search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AI"

    • கடந்த மாதம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    • உலக முழுவதும் ஐரோப்பிய யூனியனை தவிர்த்து குறைந்தது 64 நாடுகளில் இந்த ஆண்டு பொது தேர்தல் நடக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சீனாவின் ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள் 2024-ல் நடக்கும் பல்வேறு பொது தேர்தல்களை குறி வைத்துள்ளது. இதற்கு வடகொரியாவின் ஆதரவும் உண்டு. இந்த தேர்தலின் போது நிலவும் பொதுக் கருத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பரவ வைக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த ஆண்டு உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் முக்கிய தேர்தல் நடைபெறுவதால் தனது நலனுக்கு பயன் அளிக்கும் வகையில் இதனை செயல்படுத்தி இடையூறு செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மைக்ரோ சாப்ட் நிறுவன அதிகாரி கூறியதாவது:-

    டீப்பேக் மற்றும் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்குவது பெரிய அச்சுறுத்தல் ஆகும். இது போன்ற மோசடி விளம்பரங்கள் வேட்பாளர்கள் குறித்து தவறான தகவலை பொதுமக்கள் இடையே பரப்பி அவர்களை தவறாக வழி நடத்தும்.


     செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இது காலப்போக்கில் அந்நாட்டுக்கு பெரிய பயனளிக்கும்.

    தைவானில் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக சீனா இதனை சோதித்து பார்த்து உள்ளது. அங்கு போலியான தகவலை பரப்பியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மாதம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சமூக காரணங்களுக்காக பயன்படுத்துவது, பெண்கள் தலைமையில் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தில் புதுமைகள் ஆகியவை குறித்து அவர்கள் விவாதித்தனர்.

    உலக முழுவதும் ஐரோப்பிய யூனியனை தவிர்த்து குறைந்தது 64 நாடுகளில் இந்த ஆண்டு பொது தேர்தல் நடக்கிறது.

    • AI டூல்ஸ் மூலம் பல்வேறு டீப்ஃபேக் உருவாக்கப்படுகிறது.
    • தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடி உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உடன் ஏய் (AI) முதல் டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது வரையிலான பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடினார்.

    உரையாடல் முடிவில் பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ் ஊட்டசத்து தொடர்பான புத்தகங்களை பரிசாத வழங்கினார். அதற்குப் பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை பரிசாக வழங்கினார்.

    உள்நாட்டிற்கு தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் "Vocal for Local" என்பதை வலியுறுத்தும் வகையில் பரிசு பொருட்கள் அமைந்திருந்தது.

    அதில் ஒன்று தூத்துக்குடி முத்து ஆகும். தூத்துக்குடி முத்தை பில் கேட்ஸ்க்கு பரிசளித்த பிரதமர், இது தூத்துக்குடி முத்து. தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் முத்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இங்குள்ள மீனவர்கள் இந்த தொழில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்றார்.

    இந்த உரையாடலின்போது "AI மிகவும் முக்கியமானது. சில நேரங்களில் நான் நகைச்சுவைக்காக, எங்களுடைய நாட்டில், நாங்கள் எங்களுடைய தாயாரை ஏய் (Aai) என அழைப்போம். தற்போது நான் சொல்கிறேன், குழந்தைகள் பிறக்கும்போது அவன் ஏய் (Aai) என சொல்கிறான். அதுபோன்று AI குழந்தைகள் முன்னேறிவிட்டன என்பேன்" எனத் தெரிவித்தார்.

    அவர் பில் கேட்ஸை NaMo செயலி மூலம் ஒரு செல்ஃபி எடுக்கச் சொன்னார், பின்னர் அதை முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு கண்டறியலாம் என்பதைக் காட்டினார்.

    மேலும், AI டூல்ஸ் மூலம் பல்வேறு டீப்ஃபேக் உருவாக்கப்படுகிறது. தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    • உலகின் முதல் ஏ.ஐ. மென்பொருள் பொறியாளர் ஆகும்.
    • மனித பொறியாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை.

    கோடிங் செய்வது, வலைதளங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு சேவை உருவாக்கப்பட்டு இருக்கிறது. காக்னிஷன் என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய சேவைக்கு டெவின் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுவே உலகின் முதல் ஏ.ஐ. மென்பொருள் பொறியாளர் ஆகும்.

    இந்த சேவையிடம் நீங்கள் என்ன சொன்னாலும் அதனை சிறப்பாக செய்து முடித்துவிடும். புதிய சேவை மனித பொறியாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை என்று இதனை உருவாக்கி இருக்கும் காக்னிஷன் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    மனித பொறியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தான் டெவின் உருவாக்கப்பட்டு இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மனித பொறியாளர்களுக்கு மாற்றாக இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டெவினின் குறிப்பிடத்தக்க திறன்களில் ஒன்றாக இது கடினமான பணிகளையும் சிந்தித்து, திட்டமிட்டு செய்து முடிக்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிவுகளை எடுப்பது, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது மற்றும் நாளடைவில் சிறப்பாக தன்னை மேம்படுத்திக் கொள்வது என டெவின் கிட்டத்தட்ட மனிதர்கள் மேற்கொள்ளும் பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

    மென்பொருள் பொறியியல் துறையில் SWE-bench கோடிங் பென்ச்மாரக்கில் மென்பொருள்களை மதிப்பிடுவதில் டெவின் அதிநவீன தீர்வை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான பரிசோதனைகளில் டெவின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிஜ உலகின் சவால்களில் டெவின் முந்தைய ஏ.ஐ. மாடல்களை விட அதிகளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்த வகையில், இது மென்பொருள் பொறியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஐரிஸ் மூன்று மொழிகளை கையாளும் திறன் கொண்டது.
    • உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது. அக்கறை எடுத்துக் கொள்ளாது.

    உலக அளவில் "ஏஐ" எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் 100 சதவீதம் முழுமைப் பெற்றால் உலகளவில் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

    "ஏஐ" தொழில்நுட்பம் மூலம் எந்த கேள்விக்கும் பதில்பெற முடியும். மென்பொருள் நிறுவனத்தில் கூட கோடுகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    செய்திகள் வாசிப்பது உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லம்பலத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் "ஏஐ" தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆசிரியைக்கு ஐரிஸ் எனப் பெயரிட்டுள்ளது. இந்த ஐரிஸ் பெண் போன்று சேலை அணிந்து, அணிகலங்கள் அணிந்துள்ளது.

    ஐரிஸ் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு உடனுக்கு உடன் பதில் அளித்து அசத்தியது. ஐரிஸ் தனது ஆசிரியை பணியை தொடங்கியதும் நெட்வொர்க் குறைபாடு மற்றும் மாணவர்களின் கூச்சல் காரணமாக பதில் அளிக்க சற்றும் நேரம் எடுத்துக் கொண்டது.

    அதன்பின் பள்ளி நிர்வாகம் அமைதியை கடைபிடித்து ஒவ்வொருவராக கேள்வி கேட்க வேண்டும் என தெரிவிக்க, மாணவர்கள் தங்களை கேள்வி கணைகளை தொடுத்தனர். பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளையும் கேட்டனர். அதற்கெல்லாம் சளைகை்காமல் பதில் அளித்தது.

    பள்ளி குழந்தைகள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். குறிப்பாக எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. குழந்தைகள். அவர்கள் இந்த டீச்சரை விரும்புகிறார்கள். ஏனென்றால் ஐரிஸ் ஒருபோதும் கோபப்படுத்தாது. குழந்தைகளை எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்ளாது. எப்போதும் அவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும். ஐரிஸ் கேள்விகள் கேட்காது. வீட்டுப்பாடமும் கொடுக்காது என அந்த பள்ளியின் முதல்வர் மீரா சுரேஷ் தெரிவித்தார்.

    ஐரிஸ் மூன்று மொழிகளை கையாளும் திறன் கொண்டது. மாணவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்கு கைக்கொடுக்கும். குழந்தைகளுக்கு கதைகளும் சொல்லும். ஆசிரியர்கள் அவர்களை துறையைச் சார்ந்த பாடத்தில் வல்லுநனர்களாக இருப்பார்கள். ஆனால் ஏஐ டீச்சர் அனைத்து துறைகளை சார்ந்த பாடத்திலும் வல்லுநனராக இருக்கும்.

    ஐரிஸ் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும். இது டீச்சர்களுக்கு மாற்றாக ஒருபோதும் இருக்காது. ஏனென்றால் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது. அக்கறை எடுத்துக் கொள்ளாது. பாடல் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு சப்போர்ட் சிஸ்டமாக இருக்கும்." என்றார்.

    ஐரிஸ் நான்கு சக்கரம் கொண்டு வடிவமைக்கப்பட்டள்ளது. இரண்டு வழிகளிலும் அதனால் தலையை திருப்ப முடியும். கைகளையும் அசைக்க முடியும். ஐரிஸ் கழுத்தில் உள்ள நெக்லஸில் மைக்ரோமோன் பொருத்தப்பட்டுள்ளது.

    • ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜெமினி சாட்பாட் கருவியை கூகுள் உருவாக்கியது
    • ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு கருவி அல்ல என்கிறது கூகுள்

    இணையதள தேடலில் உலகின் பெரும்பான்மையான பயனர்களின் தேடல் இயந்திரமாக (search engine) இருப்பது அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் தேடல் இயந்திரம்.

    கூகுள், செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) மையமாக கொண்டு இயங்கும் ஜெமினி (Gemini) எனும் சாட்பாட் கருவியை உருவாக்கியது.

    இந்நிலையில், ஒரு பயனர், இந்த சாட்பாட்டிடம், "பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஃபாசிசவாதியா?" என கேள்வி கேட்டதற்கு "ஃபாசிச கொள்கைகள் உடைய சில திட்டங்களை செயல்படுத்தியவராக பிரதமர் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" என பதிலளித்தது.

    தொடர்ந்து அந்த சாட்பாட் அளித்த விரிவான பதிலில் பிரதமர் குறித்து ஆட்சேபகரமான பல கருத்துகள் இருந்தன.

    அதே சமயம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் குறித்த கேள்விகளுக்கு ஜெமினி சரியான பதில் அளிக்கவில்லை.

    இதை தொடர்ந்து உரையாடலின் "ஸ்க்ரீன் ஷாட்டை" ஒரு பத்திரிகையாளர் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகருக்கு அனுப்பினார்.

    இது குறித்து அமைச்சர் கூகுள் நிறுவனத்திடம் ராஜிவ் சந்திரசேகர் விளக்கம் கேட்டிருந்தார்.

    செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் கருவிகளும் செயலிகளும் முழுமையாக நம்பத்தகுந்தவை இல்லை என்பதை காரணம் காட்டி கிரிமினல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து கொள்ள முடியாது என அவர் கூகுளை எச்சரித்திருந்தார்.


    இந்நிலையில், இந்த குறைபாடு குறித்து கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

    அதன் பதிலில் கூகுள் தெரிவித்திருப்பதாவது:

    ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு சாதனம் அல்ல.

    அதிலும், சமகால நாட்டு நடப்புகள், அரசியல் மற்றும் உடனடி செய்திகள் ஆகியவற்றில் அதன் திறன் இன்னும் முழுமை பெறவில்லை.

    இந்நிலையை மாற்ற எங்கள் வல்லுனர்கள் செயலாற்றி வருகின்றனர்.

    எந்த நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறாத வகையில் அதன் உருவாக்கத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

    • நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
    • அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.


    கடந்த நவம்பர் மாதம் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது அதன்பின்னர் தெரியவந்தது.



    இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், டெல்லியை சேர்ந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இவர் தான் ராஷ்மிகாவின் டீஃப் பேக் ( Deep Fake) வீடியோவை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

    • பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.
    • செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும்.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் தனது விற்பனை, பொறியியல் பிரிவுகளில் பணியாற்றி வந்த 100-க்கும் அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. நிர்வாக ரீதியிலான பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியதை அடுத்து பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.

    செலவீனங்களை குறைக்கும் நோக்கிலும், பணிகளை எளிமையாக்கும் நோக்கிலும் பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்த துவங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.

     


    முன்னதாக 2021-ம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் 500-இல் இருந்து 700 பேர் வரை பணிநீக்கம் செய்தது. அப்போது ஊழியர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என குற்றம்சாட்டி பணிநீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டது. 

    • பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பில் கேட்ஸ் இதுபோன்ற கருத்தை தெரிவித்தார்.
    • மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை மாறும்.

    மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றாக அமையாது என்ற நம்பிக்கை கொண்டவர் என நம்மில் பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும், அவர் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை செய்தாலே போதும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த காமெடியனும், எழுத்தாளருமான டிரெவர் நோவா-வுடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய போது பில் கேட்ஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    68 வயதான பில் கேட்ஸ் ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடாது, ஆனால் வேலை பார்க்கும் முறையை முற்றிலுமாக மாற்றியமைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பம் நம் வாழ்க்கை எந்த அளவுக்கு நல்ல வகையில் மாற்றியமைக்கும் என்பது தொடர்பாகவும் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

    "மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை மாறும். அப்படியான ஒரு சமூகத்தில் ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வேலை பார்த்தாலே போதுமானதாக இருக்கும். அப்போது இயந்திரங்களே உணவு மற்றும் இதர வேலைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்," என்று அவர் தெரிவித்தார்.

    • எதிர்காலம் டிஜிட்டல் மயமாக இருக்கும் என்றார் உர்சுலா
    • ஏஐ குறித்து அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்ற வேண்டும்

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது 2-நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதன் 3-வது அமர்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் உர்சுலா வான் டெர் லெயென் (Ursula von der Leyen) உரையாற்றினார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    இன்று நான் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து பேச விரும்புகிறேன்.

    ஏஐ-யால் சில அபாயங்களும் ஏற்படலாம். ஆனால், இது மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்குகிறது. விரைவாக மாறிவரும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது முக்கியமான கேள்வி. செயற்கை நுண்ணறிவை உருவாக்கி மென்பொருளை தயாரிப்பவர்கள் இதனை ஒழுங்குபடுத்த அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என அழைக்கிறார்கள்.

    ஐரோப்பிய ஒன்றியத்தில், 2020-ல், செயற்கை நுண்ணறிவு குறித்த முதல் சட்டத்தை நாங்கள் முன்வைத்தோம். நம்பிக்கையை வளர்க்கும் அதே நேரத்தில் புதுமைகளை எளிதாக்க விரும்புகிறோம். இப்போது உலகம் என்ன செய்கிறது என்பதை பொறுத்தே நமது எதிர்காலம் வடிவமைக்கப்படும்.

    ஐரோப்பா மற்றும் அதன் நட்பு நாடுகள் செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை களைந்து புதிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்கும் என நான் நம்புகிறேன். பாதுகாப்பான மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு சார்ந்த அமைப்புகளில் முதலீடுகளை வளர்க்க வேண்டும்.

    ஏஐ-யினால் ஏற்படும் அபாயங்கள் குறித்த அறிவையும், மனிதகுலத்திற்கான சாத்தியமான நன்மைகளையும் அவர்கள் வழங்க வேண்டும். இதன் அபாயங்கள் குறித்த அறிவையும், மனிதகுலத்திற்கு சாத்தியமான நன்மைகளையும் நிபுணர்கள் வழங்க வேண்டும்.

    இரண்டாவதாக டிஜிட்டல் பொது கட்டமைப்புகள் குறித்து பேச விரும்புகிறேன். இது வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு உண்மையான ஊக்க சக்தியாக இருக்கலாம். இந்தியா, தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளை வெளியிடுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.

    இந்திய பிரதமர் கூறியதை கேட்டோம். அவருடைய முயற்சிகளை நாங்கள் மிகவும் ஆதரிக்கிறோம். சிறிய முதலீடுகளில் பெரும் பயன்கள் சாத்தியம் என நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். அனைவருக்குமான அனைவரும் நம்பக்கூடிய, சிறப்பாக இயங்கக்கூடிய ஒரு பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதிலேதான் வெற்றி அடங்கியிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் மற்றும் டிரான்ஸ்-ஆப்பிரிக்கா வழிப்பாதை எனும் திட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.

    புதிய பொருளாதார வழித்தடம் (New Economic Corridor) எனப்படும் இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை நாளைய உலகின் வேகமான, சுருக்கமான மற்றும் தூய்மையான ஒரு இணைப்பு நடவடிக்கை என பாராட்டினார்.

    • இந்த மென்பொருள் கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும்.
    • கட்டுரைகளை உருவாக்குவதில் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது.

    செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

    பத்திரிக்கை துறையிலும், பதிப்பக துறையிலும் கட்டுரைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதும் வேலை உட்பட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை (software tools) பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. எடுத்துக் காட்டாக பதிப்பக மற்றும் செய்தி நிறுவனங்கள், செய்திகளையும் கட்டுரைகளையும் இக்கருவிகளை பயன்படுத்தி எளிதாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் கொண்டு வர முடியும்.

    இதற்காக வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களுடன் கூகுள் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிகிறது.

    இக்கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக, தலைப்புகளுக்கும், அவர்கள் பயன்படுத்தும் எழுத்து வடிவங்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை மென்பொருள் வழங்கும். இதிலிருந்து ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்து விரைவாக தங்கள் பணிகளை முடிக்க முடியும்.

    ஆனால் கட்டுரைகளை உருவாக்குவதிலும், உண்மையை சரிபார்ப்பதிலும் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது. ஆகையால் அவர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிகிறது.

    கூகுளின் இந்த முயற்சி தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

    நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்திடம் பரிசீலிக்கப்பட்ட கூகுளின் ஏஐ கருவி "ஜெனிசிஸ்" என்று அழைக்கப்படுவதாக தெரிகிறது.

    முன்னரே சில பதிப்பகங்கள் தங்களுக்கு தேவைப்படும் உள்ளடக்கத்திற்கு (content) ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) கருவிகளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    பயனர்களுக்கு விரைவாக பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஒரு புதிய உள்ளடக்கத்தை உருவாக்க, ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் மென்பொருள் கருவி பயன்படுகிறது.

    உரைகள், படங்கள், ஒலிகள், அனிமேஷன், முப்பரிமாணம் (3D) அல்லது பிற வடிவங்களில் இவற்றின் உள்ளீடுகள் (inputs) மற்றும் வெளியீடுகள் (outputs) இருக்கும்.

    இருந்தாலும், இது போன்ற மென்பொருள் கருவிகள், உண்மைக்கு புறம்பான தகவலை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது. மனிதர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கும் கணினி நிரல்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கண்டறியும் திறனும் இவற்றிற்கு இல்லை. இக்காரணங்களால் செய்தி வெளியிடும் நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.

    ஆனால் கூகுள் போன்ற நீண்ட அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களின் மென்பொருள் கருவிகளில், இத்தகைய பயன்பாட்டு சிக்கல்கள் நீக்கப்படலாம். இதன் மூலம் பதிப்பக துறையிலும், செய்தி துறையிலும் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் கூகுளின் முயற்சி எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

    • கணினி சம்பந்தப்ப்டட வேலையை யாரும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்றால் அது மிகப் பெரிய தாக்கம்.
    • அனைத்து ஊழியர்களும் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட மாட்டார்கள்.

    மென்பொருள் துறையில் 'புரோகிராமிங்' அல்லது 'கோடிங்' எனும் வேலையிலுள்ள பெரும்பாலானவர்கள், அடுத்த ஓரிரு வருடங்களில் தங்கள் வேலைகளை இழந்து விடும் அபாயம் இருப்பதாக ஸ்டெபிலிட்டி ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எமட் மோஸ்டாக் கூறியிருக்கிறார்.

    அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் நிறுவனங்கள் செய்ய வேண்டிய மென்பொருள் வேலைகளை அந்நாடுகள் இந்தியாவிற்கு தந்து விடுகிறது. அவுட்சோர்ஸிங் எனப்படும் இந்த முறையில் இங்குள்ள பணியாளர்களின் ஊதிய விகிதம் அங்குள்ளவர்களை விட பெருமளவு குறைவாக இருப்பதால் அங்குள்ள நிறுவனங்களுக்கு இதனால் பெரும் லாபம் கிடைத்து வந்தது.

    தற்போது இந்த துறையில் உள்ள பல பணிகளை செயற்கை நுண்ணறிவை கொண்டு சிறப்பாக செய்ய முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.

    இதனால் இந்தியாவின் பெரும்பாலான வேலைகள் அழிந்து விடும் என்றும் குறிப்பாக "கோடர்கள்" அல்லது "புரோகிராமர்கள்" தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் எமட் கூறியிருக்கிறார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

    பல்வேறு வகையான வேலைகளை வெவ்வேறு வழிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாதிக்கிறது. ஒரு கணினியின் முன் அமர்ந்து ஒருவர் செய்யும் வேலையை யாரும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்றால், அது மிகப் பெரிய தாக்கம் என்று கூற வேண்டும். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் திறமையான பட்டதாரிகளைப் போல செயலாற்றும். ஆனால் அனைத்து ஊழியர்களும் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட மாட்டார்கள். வலுவான தொழிலாளர் சட்டங்களைக் கொண்ட பிரான்ஸ் போன்ற நாடுகளில் தாக்கம் குறைவாக இருக்கும். உதாரணமாக, இந்தியாவில் "லெவல் 3" வரையிலான கோடர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இல்லாமல் போய்விடுவார்கள். அதே சமயம் பிரான்சில், ஒரு டெவலப்பரை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல."

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமாக மென்பொருள் புரோகிராமர்கள் உள்ளனர். அவர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறுவு கருவிகளான சாட்ஜிபிடி போன்றவற்றின் தாக்கத்தால் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

    ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, அலுவலக வேலைகள் மற்றும் பிற வேலைகளை வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக இது திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், விமான நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

    • ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது
    • கூகுள் நிறுவனமும் டீப்மைண்ட் செயலியை உருவாக்கியுள்ளது

    ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது'ஓபன் ஏஐ' எனும் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, உலகெங்கிலும் மிகுந்த வரவேற்பையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதற்கு போட்டியாக இது போன்றதொரு மென்பொருளை உருவாக்க உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. கூகுள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி 'டீப்மைண்ட்'ஐ உருவாக்கியுள்ளது.

    இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் கோடீசுவரருமான எலான் மஸ்க், நேற்று எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார்.

    'ஏஐ' குறித்து பலமுறை எச்சரித்துள்ள மஸ்க், அதனை "மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்டிருந்தார். அதை உருவாக்குவதில் அவசரம் காட்டுவது "பேயை வரவழைப்பது போன்றது" என்றும் கூறியிருந்தார்.

    தற்போது 'எக்ஸ்ஏஐ' நிறுவனத்தை குறித்து மஸ்க், "சாட்ஜிபிடி அரசியல் ரீதியாக சார்புநிலை கொண்ட பொறுப்பற்றது. ஆனால் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் குறிக்கோள் பிரபஞ்சத்தின் உண்மையான தன்மையை புரிந்துகொள்வதுடன் வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு பதிலளிப்பதுமாகும்" என கூறியிருக்கிறார்.

    இந்நிறுவனத்தில் ஓப்பன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட், டெஸ்லா, மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

    ஏஐ (AI) என்பது தொற்றுநோய் மற்றும் அணுஆயுத போருக்கு இணையான ஆபத்து என்று எச்சரித்தவரும், பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து செயல்பட்டு வரும் 'ஏஐ' பாதுகாப்பு மையத்தை வழிநடத்துபவருமான டான் ஹென்ட்ரிக்ஸ் எக்ஸ்ஏஐ குழுவிற்கு ஆலோசனைகள் வழங்குகிறார்.

    2015-ல் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த மஸ்க், கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் விரைவாக செயல்படுத்த துடிக்கும் வகையில் பொறுப்பற்று செயல்படுவதாக கூறியிருந்தார். பின்னர், டெஸ்லாவில் கவனம் செலுத்துவதற்காக 2018-ல் ஓப்பன்ஏஐ நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

    கடந்த ஏப்ரல் மாதம் "ட்ரூத்ஜிபிடி" (TruthGPT) எனும் புதிய செயலிக்கான தனது திட்டங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்ட மஸ்க், "மக்களுக்கு 3-வதாக செயலியை உருவாக்குவேன் என நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

    ஏஐ-ல் என்விடியா (Nvidia) எனும் கலிபோர்னியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஜிபியு (GPU) எனப்படும் மிகவும் விலையுயர்ந்த ஸெமிகண்டக்டர்கள் மிக அவசியம்.

    ஓபன்ஏஐ அல்லது கூகுள் டீப்மைண்ட் போன்ற ஒரு ஏஐ நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவதற்கு பெரிதும் அவை தேவைப்படுவதால் மஸ்க்கின் இந்த ஏஐ ஆர்வத்தை மிகுந்த பொருட்செலவு தேவைப்படும் ஒரு முயற்சியாக மென்பொருள் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    ×