search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaja"

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சுமார் 4 லட்சம் பாட புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன. #Gaja
    சென்னை:

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவ-மாணவிகளின் பாட புத்தகங்கள் மழை தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன. எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களையும் அரசு பாட நூல் கழகம் இலவசமாக வழங்க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    அதனடிப்படையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சுமார் 4 லட்சம் பாட புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளின் பாட புத்தகங்களை இழந்தவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது.

    அதன்படி நாகப்பட்டினத்துக்கு 1 லட்சத்து 57 ஆயிரத்து 485, தஞ்சாவூருக்கு 1 லட்சத்து 61 ஆயிரத்து 175, திருவாரூருக்கு 55 ஆயிரத்து 391, புதுக்கோட்டைக்கு 21 ஆயிரத்து 7 உள்பட 3 லட்சத்து 95 ஆயிரத்து 78 புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வளவு புத்தகங்கள் தேவை என்றாலும் வழங்க தயாராக இருக்கிறோம். போதுமான அளவு புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கஜா புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றில் தண்டவாளத்தில் மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.#GajaCyclone #TrainsCancel
    சென்னை:

    ‘கஜா’ புயல் காரணமாக நேற்று 3 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேளாங்கன்னி வழியாக செல்லக்கூடிய ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    சென்னை எழும்பூரில் இருந்து நேற்று திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் விருதாச்சலம், திருச்சி வழியாக இயக்கப்பட்டன. திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த ரெயில் இரவு தஞ்சாவூரில் நிறுத்தப்பட்டது.

    புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றில் தண்டவாளத்தில் மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கும்பகோணம் மார்க்கம் வழியாக சென்னைக்கு ரெயில்கள் இன்று இயக்கப்படவில்லை. ரெயில் பாதையை ஆய்வு செய்த பிறகு தான் அந்த மார்க்கமாக போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலையில் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் சிதம்பரம், கும்பகோணம் வழியாக செல்லாமல் வாழப்பாடி, விருத்தாச்சலம் வழியாக திருச்சி சென்றது.

    தஞ்சாவூரில் நிறுத்தப்பட்ட திருச்செந்தூர் ரெயில் மீண்டும் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டு விருத்தாச்சலம் வழியாக எழும்பூருக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாமதமாக வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக காலை 11.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரக்கூடிய இந்த ரெயில் வரக்கூடிய நேரம் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று மாலை 4.05 மணிக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் விருத்தாச்சலம் மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

    மேலும் இன்று இரவு தஞ்சாவூர், வேளாங்கன்னி புறப்படக்கூடிய ரெயில்கள் இயக்கப்படுமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் தென்மாவட்டத்தில் இருந்து எழும்பூர் வரக்கூடிய அனைத்து ரெயில்களும் இன்று வந்து சேர்ந்தன.

    இதேபோல கோவையிலிருந்து திருச்சி வழியாக மன்னார்குடிக்கு சென்ற செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

    மதுரையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறை வையம்பட்டி அருகே வந்தபோது காலை 8.30 மணிக்கு மின்சாரம் கிடைக்காததால் நிறுத்தப்பட்டது.

    திருச்சியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்ற கரூர் பயணிகள் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. மதுரை-ராமேஸ்வரம், ராமேஸ்வரம்-மதுரை, திருச்சி-ராமேஸ்வரம், ராமேஸ்வரம்-திருச்சி இடையே ரெயில்கள் இன்று (16-ந்தேதி) ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டது. திருச்சி- மயிலாடுதுறை, தென்காசி பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. #GajaCyclone #TrainsCancel
    கஜா புயல் தாக்கிய பகுதிகளில் தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பாராட்டு தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #GajaCyclone
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

    கஜா புயல் தாக்கிய பகுதிகளில் அரசு மேற்கொள்ளும் மீட்புப்பணிகளுடன் தி.மு.க. தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #DMK #MKStalin #GajaCyclone
    கஜா புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Gaja #MinisterThangamani
    சென்னை:

    கஜா புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்த போது நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்து விழுந்தன.

    இதுபற்றி மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கஜா புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தோம்.

    இதற்காக புயல் பாதித்த திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க இரவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

    புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. பல இடங்களில் பெரிய பெரிய மரங்கள் மின் வயர்கள் மீது விழுந்ததால் கம்பிகள் அறுந்து விழுந்து கிடக்கிறது.

    ஆயிரக்கணக்கான இடங்களில் டிரான்ஸ் பார்மர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

    தஞ்சாவூரில் 5 ஆயிரம் மின் கம்பங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் மின் கம்பங்கள் நாகை மாவட்டத்தில் 4 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது. இவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.

    பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடப்பதால் அதை அகற்றிய பிறகுதான் மின் கம்பங்களை சரி செய்ய முடிகிறது.



    தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் மின் வாரிய ஊழியர்கள் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் நேரடியாக சென்று பணிகளை பார்வையிட்டு வருகிறேன்.

    மின் வினியோகம் சீராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிகளுக்கு முதலில் மின் இணைப்பு கொடுத்து வருகிறோம். அதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எங்களிடம் போதிய மின் கம்பங்கள் இருப்பு உள்ளதால் தேவைப்படும் பகுதிகளுக்கு உடனுக்குடன் மின் கம்பங்களை அனுப்பி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் சத்ய கோபால் கூறியதாவது:-

    புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு 6 மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தது. குடிசை வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ், தகர கொட்டகை வீடுகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாமுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    மொத்தம் உள்ள 471 நிவாரண முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

    மீட்பு குழுவினர் அனைவரும் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #Gaja #MinisterThangamani
    கஜா புயல் திருச்சி, மதுரை, தேனி மாவட்டம் வழியாக மூணாறை கடந்து கொச்சி அரபி கடலில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கும் என்பதால் கேரளாவில் இன்று பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gaja #KeralaRain
    திருவனந்தபுரம்:

    வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை- வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதமும் ஏற்பட்டது.

    கஜா புயல் திருச்சி, மதுரை, தேனி மாவட்டம் வழியாக மூணாறை கடந்து கேரள மாநிலம் கொச்சி அரபி கடலில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இன்று பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.


    கஜா புயல் எதிரொலியாக கேரள மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 8 மணி அளவில் அடைமழையாக மாறி கொட்டித்தீர்த்து வருகிறது. மழையின் போது பலத்த காற்றும் வீசுகிறது. கடலில் ராட்சத அலைகளும் எழுந்து கரையை நோக்கி சீறிப்பாய்கிறது.

    கேரள மாநிலம் கோட்டயம், எர்ணாகுளம், திருவல்லா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கேரளாவில் கனமழை பெய்ததால் அந்த மாநிலம் முழுவதும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது. மழை காரணமாக கேரளாவே வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்தது. அந்த மழை பாதிப்பில் இருந்து கேரள மாநிலம் இன்னும் முழுமையாக மீள முடியவில்லை. இந்த நிலையில் கஜா புயல் கேரளாவை மிரட்ட தொடங்கி உள்ளது. #GajaCyclone #Gaja #KeralaRain
    கஜா புயல் இன்று கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் மரக்காணத்தில் தயார் நிலையில் 1800 மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. #gajacyclone #gaja #rain

    மரக்காணம்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடல் அலையின் சீற்றம் இன்று அதிகமாக காணப்பட்டது. மேலும் மரக்காணம் பகுதியில் இன்று காலை முதல் லேசான மழை தூறிக்கொண்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து மரக்காணத்தை சுற்றியுள்ள எக்கியார்குப்பம், அனு மந்தை குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    மழைகாலங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பனிச்சமேடு, செட்டிக்குப்பம், வசந்த்குப்பம் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர் முகாமிட்டுள்ளனர்.


    கஜா புயல் கரையை கடக்கும்போது மரக்காணம் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையொட்டி மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் 1800 மணல் மூட்டைகள் மற்றும் சிமெண்ட் மூட்டைகள், 5 டன் சவுக்கு கட்டைகள், ஜே.சி.பி. எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குனர் பழனிசாமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பனிச்சமேடு பகுதிக்கு சென்று அங்கு மேற் கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை பார்வையிட்டு பேரிடர் மீட்பு குழு வினருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் தாசில்தார் தன லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, பேரூராட்சி அலுவலர் ராஜீ மற்றும் மரக்காணம் இன்ஸ்பெக்டர் மைக்கெல் இருதயராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #gajacyclone #gaja #rain

    கஜா புயல் இன்றிரவு புதுவை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் புதுவைக்கு வர வேண்டிய பெங்களூரு, ஐதராபாத் விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது. #plane #gaja #CycloneGaja

    புதுச்சேரி:

    கஜா புயல் இன்றிரவு புதுவை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், கனமழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலை எதிர்கொள்ள கடந்த 5 நாட்களாக புதுவை அரசு, மாவட்ட நிர்வாகம் ஆயத்த பணிகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்துள்ளது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். கடலுக்குள் சென்ற மீனவர்களும் கரை திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அனைத்து மீனவர்களும் கரைக்கு திரும்பியுள்ளனர்.

    மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்க வைக்க சமுதாய நலக்கூடம், அரசு பள்ளி ஆகியவை திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

    கஜா புயலையொட்டி 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு புதுவை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுவைக்கு வந்தனர். அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு குழு காரைக்காலுக்கு சென்றுள்ளது. மற்றொரு குழுவினர் புதுவை மீட்பு பணிகளில் ஈடு பட தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு உடனடியாக நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் அரசு அதிகாரிகளுடன் தனித் தனியே ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.

    அரசின் பொதுப்பணித் துறை, மின்துறை, உள்ளாட் சித் துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புயல் தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலையில் அவசர கால செயல் மையமும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதி பாதிப்புகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்களும் துறைவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை புதுவையில் புயலுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்று வீச தொடங்கியது. இன்று அதிகாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் புதுவையே இருண்டது. காலை 10 மணிக்கு மேல் இடியுடன் லேசான மழையும் பெய்ய தொடங்கியது.

    புயல் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. ஒரு மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பியது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    புயல் காரணமாக புதுவை சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம் ஆகியவற்றில் படகு சேவை ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகவும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் புதுவைக்கு வர வேண்டிய பெங்களூரு, ஐதராபாத் விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது.

    கஜா புயல் இன்று இரவு 11 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உணவு, குடிநீர், தேவையான மருந்து பொருட்களை இருப்பு வைத்து கொள்ளும்படியும் வருவாய்த்துறை அறிவுறுத்தி உள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கவும் மின்துறை திட்டமிட்டுள்ளது. #plane #gaja #CycloneGaja 

    கடலூர் மாவட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone #CuddaloreCollector #Anbuselvan
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 19 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 19 இடங்களை தேர்வு செய்து துணை கலெக்டர் தலைமையில் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்தக் குழுக்கள் ஒவ்வொரு பகுதியாக கள ஆய்வு செய்து வெள்ளம் சூழக்கூடிய பகுதியை கண்டறிந்து அந்த மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தங்குமிடம் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு 42 நிரந்தர தங்குமிடம் ஏற்படுத்தி உள்ளோம். கடலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியம் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆபத்துக்களை உணர்ந்து 191 தற்காலிக தங்குமிடம் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதில் பாதிக்கப்படக்கூடிய மக்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவு செய்வதற்கு பொருட்கள் மற்றும் சமையல்காரர்கள், சமைப்பதற்கு பாத்திரம் தயார் நிலையில் உள்ளது.


    கஜா புயல் தாக்குதலை சமாளிக்க கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்.

    கடலூர் மாவட்டத்தை தாக்கினாலும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் 245 ஜே.சி.பி எந்திரம், 167 மரம் அறுக்கும் கருவிகள், 91 ஆயிரம் மணல் மூட்டைகள், மக்களை மீட்கக்கூடிய ரப்பர் படகு, பைபர் படகு தயார் நிலையில் உள்ளது. மேலும் அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து வெள்ளம் சூழ்ந்து மக்களை பாதித்தால் அந்தப் பகுதிகளுக்கு 28 படகுகள் மற்றும் 56 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் சுகாதாரத் துறைமூலமாக மருத்துவ குழுக்கள், 35க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

    இதனைத்தொடர்ந்து புயல் தாக்கிய பின்பு ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிப்பதற்கு சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான அனைத்து மாத்திரை மருந்துகள் கொடுத்துள்ளோம். கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேரம் செயல்படுவதற்கும் அங்கு பணியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் மருத்துவமனைகளில் மின்சார வசதி இல்லை என்றாலும் கண்டிப்பாக மருத்துவமனை மின்சார வசதியுடன் இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மூன்று தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் கடலூரில் ஒரு குழுவும் சிதம்பரத்தில் ஒரு குழுவும் பரங்கிப்பேட்டையில் ஒரு குழுவும் தங்கி உள்ளனர். மேலும் பேரிடர் காலத்தில் மீட்புக் குழுவில் ஈடுபட 117 காவலர்கள் தயார் நிலையில் ஏற்படுத்தி உள்ளோம்.

    இதனால் கடலூர் மாவட்ட நிர்வாகம் அனைத்து பிரச்சனைகளையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளது. ஆகையால் கஜா புயல் பற்றி பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Gaja #GajaCyclone #CuddaloreCollector #Anbuselvan
    கஜா புயல் நாளை நள்ளிரவே தமிழக கடலோர பகுதியை தாக்கும் என்றும் புயல் கரையைக் கடக்கும்போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    சென்னை:

    அந்தமான் அருகே கடந்த வாரம் தீபாவளிக்கு மறுநாள் அதாவது 7-ந்தேதி புதன்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

    கடந்த வாரம் இறுதியில் அது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது. முதலில் அதன் திசை ஒடிசா மாநிலத்தை நோக்கி இருந்தது.

    கடந்த சனிக்கிழமை அதன் திசை சென்னை நோக்கி திரும்பியது. பிறகு அது சென்னைக்கும் நாகைக்கும் இடையே வரும் வகையில் தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் நகர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை அது புயல் சின்னமாக மாறியது. இதையடுத்து அந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது. இது இலங்கை அளித்த பெயராகும்.

    நேற்று மதியம் கஜா புயல் சற்று வலுப்பெற்றது. ஆனால் புயலின் நகரும் திசை மேலும் தென் பகுதி நோக்கி திரும்பியது. இதனால் கஜா புயல் தாக்கும் அபாயத்தில் இருந்து சென்னை மற்றும் வடமாவட்டங்கள் தப்பின.

    நேற்று பிற்பகல் நிலவரப்படி கஜா புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வகையில் நகர்ந்தது. தற்போது அந்த புயல் தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. நேற்று கஜா புயல் மிக, மிக மெல்ல 5 கி.மீ. வேகத்தில்தான் நகர்ந்தது.


    இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கஜா புயல் நகர்வு வேகம் 7 கி.மீட்டராக அதிகரித்தது. ஆனால் 8.30 மணிக்குப் பிறகு 6 கி.மீ. வேகத்தில்தான் நகர்ந்து வருகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி கஜா புயல் சென்னையில் இருந்து கிழக்கே சுமார் 730 கி.மீ. தொலைவில் இருந்தது.

    நாகையில் இருந்து வடகிழக்கே சுமார் 820 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது.

    இன்னும் 24 மணி நேரத்தில் கஜா புயல் அதி தீவிர புயலாக மாறும் என்று அகில இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி கஜா புயல் இன்று அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் கஜா புயலின் நகரும் வேகம் இனி அதிகரிக்கும். இன்று காலை முதல் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புக் காணப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை)யும் கஜா புயல் அதி தீவிர புயலாக நீடிக்கும். நாளை பிற்பகல் கஜா புயல் தமிழக கடலோரத்தை நெருங்கும். எனவே நாளை காலை முதல் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். இயல்பான காற்று வீசும் என்று வானிலை இலாகா கூறி உள்ளது.

    இந்த நிலையில் கஜா புயல் நாளை (புதன்கிழமை) நள்ளிரவே தமிழக கடலோர பகுதியை தாக்கும் என்று தெரிய வந்துள்ளது. கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும். தமிழக கடலோரத்தை கஜா புயல் நெருங்கியதும் அதன் வேகம் அதி தீவிர நிலையில் இருந்து சாதாரண வலு குறைந்த புயலாக மாறி விடும்.

    என்றாலும் புயல் கரையைக் கடக்கும்போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். சில சமயம் காற்றின் வேகம் 100 கி.மீ. ஆகவும் இருக்கும். புயல் கரையை கடக்கும் போது வேகம் குறைவதால் அது நாளை நள்ளிரவு தொடங்கி வியாழக்கிழமை மதியம் வரை கரையைக் கடக்கும்.

    புயல் கரையைக் கடக்கும் போது 7 மாவட்டங்களிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும். சில பகுதிகளில் 20 முதல் 25 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலை இயல்பை விட ஒரு மீட்டர் உயரம் எழும்பும்.


    புயல் கரையைக் கடக்கும்போது கடலூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்யும். கடல் சீற்றம் மிக அதிகமாக இருக்கும். எனவே மீனவர்களும், கடலோரப் பகுதி மக்களும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர் - பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்போது திசை மாற்றம் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால் கஜா புயல் வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா உள்பட வெளிநாட்டு வானிலை ஆய்வு மையங்கள் கூறியுள்ளன. காற்றின் வேகம் மற்றும் திசையைப் பொறுத்து இதிலும் மாற்றம் வரலாம்.

    15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு புயல் கரையை கடந்த பிறகு புயலின் வேகம் குறைந்து விடும். தமிழ்நாட்டுக்குள் தரைப் பகுதிக்குள் வந்ததும் புயல் பலவீனம் அடையும். குறைந்த காற்றழுத்தமாக மாறி விடும்.

    அந்த நிலையில் அந்த குறைந்த காற்றழுத்தம் கேரளா வழியாக 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அரபிக் கடல் பகுதிக்குள் சென்று விடும். அன்றே அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கலைந்து விடும்.

    கஜா புயல் நாளை நள்ளிரவு முதல் நாளை மறுநாள் முற்பகல் வரை கரையை கடக்கும் போது பலத்த மழையும், அதிவேக சூறாவளி காற்றும் வீசும் என்பதால் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 3 மீட்புக் குழுக்கள் நாகை மாவட்டத்துக்கும், 2 குழுக்கள் சிதம்பரத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இது தவிர முதன்முறையாக தன்னார்வலர்களை உள்ளடக்கிய சிறப்புப் படைகள் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. 4400 இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் கூடுதல் அரசு ஊழியர்கள், மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இதற்கிடையே புயல்- மழை பாதிப்புப் பகுதிகளில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனே உதவிகள் செய்ய கடலோர காவல் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 8 கப்பல்கள் இதற்காக தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மூன்று கடலோர காவல் படை விமானங்களும் தயாராக உள்ளன.

    மொத்தத்தில் கஜா புயலை எதிர்கொள்ள 30,500 பேர் தயார் நிலையில் உள்ளனர். வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்க சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

    குடிநீர், உணவுப் பொருட்களும் கை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆவின் பால் வினியோகம் தங்கு தடையின்றி நடக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    மண் மூட்டைகளுடன் அரசு அதிகாரிகளும், மின் உபகரணங்களுடன் மின்சார வாரிய ஊழியர்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். எனவே கஜா புயல் எந்த சீற்றத்துடன் வந்தாலும் சமாளிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    புதுவை அரசு நிர்வாக எந்திரம் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளதாக அம்மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Narayanasamy #GajaCyclone #Gaya
    புதுச்சேரி:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது.

    ‘கஜா’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் கடலூர், ஸ்ரீஹரிகோட்டா இடையில் 14-ந்தேதி கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுவையில் 12 முதல் 15-ந்தேதிவரை பலத்த காற்றும், கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையிலும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுவை அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் காரணமாக தமிழகம், புதுவையில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் நானும், அமைச்சர் ஷாஜகானும் அனைத்துத்துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தினோம்.

    அப்போது புதுவை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பொதுமக்கள் புகார்களுக்கு உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டோம். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், செயலாளர்கள், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, வருவாய், மீன், கல்வி, மருத்துவம், மின்சாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    புதுவையில் தாழ்வான பகுதிகள், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மக்களை மழைக்காலத்தில் அங்கிருந்து அகற்றி சமுதாய கூடம், பள்ளிக்கூடம் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களை உடனே நிவாரண முகாம்களுக்கு அழைத்துச்செல்வர். பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பார்கள். பள்ளிகளில், சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு குடிமைப் பொருள் வழங்கல்துறை மூலம் உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


    அமைச்சர் ஷாஜகான் இன்றும், நாளையும் அனைத்துத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளார்.

    புதுவை அரசு ஏற்கனவே கால்வாய்களை தூர்வாரியுள்ளது. நகர பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்ளை தூர்வாரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மோட்டார் மூலம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் தண்ணீர் தேங்கும் இடங்களான கிருஷ்ணாநகர், பாவாணர் நகர், இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், நெல்லித்தோப்பு, சுப்பையா சிலை ஆகிய பகுதியில் தேங்கும் நீரை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை சார்பில் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மருந்துகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்தமாக புதுவை அரசு கஜா புயலை சமாளிக்கவும், பேரிடர் வராமல் தடுக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    புதுவை அரசு நிர்வாக எந்திரம் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளது. இருப்பினும் அதிக வெள்ளம் ஏற்பட்டால் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை அணுகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Narayanasamy #GajaCyclone #Gaya
    கஜா புயல் நெருங்கி வருவதால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #Gaja #CycloneGaja #TNRains #MinisterJayakumar
    சென்னை:

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனவும், அப்போது தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது. ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தி வருகிறது.

    கஜா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டம் பழையாறு, பூம்புகார், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    மீனவர்களுக்கான அறிவுறுத்தல் பற்றி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    கஜா புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால், அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது.

    புயல் நெருங்கி வருவதால் அனைத்து மீன்பிடி படகுகளையும் பத்திரமாக மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளத்தில்  நிறுத்தி வைக்க வேண்டும்.

    ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற சென்னை மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 160 மீன்பிடி விசைப்படகுகள் பத்திரமாக கரைதிரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மீன்பிடித் துறைமுகம் மற்றும்  மீன் இறங்கு தளங்களுக்கு திரும்பும் விசைப்படகுகளை பத்திரமாக மீட்க அம்மாநில மீன்வளத்துறை இயக்குனரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Gaja #CycloneGaja #TNRains #MinisterJayakumar
    ×