என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati Eyumalayan Temple"

    • ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில் ‘தண்ணீரமுது’ உற்சவம் நடந்தது.
    • நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில் 'தண்ணீரமுது' உற்சவம் நடந்தது. ஆகாசகங்கை தீர்த்தத்தால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25 நாள் `ஆத்யாயன உற்சவம்' கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்கியது.

    அதையொட்டி தினமும் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்துக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கொண்டு வந்து ஜீயர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

    உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம், 'தண்ணீரமுது' உற்சவம் நடந்தது. இந்தத் தண்ணீரமுது உற்சவம் நடப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ராமானுஜரின் தாய் மாமனான பெரிய திருமலைநம்பி ஆவார்.

    இவர், திருப்பதி ஏழுமலையானுக்கு செய்த சேவையின் நினைவாக ஆண்டுதோறும் ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில், `தண்ணீரமுது' உற்சவம் நடத்தப்படுகிறது.

    முன்னதாக நேற்று முன்தினம் மாலை கோவிலில் நடந்த சஹஸ்ர தீபலங்காரச் சேவைக்குப் பின், உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து வாகன மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    பெரிய திருமலைநம்பி வம்சத்தினர் கோவில் பிரகாரத்தில் ஒரு குடத்தில் பிடித்த 'ஆகாச கங்கை' தீர்த்தத்தை தலையின் மேல் வைத்து மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க வாகன மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர்.

    அங்கிருந்து பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள், ஆச்சாரியார்கள், பிரபந்த பண்டிதர்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட தீர்த்த குடத்தை கோவிலுக்குக் கொண்டு சென்றனர்.

    வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க கோவில் அர்ச்சகர்கள் மூலவர் ஏழுமலையானுக்கு குடத்தில் கொண்டு வரப்பட்ட ஆகாச கங்கை புனிதத்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர். உற்சவத்தில் பங்கேற்றவர்கள் பெரிய திருமலைநம்பி எழுதிய 'திருமொழி பாசுரங்களை' பாராயணம் செய்தனர். உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆத்யாயன உற்சவம் முடிந்ததும் மறுநாளான நேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் தெற்கு மாட வீதியில் உள்ள பெரிய திருமலைநம்பி சன்னதிக்கு எழுந்தருளினர்.

    • வசந்தோற்சவம் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்துள்ளது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் வசந்தோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான 21-ந்தேதி காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். அதன்பின் வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கு வசந்த உற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    22-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர். வசந்தோற்சவம் முடிந்ததும் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

    கடைசி நாளான 23-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணியுடன் வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு வசந்தோற்சவம் நடந்ததும், மாலை கோவிலை அடைகிறார்கள்.

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6 மணியில் இருந்து 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது.

    சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்க உற்சவர்களுக்கு வசந்த காலத்தில் நடத்தப்படும் உற்சவம் என்பதால், `வசந்தோற்சவம்' என்று அழைக்கப்படுகிறது. வசந்தோற்சவத்தில் உற்சவர்களுக்கு மணங்கமழும் மலர்களை சமர்ப்பிப்பதுடன், பல்வேறு பழங்களும் வசந்தோற்சவத்தில் நெய்வேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

    ஆர்ஜித சேவைகள் ரத்து

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, அஷ்டதள பாத பத்மாராதன சேவையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.
    • கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார்.

    திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது. தாயார் சன்னதி கூட கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.

    திருமலையின் ஆதிமூர்த்தியான வராக சாமி தெப்ப குளக்கரையில்தான் இருக்கிறார். ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது. இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே. திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.

    ராமானுஜர் 1017-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். 1137-ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார். திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுjஅர் தான்.


    அவர் காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவ கோவிலா? வைணவ கோவிலா? சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

    ராமானுஜர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.

    ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார்.

    ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார். காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார். அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது.

    இன்றும் அங்கு 'ராமானுஜர் வீதி' இருக்கிறது. கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது 'ராமானுஜர் நந்தவனம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.

    ஏழுமலை ஏறி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார். அதுவே 'ராமானுஜக் கூடம் ஆனது'. இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக அன்றே 'சமபந்தி' சாப்பாட்டை ராமானுஜர் தொடங்கி வைத்து விட்டார்.

    ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுஜரே!


    ஏழுமலையானுக்கு பச்சை கற்பூர நாமம் சாத்தவும் ராமானுஜரே ஏற்பாடு செய்தார். சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.

    இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூஜையையும் ராமானுஜர் வகுத்துக் கொடுத்தார்.

    மலை அடிவாரத்தில் கீழ் திருப்பதி ஊரையும் உருவாக்கினார். இப்படி ஏழுமலையான் கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுஜர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.

    ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது.
    • இறுதி தரிசனமும் கோபாலன் வாரிசுகளுக்கு தான்.

    பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது. திருமகள் கோபித்துக்கொண்டு பூமிக்கு வந்துவிட்டார். பின்னாலேயே பெருமாளும் வந்து அவரைத்தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் லட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் தவம் செய்தார்.

    நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட்டது. அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவர் தன்னுடைய பசுவைக்கொண்டு தினசரி அந்த புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை முதலில் தரிசனம் செய்யும் வரம் அளித்தார்.


    பெருமாளின் இந்த அருளால் கோபாலன் என்பவர் பரம்பரையில் வந்தவர்கள் தினமும் திருமலையில் முதலில் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.

    மூலஸ்தான நடை திறந்தவுடன் பெருமாளின் முதல் தரிசனம் இவர்களுக்குத்தான் கிடைக்கிறது. பின் இவர்கள் அர்ச்சகர்களின் வீடுகளுக்கு சென்று பூஜை செய்வதற்கு வரும்படி அழைக்கின்றனர். அதன் பின்னரே அர்ச்சகர்கள் கோவிலில் தங்கள் கடமையை ஏற்க வருகின்றனர்.


    இரவில் ஏகாந்த சேவை முடிந்தபின் பெருமாளின் அன்றைய இறுதி தரிசனமும் கோபாலன் வாரிசுகளுக்கு கிடைத்த பின் தான் நடை அடைக்கப்படுகிறது.

    • மாற்று மதத்தினரை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம்.
    • திருப்பதியில் நேற்று 63,987 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு, குழு உறுப்பினர்கள் 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு கூறியதாவது:-

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்ட தற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல் மந்திரி பவன் கல்யாண், மந்திரி லோகேஷ் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறங்காவலர் குழு தலைவராக வேலை செய்வதை பாக்கியமாக கருதுகிறேன்.

    கடந்த ஆட்சி காலத்தை போல் அல்லாமல் வெளிப்படை தன்மையாகவும் உண்மையாகவும் பாடுபடுவேன்.

    தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்.

    தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு அரசு பணிக்கு மாற்றுவதா அல்லது கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்புவதா என்பது குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

    மாற்று மதத்தினரை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். இருப்பினும் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் நேற்று 63,987 பேர் தரிசனம் செய்தனர். 20,902 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • பட்டு சேலையை தயார் செய்வதற்கு 15 நாட்கள் ஆனது.
    • ரூ.20 லட்சம் மதிப்பில் பட்டு சேலை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஸ்ரீசில்சை சேர்ந்தவர் நல்ல விஜய். கைத்தறி தொழிலாளி. இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக குடும்பத்துடன் வந்தார். அப்போது தீப்பெட்டியில் அடங்கும் அளவு பட்டு சேலையை ஏழுமலையானுக்கு வழங்கினார்.

    ஆண்டுதோறும் வெமுல வாடாவில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கும், ஏழுமலையானுக்கும் தீப்பெட்டியில் அடங்கும் அளவு பட்டு சேலைகளை நெய்து வழங்குவது வழக்கம்.

    200 கிராம் தங்கம் மற்றும் வெள்ளியில் 5½ மீட்டர் நீளமும், 48 அடி அங்குலத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் பட்டு சேலை வழங்கியதாக தெரிவித்தார். இந்த பட்டு சேலையை தயார் செய்வதற்கு 15 நாட்கள் ஆனது என்றார்.

    • 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம்.
    • நாளை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசி யைமுன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் 12 மணி வரை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. கோவில் கர்ப்ப கிரகம்,பலி பீடம், கொடிமரம், விமான கோபுரம் உள்ளிட்ட கோவில் முழுவதும் பச்சைக் கற்பூரம், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

    கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் சுமார் 5 மணி நேரம் நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் நாளை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 66,561 பேர் தரிசனம் செய்தனர்.18,647 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 9 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×