search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்பாவு"

    • அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார்.
    • சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

    'அனைவரும் சமம்' என கூறிய அய்யா வைகுண்டர் சனாதனவாதியா? என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார்.

    திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "1833-ம் ஆண்டு அய்யா வைகுண்டர் அவதரித்தார். அந்த காலகட்டத்தில் அவரது சமூகத்தில் பிறந்தவர்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள தெருவில் செல்ல முடியாது. கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் மார்பில் துணி அணியக் கூடாது. ஆண்கள் தலைப்பாகை கட்டக் கூடாது என்ற நெருக்கடியான காலத்தில் அவர் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள்.

    அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார். சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

    சமத்துவம், சமதர்மம், சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டு மனித இனம் ஒன்று என்ற உயர்ந்த குறிக்கோளை கொண்டு வந்தார். அவருக்கு சனாதான வாதிகளால்தான் துன்பம் வந்தது. அதனை எதிர்த்துப் போராடி சமதர்மத்தை நிலைநாட்டியவர். அவரை சனாதனவாதி என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இதுபோல் கால்டுவெல் வட அயர்லாந்தில் பிறந்து லண்டனில் படித்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் 18 ஆண்டு காலம் படித்தார். 18 மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தார்கள்.

    அதனை மாற்றி திராவிடத்துக்கும், சமஸ்கிருதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, திராவிட மொழி தனி மொழி, உலகில் தோன்றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி முதலில் தோன்றியது என்பதை ஆய்வு செய்து, தமிழில் இருந்துதான் பிற மொழிகள் தோன்றின என்பதை நிரூபித்தார். சொல்வதை கேட்க வேண்டும், இல்லை என்றால் சொந்தமாக தெரிய வேண்டும். இரண்டும் இல்லாமல் ஆளுநர் தவறுதலாக பேசுகிறார்" என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • 1999 ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி அனுமின் நிலையத்தில் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆள்கள் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த தேர்வை ரத்துசெய்ய கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மறறும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த எழுத்துத் தேர்வு நாளை நடக்க உள்ளதாக, அணுமின் நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கூடங்குளத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில், 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நாளை நடக்க உள்ள எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்யாவிடில், தேர்வு நடைபெறும் அணுமின் நிலைய வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நாளை முற்றுகை போராட்டம் அறிவித்ததை அடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது.
    • புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.

    நாகர்கோவில்:

    மாவட்ட அளவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்வளர்த்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரை தாங்கி நிற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படவில்லை, இக்கல்லூரியில் படித்தவர்களுக்கு ஆளுநர் விரைவில் பட்டம் வழங்க வேண்டும்.

    இந்திய அளவில் பெண் கல்வி 28 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழகம் 78 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள்ளது. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
    • உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வபெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினார்.

    கொரோனா வைரஸ் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசும்போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சுமத்தும் வகையில் பேச முயன்றார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் செல்வ பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வபெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினார். ஆனாலும் செல்வபெருந்தகை மீண்டும் சில வார்த்தைகள் பேச முயன்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எடப்பாடி பழனிசாமி பேசும் போது, இவருக்கு இதே வாடிக்கையாகி போய்விட்டது. எங்களை குற்றம் சாட்டி பேசுவதுதான் இவருக்கு வேலையா என்று ஆவேசத்துடன் கூறினார். உடனே அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின் சபை அமைதியானது.

    ×