என் மலர்
நீங்கள் தேடியது "திருவாசகம்"
- திருவாசகப் பாடல்கள் நிகரற்றவை- புண்ணியம் தருபவை.
- அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார்.
மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், திருமோகூர் கோவிலை கடந்து, சுமார் 20 கி.மீ. தொலைவு பயணித்தால், திருவாதவூர் எனும் திருத்தலத்தை அடையலாம். இந்த ஊரில்தான் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்தார். அவர் 'திருவாதவூரார்' என்றும் அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே கல்வி, ஞானத்தில் சிறந்திருந்ததால், அவரை அமைச்சராக்கினார் பாண்டிய மன்னர்.
சோழநாட்டுத் துறைமுகங்களில் கப்பல்களில் வந்திருந்த குதிரைகளை வாங்கி வர திருவாதவூராரை பாண்டிய மன்னர் அனுப்பினார். அவர் புறப்பட்டு சென்றபோது, வழியில் திருப்பெருந்துறை தலத்தில் குருந்த மரத்தடியில் ஞானமே வடிவாய் அமர்ந்திருந்தவரை திருவாதவூரார் வணங்கி வழிபட்டார். அப்போது அங்கு அமர்ந்திருப்பது சிவன்தான் என உணர்ந்தார் திருவாதவூரார்.
அந்த சமயத்தில் வாதவூரார் பாடிய பாடல்களைக் கேட்ட சிவன், "உன் சொற்கள் மாணிக்கத்தை விட மதிப்புமிக்கவை. இனி நீதி மாணிக்கவாசகர் என்று அழைக்கப்படுவாய்" என்று சொல்லி மறைந்தார் சிவன். இதன் பின்னர் துறவியாக மாறினார் மாணிக்கவாசகர். வந்த வேலையை மறந்து, கொண்டு வந்த பொன் பொருட்களை திருப்பெருந்துறை ஆலய திருப்பணிகளுக்குச் செலவிட்டார்.
நாட்கள் கடந்தும் திரும்பாத மாணிக்க வாசகருக்கு மன்னர் ஓலை அனுப்ப, இறைவனைச் சரணடைந்தார் மாணிக்க வாசகர். அப்போது, "ஆடி மாதம் முடிவடைதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று ஓலை அடி" என்ற அசரீரி எழ, அவ்வாறே செய்தார் மாணிக்கவாசகர். ஆடி மாதமாகியும் குதிரைகள் எதுவும் மதுரைக்கு வராததால், சந்தேகம் கொண்ட மன்னரும் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்தார்.
வனத்தில் இருந்து நரிகளைக் குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பினார் சிவன். மாணிக்கவாசகரை விடுதலை செய்தார் மன்னார். அன்றிரவே குதிரைகள் நரிகளாக மாறி ஊளையிட்டன. இதை கண்ட பாண்டிய மன்னர் தன்னை மாணிக்கவாசகர் ஏமாற்றி விட்டார் என்று கடும் கோபம் கொண்டார். மாணிக்க வாசகரை வைகை நதியின்சுடு மணலில் நிறுத்தி மரணத்தண்டனை அளிக்க உத்தரவிட்டார். அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
தவறை உணர்ந்த மன்னர் மாணிக்க வாசகரை அமைச்சர் பதவியில் மீண்டும் நியமித்தார். ஆனால் மாணிக்க வாசகர் அதை நிராகரித்து விட்டு சிதம்பரம் தலத்துக்குச் சென்றார். அங்கு தங்கி இறைவனை எண்ணி பாடல்கள் பாடினார். அதை ஒருவர் ஓலையில் எழுதினார். பின்னர் அவர் 'திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்' என்று எழுதி ஓலைகளைக் கீழ் வைத்து மறைந்தார்.
இதன் மூலம் அந்தப் பாடல்களை சிவபெருமானே விரும்பி எழுதி கொடுத்தது என்பது உறுதியானது. இந்த பாடல்கள்தான் திருவாசகம் என்று அழைக்கப்படுகிறது.
திருவாசகப் பாடல்கள் நிகரற்றவை- புண்ணியம் தருபவை.
எந்த ஒரு சிவன் கோவிலுக்கு சென்றாலும் நம் அனைவருக்கும் நினைவில் வரும் பாடல், "நமச்சிவாய வாழ்க...நாதன் தாழ் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க" என்ற திருவாசகப் பாடல் தான். கேட்கும் போதும் படிக்கும் போதும் பக்தர்களின் மனங்களை மட்டுமின்றி, இறைவனின் உள்ளத்தையே உருக வைக்கும் இந்த திருவாசகம் பாடலை நமக்கு அருளியவர் மாணிக்க வாசகர்.
திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள். மாணிக்கவாசகர் சொல்ல சிவ பெருமானே தன்னுடைய கைப்பட எழுதிய பாடல் என்றால் அது எப்படிப்பட்ட அற்புதமான வரிகளாக இருக்க முடியும்?
திருவாசகம், வெறும் பாடல்கள் தொகுப்பு அல்ல; அது ஒரு பக்தனின் ஆழ்ந்த பக்தி உணர்வுகளின் வெளிப்பாடு. ஒவ்வொரு வரியும் சிவபெருமான் மீதான அன்பு, ஏக்கம், சரணாகதி, மற்றும் தத்துவ ஞானத்தை வெளிப்படுத்தும்.
இந்தத் தொகுப்பு சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துக்களை எளிமையாகவும், உருக்கமாகவும் எடுத்துரைக்கிறது. இறைவனை ஒரு நண்பனாக, குருவாக, காதலனாக, ஏன் ஒரு தாயாகக் கூடப் பாவித்து மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார்.
திருவாசகத்தின் தனிச்சிறப்பே அதன் ஆழ்ந்த அனுபவ வெளிப்பாடுதான். வெறும் பக்திப் பாடல்களாக மட்டுமின்றி, ஆன்மாவின் தேடலையும், இறைவனுடன் கலக்கும் அனுபவத்தையும் இது விவரிக்கிறது. சிவபெருமானின் கருணையையும், பக்தன் படும் பாட்டையும், இறுதியில் அடையும் பேரானந்தத்தையும் திருவாசகம் அழகாகச் சித்தரிக்கிறது. இதனால்தான் மாணிக்கவாசகரை வழிபட சொல்கிறார்கள்.
மற்ற நாயன்மார்களைப் போலன்றி, மாணிக்கவாசகரின் வாழ்க்கை சிவபெருமானுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. சிவபெருமான் குருவாக வந்து அவருக்கு உபதேசம் செய்தது, நரிகளைக் குதிரைகளாக்கியது, இறுதியில் திருவாசகத்தை எழுதி வாங்கிக்கொண்டு மறைந்தது என அவரது வாழ்க்கை முழுவதும் சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் மாணிக்கவாசகரின் சிறப்பம்சங்களாகும்.
திருவாசகத்திற்கு பொருள் என்ன என்று கேட்டதற்கு மாணிக்கவாசகர் அளித்த பதில், நடராஜரா என்பது தான். மாணிக்கவாசகர், சிவபெருமானுடன் சிதம்பரத்தில் ஜோதியாக ஐக்கியமானது ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் என புராணங்களில் சொல்லப்படுகிறது. இந்த நாளையே மாணிக்கவாசகர் குருபூஜை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாணிக்கவாசகர் குருபூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சிவன் கோவில்களில் நடக்கும் மாணிக்கவாசகர் குருபூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். அல்லது சிவ தரிசனம் செய்யலாம். திருநீறு பை, ருத்ராட்சம், திருவாசகர் புத்தகம் ஆகியன வாங்கி தானம் செய்யலாம்.
மாணிக்கவாசகர் குருபூஜையின் அன்று சிவ வழிபாட்டுப் பொருட்களை தானம் செய்வது, சிவ பக்தியைப் பரப்புவதற்கும், ஆன்மீக அறிவைப் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களையும், நேர்மறை அதிர்வுகளையும் கொண்டு வரும். இது இறைவனுடன் நமக்கு இருக்கும் தொடர்பை அதிகப்படுத்தும் செயலாகும்.
அதுவும் சிவ பெருமானுக்கு விருப்பமான, சிவ அம்சமாக கருதப்படும் பொருட்களை தானமாக அளிப்பது சிவ பெருமானின் மனதை மகிழ்வித்து, அவரது அருளை விரைவாக பெற்றுத் தரும்.
மாணிக்கவாசகர் குருபூஜை அன்று முடிந்தவர்கள் திருவாசகத்தை முழுவதுமாக படிக்கலாம். அன்று முடியாவிட்டாலும் வாழ்நாளில் ஒருமுறையாவது திருவாசகத்தை முழுமையாக படிக்க வேண்டும். சிவனின் மீது பக்தியுடன் படித்தால் நிச்சயம் அதற்கான அர்த்தம் புரியும்.
அப்படி அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார். அவரே எழுதிய வரிகள் என்பதால், சிவனே குருவாக இருந்து நமக்கு திருவாசகத்திற்கு பொருள் சொல்வார்கள். சிவனுக்கு அருகிலேயே இருக்கும் உணர்வையும். நமக்குள் சிவன் இருக்கும் உணர்வையும் பெற வேண்டும் என்பவர்கள் நாளை மாணிக்கவாசகர் குருபூஜை நாளில் திருவாசகம் படிப்பது மிகவும் சிறப்பானதாகும். இது அளவற்ற புண்ணியத்தைத் தேடித் தரும்.
பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் எட்டாம் திருமுறைகளாக விளங்குகின்றன. 32 ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஆனி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் சிதம்பரம் தலத்தில் இறைவனோடு கலந்தார். இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் மாணிக்கவாசகரின் குரு பூஜை நடைபெறுகிறது.
திருவாதவூர் மாணிக்க வாசகர் கோவில் 92-ம் ஆண்டு ஆனி மகவிழா நாளை (29.6.2025) காலை 9 மணிக்கு நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. திருவாதவூர் வேதநாயகி சமேத திருமறைநாதர் கோவிலில் இருந்து மாணிக்கவாசக பெருமான் புறப்பாடாகி அவர் பிறந்த வீட்டிற்கு எழுந்தருகிறார். தொடர்ந்து மாணிக்கவாசக பெருமானுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறும்.
மதுரையில் இருந்து திருவாதவூர் செல்ல பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து எண்: 66 பி, எச், ஜே. எம் ஆகிய பேருந்துகளும், மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக திருப்புவனம் செல்லும் பேருந்திலும் (7, 7 ஏ, 7 சி) பயணிக்கலாம். ஒத்தக்கடையில் இருந்து மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது.
- உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை கீழத்தெரு வீரகேரள விநாயகா் கோவிலில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் உலக நன்மை வேண்டி பரிகார ஹோமம் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்டச்செயலாளா் ராமநாத் தலைமை தாங்கினார். திருவாசக கமிட்டி கவுரவத்தலைவா் இசக்கி, செயலாளா் முத்துசிவா ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் குருசாமி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு இலஞ்சி சிவசுப்பிரமணியன் தலைமையில் உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம், பரிகார ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது. பின்னா் வீரகேரளவிநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவா பஞ்சவாத்திய குழுவினரின் பஞ்சவாத்திய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. அதனைதொடா்ந்து திருவாசகி சிவபகவதி தலைமையிலான குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விழா கமிட்டி நிர்வாகிகள் ஆடிட்டர்சங்கரநாராயணன், பிரபு, மாரியப்பன், வேல்முருகன், வேலு, சிவன், சேகர், அருண்குமார் மற்றும் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
- வாதவூர் அடிகள் வரலாற்று முறை திருவாசக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
- திருச்சிற்றம்பலமுடையார் வழிபாட்டு குழுவின் 1500-வது திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது
நாகர்கோவில் :
பாபநாசத்தில் தவத்திரு திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிய சுவாமிகள் தொகுத்து வழங்கிய வாதவூர் அடிகள் வரலாற்று முறை திருவாசக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நாகை திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் நூலினை வெளியிட, மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சிவந்திபுரம் சைவநெறிக்காவலர் சிவகாமி அம்மாள் நடத்தும் திருச்சிற்றம்பலமுடையார் வழிபாட்டு குழுவின் 1500-வது திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான சிவத்தொண்டர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டனர். மேலும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
- முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்
- தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள சைவ சமயத்தை சார்ந்த தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும்.
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு (சுப்பிரமணியன் அல்லது கார்த்திகேயன்) எடுக்கப்படும் விழாவாகும்.
நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
முருகன் தமிழ்க்கடவுள் ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூச விரத முறை
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.
- லண்டன் தேவாலய நியாய சபையில் போப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- தங்கள் மதத்தைப் பரப்ப இந்தியா சென்ற போப் அங்கிருந்த சைவ மதக் கருத்துகளை இங்கே வந்து பரப்பிக் கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.
18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிருஸ்தவ மதத்தைப் பரப்ப இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் ஜி.யூ.போப். இவருக்கு தமிழர்கள் அதிகம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். 600 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த தமிழ் மொழியை உலகறியச் செய்த பெருமகன் அவர் தான். பைபிள் உட்பட பல தத்துவ நூல்களோடு தமிழகம் வந்த போப் மதப் பரப்புரையில் ஈடுபட்டார். தமிழ் மொழியையும் இலக்கணங்களையும் கற்றுத் தெளிந்தார்.
தமிழ் கற்றபின் முழுதாக அவர் படித்த முதல் புத்தகம் திருக்குறள். "இந்த புத்தகத்தில் அறம் பொருள் இன்பம் மட்டுமே உள்ளது. சொர்க்கத்திற்குரிய வீடுபேறு குறித்து எந்த தகவலும் இல்லையே'' எனச் சொன்னார். அப்போது ஒரு புலவர் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்தார்.
போப் அவர்களை திருவாசகம் உலுக்கிவிட்டது. லண்டன் திரும்பிய போப் தன் தலைமை கார்டினலிடம் "நம் மேற்கத்திய தத்துவப் புத்தகங்களை ஒரு தட்டிலும் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வரியை மற்றொரு தட்டிலும் வைத்தால் அது சரியாக இருக்கும்'' என்றார்.
கார்டினல் "அப்படியா.. அந்த வரியைச் சொல்லுங்கள் கேட்கிறேன்'' என்றார். "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க'' என்ற வரியை போப் குறிப்பிட்டார். கார்டினல் வியந்து போற்றிவிட்டு மொத்த திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொன்னார். 1900 வது வருடம் மொழிபெயர்ப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
லண்டன் தேவாலய நியாய சபையில் போப் மீது குற்றம் சாட்டப்பட்டது. தங்கள் மதத்தைப் பரப்ப இந்தியா சென்ற போப் அங்கிருந்த சைவ மதக் கருத்துகளை இங்கே வந்து பரப்பிக் கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.
நீதிபதி [கிருஸ்தவ மதத் தலைவர்] முன்பு போப் நிறுத்தப்பட்டார். விசாரித்த நீதிபதி "அவர் மொழிபெயர்த்த புத்தகத்தைப் படித்துவிட்டு தீர்ப்பு சொல்கிறேன்'' என போப்பிடம் ஒரு பிரிதியைப் பெற்றுக் கொண்டு சென்றார்.
ஒருவாரம் ஒரு வரி விடாமல் படித்த நீதிபதி தேவாலயம் வந்தார். அங்கே போப் நின்றிருந்தார். தொப்பென நீதிபதி, போப்பின் கால்களில் விழுந்துவிட்டார். பின்பு தன் இருக்கையில் அமர்ந்த நீதிபதி "போப் அவர்கள் தான் உண்மையான கிருஸ்தவர்.. அவர் இந்த மதத்திற்கு எதிராக எந்த தவறும் செய்யவில்லை. மிக அருமையான புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பை படித்தாலே பிரம்மிப்பாக இருக்கிறதே.. அதன் மூலமாக தமிழ் மொழியிலே திருவாசகத்தைப் படித்த போப் ஒரு பாக்யவான்.. அவரை இந்த குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்'' என்றார்.
-சதீஸ் காரட் தமிழன்
- திருவதிகை திருத்தலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.
- தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.
திருவதிகை திருத்தலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகப் போகிறது. இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கடைபிடிக்கப்படும் பல செயல்களுக்கு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, திருவதிகை தலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அசுரர்களை அழிக்க சிவ பெருமான் தேரில் ஏறி வந்தார் என்பது வரலாறு. அதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் தேர் செய்து முதல் தேரோட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகே தமிழகத்தில் மற்ற கோவில்களில் தேரோட்டம் நடத்தும் பழக்கம் உருவானது.
தேவாரம், திருவாசகம் பாடல்களை மனம் ஊன்றி படித்தால், நிச்சயம் மனம் உருகும். தேவார பாடல்களை பாடிய திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.
ஆனால் அவர் தேவாரப்பாடல்களை முதன் முதலில் பாடத் தொடங்கியது திருவதிகை தலத்தில்தான். தனக்கு ஏற்பட்ட சூலை நோய் நீங்கியதும் திருநாவுக்கரசர் இத்தலம் ஈசன் மீது முதல் தேவாரப்பாடலைப் பாடினார். இத்தலத்தில் அவர் மொத்தம் 16 பதிகங்கள் பாடினார்.
தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சிவாலயங்கள் ஏராளமாக உள்ளன. பல ஆலயங்கள் கவனிப்பாரின்றி சிதிலமடைந்து விட்டன. தற்போது அந்த நிலை மாறி வருகிறது.
பக்தர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக நமது பழமையான ஆலயங்கள் சீரமைக்கப்பட்டு, நித்திய பூஜைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. புண்ணியம் தரும் இந்த சீரிய பணியை செய்வதற்காக தமிழகத்தின் பல ஊர்களில் `உழவாரக் குழு'க்கள் உள்ளன.
இந்த உழ வார பழக்கத்தை மக்கள் மத்தியில் தோற்று வித்தவர் திருநாவுக்கரசர் ஆவார். அவர் திருவதிகை கோவிலில் முதல் உழவார சேவையை செய்தார். அதன் பிறகே மக்கள் சிவாலயங்களைத் தேடிச் சென்று உழவார பணிகளை செய்யத் தொடங்கினார்கள்.
இப்படி தமிழ்நாட்டில் முக்கியமான மூன்று ஆலய சேவை பழக்கத்துக்கு திருவதிகை தலமே வித்திட்டது. இத்தகையை சிறப்பான தலத்தை தமிழ்நாட்டில் பலரும் அறியாமல் இருப்பது உண்மையிலேயே வேதனைக்குரியது.
புண்ணியங்களை குவித்து, முக்தியை தரும் அரியத்தலமாக இந்த தலம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தடவை அங்கு காலடி எடுத்து வைத்தாலே உன்னதமான மாற்றம் ஏற்படும். அதை பயன்படுத்திக் கொள்வதும், பயன்படுத்தாததும் நமது மனதில்தான் இருக்கிறது.
சுவாதி நட்சத்திர தினத்தன்று வழிபட்டால் சுகம் அதிகரிக்கும் திருவதிகை கோவிலில் ஒவ்வொரு திருவிழாவும் நட்சத்திர அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன. குறிப்பாக சுவாதி நட்சத்திர தினத்தன்று இத்தலத்தில் வழிபாடுகள் செய்வது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
வைகாசி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று தான் சிவபெருமான் தேரில் அமர்ந்து இத்தலம் அமைந்துள்ள பகுதிக்கு வந்து மூன்று அசுரர்களை தன் புன்னகையால் சம்ஹாரம் செய்தார். எனவேதான் சுவாதி நட்சத்திர நாட்களில் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் அனைத்து சுகமும் கிடைக்கும் என்கிறார்கள்.
அது போல ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் நட்சத்திர அடிப்படையில் நடக்கும் திருவிழாக்கள் விபரம் வருமாறு:-
சித்திரையில் அப்பர் பெருமானுக்கு சதய பெரு விழா பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும்.
சித்திரை திருவோணம் நட்சத்திரத்தில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் மற்றும் சோடச உபசார மகா தீபாராதனையை அப்பர் தரிசனம் செய்கிறார்.
வைகாசி மூலம் அன்று திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் உற்சவம் நடைபெறும்.
ஆனி மகம் நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகர் மோட்சம் நிகழ்ச்சி நடைபெறும்..
ஆடி மாதம் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு பூரம் நட்சத்திரத்தில் தேர் உற்சவம் நடைபெறும்.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு மோட்சம் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆவணி: விநாயகர் சதுர்த்தி பூஜை மற்றும் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
புரட்டாசி: நவராத்திரியில் 9 நாட்களும் மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் துர்க்கை மற்றும் வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஐப்பசி: ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அஸ்வினி நட்சத்திரத்தில் அன்னா பிஷேகம் நடைபெறும்.
ஐப்பசி அமாவாசையில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு 108 திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.
கார்த்திகை மாதம்: ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும்.
மார்கழி: மாணிக்கவாசகருக்கு 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று திருவாதிரை அன்று ஸ்ரீ நடராஜர் பெருமான் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
தை உத்திரம் அன்று திலகவதியார் மோட்சம், மாணிக்கவாசகர் ஜென்ம நட்சத்திரம் சிறப்பு பூஜை நடைபெறும்.
பங்குனி உத்திரம் நட்சத்திரத்தில் மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அன்னை பெரியநாயகி திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
கோவில் தோற்றம்
திருவதிகை வீரட்டானேசுவரர் ஆலயத்தில் ஆரம்பத்தில் கொன்றை மரத்தடியில் லிங்கம் மட்டுமே இருந்துள்ளது. இந்த லிங்கம் தோன்றியதற்குப் பல விதமான புராணக் காரணங்கள் கூறப்படுகின்றன. ஆதியில் இவ்விடம் கொன்றை வனமாக இருந்துள்ளது.
`தேவர்களும், அசுரர்களும், பார் கடலை கடைந்து அமிர்தம் எடுத்த போது திருமால் அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்காக மோகினி வடிவம் எடுத்தார். தேவர்களுக்கு கொடுத்து விட்டு தானும் உண்டு ஆனந்த பரவசமாய் இந்த கொன்றை வனத்தை வந்து அடைந்தார்.
மோகினி வடிவில் திருமால் கொன்றை வனத்தில் இருப்பதைக் கண்ட பரமேஸ்வரன் அவர் மீது மோகம்கொண்டு அம்மோகினியைக் கூடி மறைந்தார்.
பின் மோகினி வடிவம் நீங்க திருமால் கெடில நதியில் நீராடி சிவபூஜை மேற் கொண்டார். பூஜையில் மனம் நெகிழ்ந்த பரமேஸ்வரன் பூமியை பிளந்து சுயம்பாக லிங்க வடிவாகத் தோன்றி பெண்ணே உன் தவத்தில் மனம் மகிழ்ந்தோம். உனக்கு வேண்டிய வரத்தை கேள் என்று அருளினார்.
அப்போது மோகினி வடிவில் இருந்த திருமால் பரவசம் அடைந்து சுவாமி இப்பெண் உருவம் நீங்கி என் உண்மை உருவம் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினார். திருமாலுக்கு அவரது உண்மை திருஉருவம் கிடைக்கப்பெற்றது.
இது வீரட்டலிங்கம் தோன்றியதற்காக கூறப்படும் புராண கதையாகும். இவ் ஆலயத்தில் உள்ள மூல லிங்கத்தின் தோற்றம் வரலாற்று சான்றாகவோ, கல்வெட்டுச்சான்றாகவோ இன்றளவும் காண முடியாததாக உள்ளது.
- மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.
- இதை தினமும் படித்து வந்தால் இம்மை, மறுமை பலன்கள் கிடைக்கும்.
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.
இதை தினமும் படித்து வந்தால் இம்மை, மறுமை பலன்கள் கிடைக்கும்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமனிதன்தாள் வாழ்க!
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
வேகங் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்கு விவார் உள் மகிழுங் கோன்கழல்கள் வெல்க!
சிரங்கு விவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க!
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி!
தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி!
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி!
மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி!
சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி!
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை
மகிழச் சிவபுராணந்தன்னை
முந்தை வினைமுழுவதும் ஓயவுரைப்பன்யான்
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயராய்க் கணங்களாய்
வல் அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத் தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்ய விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா பெனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம் விமலா
பொய்யா யின வெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற - மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழுப்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற்போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி
புறந்தோல் போர்த் தெங்கும் புழுஅமுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைனந்துன் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்
நலந்தானில்லாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப்பாரிக்கும் சூரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா வமுதே அளவிலாப் பெருமானே
ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே
நீராயுருகியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந்துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமைனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நாக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப என்று
ஆற்றேன் எம்ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற்பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிகீழ்ப்
பல்லோரு ஏத்தப்பணிந்து.
- ‘‘திருப்பொன்னூஞ்சல்’’ மாணிக்கவாசகரால் இவ்வாலயத்தில் வைத்து, இயற்றிப் பாடப்பெற்ற சிறப்பையும் பெற்றது.
- மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறப் புகழப்பட்டுள்ளது.
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் நீத்தல் வண்ணம், திருப்பொன்னூஞ்சல் பாடியது மட்டுமல்லாமல்,
பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அங்கும் உத்தரகோசமங்கை மன்னா என்றும் பாடியுள்ளார்.
இறைவனும், இறைவியும் பள்ளியறையில் அமர்ந்து பூஜை செய்யும்போது பள்ளியறை பாடல் திரு உத்தரகோசமங்கையில் பாடப் பெற்ற பாடலாகும்.
சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறை பூஜை சமயம் தினந்தோறும் பாடப்பட்டுவரும் ''திருப்பொன்னூஞ்சல்''
மாணிக்கவாசகரால் இவ்வாலயத்தில் வைத்து, இயற்றிப் பாடப்பெற்ற சிறப்பையும் பெற்றது.
மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறப் புகழப்பட்டுள்ளது.
- இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர்.
- திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக போற்றப்படுகிறது.
மனதை உருகச்செய்யும் செய்யுள்களால் இறை வனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்.
விளக்கம்:-
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், எத்தனை மிருகங்கள் உள்ளனவோ அவை அனைத்துமாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லாகவும், அதன் அடியில் வாழும் உயிராகவும், மனிதரவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும், அசைவதும், அசைவற்றதும் கொண்டு உருவான இந்த பிரபஞ்சம் முழுவதும் சென்று, எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்து விட்டேன், எம்பெருமானே.
- திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக போற்றப்படுகிறது.
- 'ஓம்' எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே.
மனதை உருகச்செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படு கிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்தவாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே.
விளக்கம்:-
உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடுபேறு அடைந்தேன். நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் 'ஓம்' எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே. காளையை வாகனமாக வைத்திருப்பவனே. வேதங்கள், 'ஐயா' எனப் பெரிதும் வியந்து கூறி, ஆழமாகவும், பலப்பல தன்மைகளைக் கொண்டு ஆராய்ந்தும். காண முயற்சி செய்கின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே. என் இனிய சிவபெருமானே.
- மனதை உருகச் செய்யும் செய்யுள்களில் இறைவனை போற்றிப் பாடி உள்ளார்.
- பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது.
மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறை வனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை `திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாட லையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தை யும் பார்ப்போம்.
பாடல்:
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான்...
விளக்கம்:-
புதியதாக கறந்த பசும் பாலுடன் கரும்பின் சாறும், நெய்யும் கலந்தால், அதன் சுவை எவ்வளவு தித்திப்பாக இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். அதுபோலத்தான் தன்னுடைய பக்தர்கள் மற்றும் அடியவர்களின் மனதில் தேன் ஊற்றெடுப்பது போல நின்று, அவர்களின் இந்தப் பிறவியை முற்றுப்பெறச் செய்யும் எங்களுடைய சிவபெருமானே.. ஐந்து முகங்களுடன், ஐந்து வண்ணங்களை தாங்கி அருள்பவன் நீ.. தேவர்கள் அனைவரும் உன்னை போற்றி வணங்கும்போது, அவர்களுக்கு அரிதானவராய் மறைந்திருந்து அருள் செய்யும் எம்பெருமானே...
- மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடி உள்ளார்.
- பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது.
மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே.
பொருள்:
மாசில்லாத சிவபெருமானே... ஒருமைப்படாமல் சிதறு கின்ற சிந்தனைகளை கொண்ட மனதால், உன்னிடம் கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்த நிறைந்த அன்பால் கசிந்தும், உள்ளம் உருகியும் நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவன் நான். அப்படிப்பட்ட எனக்கும் அருள்செய்து, இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையாக வந்து, உன்னுடைய நீண்ட அழகிய கழல் அணிந்த திருவடிகளைக் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்கு, பெற்ற தாயை விடவும் அதிகமான அன்பை செலுத்தும் தத்துவப் பொருளே.






