என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பிரம்மோற்சவ விழா, கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் ஓரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்நிலையில் விழாவின் 8- நாளான நேற்று, காலை 9.30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை உற்சவர் பெருமான் குதிரை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.

    ஞாயிறு விடுமுறை மற்றும் சித்திரை பிரம்மோற்சவம் என்பதால் நேற்று காலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பொது வழியில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.

    மலைப்பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திரண்டதால் அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
    • திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    மணிகண்டம்:

    மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு நற்கருணை பவனியும், இயேசுவின் திருப்பாடுகள் காட்சி எனப்படும் பாஸ்கா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி மாலையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    நள்ளிரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 4 சப்பரங்களில் அருள்நிறை அடைக்கல அன்னை, செபஸ்தியார், அந்தோணியார் மற்றும் ஆவூர் தேர் என்று அழைக்கப்படும் சப்பரத்தில் உயிர் நீத்த ஆண்டவர் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்றது.

    முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நேற்று அதிகாலை நிலையை அடைந்தது. விழாவில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், சோமரசம்பேட்டை, புங்கனூர், மணிகண்டம், திருச்சி, அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று காலை தேரடி திருப்பலி, புது நன்மை ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் உபய தேர்பவனியும், கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பட்டிமன்றம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக மணியக்காரர்கள் சேவியர், ஜெரின் ராஜதுரை, கொத்து மணியக்காரர்கள், கத்தோலிக்க இளைஞர் மன்றத்தினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

    • திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாளை தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது.

    சமயபுரம்:

    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. 18-ந்தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 19-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது. நேற்று இரவு தங்கக்குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மேல் தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 24-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும், 25-ந் தேதி இரவு பஞ்சபிரகார புறப்பாடும் நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி மற்றும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    • நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
    • வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    மணப்பாறை:

    மணப்பாறை நகரின் மையப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பின்னர் மாலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ். குடும்பத்தினர் சார்பில் முதல் தட்டு பூ அம்மனுக்கு செலுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டு சென்றனர். மேலும் மணப்பாறை நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பூக்கள் எடுத்து வரப்பட்டு, ரதங்கள் அனைத்தும் முனியப்பன் கோவில் முன்பிருந்து ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து இரவு நேரங்களிலும் தாரை, தப்பட்டை முழங்க ரதங்கள் வந்த நிலையில் மணப்பாறை பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதையடுத்து சித்திரை திருவிழா வருகிற 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    பின்னர் மே மாதம் 12-ந் தேதி பால்குட விழாவும், 13-ந் தேதி காலையில் பொங்கலிடுதல், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலையில் அம்மன் திருவீதி உலா வரும் வேடபரி நடக்கிறது.

    15-ந் தேதி காப்பு கலைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. பூச்சொரிதல் மற்றும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் அன்பழகன் தலைமையில் செய்து வருகின்றனர்.

    • நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.

    மதுரை:

    சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கிபட்டுடுத்தி நேற்று தங்கப் பல்லக்கில் புறப்பட்டார்.

    மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்றனர். மதுரையில் மூன்று மாவடியில் இன்று காலை 6  மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடை பெற்றது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபா ராதனை காட்டியும் அழ கரை மதுரை மக்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து இன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவ ருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    நாளை காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்பின் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார்.

    பின்னர் சித்ரா பவுர் ணமி தினத்தன்று முக்கிய நிகழ் வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் நடைபெறுகிறது. இதை தரிசிப்பதற்காக லட்சக்க ணக்கான பக்தர்கள் மதுரையில் இப்போதே குவியத் தொடங்கி விட்டனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அடிப்படை வசதிகளை யும் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மேற் கொண்டு வருகிறது.

    • சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்த ரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்கா லங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் அடித்தபடி செல்வது பொதுமக்களை பரவசம் அடையச் செய்கிறது.

    மீனாட்சி அம்மன் பட்டா பிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநா ளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர். மீனாட்சி அம்ம னுக்கு மங்கலநாண் அணி விக்கப்பட்டதும் அங்கு கூடி யிருந்த பெண்கள் தங்களது தாலியை புதுப்பித்துக் கொண்டனர்.

    தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன் றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைக ளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

    இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகா ராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

    அதன்பிறகு பிரியாவிடை-சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். காலை 5.15 மணிக்கு மேல் 5.40 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

     தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி-அம்மன் தேரை இழுத்துச் சென்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி செல்வதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி-சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.

    அதன்பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். பகல் 11.30 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.

     தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீ சார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொண்டனர்.

    திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்ப டுத்தினர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத் தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (22-ந்தேதி) உச்சிகங காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    • மதுரை நோக்கி புறப்பட்டுள்ளார் சுந்தர்ராஜ பெருமாள்.
    • மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் செய்தார் கள்ளழகர்.

    மதுரை:

    மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    3-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெளிபிரகாரங்கள் வழியாக மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி, பரிவாரங்கள், மற்றும் கல்யாணசுந்தரவல்லி யானை முன் செல்ல அழகர் புறப்பாடு நடந்து, 18-ம்படி கருப்பணசுவாமி கோவிலை அடைந்தது.

    அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என முழங்கிய பக்தர்கள் கள்ளழகரை புடை சூழ்ந்து வந்தனர். முன்னதாக தானியங்களையும், பணமுடிப்புகளையும் காணிக்கையாக செலுத்தினர்.

    பொய்கைக்கரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மொத்தம் 483 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார்.

    இந்த நிலையில், அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், இன்று காலையில் மதுரை மாநகருக்குள் வந்தடைந்தார். மாநகரின் எல்லையான மூன்று மாவடி பகுதியில் 'கோவிந்தா' கோஷம் முழங்க எதிர்சேவை செய்து கள்ளழகரை திரளான பக்தர்கள் வரவேற்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக அதிகாலையில் மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் இறங்குகிறார். இதைக்காண மதுரை உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிவார்கள்.

    விழாவில் 24-ந்தேதி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு தசாவதார காட்சியும், 26-ந் தேதி அதிகாலை பூப்பல்லக்கு விழாவும் நடைபெற உள்ளன.

    • திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி:

    மலைக்கோட்டை தாயுமானவ சாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14--ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

     அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷே கமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாள் அன்று சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினா வதிக்கு அவளது பேறுகா லத்தில் தாய் வர முடியாத காரணத்தால், அவளது தாயாக சிவபெருமான் வந்து பேறுகாலத்தில் மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

     6-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ம் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோவி லில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமானவ சாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் 6.10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.

     இந்த தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதை தொடர்ந்து கோவில் யானை லட்சுமியும் செல்ல, பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பல்வேறு வகையான மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.

    இந்த சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி யில் ஆரவா ரத்துடன் கலந்து கொண்டு சிவ சிவா, தாயுமான ஈசா, ஆரூரா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர்.
    • தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார்.

    உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.

    சிதம்பரம் கோவிலில் பூஜை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்தில் இருந்து நீக்கியதுடன் கோவிலில் பூஜை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார்.

    அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம்.

    அச்சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.

    63 நாயன்மார்களை போலவே சைவ மரபில் சந்தான குரவர்கள் என்று நால்வரைச் சொல்வார்கள். அதில் உமாபதி சிவாச்சாரியார் ஒருவர். அவர் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் அருகாமையில் உள்ள கொற்றவன்குடி என்னும் சிற்றூரில் அவதரித்தவர்.

    இவருக்கு சிதம்பரம் கொற்றவன் குடி தோப்பில் திருமடம் இருக்கிறது. நடராஜர் தரிசனத்தின் போது கவிக்கொடி ஏற்றியவர்.

    இன்று அவருடைய குருபூஜை என்பதால், அவருடைய திருமடத்தில் உமாபதி சிவாச்சாரியாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பன்னிரு திருமுறை பாடல் ஓதுதலும் நடைபெறும். இன்றைய தினம் திரு உத்தரகோசமங்கை மங்களநாதருக்கு மங்கள நாயகிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    மணிவாசகப் பெருமானுக்கு திருவுருவக்காட்சி தந்த தலம் இந்த தலம். சொக்கலிங்க பெருமாள் பார்வதிதேவியை பரதவர் குலத்தில் பிறக்கும் படியாக சபித்து சாப விமோசனமாக இத்தலத்தில் அம்பாளை திருமணம் செய்து கொண்டு வேதப் பொருளை உபதேசம் செய்ததாக புராண வரலாறு. எனவே, மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டியே இங்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    • ஸ்ரீ கள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர் சேவை.
    • உமாபதி சிவாசாரியார் குரு பூஜை

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-9 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி மறுநாள் விடியற்காலை 4.20 மணி வரை பிறகு பவுர்ணமி.

    நட்சத்திரம்: அஸ்தம் இரவு 8.50 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர் சேவை. திரிசிராமலை ஸ்ரீ தாயுமானவர். கடையம் ஸ்ரீ வில்வவனநாதர், சங்கர நயினார் கோவில் ஸ்ரீ சங்கரலிங்கப் பெருமாள், திருக்கடவூர் ஸ்ரீஅமிர்த கடேசுவரர் தேரோட்டம், உமாபதி சிவாசாரியார் குரு பூஜை, மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர், தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர், ஆறுமுகமங்கலம் ஆயிரததொன்று விநாயகர் தேரோட்டம், திண்டுக்கல் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-திறமை

    ரிஷபம்-உண்மை

    மிதுனம்-கணிப்பு

    கடகம்-செல்வம்

    சிம்மம்-இன்பம்

    கன்னி-உறுதி

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- தாமதம்

    மகரம்-நற்சொல்

    கும்பம்-பயணம்

    மீனம்-உவகை

    • திருத்தணி, முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும்.
    • தேரோட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் புலி வாகனம்,

    வெள்ளி மயில் வாகனம், சிம்ம வாகனம், ஆட்டுக்கிடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, இரவு என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்நிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் கோவில் மாட வீதியில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    மரத்தேரினை கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து கோவில் மாட வீதிகளில் இழுத்து வந்தனர், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா அரோகரா என்ற கோஷம் மலைக்கோவில் முழுவதும் பக்தி மயமாக காட்சி அளித்தது.

    கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமத்தில் திரிபுராந்தக சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 23-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் இந்த பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் நாளான நேற்று காலை திருத்தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் திரிபுராந்தக சுவாமி, திரிபுரசுந்தரி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர். இரவு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் நாகேஸ்வர சாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபா ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பிறகு உற்சவ மூர்த்திகளான நாகவல்லி சமேத நாகேஸ்வரர் சாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    • அக்னி கேளி எனப்படும் தூத்தேரா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
    • துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக சடங்கு நடத்தப்படுகிறது.

    மங்களூரு ரவி போசவனிக்கே அருகில் உள்ள கடேல் ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோயிலில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் 'அக்னி கேளி' எனப்படும் தூத்தேரா' நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்தேரா' அல்லது 'அக்னி கேளி' என்று அழைக்கப்படும் தீ சடங்கு துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

    துர்காபரமேஸ்வரி கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் கடேலில் உள்ள பழமையான ஒன்றாகும்.

    ஆண்டுதோறும் நடைபெறும் ரவி போசவ விழாவின் ஒரு பகுதியாக, ஆத்தூர் மற்றும் கோடேத்தூர் ஆகிய இரு கிராம பஞ்சாயத்து மக்கள், கடவுளை சாந்தப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியினை கடைபிடித்து வருகின்றனர்.

    இந்த திருவிழா சுமார் 8 நாட்கள் நடைபெறும். அதன் முக்கிய பகுதியாக அக்னி கேளி நடத்தப்படுகிறது.

    இந்த அக்னி கேளி என்பது பனை ஓலையை தீயிட்டு எரித்து அதனை எதிர் குழுவினர் மேல் வீசப்படும். அதாவது இரு கிராமத்தை சேர்ந்த மக்கள் நண்பர்களாக இருந்தாலும், உறவினர்களாக இருந்தாலும், இந்த சடங்கின் போது, தீயிட்ட பனை ஓலையை ஒருவருக்கொருவர் மீது வீசுவார்கள்.

    இந்த நிகழ்வு சுமார் 15 நிமிடங்கள் நடைபெறும். அதன் பின்னர் சடங்கு நிறுத்தப்பட்டு இரண்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்றாக கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்நிகழ்ச்சியின் போது ஆண் பக்தர்கள் மேலாடை இன்றி கலந்துகொள்வார்கள்.

    இந்த அக்னி கேளி என்பது தீய மனசாட்சியைத் தடுக்கவும், அக்னிப்ரியா துர்காபரமேஸ்வரியை மகிழ்விக்கவும் ஒரு அடையாள சைகையாகும். இதுவரை இந்த விழாவில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது.

    இந்த வழிபாட்டில் கலந்துகொள்ள தொலைதூர கிராமங்களில் இருந்து மக்கள் வருகை தருவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, கிராம மக்கள் அம்மனுக்கு ஊர்வலம் எடுத்து, ஒரு குளத்தில் நீராடுவார்கள். அதன் பின் இந்நிகழ்வு நடைபெறும்.

    ×