உள்நாட்டில் செயல்படும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

    இதனை தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அதன்படி தெலுங்கானா, ஆந்திர புலனாய்வுத்துறை மற்றும் போலீசாருக்கு பயங்கரவாதிகள் ஐதராபாதில் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து இரு மாநில போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியில் பதுங்கியிருந்த சிராஜ் உர் ரஹ்மான் (வயது 29) என்பவரைக் கைது செய்தனர்.

    அவர் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான அமோனியா, சல்ஃபர், அலுமினியம் தூள் உள்ளிட்டவை கைபற்றப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து ஐதராபாதைச் சேர்ந்த அவரது கூட்டாளி சையது சமீர் (28) கைது செய்யப்பட்டார்.

    ஐதராபாத்தில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து இருவருக்கும் அறிவுறுத்தல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

    இவர்களுக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் அடிப்படையில் இதில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    ஐதராபாத் நகரில் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு முன்பாக நகரின் வெளிப்பகுதியில் முன்கூட்டியே சோதனை அடிப்படையில் குண்டு வெடிப்பை நடத்தவும் இருவரும் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

    போலீசார் கைதான இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    சந்தேக நபர்கள், அந்நிய நபர்கள் நடமாட்டம், சந்தேக செயல்பாடுகள் தங்கள் பகுதியில் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    • போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.
    • ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி கீர்த்தி. இவர் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் எதிரில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடை மேல்வாடகை எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.

    கடை சம்மந்தமாக ராணுவ வீரர் பிரபாகரின் மனைவி கீர்த்தி என்பவருக்கும் ராமுவுக்கும் பிரச்சனை இருந்தாக கூறப்படுகிறது.

    இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றனர்.

    இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார். அதில் நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். கோவில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

    சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மண்டியிட்டு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவை வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

    சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.

    ராமு தரப்பினரை சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் செல்வராஜ் ஆகிய 2 பேரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இது குறித்து மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள வினோத் என்பவருக்கு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் ராணுவ வீரர் கூறியிருப்பதாவது:-

    ஜீவா அடி ஆட்களை ஏன் அழைத்து வரவில்லை. நான் இந்த வீடியோவை வெளியிட்டதை 6 கோடி நபர்கள் பார்த்துள்ளனர்.

    இந்த வீடியோவை சில முக்கிய அரசியல் கட்சியினருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும். மேலும் யாராவது உங்களிடம் கேட்டால் மிகைப்படுத்தி கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்த ஆடியோ வெளியானதால் ராணுவ வீரரின் வழக்கு திசை திரும்பியது. அதற்கு ஏற்ப போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.

    ராணுவ வீரர் மனைவி கீர்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் பிரபாகரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடுக்கம்பாறை வந்ததார். அங்கு மனைவி கீர்த்தியை மாலை 5 மணி அளவில் டிர்சார்ஜ் செய்து அவரது கணவர் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது உடன் பெண் போலீசார் பாதுகாப்புக்காக அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

    கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, தங்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்வார்களோ? என பயந்து பிரபாகரன் பைக்கை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.

    சதி திட்டம் தீட்டியதாக ராணுவ வீரர் பிரபாகரன், அவரது மனைவி கீர்த்தி மற்றும் செல்போனில் பேசிய அவரது நண்பர் வினோத் ஆகியோர் மீது சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் செல்போனில் பேசி சதி திட்டம் தீட்டிய வினோத் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர். 

    • ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.
    • பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றைப் பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்" என்று பல்கலைக்கழக மானியக்குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்லாயிரக்கணக்கான பணி இடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருந்தார்கள். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 12.12.2022 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்குப் பதில் அளித்த ஒன்றிய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் "பின்னடைவு காலிப் பணியிடங்களையெல்லாம் உடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது என்றும்; 2019-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு பணியிடமும் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.

    அதுமட்டுமின்றி, மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி. பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231 இடங்களும்; 620 இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 இடங்களும்; 1,357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 இடங்களு ம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்றும்; எஸ்.டி. பிரிவினருக்கு அது போலவே 123 பேராசிரியர், 232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.

    ஓ.பி.சி. பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 இடங்களும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 இடங்களும்; 2332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 இடங்களும் நிரப்பப்படவில்லை என்றும், ஐ.ஐ.டி.-களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11,170 ஆசிரியர் பதவிகளில் 4,502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், ஐ.ஐ.எம்.களில் எஸ்.சி. பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்துவிட்டு இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டுவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    அதன் அடிப்படையிலேயே, இப்போது பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு விதிகளை வகுத்திருக்கிறது. பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் தற்குறிகளாக மாற்ற முயற்சிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இதனை வலியுறுத்தி அனைத்து ஜனநாயக சக்திகளும் களமிறங்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

    பிரேசிலியா:

    பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி அதிபரான ஜெயிர் போல்சனரோவை தோற்கடித்து, இடதுசாரி வேட்பாளரான லுலா டி சில்வா வெற்றிப் பெற்றார். இதையடுத்து, அவரது தலைமையில் புதிய அரசு அமைந்தது.

    இந்த நிலையில் 2022-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் அதிபர் லுலா டி சில்வா தலைமையிலான அரசை கவிழ்க்க பெரும் சதி நடந்தது தற்போது தெரிய வந்துள்ளது. ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் டி சில்வா, துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மோரேஸ் ஆகியோரை படுகொலை செய்யவும் சதி திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.

    இந்த சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ×