search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "close"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.96 அடியாக உள்ளது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் சென்றாலும் உபரிநீர் வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.96 அடியாக உள்ளது. வினாடிக்கு 2,498 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இதுவரை அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு தொடர்ந்து 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 105 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் சேமிப்பு

    இந்நிலையில் இந்த மாதம் இறுதி வரை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடி வரை மட்டுமே தேக்கி கொள்ள முடியும் என்ற விதி உள்ள போதிலும் தற்பொழுது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குறைந்த மழை அளவு பெய்த காரணத்தினாலும், அதனால் நீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும், இந்த மாதத்தில் இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள காரணத்தினாலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் வெளியேற்றப்படும் நீரினை அணையிலேயே சேமிப்பு செய்து பவானிசாகர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி அதன்மூலம் குடிநீர் பாசனம் மற்றும் இதர பயன்பாட்டுக்களுக்கு வருங்காலத்தில் பயன்ப டுத்தலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் சென்றாலும் உபரிநீர் வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்படும்.

    இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 27.08 அடியாக உள்ளது. நேற்று பெய்த கன மழையால் ஒரே நாளில் குண்டேரிபள்ளம் அணை 3 அடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.43 அடியாக உள்ளது. 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.04 அடியாக உள்ளது.

    கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோவின் தேசிய ஒலிபரப்பை நிறுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. #AllIndiaRadio
    புதுடெல்லி:

    கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோவின் தேசிய ஒலிபரப்பு சேவையை நிறுத்துவதுடன், அங்குள்ள பிராந்திய பயிற்சி மையங்களை மூடவும் பிரசார் பாரதி முடிவு செய்துள்ளது. 



    சிக்கன நடவடிக்கையாக கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங்,  குஜராத்தின் அகமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள அகில இந்திய வானொலி சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #AllIndiaRadio
    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து குடிமகன்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூர் - எரியோடு சாலையில் கரட்டுப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்கும். எனவே இந்த கடையை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    மேலும் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இதையறிந்த அப்பகுதி குடிமகன்கள் விரக்தியடைந்தனர். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் திண்டுக்கல் மற்றும் காணப்பாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது குடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த கடையை மூடக் கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், மது ஒழிப்பு என்பது வெறும் கண்துடைப்பே. நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோதும் சிக்கன் மற்றும் பெட்டிக்கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை கொள்முதல் செய்து ரூ.200 வரை விற்பனை செய்து வந்தனர்.

    அப்போதும் குடிமகன்கள் இதே பகுதியில்தான் சுற்றித் திரிந்தனர். அதற்கெல்லாம் கேள்வி கேட்காமல் அரசு சார்பில் திறக்கப்படும் டாஸ்மாக் கடையை மற்றும் எதிர்க்கின்றனர். கடுமையான உடல் உழைப்பால் அசதி ஏற்படுவதால் மது அருந்துகிறோம். யாரையும் தொந்தரவு செய்யமாட்டோம். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். #BanSterlite #MKStalin
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என காரசாரமாக கூறினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது. 

    அரசாணை வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும்  என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கடந்த 2013ல் நாங்கள் ஆலையை மூடுவதுபோல் மூடுகிறோம். நீங்கள் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்று ஆலையை திறந்து கொள்ளுங்கள் என்ற கண் துடைப்பு நாடகத்தை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் நடத்தியதை போல், இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் முதலமைச்சருக்கு உண்மையிலேயே நல்லெண்ணம் இருக்கிறது என்றால் உரிய சட்டமுறைகளின் படியும், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டியும் ஆலையின் பாதிப்புகளை அரசு ஆணையில் பட்டியலிட்டு உத்தரவிடுவதே உரிய தீர்வாக அமையும் என பதிவிட்டுள்ளார். #BanSterlite #MKStalin
    தூத்துக்குடியில் 13 பேர் மரணத்திற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நடத்த விடமாட்டோம் என காயம் அடைந்த பாதிரியார் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூட்டப்புளியைச் சேர்ந்த பாதிரியார் லியோ ஜெயசீலன் (வயது 70) என்பவர் காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களோடு கலந்து கொண்டு அந்த ஆலைக்கு எதிராக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டேன். மில்லர்புரம் பகுதியில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மக்களோடு நடந்து சென்றேன்.

    கலெக்டர் அலுவலகத்தில் சென்றபோது போலீசார் தடியடி நடத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டனர். இது மிகவும் துயரமானது. நான் துப்பாக்கியால் சுடப்பட்ட போது, மக்கள் நன்மைக்காக போராடுகிறோம். இப்படி துப்பாக்கியால் சுடுகிறார்களே! என்று வேதனை அடைந்தேன். காயம் அடைந்த என்னை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த ஸ்டெர்லைட் ஆலை மக்களை விட்டு அகன்று செல்ல வேண்டும். ஆலை மூடப்பட வேண்டும். இந்த அரசு தங்களின் பதவிகளை தக்க வைப்பதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரசு ஆதரவு இருப்பதால், இந்த ஆலையை நடத்தியே தீருவேன் என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். விவசாயத்தை அழித்து, 13 பேர் சாவுக்கு காரணமான இந்த ஆலையை நாங்கள் நடத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அமைதி பேரணி நடத்திய பொதுமக்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக காவல்துறையின் இந்த செயலை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் சேலம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும் மக்களை காக்க வேண்டிய அரசுகள் கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்ததை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், உடனடியாக குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு நீதி விசாரணை நடத்தி, இதில், தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார், எதற்காக உத்தரவிட்டனர் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

    சிவகங்கை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன. சிவகங்கை நகரில் பஸ் நிலையம், மார்க்கெட் மற்றும் முக்கிய இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    நகர் பகுதியில் அ.தி.மு.க. நகர பொருளாளர் முஸ்தபா தனக்கு சொந்தமான டீக்கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்தன் உள்பட சிலர் கடையை அடைக்குமாறு வலியுறுத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்தப் பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வினர் திரண்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிவகங்கை நகரில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளான காளையார் கோவில், தேவகோட்டை, காரைக்குடி, கல்லல் ஆகிய பகுதிகளில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மானாமதுரையில் புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை, சுந்தரபுரம் கடை வீதி ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பி உள்ளார்.
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதும், அதில் 12 பேர் பலியானதும், பலர் படுகாயம் அடைந்ததும் நெஞ்சை பதற செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இப்படி ஒரு அராஜக போக்கை போலீசார் நடத்தியிருப்பதை கடுமையான கண்டிக்கிறோம்.



    மத்திய-மாநில அரசுகளுக்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். போராட்டத்தில் படுகாயம் அடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளித்து மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் ஆதரவு இன்றி எந்தவொரு திட்டத்தையும் அமல்படுத்த அரசாங்கத்தால் முடியாது. எனவே இனியாவது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. எனவே இனியும் இந்த அ.தி.மு.க. அரசு ஆட்சியில் தொடராத வகையில் கலைக்கப்பட வேண்டும். அதற்கான முக்கிய முடிவுகளை தமிழக கவர்னர் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்த அனைத்துக் கட்சி தலைவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். #SterliteProtest #BanSterlite
    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றைய போராட்டத்தில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராடக்காரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-



    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    ஒரு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதற்கு அரசின் அணுகுமுறையே காரணம் ஆகும். தூத்துக்குடியில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிகழ்வுகள் துரதிருஷ்டவசமானவை. இவற்றுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

    தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும் தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:-

    ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு துப்பாக்கி சூடு மூலம் தீர்வுகாண முடியாது. இது ஜனநாயக விரோதச் செயலாகும். போராட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவும், பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதியின் மூலம் உரிய நீதி விசாரணையை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியதைப் போல தமிழக காவல்துறையும் மனித உயிர்களைப் பலிவாங்கி உள்ளது. உயிர்ப்பலி வாங்கிய துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட வேண்டும்.

    தமிழக அரசு ஏவிய காவல்துறையின் பாசிச அடக்கு முறையை எதிர்த்து நீதி கேட்டு அறப்போராட்டம் இன்னும் வீறுகொண்டு எழும் என்பதையும், மக்கள் உரிமைக் கிளர்ச்சியை நசுக்க முடியாது என்பதையும் திட்டவட்ட மாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக பொதுமக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு இப்பிரச்சினைக்கு நல்ல முடிவு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த்:-

    பொதுமக்களுக்கு பாதிப்பு என்று தெரிந்தும் அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர்க்காமல் தமிழக அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுவதும், காலம் தாழ்த்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஆளும் அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் இதில் முழுக்கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்:-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்துத் தவறுகளுக்கும் காரணம். இதில், குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால் இப்பொழுது அரசின் ஆணையினால். அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    தூத்துக்குடியில் போராடுகிற மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாறாக, ஆலை முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் போராடியவர்களை காவல்துறையினர் பெண்கள், குழந்தைகள் அனைவரின் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி ஓட, ஓட விரட்டியடித்துள்ளனர். கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியதோடு மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சூட்டில் சிலர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமுற்றுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-

    பொதுமக்களுக்கு பெருந்தீங்கு விளைவித்து வருகிற ஆலையை இயக்க அனுமதி அளித்து பாதுகாப்பும் தந்து கொண்டிருக்கிற மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, ஆலையை நிரந்தரமாக மூடிவிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வற்புறுத்துகிறது.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

    மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மக்கள் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார்:-

    பல்லாயிரக்கணக்கில் திரளும் மக்கள் பல லட்சக்கணக் கில் திரள்வதற்கு முன்பாக அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசின் சார்பில் வழங்கிட வேண்டும். உயிர்களை துப்பாக்கி சூட்டில் பறித்த எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.நாராயணன்:-

    பொதுமக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    கொந்தளிக்கும் மனநிலையில் உள்ள தூத்துக்குடி மக்களின் இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை இந்த அரசு நிரந்தரமாக மூடுவதுதான். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை மக்கள் சக்தியே பெரியது என்பதை உணர்த்தும் வகையில் உண்ணா விரதப் போராட்டம் நடை பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

    எந்த மக்கள் போராட்டத்திற்கு தீர்வுகாண முடியாத தமிழக அரசு தனது அதிகாரத்தின் மூலமாக இவ்வாறு மக்கள் மீது வன்முறையை காட்டுவது காட்டுமிராண்டித்தனமானது. சகித்துக்கொள்ள முடியாது. தமிழக அரசின் சர்வாதிகார இந்த நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இதேபோல், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச் செயலாளர் ஆ.ஹாலித் முகமது, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆ.மணியரசன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
    ×