search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasanthosavam"

    • சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருமலை:

    திருமலையில் நடந்து வரும் வசந்தோற்சவத்தின் 2-வது நாளான நேற்று தங்கத்தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    வசந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாலை உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாகக் கோவிலுக்கு திரும்பினர்.

     வசந்தோற்சவத்தில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர், கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால், திருமலையில் வசந்தோற்சவம் நடப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவைைய திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை, பக்தர்கள் கவனித்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 3 நாட்கள் நடக்கும் வசந்தோற்சவம் நேற்று காலை தொடங்கியது.
    • உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் 3 நாட்கள் நடக்கும் வசந்தோற்சவம் நேற்று காலை தொடங்கியது.

    வசந்தோற்சவத்தை நடத்த கவர்ச்சியான மண்டபம் அமைக்கப்பட்டது. அந்த மண்டபம் சப்தகிரியை பிரதிபலிக்கும் வகையில் காணப்படுகிறது.

    அதில், திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சீனிவாஸ் வழிகாட்டுதல் படி சேஷாசலம் வனப்பகுதியைப்போல் வடிவமைக்கப்பட்டது. அதற்காக 250 கிலோ வெட்டிவேர், 600 கிலோ பாரம்பரிய மலர்கள், 10 ஆயிரம் கொய்மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பச்சை மரங்கள், பலவண்ணப்பூக்கள் மற்றும் புலிகள், சிறுத்தைகள், குரங்குகள், நரிகள், மலைப்பாம்புகள், நல்ல பாம்புகள், மயில்கள், வாத்துகள், அன்னப்பறவைகள், மைனாக்கள், கிளிகள், ஒட்டகங்கள் எனப் பல்வேறு வகையான விலங்குகளின் உருவப்பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமியை கோவிலில் இருந்து நேற்று காலை நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக் கொண்டு வந்தனர். அங்கு உற்சவர்களுக்கு ஆஸ்தானமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.

    முதலில் விஷ்வக்சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், நவகலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. பின்னர் சத்ர சாமர வியாஜன தர்பணாதி, நைவேத்தியம், தூப பிரசாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

    அப்போது வேதப் பண்டிதர்கள் புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் திவ்ய பிரபந்த பாசுரங்களை ஓதினார்கள். வசந்தோற்சவம் முடிந்ததும் மாலை வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    • வசந்தோற்சவம் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்துள்ளது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் வசந்தோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான 21-ந்தேதி காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். அதன்பின் வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கு வசந்த உற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    22-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர். வசந்தோற்சவம் முடிந்ததும் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

    கடைசி நாளான 23-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணியுடன் வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு வசந்தோற்சவம் நடந்ததும், மாலை கோவிலை அடைகிறார்கள்.

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6 மணியில் இருந்து 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது.

    சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்க உற்சவர்களுக்கு வசந்த காலத்தில் நடத்தப்படும் உற்சவம் என்பதால், `வசந்தோற்சவம்' என்று அழைக்கப்படுகிறது. வசந்தோற்சவத்தில் உற்சவர்களுக்கு மணங்கமழும் மலர்களை சமர்ப்பிப்பதுடன், பல்வேறு பழங்களும் வசந்தோற்சவத்தில் நெய்வேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

    ஆர்ஜித சேவைகள் ரத்து

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, அஷ்டதள பாத பத்மாராதன சேவையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    ×