என் மலர்tooltip icon

    வழிபாடு

    குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர குண்டம் இறங்கினர்.

     மேலும் சிலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர். மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்கின்றனர். இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது.

    • 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம்.
    • பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்பாக போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இவ்விழாவின் 9-ம்நாளான நேற்று நம் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது இந்த சேர்த்தி சேவை ஆண்டுக்கு ஒரு முறை தான் நடக்கும். நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார்கள். இருவரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்த சேர்த்தி சேவை நடைபெறும்.

    இதனை முன்னிட்டு நேற்று காலை நம் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லாக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்றை கடந்து, தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டறிய முன் மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு ஏகாந்தம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம் பெருமாள் புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    மூலஸ்தானத்தில் இருந்து ரங்கநாச்சியார் மதியம் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை பெருமாள்-தாயார் எழுந்தருளி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேர்த்தி சேவை சாதித்தருளினர்.

    தற்போது கோடை காலம் என்பதால் பக்தர்கள் வசதிக்காக சேர்த்தி சேவைக்கு செல்லும் வரிசையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு மின்விசிறிகள் மற்றும் ஏர் கூலர் வசதிகள் ஏற்படுத்தபட்டிருந்தது. தாயார் சன்னதி முன் மண்டபத்தில் இருந்து சேத்தி மண்டபம் வரை 5 டன் திறன் கொண்ட குளிர்சாதன பெட்டிகள் 12 இடத்தில் பொருத்தப்பட்டிருந்தது.

    மேலும் ஒரு இடத்தில் மிகப் பெரிய ஏர்கூலரும் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் சுமார் 30 மின்விசிறிகளும் பொருத்தப் பட்டிருந்தன. மேலும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், நீர் மோர், லட்டு ஆகியவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக கம்பர் மண்டபம் அருகில் பிரம்மாண்ட எல்இடி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 6.30 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 11.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிலையை வந்தடைந்த தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாளை (27-ந்தேதி) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா.
    • 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் ஊரணிக்கரையில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறும்.

    அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது. இதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.

    பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வேட்டைக்காரனுக்கு பலியிடப்பட்டது. அதன்பின் நள்ளிரவு முழுவதும் பக்தர்களால் ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.

    பின்னர் இன்று காலை சுவாமிக்கு அந்த உணவு படையல் போடப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதனையடுத்து நீண்ட வரிசையில் கூடியிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • பரலோகத்தையோ கடவுளையோ நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே.
    • கடவுளின் தண்டனையாக குஷ்டரோகியாகவே மரித்தார் உசியா.

    மோட்சம் அல்லது பரலோகமென்று குறிக்கப்படும் கடவுளிருக்கும் இடத்தைப் பற்றி வேதத்தில் அநேக குறிப்புகள் இருந்தாலும், பரலோகத்தையோ கடவுளையோ நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே. அதில் குறிப்பிடும்படியான ஒருவர் - ஏசாயா என்னும் இறைவாக்கினர்.

    உசியா என்னும் யூதாவின் அரசன் மரித்த ஆண்டில் நடைபெற்றதாக ஏசாயா - 6-ம் அதிகாரத்தில் விவரிக்கப்படும் இச்சம்பவம், பரலோகத்தில் வீற்றிருக்கும் இறைவனின் சிறப்புகளை, குணாதிசயங்களை மிக அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம்.

    தன்னுடைய பதினாறாம் வயதில் யூதாவின் அரசனாக முடிசூட்டப்பட்டு ஐம்பத்திரண்டு ஆண்டுகள் அரசாண்ட உசியா மன்னன் - யூதாவின் சிறந்த மன்னர்களில் ஒருவர். தன்னுடைய இளவயதில் கடவுளுக்குக் கீழ்படிந்து வாழ்ந்த உசியா மன்னன், கடவுளின் துணையுடன் எதிரிகளை வீழ்த்தினார்.

    யூதாவின் தலைநகரமாகிய எருசலேமை சுற்றியிருந்த மதில்களை பலப்படுத்தி, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். மக்களுக்காக குளங்களை வெட்டினார். இப்படி சிறப்புடன் வாழ்ந்த உசியா மன்னன் வலிமை மிக்கவன் ஆனபோது, தான் அழிவுறும் அளவுக்கு ஆணவம் கொண்டான்.

    கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆசாரியர்கள் மட்டுமே செல்லலாம் என்னும் பரிசுத்த தலத்திற்குள் சென்று தூபம் காட்ட முற்பட்டான். ஆசாரியர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால் உசியாவோ, அவர்கள் மேல் கோபங்கொண்டார். அப்படி அவர் ஆசாரியர்களிடம் கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியர்களுக்கு முன்பாகவே குஷ்டரோகியானார். கடவுளின் தண்டனையாக குஷ்டரோகியாகவே மரித்தார் உசியா.

    இனி இந்த நாட்டை ஆளப்போவது யார்? மன்னரையே குஷ்டரோகியாக்கும் வல்லமை படைத்த கடவுள் யார்? என்னும் கேள்விகளோடு இறைவாக்கினர் ஏசாயா ஆலயத்திற்கு வந்தபோது `ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறதையும், அவரது வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருக்கிறதையும், சேராபீன்கள் என்னும் தூதர்கள் பறந்த வண்ணம் `சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது' என்று ஒருவரையொருவர் கூப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருக்கிறதையும். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து ஆலயம் புகையினால் நிறைந்திருக்கிறதையும் (ஏசாயா 6: 1-4) காண்கிறார்'.

    இங்கே கடவுளின் குணாதிசயங்களாக நாம் காண்பது, கடவுளின் மாட்சிமை, கடவுளின் பரிசுத்தம், கடவுளின் மகிமை. இதைப் பார்த்த அடுத்த கணமே, தன் உள்ளத்தில் குத்தப்பட்டவராய், இத்தகைய கடவுள் முன் நிற்பதற்கு கூட தனக்கு தகுதியில்லை என்றுணர்ந்து 'ஐயோ, நான் அதமானேன், நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே' என்றார்.

    உடனே சேராபீன்களில் ஒருவன் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, ஏசாய விடத்தில் பறந்து வந்து, அதினால் அவர் வாயைத் தொட்டு: `இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது' என்றான்.

    இப்படியாக தன்னுடைய பாவங்களிலிருந்து விடுதலை பெற்ற ஏசாயா தான், இந்த உலகத்திலுள்ள மக்களின் பாவங்களை மன்னிப்பதற்காக இம்மானுவேல் பிறப்பார் என்றும் (ஏசாயா 7:14), அவர் பாடனுபவிப்பவராய், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவராய், அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, மரிப்பாரென்றும் முன்னறிவித்தார் (ஏசாயா 53).

    அந்தபடியே, கடவுளுக்கு சமமாயிருந்த இறைமகன் இயேசு (பிலிப்பியர் 2:6), உலகத்தாரின் பாவங்களை மன்னிப்பதற்காக மனிதனாய், இம்மானுவேலாய் (மத்தேயு 1:22,23) இந்த உலகில் பிறந்தார். ஒடுக்கப்பட்டோர், கை விடப்பட்டோர் மற்றும் பாவி களின் நண்பனாய் இந்த உலகில் சுற்றித்திரிந்தார். கடவுளின் சித்தப்படியே சிலுவையில் மரிக்கவும் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

    இன்று இறைமகனார் இயேசு நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததை நினைவுகூரும் புனித வெள்ளி சிலுவைக் காட்சியை நம் மனக்கண்முன் கொண்டுவருவோம்.

    உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் கடவுளின் அருகிலிருந்த இயேசு, இப்பொழுது உயரமான மலையில், சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிரம்பிற்று என்றிருந்தவர், இப்பொழுது, வஸ்திரமில்லாமல், அவருடைய அங்கியையும் போர்வீரர்கள் சீட்டுப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவண்ணமிருக்கிறார்.

    தூதர்களால் சூழப்பட்டிருந்தவர், இப்பொழுது கள்வர்கள் நடுவில் அறையப்பட்டிருக்கிறார். பரிசுத்தர், பரிசுத்தர் என்று போற்றப்பெற்றவர், சுற்றி நின்ற மக்களின் கேலிப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    ஆம், 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' (யோவான் 3:16) என்று சொல்லியிருக்கிறபடி, பாவிகளான நம்மேல் கடவுள் கொண்ட அன்பைக் காட்டும்படியாக, தன்னுடைய மாட்சிமை, தன்னுடைய பரிசுத்தம், தன்னுடைய மகிமை அனைத்தையும் துறந்தார்.

    இந்த சிலுவைக் காட்சியை பார்க்கும் நாம், அன்று ஏசாயா தன்னுடைய பிழைகளை உணர்ந்து, அதை அறிக்கை செய்து, சுத்தமானது போல், நம்முடைய பாவங்களை உணருவோம், அவர் தரும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம், அவரின் அன்பை இந்த உலகிற்கு பறைசாற்றுவோம்.

    • தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள்.
    • ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.

    இஸ்லாம் ஐந்து தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ். `ஜகாத்' என்ற வார்த்தைக்கு `வளர்ச்சி அடைதல்', `தூய்மைப் படுத்துதல்' போன்ற அர்த்தங்கள் உண்டு. இது இஸ்லாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும்.

    ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது. தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள். (திருக்குர்ஆன் 2:110)

    ஜகாத் கடமை?

    தங்கம், வெள்ளி, வியாபார சரக்குகள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) பூமியில் விளையும் தானியங்கள், பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகும்.

    தங்கம்-வெள்ளி

    நிஸாப் என்ற உச்சவரம்பு அளவு தங்கம், வெள்ளி யாரிடம் உள்ளதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். தங்கத்தில் நிஸாப் அளவு 87.48 கிராம், வெள்ளியின் நிஸாப் அளவு 612.36 கிராம். இந்த அளவு தங்கம், வெள்ளி ஒருவரிடம் இருந்தால் அவர் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

    ரொக்கப் பணமாக ஒருவர் ஜகாத் கொடுக்க விரும்பினால் எந்த நாளில் ஓராண்டு பூர்த்தியாகின்றதோ அந்த நாளில் ஒரு கிராம் தங்கம் அல்லது வெள்ளியின் விலை மதிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மதிப்புக்கு நிகரான பணத்தை ஜகாத் கொடுக்க வேண்டும்.

    விளைபொருட்கள்

    சேமிக்கப்படக் கூடிய, நிறுக்கப்படக் கூடிய பேரீத்தம் பழம், திராட்சை போன்ற கனி வகைகளிலும் கோதுமை, அரிசி போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும். எனினும் பழங்களிலும், காய்கறிகளிலும் ஜகாத் கடமை இல்லை. விளைபொருட்கள் நிஸாப் எனும் உச்சவரம்பான 675 கிலோ அளவை அடைந்து விட்டால் ஜகாத் கட்டாயமாகும். கோதுமைக்குரிய நிஸாப் அளவு 552 கிலோவாகும்.

    கால்நடைகள்

    கால்நடைகள் என்றால் ஒட்டகம், மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, ஆகியவையாகும். இவற்றில் கீழ் காணும் நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும். நிஸாப் எனும் உச்சவரம்பை எட்ட வேண்டும். ஒட்டகத்தின் நிஸாப் ஐந்து, செம்மறி ஆடு, வெள்ளாடு இவற்றின் நிஸாப் 40, மாட்டின் நிஸாப் 30. இதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.

    ஜகாத் கடமையாகுவதற்கு சில தகுதிகள்

    இறை விசுவாசியாகவும், சுதந்திரமானவராகவும், புத்தி சுவாதீனம் உள்ளவராகவும், பருவ வயதை அடைந்தவராகவும் இருக்க வேண்டும். 87 கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி இருக்க வேண்டும். பொருளின் மீது முழு அதிகாரம் படைத்திருக்க வேண்டும், இத்தகைய பொருளாதாரம் குறைவில்லாமல் ஒரு வருடம் முழுவதும் பரிபூரணமாக சேமிப்பில் இருக்க வேண்டும்.

    இத்தகைய பண்புகளும் ஒருவரிடம் பரிபூரணமாக அமைந்து விட்டால், அவர் ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதமோ, அல்லது வேறு மாதங்களிலோ கடமையான ஜகாத்தை நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என்ற அளவில் இறைவன் சுட்டிக்காட்டும் எட்டு வகையினருக்கு வழங்கிட வேண்டும்.

    ஜகாத் பெற தகுதியானவர்கள்

    இறைவன் சுட்டிக்காட்டும் அந்த எட்டு வகையினர் வருமாறு:

    1) வறியவர்கள்

    2) ஏழைகள்

    3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள்

    4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகைய (சகோதர சமுதாயத்த)வர்கள்

    5) அடிமைகள் விடுதலை செய்வதற்கு

    6) கடனாளிகள்

    7) இறை வனின் பாதையில் (அறப்போராட்டத்தில்) உள்ளவர்கள்

    8) வழிப்போக்கர்கள்

    ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமையாகும். இறைவன் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)

    எச்சரிக்கை

    கடமையான ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என இஸ்லாம் எச்சரிக்கிறது. `இறைவன் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து, அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லை என்றால், மறுமை நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக்கொண்டு, தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக்கொண்டே `நான் தான் உனது செல்வம்; நான் தான் உன் புதையல்' என்று கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு திருக்குர்ஆனிலுள்ள (3:180) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்". (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), புகாரி)

    மேலும் சகோதர சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கும் ஜகாத் நிதியை பயன்படுத்தலாம் என்று சிபாரிசு செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இவ்வாறு கொடுப்பதினால் அங்கே சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை ஜகாத்தின் மூலம் நனவாக்கும்படி இஸ்லாம் கண்ட கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

    பொருளாதாரத்திலும் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு இருந்து விடக்கூடாது. பொருளாதாரம் செல்வந்தர்களிடம் மட்டுமே சுற்றிவராமல், ஏழைகளிடமும் செல்வச் சுழற்சி யும், மறு மலர்ச்சியும் ஏற்பட `ஜகாத்' எனும் ஏழைவரியான நலத்திட்டங்களையும், 'ஸதகா' எனும் தர்ம நிதியையும் இஸ்லாம் செயல்படுத்தி, செல்வத்தை பரவலாக்கியது.

    ஜாகாத் என்னும் கடமையை நிறைவேற்றுவோம், மனித நேயம் காப்போம்.

    • கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது.
    • ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகிறார்.

    தன்னை மரத்தில் மறைத்து வைத்து, உயிரைக் காத்த கிருஷ்ணனுக்கு, மன்னன் மார்த்தாண்டவர்மா அமைத்த ஆலயம், புனிதம் மிக்க அம்மச்சிபிலா மரம் உள்ள கோவில், நெய்யாற்றங்கரையில் அமைந்த சிறப்பு மிக்க தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்யாற்றங்கரை கிருஷ்ணசுவாமி கோவில்.

    தலவரலாறு

    திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் முடிசூட்டும் தகுதி, அந்த மன்னனின் சகோதரியின் வாரிசுகளுக்கே வழங்கப்படும். மன்னரின் வாரிசுகளுக்கு உரிமை இல்லை. மன்னர் அனுஷம் திருநாள் காலத்தில் யுவராஜாவாக இருந்தவர், மார்த்தாண்ட வர்மா. அப்போது மன்னர் குடும்பத்தில் குழப்ப சூழ்நிலை இருந்தது. அதேநேரம் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு பகைவர்களாக விளங்கிய எட்டுவீட்டு பிள்ளைமார்கள், யுவராஜனை கொல்ல திட்டமிட்டனர்.

    இதனால் யுவராஜா மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மாறுவேடத்தில் வெளியில் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சமயம் நெய்யாற்றங்கரைப் பகுதிக்கு வந்தபோது, பகைவர்கள் கொடிய ஆயுதங்களோடு இவரை பின்தொடர்ந்தனர். யுவராஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், நிலையை உணர்ந்து, அருகில் இருந்த பலாமரத்தின் பொந்தில் யுவராஜாவை மறைந்து கொள்ளச் சொன்னான். யுவராஜாவும் மறைந்து கொண்டார்.

    பகைவர்கள் அந்த இடம் வந்ததும், சிறுவனை விசாரித்தனர். சிறுவன் வேறு திசையைக் காட்டி மன்னரைக் காத்தான். மன்னர் உயிர் பிழைக்க வைத்த அந்த மரத்தை `அம்மச்சிபிலா' என்று அழைத்தனர்.

    யுவராஜனாக இருந்த மார்த்தாண்டவர்மா, பல தடைகளைக் கடந்து மன்னனாக முடிசூட்டிக் கொண்டார். ஆனால் அவருக்கு தன்னைக் காத்த மரமும், சிறுவனும் மறந்துபோயினர். இதற்கிடையில் மன்னன் மார்த்தாண்டவர்மா, தன் எதிரிகளான எட்டு வீட்டுப்பிள்ளைமார்கள் வம்சத்தை பூண்டோடு அழித்தார்.

    ஒரு நாள் கனவில் தோன்றிய கிருஷ்ணர், `அன்று மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து உன் உயிர் காத்தது நான்தான். என்னை மறந்து விட்டாயே. இனியும் தாமதிக்காமல் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பு" என்றார்.

    தன் தவறை உணர்ந்த மன்னர், தன் உயிர்காத்த அந்த மரத்தையே ஆதாரமாக வைத்து, ஆலயம் எழுப்ப தீர்மானித்தார். அருகே உள்ள ஒரு ஊரில் சிலை உருவாக்கப்பட்டது. கல்லால் உருவான அந்த கிருஷ்ணன் சிலையை அவ்வூரில் இருந்து படகில் ஏற்றி வந்தனர். ஆனால் அச்சிலையோ ஆலயம் வர விரும்பாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. பிரசன்னம் பார்த்தபோது `ஐம்பொன் சிலையே வேண்டும்' என உத்தரவு வந்தது. அதன்படியே ஒன்றரை அடி உயர ஐம்பொன் சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அச்சிலை, மன்னரின் கனவில் கிருஷ்ணர் தோன்றிய வடிவில் அமைக்கப்பட்டது. இவரே இன்று நெய்யாற்றங்கரை ஶ்ரீகிருஷ்ணசுவாமி என அழைக்கப்படுகிறார். கி.பி. 1755-ம் ஆண்டில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னரைக் காத்த அந்த பலாமரமும் புனித மரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

     ஆலய அமைப்பு

    தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உயரமான நுழைவு வாசலின் மேற்புறத்தில் கீதை உபதேசக் காட்சி, சுதை வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. நீண்ட நடைப்பந்தல், அடுத்து தங்கக் கொடிமரம் வரவேற்கின்றது. பலிக்கல், நமஸ்கார மண்டபம், படிகள், கதவுகள், சுவர்கள் அனைத்தும் பித்தளைத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளன. `ஶ்ரீகோவில்' எனப்படும்

    கருவறையானது, சதுர வடிவில் அமைந்துள்ளது. கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. கருவறைக்குள் ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகின்றார். இரு கைகளிலும் வெண்ணெய் உருண்டைகள் தாங்கி, விரித்த தலைமுடியுடன் அருள் காட்சி வழங்குகின்றார். கருவறையை சுற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. வேட்டைக்கு ஒரு மகன், தர்மசாஸ்தா, நடராஜர், ராமர் பட்டாபிஷேகம், நரசிம்மர், கணபதி, மகாலட்சுமி, கிராத மூர்த்தி படங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் கிருஷ்ணன் மீது சாத்திய வெண்ணெய், நோய் தீர்க்கும் அருமருந்தாக கருதப்படுகிறது.

    தினமும் அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில், பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரியும் நல்லமுறையில் கொண்டாடப்படுகிறது.

    அமைவிடம்

    திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நெய்யாற்றங்கரை. இங்கு செல்ல கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ரெயில் வசதிகள் உள்ளன.

    • பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு.
    • பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா’ புகழ்பெற்றது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்ற ஊரில் உள்ளது, பண்ணாரி அம்மன் கோவில். ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியில் அமைந்த மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இது பார்க்கப்படுகிறது. இங்கு பண்ணாரி அம்மன், சுயம்புவாக லிங்க வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பண்ணாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை இருக்கிறாள். பொதுவாக அம்மன் ஆலயங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயம் தெற்கு நோக்கி உள்ளது.

    தல வரலாறு

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக, இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது. அப்போது இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இப்பகுதியில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். தோரணப்பள்ளம் என்ற அந்தக் காட்டாறு, இவ்வாலயம் அமைந்த இடத்திற்கு மேற்கு புறத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பலரும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக இந்த வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

    அவர்கள் வனப்பகுதியிலேயே மாடுகளுக்கு பட்டிகளை அமைத்திருந்தனர். காலையில் அந்த வனத்திற்குள் மாடுகளை மேய விட்டு விட்டு, மாலையில் பட்டியில் அடைத்து, தாங்களும் அங்கேயே தங்கிக்கொள்வார்கள். அதோடு காலையிலும், மாலையிலும் பசுக்களிடம் இருந்து பாலைக் கறந்து, அதன் உரிமையாளர்களிடம் சேர்த்துவிடுவர். அப்போது ஒரு பட்டியில் இருந்த காராம்பசு ஒன்று, பால் கறப்பதற்குச் சென்றால், பால் சுரக்காமலும், தன்னுடைய கன்றுக்கும் கொடுக்காமலும் இருப்பதை அந்தப் பட்டியை பராமரிப்பவன் அறிந்தான்.

    அவன் மறுநாள் அந்த காராம் பசுவை பின் தொடர்ந்தான். அந்தப் பசுவானது, ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலை தன்னிச்சையாகப் பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான். இந்நிகழ்வைக் கண்ட அவன் மறுநாள் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்களிடம் நடந்ததைப் பற்றி விவரித்தான். அவர்கள் மறுநாள், பசுவை பின் தொடர்ந்து

    குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு அதே இடத்தில் பசு தன்னுடைய பாலை தானாக சுரப்பதை அனைவரும் கண்டனர். இந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பசு அங்கிருந்து அகன்றதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் இருந்த கணாங்கு புற்களை அகற்றியபோது, அங்கே வேங்கை மரத்தின் அடியில் ஒரு புற்றும், அதன் அருகில் சுயம்பு லிங்க திருவுருவமும் இருப்பதைக் கண்டனர்.

    அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் அருள் வந்து, தெய்வ வாக்கை கூறினார். "நான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரில் இருந்து பொதி மாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன். இங்கு காணப்படும் எழில் மிகுந்த இயற்கைச் சூழலில் லயித்து, இங்கேயே தங்கி விட்டேன். என்னை பண்ணாரி மாரியம்மன் என்ற பெயரில் போற்றி வழிபடுங்கள்" என்றார்.

     பின்னர் அன்னையின் அருள்வாக்குப்படி அந்த இடத்திலேயே கணாங்கு புற்களைக் கொண்டு ஒரு குடில் அமைத்து, கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அம்மனை வழிபாடு செய்து வந்தனர். பின்பு ஊர் மக்களும், பண வசதி படைத்தவர்களும் கூடிப் பேசி, அம்மனுக்கு விமானத்துடன் கூடிய கோவிலை அமைத்தனர். அந்த ஆலயத்தில் பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு செய்யத் தொடங்கினர்.

    தற்போதைய பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், அழகிய கோபுரத்துடனும், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவற்றுடன் அழகிய சிற்பங்களைக் கொண்டு கண்கவர் ஆலயமாக பொழிவுடன் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா' புகழ்பெற்றது. இந்த ஆலயத்தில் விபூதி பிரசாதம் கிடையாது. அதற்கு பதிலாக புற்று மண்தான், விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அம்மை நோய் பாதிப்பு உள்ளவர்கள், குழந்தை வரம், வேலைவாய்ப்பு வேண்டுவோர் வழிபடக்கூடிய முக்கிய ஆலயமாக இந்த பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கிச் சென்று, அம்மை நோய் பாதித்தவர்களின் மீது வைத்தால், அம்மை நோய் நீங்கும் என்கிறார்கள். திருமண பாக்கியம் கைகூடாதவர்கள், கை- கால் உறுப்பு குறைபாடு உள்ளவர்கள், விவசாயம் செழிக்க வேண்டுவோர், இவ்வாலய அம்மனை வேண்டிக்கொண்டால் பிரார்த்தனை கைகூடும்.

    இவ்வாலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் மக்கள், உருவத்தகடுகள் (கை, கால், கண்) வாங்கி, அர்ச்சனை செய்து உண்டியலில் போடுகிறார்கள். மேலும் அக்னி குண்டம் இறங்குதல், வேல் எடுத்து சுத்துதல், கிடா வெட்டுதல், அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக, ஆராதனைகள் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

     அக்னி குண்டம் இறங்கும் விழா

    இவ்வாலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் விழா, மிகவும் பிரசித்திப்பெற்றது. அக்னி குண்டம் ஏற்படுத்துவதற்காக பக்தர்கள் காட்டிற்குச் சென்று மரம் வெட்டி (இதை கரும்பு வெட்டுதல் என்பார்கள்) எடுத்து வந்து, மலைபோல் குவித்து, அதனை எரித்து 8 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக தயார் செய்வார்கள். அந்த குண்டத்தில் முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார்.

    பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில், நடை சாற்றும் வரை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கிக் கொண்டே இருப்பார்கள். பக்தர்கள் குண்டம் இறங்கி முடித்ததும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள்.

    அமைவிடம்

    சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி திருத்தலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து 77 கிலோமீட்டர், கோவையில் இருந்து 82 கிலோமீட்டர், திருப்பூரில் இருந்து 65 கிலோமீட்டர், சேலத்தில் இருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி மாரியம்மன் கோவில் இருக்கிறது.

    • பக்தர்கள் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன்.
    • குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் மிக கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடை பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 11-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொட ங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திரு வீதி உலா புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து 19-ந் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவு கோவிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து எரி கரும்புகளை காணிக்கை யாக செலுத்தி வந்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்த இரவு மழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. குண்டம் இறங்குவ தற்கான லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

     இதையடுத்து சரியாக அதிகாலை 3.45 மணிமுதல் 4 மணிக்குள் பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கு தெய்வமே என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து வீதி உலா கொண்டு செலல்ப்பட்ட சப்பரம் படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.

    அதை த்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழி பட்டபடி குண்டம் இறகினர். இதில் சுமார் லட்சக்கண க்கான பக்தர்கள் தொடர்ந்து குண்டம் இறங்கி கொண்டே இருந்தனர். குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

     தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர். அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர்.

    நாளை மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 28-ந் தேதி மஞ்சள் நீராடுதலும், 29-ந் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடி உள்ளார்.
    • பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது.

    மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

    பாடல்:-

    விலங்கும் மனத்தால், விமலா உனக்கு

    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே.

    பொருள்:

    மாசில்லாத சிவபெருமானே... ஒருமைப்படாமல் சிதறு கின்ற சிந்தனைகளை கொண்ட மனதால், உன்னிடம் கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்த நிறைந்த அன்பால் கசிந்தும், உள்ளம் உருகியும் நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவன் நான். அப்படிப்பட்ட எனக்கும் அருள்செய்து, இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையாக வந்து, உன்னுடைய நீண்ட அழகிய கழல் அணிந்த திருவடிகளைக் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்கு, பெற்ற தாயை விடவும் அதிகமான அன்பை செலுத்தும் தத்துவப் பொருளே.

    • 28-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி.
    • 29-ந்தேதி புனித வெள்ளி.

    26-ந்தேதி (செவ்வாய்)

    * பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு காப்பு கட்டுதல்.

    * ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் ரத உற்சவம்.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கள்ளர் திருக்கோலமாய் காட்சி தருதல்.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்)

    * சங்கடஹர சதுர்த்தி.

    * திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில் எண்ணெய்க் காப்பு.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாணம், மதுரை மீனாட்சி- சுந்த ரேஸ்வரர் திருப்பரங் குன்றம் எழுந்தருளல்.

    * திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    29-ந்தேதி (வெள்ளி)

    * புனித வெள்ளி.

    * திருக்குறுங்குடி 5 நம்பிகள் 5 கருட வாகனத்தில் பவனி.

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி அம்ச வாகனத்தில் வீதி உலா.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பெரிய வைரத்தேரில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    30-ந்தேதி (சனி)

    * தாயமங்கலம் முத்துமாரி அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

    * திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் கருட வாகனத்தில் பவனி.

    * சென்னை மல்லீஸ்வரர், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமான் கோவில்களில் விடையாற்று உற்சவம்.

    * சமநோக்கு நாள்.

    31-ந்தேதி (ஞாயிறு)

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, பஞ்சமுக அனுமனுடன் ராமர் திருக்கோலக் காட்சி.

    * உப்பிலியப்பன் திருப்பல்லக்கிலும், இரவு தாயார் வெள்ளி கமல வாகனத்திலும் புறப்பாடு.

    * திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.

    * சமநோக்கு நாள்.

    1-ந்தேதி (திங்கள்)

    * தாயமங்கலம் முத்துமாரி அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி திருப்பல்லக்கில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.
    • உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.

    புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

    புனித ரமலான் மாதம் நோன்புக்கானது (மாதம்) மட்டுமல்ல. நோன்புக்கும் உரியது. நோன்பு அல்லாத பிற வழிபாட்டுக்கும் ஏற்றமானது. புனித ரமலானில் உயர்வான, முதன்மையான வழிபாடு நோன்பாகும். நோன்பை விடுத்து இன்னும் ஏராளமான வழிபாடுகள் புனித ரமலானில் நிரம்பி வழிகின்றன. நிறைவேற்றப்படவும் செய்கின்றன. அவற்றில் நோன்புக்கு அடுத்த அந்தஸ்தில் இடம் பெறுவது புனிதரமலானில் புனித கஅபா ஆலயம் சென்று, அதை தரிசனம் செய்து (உம்ரா செய்து) வருவதாகும்.

    உம்ரா செய்வது என்றால், அதற்கென்று தனி மாதங்களோ, தனி காலங்களோ கிடையாது. ஆண்டு முழுவதும் புனித கஅபா ஆலயம் சென்று தரிசனம் செய்து வரலாம். ஆனால், இவ்வாறு ஹஜ் செய்யமுடியாது. ஹஜ் செய்வ தற்கென்று சில குறிப்பிட்ட மாதங்கள் உண்டு. அவை, ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களாகும். இம்மூன்று மாதங்களை தவிர்த்து வேறுமாதங்களில் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாது. எனினும், உம்ராவை நிறைவேற்ற முடியும்.

    உம்ரா செய்ய ஒருவர் நாடினால், அவர் முதலில் தைக்கப்படாத இரண்டு ஆடைகளை அணிந்து புனித கஅபாவில் நுழைய வேண்டும். (இதற்கு இஹ்ராம் ஆடை என்று பெயர்), புனித கஅபாவில் நுழைந்ததும் 7 சுற்றுக்கள் சுற்றி வர வேண்டும், ஸபாவில் ஆரம்பித்து - மர்வா ஆகிய இரண்டு குன்றுகளுக்கு மத்தியில் ஏழு தடவை விரைந்தோட வேண்டும். தலைமுடியை அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதுதான் உம்ரா ஆகும்.

    உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால் புனித ஹஜ் என்பது வாழ்க்கையில் ஒரு தடவைதான் கடமை. புனித ஹஜ்ஜை ஒரு தடவை மட்டும் நிறைவேற்றினால் போதும். உம்ராவை பல தடவை நிறைவேற்றலாம். இதுதான் நபி வழி.

    கதாதா (ரஹ்) அறிவித்தார். 'நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்தார்கள்? என நான் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர், 'நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவை: ஹூதைபிய்யா எனுமிடத்தில் துல்க அதா மாதத்தில், இணை வைப்போர் தடுத்த போது செய்யச் சென்றது. இணைவைப்பருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது. 'ஜிஇர்ரானா' என்ற இடத்திலிருந்து ஒரு போரில் (அது ஹூனைன் போர் என்று கருதுகிறேன்) வெற்றி கொள்ளப்பட்ட பொருட்களை பங்கிட்ட பொழுது செய்தது.

    நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்களாகும்' என்றார். பிறகு 'எத்தனை ஹஜ் செய்தார்கள்?" என்று கேட்டதற்கு 'ஒரு ஹஜ் தான், என்றார்கள்.' (நூல்:புகாரி)

    உம்ராவை எந்த மாதத்திலும் நிறைவேற்றலாம். எனினும், புனித ரமலான் மாதத்தில் உம்ராவை நிறைவேற்றுவது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும். 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகராகும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    ஹஜ் வேறு வணக்கம். உம்ரா வேறு வணக்கம். உம்ரா செய்வதினால் மட்டுமே ஹஜ் கடமை நீங்கிவிடாது. எனினும், ரமலானில் உம்ரா செய்தால், ஹஜ் செய்வதால் எந்த நன்மை கிடைக்குமோ அதே நன்மை கிடைக்கும். 'ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ரா வரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச்செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜூக்குச் சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' (அறிவிப்பாளர்: ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) அபூஹரைரா (ரலி ), நூல் :முஸ்லிம்

    • திருவரங்கம் கோயிலின் புரோகிதராக, தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர்.
    • ராமானுஜ நூற்றந்தாதி எனும் சிறந்த நூலை இயற்றினார்.

    நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்

    சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்

    உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது ஓங்கும்அன்பால்

    இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!

    திருவரங்கத்து அமுதனார் திருவரங்கக் கோயிலின் புரோகிதராகவும் தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர் புரோகிதம் என்பது கோயிலில் பஞ்சாங்கம் புராணம் வாசித்தல் வேத விண்ணப்பம் செய்தல் திருவரங்கத்தின் கோவில் சாவி அவரிடம் தான் இருந்தது அவர் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சீடராகி ராமானுஜரின் மீது ராமானுஜ நூற்றந்தாதி எனும் மிகச் சிறந்த நூலை இயற்றினார்.

    அது மேலோட்டமாக பார்த்தால் ராமானுஜரின் புகழ் பாடுவதாக இருந்தாலும், ஆழ்வார்களின் புகழையும், அவர்கள் அருளிய அருளிச்செயலின் புகழையும், வைணவ தத்துவங்களையும் உள்ளடக்கிய நூல் என்பதால், அதை ஆழ்வார்களின் நூலோடு சேர்ந்து வைணவர்கள் கோயில்களில் முறையாக ஒதுவார்கள். அப்படிப்பட்ட திருவரங்கத்து அமுதனாரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாதம் அஸ்த நட்சத்திரம் அதாவது இன்று திருமால் ஆலயங்களிலும் வைணவர்கள் வீடுகளிலும் இந்த நட்சத்திர வைபவத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

    பங்குனி பிரம்மோற்சவம் பத்தாம் நாள் அமுதனார் அவதரித்த ஹஸ்த நட்சத்திரத்தில் நம்பெருமாள் கண்டருளும் சப்தாவரணம் அமைந்து விசேஷமாகும்!

    இதில், நம்பெருமாள் வீதி புறப்பாட்டில் அத்யாபக கோஷ்டியில் இராமாநுச நூற்றந்தாதி பாசுரங்களை சேவிக்க, தாமும் மற்றும் அடியார்களும் காதுகுளிர கேட்பதற்காக சப்தமில்லாமல் (மேள ஒசையே இதில் இல்லாமல்) எழுந்தருள்வார்! இந்த காரணத்தினால் இந்த பத்தாம் திருநாள் சப்தாவரணம் எனப்படுகிறது!

    நம்பெருமாள் வீதி புறப்பாடு முடித்து, தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, உடையவர் சந்நிதிக்கு எழுந்தருள்வார்!

    இராமாநுசரும் கைத்தலமாக சந்நிதி முற்றத்தில் எழுந்தருளி, நம்பெருமாளை கண்குளிர சேவிப்பார் பெருமாள் இராமாநுசருக்கு தாம் உடுத்திக் களைந்த பீதக ஆடை, மாலை, சாத்துப்படி சடாரிசாதிப்பார்.

    ×