search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "good deeds"

    • கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.
    • பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.

    மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.

    பிறர் நன்றாக வாழ்ந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், வசதி வாய்ப்புகளோடு சுகமான வாழ்க்கையை அனுபவித்தால் அதை ஏற்றுக்கொண்டு வாழ்த்தும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை.

    ஒருவரது நிறைவான வாழ்க்கைக்கு காரணம் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் என்பதை மனித மனம் ஏற்க மறுக்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெறும் அளவுக்கு அவரது இறையச்சம், வணக்க வழிபாடுகள், நற்சிந்தனை, நற்செயல்கள் அமைந்துள்ளதை காணத் தவறிவிடுகிறார்கள்.

    நாமும் இறையச்சத்துடன் வாழ்ந்து, நற்செயல்கள் செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும் என்ற விருப்பத்தை வளர்க்க முன்வருவதில்லை. அதற்கு பதிலாக அந்த மனிதர் மேல் பொறாமை கொள்கிறார்கள். `அவருக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பான வாழ்வு கிடைத்துள்ளது' என்று வெறுப்பை வளர்க்கிறார்கள். வெறுப்பு பகை உணர்வை உருவாக்குகிறது.

    உலக வாழ்க்கையில் இன்று மக்களிடம் காணப்படும் போட்டி, பொறாமைகள் காரணமாகத்தான் பல்வேறு மோதல்களும், பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் தோன்றுகின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொண்டால் அது அவனையே அழிக்கிறது. பொறாமை குணம் அவனது மனதில் தங்கி கோபத்தையும், குரோதத்தையும் வளர்க்கிறது. இது அவனது உடல் நலத்துக்கே தீங்காக முடிகிறது.

    பொறாமை குணம் இருக்கும் இடத்தில் அமைதியும், சாந்தியும் இருப்பதில்லை. அது மனிதனை தீய வழியில் தள்ளிவிடுகிறது. இதனால் அவன் பாவங்களை செய்யவும், தவறான வழியில் நடக்கவும் முன்வருகின்றான்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பொறாமை கொள்வது நன்மைகள் அனைத்தையும் தின்று விடும், நெருப்பு விறகை தின்பதைப் போல'.

    ஹஜ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 'நாங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது 'சுவர்க்கத்திற்கு தகுதியானவர் ஒருவர் வருவார்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.

    நாங்கள் பார்த்தோம், மதீனாவாசிகளில் ஒரு மனிதர் தொழுகைக்கு முன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு (ஒளூ செய்து கொண்டு) தன் தாடியில் தண்ணீர் சொட்ட தனது இரு காலணிகளையும் வலது கையில் கொண்டு வந்தார். மறுநாளும் அதே மாதிரி சொன்னார்கள். அவரே வந்தார்.

    மூன்றாம் நாளும் அவ்வாறே சொன்னார்கள். அவரே வந்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த அவையை விட்டு சென்ற பிறகு ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் அவரை பின்தொடர்ந்து அவருடைய வீட்டிற்கே சென்று விட்டார்கள். அவரிடம் சொன்னார்கள், `நான் என் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி தாருங்கள்' என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் `தாராளமாக தங்கிக் கொள்ளுங்களேன்' என்றார்.

    ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் மூன்று நாள் அவருடைய வீட்டில் தங்கினார்கள். அதைப் பற்றி சொல்லும் பொழுது `அவரை இரவு நேரத்தில் நான் கண்காணித்தேன். அவர் விழித்திருந்து வணக்கம் புரிவதை நான் காணவில்லை. தூக்கத்தில் புரண்டு படுக்கும் பொழுது மட்டும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை நான் கண்டேன். காலையில் பஜ்ரு நேரம் வந்தவுடன் பர்ளை நிறைவேற்றுகிறார். வேறு எந்த பெரிய வணக்கமும் இல்லை.

    இதை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டு, நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கும் என் தந்தைக்கும் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை, ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவனவாசி என்று கூறினார்கள்.

    தங்களிடம் என்ன தான் அமல் இருக்கின்றது என்பதை பார்ப்பதற்காகவும், அதை நான் பின்பற்றலாம் என்ற எண்ணத்திலும் வந்தேன். ஆனால் தங்களிடம் எந்த ஒரு பெரிய வணக்கத்தையும் காணவில்லை. விஷயம் அவ்வாறு இருக்க, பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவர்க்கவாசி என்று எப்படி கூறினார்கள்? என்று தெரியவில்லையே' என்று கூறிவிட்டு புறப்படலானேன்.

    பின்னால் இருந்து என்னை அவர் அழைத்தார். அப்போது அவர் சொன்னார் 'நான் யாரின் மீதும் குரோதமோ, பொறாமையோ கொள்ளமாட்டேன். யாருக்கு எதை கொடுக்க இறைவன் நாடியிருக்கிறானோ அதை அவன் கொடுக்கிறான். நாம் ஏன் பொறாமை கொள்ள வேண்டும்' என்றார்.

    உடனே அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'ஆம், இது தான் தங்களை சுவனவாசியாக ஆக்கிவிட்டது'. அவர் தான் சஃதிப்னு அபி வக்காஸ் என்ற நபித்தோழர் ஆவார்.

    இந்த சம்பவம் அடுத்தவர் மீது பொறாமை கொள்ளாமல் இருந்தாலே சுவனம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.

    நபி (ஸல்) கூறினார்கள்: "பகைமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிக்காதீர்கள். சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்." (நூல்: புகாரி)

    நம் மீது யாராவது ஒருவர் பொறாமை கொள்வாரேயானால் பொறுமையை மேற்கொள்ளவேண்டும், பழிவாங்கிவிடக் கூடாது. பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.

    • நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது.
    • தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது.

    `நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது. ரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது. உறவுமுறையினைப் பேணி, சேர்ந்து வாழ்வது ஆயுளை அதிகரிக்கிறது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரலி), நூல்: தப்ரானீ) மேற்கூறப்பட்ட நபிமொழியில் முத்தான மூன்று செயல்களும், அதனால் ஏற்படும் பயன்களும் பட்டியலிடப்படுகின்றன. அவை குறித்து காண்போம்.

    நற்காரியங்கள் புரிவது தீய மரணத்தைத் தடுக்கும்.

    நற்காரியங்கள் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

    'எல்லா நற்செயலும் தர்மமே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அறிவிப்பாளர்; ஜாபிர் (ரலி), நூல்: புகாரி). பொருளாதார உதவி, அன்னதானம், தண்ணீர், ஆடைகள் அளிப்பது, உதவி தேடி நிற்கும் துயருற்றவருக்கு உதவிடுவது, மக்களுக்கு உபகாரம் புரிவது, பிறருக்கு நலம் நாடுவது, வறியவருக்கு உதவுவது, அனாதைகளை ஆதரிப்பது, விதவை களுக்காக பாடுபடுவது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, அண்டை வீட்டாரை அரவணைப்பது, இருவருக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவது, விபத்து, ஆபத்து, பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோருக்கு தொண்டு செய்வது, வழி தவறியவருக்கு நேர்வழி காட்டுவது என்பது போன்ற செயல்பாடுகள் நற்காரியங்கள் ஆகும்.

    இவற்றை செய்வதினால் தீய மரணம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எனவே நற்காரியங்கள் புரிவது அவசியமாகும். நற்காரியங்களால் மட்டுமே தீய மரணங்களை தடுக்க முடியும் என்பது நபி மொழியாகும். 'நற்காரியங்கள் புரிவது தீய மரணத்தையும், பேராபத்துகளையும், பேரழிவு களையும் தடுக்கிறது. மேலும், இவ்வுலகில் நன்மை உடையவர்கள் மறுமையிலும் நன்மை உடையவர்களே ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: தப்ரானீ)

    ரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கும்.

    `யார் தங்களின் பொருட்களை (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'. (திருக்குர்ஆன் 2:274)

    `இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத நாளான மறுமைநாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கின்றான். அவர்களில் ஒருவர், தம் வலக் கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு ரகசியமாகச் செய்பவர் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    'நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ, தொழுகையை நிலைநாட்டு கிறார்களோ நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து ரகசியமாகவும், வெளிப்படையாகவும் (தர்மமாக) செலவு செய்கிறார்களோ அவர்கள் என்றும் அழியாத ஒரு வியாபாரத்தை ஆதரவு வைக்கிறார்கள்'. (திருக்குர்ஆன் 35:29)

    `நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) 'கொடுக்கலும் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை கடைப்பிடிக்கவும், நாம் அவர் களுக்கு அளித்தவற்றில் இருந்து ரகசியமாகவும், பகிரங்கமாகவும் (தான தர்மங்களில்) செலவு செய்யட்டும்' என்று நீர் கூறுவீராக'. (திருக்குர்ஆன் 14:31)

    உறவுகளைப் பேணி வாழ்வது ஆயுளை அதிகமாக்கும்

    `தம் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி).

    `தம் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி).

    `உறவு என்பது அளவிலா அருளாளன் இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னுடன் ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்' என்று கூறினான். இவ்வாறு நபி (ஸல்) தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    `ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதரே! என்னை சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற்செயலை எனக்குக் கூறுங்கள்' என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் 'உறவைப் பேணி வாழ வேண்டும்' என்று கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஅய்யூப் அன்சாரி (ரலி), நூல்: புகாரி)

    `உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: சுபைர் பின் முத்யிம் (ரலி), நூல்: புகாரி)

    நபிகளார் கூறிய முத்தான இந்த மூன்று நற்செயல்களை நமது வாழ்வில் கடைப்பிடிப்போம். எதிர்பாராத விதமாக வரக்கூடிய தீய மரணங்களை தவிர்ப்போம். திருக்குர்ஆன் காட்டிய வழியிலும், நபிகள் நாயகம் வாழ்ந்த வழியிலும் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் நற்பேறுகளைப்பெறுவோம்.

    ×