என் மலர்
வழிபாடு
- திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
- தேரோட்டம் இன்று காலை நடந்தது.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருநங்கைகளின் குலதெய்வமாக கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இதில் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம், அரவாண் பலி, தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி போன்றவைகள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
மகாபாரத போரில் பாண்டவர்களுக்கும், கவுர வர்களுக்கும் மோர் மூண்டது. இதில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், சாமூத்ரிகா லட்சணம் கொண்ட ஆண்மகனை பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பாண்டவர்களின் படை யில் இருந்த அரவாண், 32 சாமூத்ரீகா லட்சணத்துடன் இருந்ததால் அவரை பலி கொடுக்க முடிவெடுத்தனர்.
அப்போது அரவாண் ஒரு நிபந்தனை விதித்தார். தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தாம்பத்திய உறவு முடிந்த பின்பு தன்னை பலி கொடுக்க வேண்டுமென அரவாண் கூறினார்.
இதனை ஏற்ற கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து, அரவாண் கையால் தாலியை கட்டிக்கொண்டு, அன்றிரவு முழுவதும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். தொடர்ந்து மறுநாள் காலை அரவாண் களப்பலி கொடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்.

எனவே, இவ்வுலகில் வாழும் திருநங்கைகள் தங்களை கிருஷ்ணரின் அவதாரமாக கருதி, பூசாரி கைகளினால் தாலி கட்டிக்கொண்டு அன்றிரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர், தொடர்ந்து மறுநாள் நடைபெறும் தேரோட்டத்தை தொடர்ந்து அரவாண் பலி முடிந்த பின் தங்களது தாலியை அறுத்துக் கொண்டு ஓப்பாரி வைத்து அழுவது ஐதீகம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்றது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் திருநங்கைகள் கூவாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. கூவாகத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்த தேர் காலை 10 மணியளவில் தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தது. அங்கு அரவாண் பலி நடந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களின் தாலிக்கயிறை அறுத்துவிட்டு, கணவரை நினைத்து ஓப்பாரி வைத்தனர். பின்னர் அருகில் இருந்த நீர்நிலைகளில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
இவ்விழாவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடக, வட மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும், வெளிநாட்டை சேர்ந்த திருநங்கைகளும் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.
- பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
- சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.
ஓசூர்:
சித்ரா பவுர்ணமி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரனபள்ளி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில், மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை யாகசாலை குண்டத்தில் நிரப்பி பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ராகு கேது பரிகார பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் வழிபாடு நடத்தினர்.
- பக்தர்கள் ஆணிகள் கொண்ட காலணி அணிந்தும் நேர்த்தி கடன்.
- சிறப்பு அலங்காரத்தில் முருகன் சாமி பவனி வந்தார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே சித்ரா பவுர்ணமியையொட்டி முருகன் கோவிலில் பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்து விநோத வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் ஆணிகள் கொண்ட காலணி அணிந்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது தாமலேரிப்பட்டி. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று சித்ரா பவுர்ணமியொட்டி முருகன் சாமிக்கு இளநீர், மஞ்சள், பால், தயிர் ஆகிய வற்றால் சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனையும் நடைபெற்றன. பின்னர் சாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தாமலேரிப்பட்டி கிராமத்தில் இருந்து முருகன் கோவில் வரை மேளம் தாளங்கள் முழங்க கரகம் பாதித்து காவடியுடன் தேரில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் சாமி பவனி வந்தார்.
அப்போது மொரப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்குடன் ஊர்வல மாக வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பூ மிதித்தல் நிகழ்ச்சியும், சாமி திருவீதி உலா வந்தபோது பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தும், ஆணிகள் கொண்ட காலனியை அணிந்தும், பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.
- 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
- பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று தொடங்கியது. 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று காலை முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். இதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை அதிகாலை நடைபெற்றது. பின்னர், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 50 ரூபாய் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டது.
ராஜகோபுரம் வழியாக தரிசனம் செய்ய பக்தர்கள் அனு மதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்ததும், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்கள், தரிசனம் செய்ததாக கோவில் தரப்பில் கூறப்படுகிறது.
ராஜகோபுரத்தில் இருந்து தேரடி வீதி வழியாக பூத நாராயண கோவில் வரை வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை பாதுகாக்க பந்தல் அமைக்கப்பட்டது.
மேலும், பூத நாராயண கோவிலில் இருந்து பெரிய தெரு வரை தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டிருந்தது. பெரிய தெருவில் இருந்து சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். 4 தரிசன மேடைகள் வழியாக அனுமதிக்கப்பட்டு, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்தனர்.
மேலும் கர்ப்பிணிகள், முதியோர், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வரிசையில் காத்திருக்காமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளே பக்தர்களுக்கு லட்டு பிரசாதம், பிஸ்கட், நீர்மோர், குடிநீர், வாழைப்பழம் மற்றும் தர்பூசணி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன. கோவில் வெளி பகுதியில் காத்திருந்த பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
கடந்த 2 நாட்களில் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கானோர் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வலம் வந்தனர். இதனால் திருவண்ணாமலை நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. சிறப்பு பஸ் ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- திருச்செந்தூர் கடற்கரை விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
- கடற்கரை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்கள் மட்டுமின்றி தினமும் ஏராளமான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தரிசனம் செய்கின்றனர்.
சித்ரா பவுர்ணமியில் விரதம் மேற்கொண்டால் சித்ரகுப்த நாயனார் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த விரதம் மேற்கொள்பவர்கள் சித்தர்கள் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமககளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்வது வழக்கம். இதனால் சித்ரா பவுர்ணமியை யொட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் குவிவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை முதலே ஏராளமானவர்கள் திரண்டனர். இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி அங்கே நிலாச்சோறு சாப்பிட்டு விரதம் மேற்கொண்டனர்.
இதனால் நேற்று இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. விடிய விடிய பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கடற்கரை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர்.
- கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.
- பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.
மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.
பிறர் நன்றாக வாழ்ந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், வசதி வாய்ப்புகளோடு சுகமான வாழ்க்கையை அனுபவித்தால் அதை ஏற்றுக்கொண்டு வாழ்த்தும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை.
ஒருவரது நிறைவான வாழ்க்கைக்கு காரணம் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் என்பதை மனித மனம் ஏற்க மறுக்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெறும் அளவுக்கு அவரது இறையச்சம், வணக்க வழிபாடுகள், நற்சிந்தனை, நற்செயல்கள் அமைந்துள்ளதை காணத் தவறிவிடுகிறார்கள்.
நாமும் இறையச்சத்துடன் வாழ்ந்து, நற்செயல்கள் செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும் என்ற விருப்பத்தை வளர்க்க முன்வருவதில்லை. அதற்கு பதிலாக அந்த மனிதர் மேல் பொறாமை கொள்கிறார்கள். `அவருக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பான வாழ்வு கிடைத்துள்ளது' என்று வெறுப்பை வளர்க்கிறார்கள். வெறுப்பு பகை உணர்வை உருவாக்குகிறது.
உலக வாழ்க்கையில் இன்று மக்களிடம் காணப்படும் போட்டி, பொறாமைகள் காரணமாகத்தான் பல்வேறு மோதல்களும், பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் தோன்றுகின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொண்டால் அது அவனையே அழிக்கிறது. பொறாமை குணம் அவனது மனதில் தங்கி கோபத்தையும், குரோதத்தையும் வளர்க்கிறது. இது அவனது உடல் நலத்துக்கே தீங்காக முடிகிறது.
பொறாமை குணம் இருக்கும் இடத்தில் அமைதியும், சாந்தியும் இருப்பதில்லை. அது மனிதனை தீய வழியில் தள்ளிவிடுகிறது. இதனால் அவன் பாவங்களை செய்யவும், தவறான வழியில் நடக்கவும் முன்வருகின்றான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பொறாமை கொள்வது நன்மைகள் அனைத்தையும் தின்று விடும், நெருப்பு விறகை தின்பதைப் போல'.
ஹஜ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 'நாங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது 'சுவர்க்கத்திற்கு தகுதியானவர் ஒருவர் வருவார்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.
நாங்கள் பார்த்தோம், மதீனாவாசிகளில் ஒரு மனிதர் தொழுகைக்கு முன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு (ஒளூ செய்து கொண்டு) தன் தாடியில் தண்ணீர் சொட்ட தனது இரு காலணிகளையும் வலது கையில் கொண்டு வந்தார். மறுநாளும் அதே மாதிரி சொன்னார்கள். அவரே வந்தார்.
மூன்றாம் நாளும் அவ்வாறே சொன்னார்கள். அவரே வந்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த அவையை விட்டு சென்ற பிறகு ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் அவரை பின்தொடர்ந்து அவருடைய வீட்டிற்கே சென்று விட்டார்கள். அவரிடம் சொன்னார்கள், `நான் என் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி தாருங்கள்' என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் `தாராளமாக தங்கிக் கொள்ளுங்களேன்' என்றார்.
ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் மூன்று நாள் அவருடைய வீட்டில் தங்கினார்கள். அதைப் பற்றி சொல்லும் பொழுது `அவரை இரவு நேரத்தில் நான் கண்காணித்தேன். அவர் விழித்திருந்து வணக்கம் புரிவதை நான் காணவில்லை. தூக்கத்தில் புரண்டு படுக்கும் பொழுது மட்டும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை நான் கண்டேன். காலையில் பஜ்ரு நேரம் வந்தவுடன் பர்ளை நிறைவேற்றுகிறார். வேறு எந்த பெரிய வணக்கமும் இல்லை.
இதை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டு, நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கும் என் தந்தைக்கும் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை, ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவனவாசி என்று கூறினார்கள்.
தங்களிடம் என்ன தான் அமல் இருக்கின்றது என்பதை பார்ப்பதற்காகவும், அதை நான் பின்பற்றலாம் என்ற எண்ணத்திலும் வந்தேன். ஆனால் தங்களிடம் எந்த ஒரு பெரிய வணக்கத்தையும் காணவில்லை. விஷயம் அவ்வாறு இருக்க, பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவர்க்கவாசி என்று எப்படி கூறினார்கள்? என்று தெரியவில்லையே' என்று கூறிவிட்டு புறப்படலானேன்.
பின்னால் இருந்து என்னை அவர் அழைத்தார். அப்போது அவர் சொன்னார் 'நான் யாரின் மீதும் குரோதமோ, பொறாமையோ கொள்ளமாட்டேன். யாருக்கு எதை கொடுக்க இறைவன் நாடியிருக்கிறானோ அதை அவன் கொடுக்கிறான். நாம் ஏன் பொறாமை கொள்ள வேண்டும்' என்றார்.
உடனே அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'ஆம், இது தான் தங்களை சுவனவாசியாக ஆக்கிவிட்டது'. அவர் தான் சஃதிப்னு அபி வக்காஸ் என்ற நபித்தோழர் ஆவார்.
இந்த சம்பவம் அடுத்தவர் மீது பொறாமை கொள்ளாமல் இருந்தாலே சுவனம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.
நபி (ஸல்) கூறினார்கள்: "பகைமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிக்காதீர்கள். சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்." (நூல்: புகாரி)
நம் மீது யாராவது ஒருவர் பொறாமை கொள்வாரேயானால் பொறுமையை மேற்கொள்ளவேண்டும், பழிவாங்கிவிடக் கூடாது. பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.
- பாவம் செய்து விட்டோம் என மனம் வருந்தி நோன்பு இருக்கிறார்கள்.
- எப்போதும் இறைவனோடு நடப்பவர்களுக்கு நோன்பு என்பது அவசியமற்றது.
யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து ஒரு கேள்வியைக் கேட்கின்றனர். `நாங்களும், பரிசேயர்களும் அதிகமாய் நோன்பு இருக்க, உமது சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை' என்பதே அந்தக் கேள்வி. இயேசுவின் வழியை ஆயத்தம் செய்ய வந்தவர் யோவான்.
ஆனால் அவருடைய சீடர்கள் இன்னும் பரிசேயர்களின் வழிகளை அளவுகோலாய் வைத்தே நடக்கின்றனர். இயேசு அவர்களுடைய கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாகக் கொடுக்கிறார்.
'மணமகன் தங்களோடு இருக்கும் வரை அவருடைய தோழர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?' என கேட்கிறார் இயேசு. யூதர்களுடைய திருமணம் ஒரு கோலாகலமான திருவிழாவைப் போல நடக்கும். மணமகனும், மணமகளும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்காக ஓடிப்போவதில்லை. ஒரு வார காலம் வீட்டிலேயே தங்கியிருப்பார்கள். மணமகனுடைய நெருங்கிய நண்பர்கள் கூடவே இருப்பார்கள்.
ஏழை மக்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் அத்தகைய நிகழ்வுகள் அத்திப்பூத்தார் போல் நடக்கின்ற அதிசயச் செயல்கள். அந்த நாட்களில் மகிழ்வாக உண்டு, குடித்து, ஆடிப்பாடி அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
நோன்பு என்பது உள்ளத்தில் துயரம் எழும்போது வருகின்ற ஒரு நிகழ்வாக பல பழங்காலக் குறிப்புகள் சொல்கின்றன. ஏதேனும் ஒரு பெரிய பாவத்தைச் செய்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கவும், இனிமேல் அத்தகைய பாவத்தைச் செய்ய மாட்டேன் என உறுதியெடுக்கவும் மக்கள் நோன்பு இருந்தார்கள்.
பழைய ஏற்பாட்டில் யோசேப்புவை சகோதரர்கள் விற்று விடுகின்ற நிகழ்ச்சியை நாம் அறிவோம். அந்த பாவத்தில் பங்கு பெற்றதற்காக ரூபன் மிகவும் மனம் வருந்துகிறார். அந்த துயரம் அவரை ஏழு ஆண்டுகள் நோன்பு இருக்க வைக்கிறது.
இந்த ஏழு ஆண்டுகளும் அவர் எந்த இன்பத்தையும் அனுபவிக்கவில்லை, குடிக்கவில்லை, மாமிசம் உண்ணவில்லை. கடுமையான நோன்பு இருந்து வருந்தினார் என்கிறது ரூபனின் ஏற்பாடு என்கின்ற புற நூல் ஒன்று.
இறைவனின் பார்வை தங்களை நோக்கி நீள வேண்டும் என்பதற்காகவே பெரும்பாலான நோன்புகள் பண்டைய காலங்களில் நிகழ்ந்தன. விவிலியம் முழுவதும் அதற்கான பல குறிப்புகள் உள்ளன.
பென்யமின் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் தங்களுக்கு வெற்றி வேண்டுமென அழுது புலம்பிய இஸ்ரேல் மக்கள், பெத்தேலுக்கு வந்து உண்ணா நோன்பு இருந்தார்கள் என்கிறது நீதித் தலைவர்கள் நூல்.
வேற்று தெய்வங்களை வழிபட்டு வந்த இஸ்ரேல் மக்கள், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து விட்டோம் என மனம் வருந்தி நோன்பு இருக்கிறார்கள்.
நோன்பு என்பது இறைவனின் கடைக்கண் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக நடப்பது. தங்களுடைய இதயத்தின் துயரமும், வேண்டுதலும் உண்மையானது என்பதை நிரூபிக்க நடப்பது. இறைவனே தங்களோடு இருக்கும்போது அது அவசியமற்றது தானே? என்பதே இயேசுவின் கேள்வி சொன்ன ஒரு மறைமுக பதில்.
அதே நேரம் இயேசு நோன்பு தேவையில்லை என சொல்லவில்லை. தனது முடிவு சிலுவை என்பதையும் அவர் அறிந்திருந்தார். எனவே அவர் சொல்கிறார், `மணமகன் விடைபெறும் காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள். காரணம், அது துயரத்தின் காலம். அது பிரிவின் காலம். இறைவன் இல்லை என கலங்கும் காலம்'.
இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் நோன்பை வெளி அடையாளமாகத் தான் செய்து வந்தார்கள். அவர்கள் இறைவனின் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதை விட, மனிதர்களின் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள்.
அவர்கள் திங்கட்கிழமைகளையும், வியாழக்கிழமைகளையும் நோன்புக்காக தேர்ந்தெடுப்பார்கள். அது தான் சந்தை கூடும் காலம், கூட்டம் வரும் காலம். அந்த நாட்களில் குளிக்காமல், நல்ல ஆடை அணியாமல், கலைந்த தலையோடு, சோர்ந்த முகத்தோடு கடை வீதிகளில் உலவுவார்கள். சிலர் முகத்தை வெளிறியதாய்க் காட்டும் முகப்பூச்சுகளையும் அணிவதுண்டு.
அப்போது அவர்களைப் பார்க்கும் மக்கள், 'அடடா.. எவ்ளோ பெரிய ஆன்மிக வாதி' என புகழ்ந்து பேசுவார்கள். அதுவே அவர்களுடைய நோக்கம். அதைக்கண்டிக்கும் விதமாகத் தான் இயேசு 'நோன்பு இருப்பதை மறைவாகச் செய்யவேண்டும்' என்றார்.
இறைவன் நம்மோடு இருப்பது கொண்டாட்டத்தின் காலம். அவர் நம் இதயத்தில் இருப்பது மகிழ்வின் காலம். ஒருவேளை நாம் பாவம் செய்து அவரை விலக்கி வைத்தால் அந்த நேரத்தில் நாம் நோன்பு இருப்பது அவசியமாகிறது. எப்போதும் இறைவனோடு கூடவே நடப்பவர்களுக்கு நோன்பு என்பது அவசியமற்றதாகி விடுகிறது.
- அன்னை ஆக்ரோஷமான தோற்றத்தில் இருந்தாலும், அவளது உதட்டில் புன்னகை.
- உடல் ஆரோக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பூமாதேவியின் மகனாக பிறந்த நரகாசுரன், பிராக்ஜோதிஷாபுரம் என்ற இடத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தான். அந்த ஊர் தற்போதைய அசாம் மாநிலத்தின் தலைநகராக விளங்கும் கவுகாத்தி ஆகும். அவன் மக்களை துன்புறுத்தி வந்ததைத் தொடர்ந்து, துவாபர யுகத்தில் கிருஷ்ண பகவான் தன் மனைவி சத்யபாமாவுடன், நரகாசுரன் இருப்பிடம் சென்று அவனை அழித்து மக்களை காத்தார். அவன் அழிந்த தினம் தீபாவளியாக கொண்டாடப்படுவதாக புராணம் சொல்கிறது. கவுகாத்தியில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.
பிற்காலத்தில் வடநாட்டில் வெற்றி கண்ட சோழமன்னன், அங்கே கங்கை, பிரம்மபுத்திரா உள்பட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு தன் சேனைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது தீபாவளி அன்று பிராக்ஜோதிஷாபுரம் சென்று, அங்குள்ள ஆலயத்தில் வழிபாடு நடத்தினான். கிருஷ்ணரை மனமாற வேண்டிக்கொண்டு தனது படைகளுடன் மீண்டும் தன் தலைநகருக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.
வழியில் நெய்தவாயல் என்ற பகுதியில் ஒரு மணற்பாங்கான நிலப்பரப்பில் வந்து கொண்டிருந்தபோது, சோழ மன்னனின் படைகளில் உள்ளவர்களுக்கு பெரும் களைப்பு ஏற்பட்டது. அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. "மன்னா.. நீங்கள் தற்போது செல்லும் பகுதி மிகவும் ஆபத்தானது. களைப்புடன் காணப்படும் உங்கள் படை வீரர்களும், குதிரைகளும் பலியாக வாய்ப்பு உள்ளது" என்றது அந்தக் குரல்.
இதைக்கேட்டு செய்வதறியாது திகைத்து நின்றான் மன்னன். அப்போது அங்கே ஒரு பெண் வந்தாள். அவள் "கவுகாத்தி வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள நீங்கள், புனித நீரை கொண்டு வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தப் பகுதியில் கோவில் ஒன்றை அமைத்து, புனித தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கி புனித நீரை தெளித்துச் சென்றால், உங்களுடைய பயணம் பாதிப்பின்றி அமையும். மேலும் நீங்கள் ஆட்சி செய்யும் பகுதி மேலும் சிறப்படையும்" என்று தெரிவித்து விட்டு, மறைந்தாள்.
இதையடுத்து நெய்தவாயல் என்ற அந்த பகுதியில் ஒரு பெரிய குளத்தை தன் படை வீரர்களை கொண்டு வெட்டினான், சோழ மன்னன்.
அந்த பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் மன்னனின் கனவில், கவுகாத்தியில் தரினம் செய்த அம்மன் தோன்றினாள். எனவே அங்கே அமைத்த ஆலயத்தில் அம்மன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்கு `கவுகாத்தி அம்மன்' என்று பெயரிட்டு வழிபாடு செய்தான்.
அசாம் மாநில பிராக்ஜோதிஷாபுரம் கோவிலில் உள்ள கவுகாத்தி அம்மன் வடிவிலேயே இங்குள்ள அம்மனும் அருள்பாலிக்கிறார். இந்த அன்னையின் வலது பக்க கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கதாயுதம், அபய ஹஸ்த முத்திரை தாங்கியும், இடது பக்க கரங்களில் சங்கில் திரிசூலம், செந்தாமரை மலர் உள்ளிட்டவற்றுடன் எட்டு கரங்களைக் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

இந்த அன்னை ஆக்ரோஷமான தோற்றத்தில் இருந்தாலும், அவளது உதட்டில் உள்ள புன்னகை, இந்த அம்பாளை சாந்த சொரூபிணியாகவும் காட்டுகிறது.
சோழ மன்னனால் 16 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஊருணியாக அமைக்கப்பட்ட தீர்த்தம், இவ்வாலய தீர்த்தமாக விளங்குகிறது.
என்றும் வற்றாத சுத்தமான, சுவையான நீருடன் தாமரை மலர்களால் நிரம்பிய புஷ்கரணியாக இது உள்ளது. விரதம் இருந்து இந்த புஷ்பகரணியில் நீராடி அம்மனை தரிசனம் செய்தால், தீவினைகள் அகலும். உடல் ஆரோக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இவ்வாலயத்தில் ஆடி மாத திருவிழா, பவுர்ணமி பூஜை, ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் அம்மனாக, இந்த கவுகாத்தி அம்மன் இருக்கிறார்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ளது, நெய்தவாயல் கிராமம். சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில்கள் மீஞ்சூரில் நிற்கும். இங்கு இறங்கி, அங்கிருந்து அரசு பஸ் அல்லது ஆட்டோக்கள் மூலமாக 3 கிலோமீட்டர் தூரம் உள்ள நெய்தவாயலை அடையலாம்.
- அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முன்னதாக 13-ந் தேதி மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியின் முன்பு பந்தக்கால் நடப்பட்டது.
தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி நேற்று பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியை வலம்வந்தனர்.

தீர்த்தவாரி
பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து இரவு கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 11 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நாளை காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.
சென்னை:
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கான சித்திரைமாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாளில் தர்மாதி பீடத்தில் அருள்பாலிப்பதுடன், புன்னைமர வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.
வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரிய பிரபை, சந்திர பிரபை, தொடர்ந்து வருகிற 27-ந்தேதி நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. 6-ம் நாள் திருவிழாவான வருகிற 28-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் வடம் பிடிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- ஏகாலியர் மரபிலே தோன்றிய சிவத் தொண்டர் தான் திருக்குறிப்புத் தொண்டர்.
- சிவனடியார்களின், குறிப்பறிந்து தொண்டாற்றும் ஆற்றல்மிக்கவர்.
மாதேவியார், முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து சிவபெருமானை வழிபட்ட பெருமைமிக்க காஞ்சி என்னும் திருத்தலத்திலே ஏகாலியர் மரபிலே தோன்றிய சிவத் தொண்டர் தான் திருக்குறிப்புத் தொண்டர். சிவனடியார்களின், குறிப்பறிந்து தொண்டாற்றும் ஆற்றல் மிக்கவர் ஆகையால் இவர் இச்சிறப்புப்பெயர் பெற்றார்.
அடியார் ஆடையின் மாசுகழப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசுகழியும் என்ற தத்துவத்தை உணர்ந்த இப்பெரியார், தொண்டர்களின் துணிகளைதுவைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அடியார்களின் பக்தியையும்,புகழையும், அன்பையும் உலகறியச் செய்யும் இறைவன் திருக்குறிப்புத்தொண்டரின் பெருமையையும் உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார்.
ஒருநாள் இறைவன் கந்தல் உடுத்துக்கொண்டு மேனியிலே திருநீறு விளங்க,திருக்குறிப்புத் தொண்டர் இல்லத்திற்கு எழுந்தருளினார்.
அப்பொழுதுகுளிர்காலம்! குளிரினால் நடுங்கிக் கொண்டே வந்தார் எம்பெருமான்! அடியாரின் வருகையைக் கண்ட தொண்டர் விரைந்து சென்று அடியாரின் அடிபணிந்து அவரை வரவேற்று அமரச் செய்தார்.
மெலி்ந்த உடல், திருவெண்ணீற்று பிரகாசம், அழுக்கடைந்த கந்தல் துணி இவற்றைக் கண்டு மனம் வருந்தினார் திருக்குறிப்புத்தொண்டர். அடியாரைநோக்கி, ஐயனே! தங்கள் திருமேனி சொல்ல முடியாத அளவிற்கு இளைத்திருப்பதற்கு யாது காரணமோ? என்று வினவினார் இறைவன் குறுநகைபுரிந்தார்.
அதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியாத திருக்குறிப்புத்தொண்டர் தேவரீர் எம் இல்லத்திலே எழுந்தருளியது எமது பாக்கியம் தான்.
மேலும் எனக்குப் புண்ணியம் தரக்கூடியது அடியாரின் ஆடையைச் சுத்தம் செய்துதருவதற்கு எமக்கு ஐயன் இடும் கட்டளைதான். அதனால் தங்கள் ஆடையை என்னிடம் தாருங்கள். தங்கள் மேனியில் உள்ள திருநீறு போல் சுத்தமாக வெளுத்துத்தருகிறேன் என்று பணிவோடு கேட்டார்.
அன்பின் அமுதமொழி கேட்டு சிவனார்பெரும் அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்தார். ஐயையோ! இக்கந்தலை உம்மிடம் கொடுத்துவிட்டு யாம் என்ன செய்வது? தாங்க முடியாத இந்தக் குளிர் காலத்தில் இத்துணியையும் வெளுப்பதற்காக உம்மிடம் கொடுத்துவிட்டால் என் பாடு திண்டாட்டம் தான் என்றார்.
திருக்குறிப்புத்தொண்டர் முகத்தில் வேதனை படர்ந்தது! தொண்டர் கவலையும், கலக்கமும்மேலிட மீண்டும் தேவரீர் அங்ஙனம் இயம்பலாகாது என்றார். சங்கரர் சற்றுநேரம் சிந்திப்பவர் போல் பாவனை செய்தார். மாலை மயங்குவதற்குள் துவைத்து சுத்தமாக உலர்த்தி எம்மிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
அந்தி நீங்குவதற்குள் தங்கள் துணியை சுத்தமாக வெளுத்துக்கொண்டு வந்து தருகிறேன். அப்படி என்றால் நன்று! ஏனென்றால் இது குளிர் காலம். எம்மால் குளிரைச் சற்று கூட பொறுக்க முடியாது. தொண்டரை சோதிக்க வந்த அம்பலவாணர், கந்தல் துணியைக் கொடுத்தார். அவரும் கந்தலைக் கண்களில் ஒற்றிக்கொண்டு நீர்த்துறை நோக்கி களிப்போடு புறப்பட்டார்.
நீர்த்துறையை அடைந்த தொண்டர், ஆடையைத் துவைக்கத் தொடங்கினார். இறைவர் வருணனுக்கு கட்டளையிட்டார். உடனே வருண பகவான் பூலோகத்திற்கு புறப்பட்டார். அனல்சூழ்ந்த வானம், திடீரென்று கார் மேகங்களால் மூழ்கியது! எங்கும் கும்மிருட்டு கவ்விக் கொண்டது.
தொண்டரின் இதயத்திலும் இருள் சூழ்ந்தது. கண் கலங்கினார். மழை பயங்கரமாக பெய்யத் தொடங்கியது. இடியும் மின்னலும் ஒன்றொடொன்று கலந்து பயங்கரமாக மாறியது. பேய் மழை அடிக்கத்தொடங்கியது. தொண்டரோ செய்வதறியாது திகைத்தார்.
மழை நின்றுவிடும் என்று எண்ணி ஏமாந்தார். மழை நின்றபாடில்லை. பொழுது மட்டும் போய்க்கொண்டே இருந்தது. கங்கையை பெருக்க விட்டவன் இப்பொழுது வருணனை பெருகவிட்டான். அடியார் இடி சாய்ந்த மரம் போல் நிலை தளர்ந்தார்.
அவர் உடல் மழையாலோ அன்றிக் குளிராலோ நடுங்கவில்லை; அடியார் மீதுகொண்டுள்ள பக்தியாலும், பாசத்தால் ஏற்பட்டுள்ள பயத்தாலும் நடுங்கியது. அவரது கண்களில் நீர் மல்கியது. மனம் துடிதுடித்துப் புலம்பினார். ஐயோ! ஏழை நான் என் செய்வேன்? தொண்டருக்குச் செய்யும் திருப்பணியில் இப்படியொரு பேரிடி வீழ்ந்து விட்டதே!
மழை ஆரம்பித்தபோது வீட்டிற்குச்சென்று காற்றாட உலர்த்தியிருந்தால் கூட இந்நேரம் உலர்ந்திருக்குமோ! அவ்வாறு செய்யாமல் மழை நின்றுவிடும், நின்றுவிடும் என்று காலந் தாழ்த்திஇப்பொழுது ஈரத்துணியோடு நிற்கிறேன்! என் அய்யனுக்கு என்ன பதில்கூறுவேன்?
பாவம் அவர் இந்நேரம் குளிரால் நடுநடுங்கிக் கொண்டிருப்பாரே! தள்ளாத வயதில் அப்பெரியவருக்கு இந்த அளவிற்கு பொல்லாத கொடுமையை செய்த பாவியாகி விட்டேனே! வெளுத்துத் தருகிறேன் என்று வீரம் பேசிய நான், வெறும் வீணாகி விட்டேனே!
அடியார்க்குத் துரோகியாக மாறிய பின்னும் இந்தப்பாவி உயிரை வைத்துக் கொண்டு உலகில் வாழ்வதா? ஆகாது, ஆகவே திருக்குறிப்புத்தொண்டர், துணி துவைக்கும் கருங்கல்லை நோக்கினார்.
தம் தலையைப் பாறையில் மோதி உடைத்துக் கொள்ளப் போனார். அதற்குமேல் அன்புத் தொண்டனை சோதனை செய்து புண்படுத்த விரும்பவில்லை எம்பெருமான்! தொண்டரைக் காக்க திருவுள்ளம் பற்றினார்.
நாயனார் தலை, கல்லில் மோதி சிதையுறுவதற்குள் எம்பெருமானின் மலர்க்கை பாறையினின்றும் வெளிப்பட்டு அவரது சிரத்தைத் தாங்கிக் காத்தது. அருட்கரம் ஒன்று தம் தலையைத் தடுத்தது கண்டு திருக்குறிப்புத் தொண்டர் திகைத்தார். அப்பொழுது வானத்திலே பேரொளி பிறந்தது. உமையாளுடன் விடையின் மீது காட்சியளித்தார் சிவபெருமான்.
திருக்குறிப்புத் தொண்டர் கீழே விழுந்து எழுந்து அரனாரை வணங்கினார். எம்பெருமான், அடியவரைத் திருமுகம் மலர நோக்கி, மூன்று உலகத்திற்கும் உம்முடைய பெருமையையும், புகழையும் வெளிப்படுத்தினோம். இனிமேல் கயிலைக்கு வந்து எம்முடனே இருப்பீராக என்று பேரருள்பாலித்தார்.
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் பல காலம் உலகில் வாழ்ந்து, திருத்தொண்டுகள் பல செய்தார். இறுதியில் இறைவன் மலரடி அணைந்து மகிழும் பேரின்பத்தைப் பெற்றார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் சுவாதிநட்சத்திரத்தில் அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.
- திருவள்ளூர் வீரராகவர் கண்ணாடி பல்லக்கில் பவனி.
- திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, சித்திரை 11 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை முழுவதும்.
நட்சத்திரம்: சுவாதி நள்ளிரவு 12.48 மணி வரை. பிறகு விசாகம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவையாறு ஸ்ரீசிவ பெருமான் குதிரை வாகனத்தில் திருவீதி உலா. வீரபாண்டி ஸ்ரீசவுமாரியம்மன் பவனி. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் கண்ணாடி பல்லக்கில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. திருகுறிப்பு தொண்டர் நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராமர் சுவாமி திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பயணம்
ரிஷபம்-பணிவு
மிதுனம்-பண்பு
கடகம்-நட்பு
சிம்மம்-ஆதரவு
கன்னி-வெற்றி
துலாம்- சாந்தம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- முயற்சி
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-பெருமை
மீனம்-பொறுமை






