என் மலர்
ஆன்மிகம்
- இன்று சுபமுகூர்த்த தினம்.
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-18 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை இரவு 11.58 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.13 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை. கோவை கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. திருப்பணி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தரு ளல். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், அன்னை ஸ்ரீ காந்தியம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதிவர்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். சமயபுரம், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-உவகை
மிதுனம்-லாபம்
கடகம்-வரவு
சிம்மம்-போட்டி
கன்னி-மேன்மை
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-மறதி
தனுசு- பாராட்டு
மகரம்-கவனம்
கும்பம்-ஆதாயம்
மீனம்-ஊக்கம்
- மலை உச்சியில் உள்ள கோவிலின் தீர்த்தத்தை ‘அஷ்டபத்ம குளம்’ என்று அழைக்கின்றனர்.
- இந்த ஆலயத்தில் சித்திரை முதல் தேதியில் படித்திருவிழா நடைபெறும்.
கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ளது, பண்பொழி. இங்கு சிறிய குன்றின் மீது திருமலை குமாரசுவாமி கோவில் இருக்கிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பண்பொழி. இங்கு அருள்பாலிக்கும் திருமலைக் குமாரசாமியைத் தரிசனம் செய்ய, 626 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிக்கட்டுகளின் வழியாக மலை ஏறிச் செல்லும் வழியில், இடும்பனுக்கும், தடுவட்ட விநாயகருக்கும் தனிக் கோவில்கள் இருக்கின்றன.
கோவிலின் வடக்கு பிரகாரத்தில் தனிக் கோவிலில் வடக்கு திசை நோக்கி காட்சியளிக்கும் தில்லைக் காளி அம்மன், இந்த தலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள். மலை மீது வாகனங்களில் செல்வதற்கு ஏற்றவாறு சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் திருமலைக்குமரன் நான்கு கரங்களுடன், மேல் வலது கரத்தில் சக்தி ஆயுதம் ஏந்தியும், மேல் இடது கரத்தில் வச்சிராயுதம் ஏந்தியும், கீழ் வலது கரத்தில் அபய முத்திரை காட்டியும், கீழ் இடது கரத்தில் சிம்ம கர்ண முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறார். அதோடு முருகன் அருகில் வேலும், சேவல் கொடியும் இருக்கிறது.
தல வரலாறு
முன் காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக அங்கிருந்த புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீ அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப்பார். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடு" என்றார்.
தான் கண்ட கனவு பற்றி, அப்போது பந்தளத்தை ஆட்சி செய்த அரசருக்கு, கோவில் அர்ச்சகரான பூவன்பட்டர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மன்னனின் உத்தரவின்பேரில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து முருகன் சிலை எடுத்து வரப்பட்டு, இந்த மலையின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் எழுப்பப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. மலை மீது அமையப் பெற்றுள்ள இந்த கோவிலின் முகப்பில், 16 படிகள் ஏறிச் சென்று வணங்கும் சன்னிதியில் உச்சி பிள்ளையார் அருள்புரிகிறார். இந்த பதினாறு படிகளை ஏறிச் சென்று உச்சி பிள்ளையாரை வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலில் உள்ள முருகன் சிலையின் மூக்கில் சிறிய காயம் இருப்பதாகவும், மண்ணில் புதைந்திருந்த சிலையை தோண்டி எடுத்த போது இந்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு 'மூக்கன்', 'மூக்காண்டி' என்றும், பெண் குழந்தைகளுக்கு 'மூக்கம்மாள்' என்றும் பெயர் வைக்கும் வழக்கம் உள்ளது.
மலை உச்சியில் உள்ள கோவிலின் தீர்த்தத்தை 'அஷ்டபத்ம குளம்' என்று அழைக்கின்றனர். இந்தக் குளத்திற்கு 'பூஞ்சுனை' என்ற பெயரும் உண்டு. முன் காலத்தில் இந்த குளத்தில் குவளை என்னும் மலர், நாள் ஒன்றுக்கு ஒரே ஒரு மலர்தான் பூக்குமாம். அந்த மலரை எடுத்து, சப்த கன்னிமார்கள், இத்தல முருகப்பெருமானை வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த தீர்த்தம் 'பூஞ்சுனை' என்ற பெயரைப் பெற்றது. மேலும் தீர்த்தக் கரையில் சப்த கன்னியர் திருமேனிகள் இருப்பதும் இதை உறுதிபடுத்துகிறது. அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள், கவிராசப்பண்டாரத்தையா ஆகியோர், இத்தல முருகனைப் பற்றி பாடல் பாடியுள்ளனர். விசாக நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயமாக இந்த திருமலை முருகன் கோவில் திகழ்கிறது.
இந்த ஆலயத்தில் சித்திரை முதல் தேதியில் படித்திருவிழா நடைபெறும். அதேபோல் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
செங்கோட்டையில் இருந்து வடமேற்கில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பண்பொழி கிராமம் உள்ளது. அங்கிருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால்தான் மலைமீது உள்ள திருமலை குமாரசாமி கடவுளை நாம் தரிசிக்க முடியும். இத்திருக்கோவில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-16 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: அமாவாசை காலை 7.17 மணி வரை. பிறகு பிரதமை நாளை விடியற்காலை 4.40 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: சதயம் பிற்பகல் 3.04 மணி வரை. பிறகு பூரட்டாதி.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கோவை ஸ்ரீகோணியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. திருக்கோகர்ணம், ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீசைலம், திருவான்மியூர் கோவில்களில் ஸ்ரீசிவபெருமானுக்கு திருக்கல்யாணம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லி தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெருதிருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-யோகம்
ரிஷபம்-பெருமை
மிதுனம்-போட்டி
கடகம்-அமைதி
சிம்மம்-கவனம்
கன்னி-நிம்மதி
துலாம்- பக்தி
விருச்சிகம்-பொறுமை
தனுசு- பண்பு
மகரம்-வெற்றி
கும்பம்-நன்மை
மீனம்-பாசம்
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
- தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியிலிருந்து 13-நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இரவு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
இன்று காலை மூலஸ்தானத்தில் உள்ளஅம்மனுக்கும், சிவபெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவ அம்மனுக்கு ஆங்கார அங்காளி அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு மயானத்தை நோக்கி அம்மன் புறப்பட்டு மயானத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை , காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை விழா ஆகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலக்குழு தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
- 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- அதிகாலை முதல் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
குறிப்பாக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்து புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரி திருவிழாவில் இன்று காலை சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் எழுந்தருளினர். மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
- அனுவாவி என்பதற்கு, 'சிறிய குளம்' என்றும் பொருள்.
- முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். முருகன் குறிஞ்சி நிலக்கடவுள். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலமாகும். உருவ வழிபாட்டில் தொன்மையானது முருகன் வழிபாடாகும்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். அத்தகைய பேரருள் பெற்ற முருகன், இந்த வழியாக சஞ்சீவி மலையை தூக்கிச் சென்ற அனுமனுக்கும் அருள் செய்து தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டுள்ளார். அந்த இடம் கோயம்புத்தூர் அருகே உள்ள அனுவாவி மலையாகும்.

'அனு' என்பது அனுமன் என்னும் ஆஞ்சநேயரைக் குறிக்கிறது. மேலும் 'வாவி' என்பது தமிழில் நீர் வளம்' என்று பொருள்படும். எனவே. 'அனுவாவி' என்பது 'ஆஞ்சநேயருக்காகத் தோன்றிய நீர் ஆதாரம்' என்று பொருள். காலப்போக்கில், அந்த பெயர் 'அனுவாவி' என்று மாறியது.
அனுமனின் தாகம் தீர்க்க ஆறுமுகப்பெருமான் உருவாக்கிய மலை இது என்று புராணக் கதைகளில் கூறப்படுகிறது. வடக்கே குருவிருட்ச மலை, தெற்கே அனு வாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று திக்கெல்லாம் சூழ்ந்து நிற்க, ஏறத்தாழ ஒரு பசுமைப் பள்ளத்தாக்கில் வீற்றிருக்கிறார். முருகப்பெருமான்.
இந்த இடம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூவகையில் சிறப்புடையது. அனுவாவி என்பதற்கு, 'சிறிய குளம்' என்றும் பொருள்.
கோவில் பகுதியில் ஒரு பெரிய மரம் அடர்ந்து பரந்து வளர்ந்திருக்கிறது. அருகில் அகத்தியர் ஆசிரமமும், அதில் சித்த வைத்திய சாலையும் இருக்கிறது. பசுமை படர்ந்த மலைகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. அந்த அற்புதமான சூழல், மனத்திற்கு அமைதியைக் கொடுக்கிறது.
பிரமாண்டமான நுழைவுவாசல் வரவேற்கிறது. அதன் மேல் வளைவில் சுப்ரமண்ய கணபதீச்சரம் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நுழைவு வாசலில் நின்று பார்த்தால் மேலே முருகனின் கோவில் மிக அருகில் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அடிவாரத்தில் இருந்து 423 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
அடிவாரத்தின் முன் மண்டபத்தில் வழித்துணை விநாயகர் இருக்கிறார். கொஞ்சம் மேலே போனால் இடும்பன் சன்னிதியும், மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோவிலும் அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத் தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி உள்ளார். நவக்கிரக சன்னிதி உள்ளது. சிவபெருமான் அருணாசலேஸ்வரராக அருள்கிறார்.
இந்த பகுதியில் ஒரு வற்றாத நீரூற்று பாய்கிறது. இந்த நீரூற்று உச்ச கோடையில் கூட ஒருபோதும் வறண்டு போவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது. இந்த வற்றாத நீரூற்றுக்குப் பின்னால் ஒரு கதை உள்ளது.

இலங்கையில் ராவணன் மீதான யுத்தத்தை ராமன் தொடங்கியிருந்தார். அதன் ஒரு கட்டத்தில் ராவணனின் மகன் தொடுத்த அம்பின் வீரியத்தால், லட்சுமணன், வானரப்படையின் ஒரு பகுதி என்று பலரும் மயங்கி விழுந்தனர்.
அவர்களை காப்பாற்ற இமயமலை தொடரில் உள்ள சஞ்சீவி மலையில் வளர்ந்திருக்கும் சில மூலிகைச் செடிகள் தேவைப்பட்டது. அதைக்கொண்டு வர அனுமன் சென்றார். அவர் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டுவானில் பறந்து சென்றபோது, அவருக்கு தாகம் ஏற்பட்டது.
அவருக்கு முருகப்பெருமான் தன் வேல் கொண்டு ஒரு சுனையை ஏற்படுத்தி, ஆஞ்சநேயரின் தாகத்தை தீர்த்துள்ளார் என்கிறது இவ்வாலய தல வரலாறு.
இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு நேர் தென் புறத்தில் மருதமலை உள்ளது. இவ்வாலயத்தில் குழந்தை வரம் வேண்டுபவர்கள், தொடர்ச்சியாக 5 செவ்வாய்க் கிழமைகளில் வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.
திருமணத் தடை உள்ளவர்கள், இத்தல முருகனுக்கு தாலி, ஆடை போன்றவற்றை காணிக்கை செலுத்தி, கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கமாக உள்ளது. இவ்வாலயம் தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்:
கோவை உக்கடத்தில் இருந்து 26ஏ எண்ணுள்ள பேருந்து காந்திபுரம், துடியலூர் வழியாக அனுவாவி கோவிலுக்குச் செல்கிறது.
- இன்று சர்வ அமாவாசை.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-15 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி காலை 9.01 மணி வரை
பிறகு அமாவாசை
நட்சத்திரம்: அவிட்டம் மாலை 4.07 மணி வரை
பிறகு சதயம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ அமாவாசை. (ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர், திருவெண்காடு, திலதைப்பதி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று). சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருக்கோகர்ணம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ சைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் ரதோற்சவம். கோவை ஸ்ரீ கோணியம்மன் கிளி வாகன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷ்ணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-பரிசு
சிம்மம்-ஓய்வு
கன்னி-வெற்றி
துலாம்- ஜெயம்
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- செலவு
மகரம்-அமைதி
கும்பம்-வரவு
மீனம்-சாதனை
- பக்தர்கள் சிவகோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. 12 ஜோதி லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் 8-ம் நாளான நேற்று காலை நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி எழுந்தருளினார். மாலையில் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்தனர்.
சிவராத்திரியான இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு ராமநாத சுவாமிக்கும்-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றன. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றன.
சிகர நிகழ்ச்சியான மகாசிவராத்திரி தேரோட்டம் காலை 9 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவகோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு சுவாமி-அம்பாள் மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளி ரதத்தில் வீதி உலா வருகின்றனர். நாளை (27-ந்தேதி) காலை இந்திர விமானத்தில் வீதி உலாவும், பிற்பகல், மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளு கின்றனர்.
28-ந்தேதி இரவு பிச்சாடனர் எழுந்தருளர் நிகழ்ச்சியும், 1-ந்தேதி சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாரதி, செயல் அலுவலர் சிவராம்குமார், உதவி ஆணையர் ரவீந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் கோவில் நடை இரவு முழுவதும் திறந்திருக்கும்.
- இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
- நாளை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி பெருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி இன்று காலையில் கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மேலும் காப்பு கட்டுதல், சக்தி கரக ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 2-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
அதாவது சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி பார்வதிதேவி ஆங்கார உருவம் கொண்டு பிரம்மனின் தலையை மயானத்தில் மிதித்து சிவனுக்கு சாப விமோசனம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மயானக் கொள்ளை விழா நடை பெறுகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் கோவில் சார்பில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமாக மயானத்துக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதன் பின்னர் அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
நாளை இரவு வழக்கமாக அமாவாசை அன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்மலையனூர்அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி பெரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஷே க் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 28-ந்தேதி வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்தாண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதலே சதுரகிரிக்கு பக்தர்கள் வர தொடங்கினர்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து பஸ் கார், வேன் மூலம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரமான தாணிப்பாறையில் தங்கி அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
இன்று சிவராத்திரி என்பதால் நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் குவிய தொடங்கினர். காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனர்.
சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பக்தர்கள் ஏராளமானோர் உற்சாகமாக மலையேறினர். சங்கிலி பாறை, வழுக்குப்பாறை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கூட்டம் அதிகளவில் இருந்ததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாரை சாரையாக சென்றனர். 4 முதல் 5 மணி நேரம் நடந்து சென்று பக்தர்கள் சுந்தர, சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு கோவில் பகுதி மற்றும் அடிவாரத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
பக்தர்கள் வருகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று சுந்தர, சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆரா தனைகள் நடைபெற்றன. இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். இரவில் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை.
- சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது.
- மூன்றாம் கால பூஜையை லிங்கோத்பவ காலம் என்று அழைப்பர்.
முதல் கால பூஜை - இரவு, 6:30- 9:30pm;
இரண்டாம் கால பூஜை இரவு 9:30-12:30pm;
மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:30- 3:30am,
நான்காம் கால பூஜை அதிகாலை, 3:30-6:00 am..
மகா சிவராத்திரி:
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மகாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
மகா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேஷமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூஜைகளின் போது எவற்றை எல்லாம் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் யாமம்:
இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் யாமம்:
இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் யாமம்:
இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காம் யாமம்:
இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு - பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக.
- முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம்.
- சிவனின் அருளும், நினைத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.
சிவ பெருமானுக்குரிய எட்டு முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம் ஆகும். இது சிவ பெருமானுக்கு விருப்பமான இரவாக கருதப்படுகிறது. தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் ஈசனை பூஜித்து, வழிபடும் காலமாகும். அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவ பூஜை செய்வது சிறப்பு.
மகா சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும் கண்விழித்து, சிவ பெருமானை வழிபடுவதால் மகா சிவராத்திரியில் விரதம் இருந்து, கண் விழித்த பலனும், சிவனின் அருளும், நினைத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

மகா சிவராத்திரி:
சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாள் மகா சிவராத்திரி தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாப்படுகிறது. சிவ பெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளையே மகா சிவராத்திரி தினமாக கொண்டாடுவதாக புராணங்கள் சொல்கின்றன.
இந்த நாளில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் மாலை துவங்கி, இரவு முழுவதும் சிவ பெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும்.
மகா சிவராத்திரி விரத பலன்கள்:
மகா சிவராத்திரி அன்று நாள் முழுவதும் சிவனை வேண்டி விரதம் இருந்து, வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். துன்பங்கள் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவ பெருமானின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக மகாசிவராத்திரி விழா கருதப்படுகிறது. அதுவும் மகா சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிவ பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் அப்படியே நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

சிவராத்திரி பூஜை:
சிவ பெருமானை, காலத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுவது உண்டு. அதனால் சிவ வழிபாடு செய்வதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டியது கிடையாது. ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட எந்த கெட்ட நேரங்களின் பாதிப்பும் சிவ வழிபாட்டை பாதிக்க முடியாது.
மகா சிவராத்திரி பூஜைகள் என்பது மாலை 6 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை 6.30 வரை நடைபெறும். மொத்தம் நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கால பூஜையும் சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும்.
சிவனை வழிபட ஏற்ற நேரம்:
மகா சிவராத்திரியின் நான்கு கால பூஜைகளில் மிகவும் முக்கியமானது மூன்றாம் கால பூஜை தான். இது நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, அதிகாலை 3 மணி வரை நடைபெறும். இந்த மூன்றாம் காலத்தின் முதல் 50 நிமிடங்கள் மிக மிக முக்கியமானதாகும்.
இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைக்கு நிஷித கால பூஜை என்று பெயர். இது தான் சிவ பெருமானை வழிபடுவதற்கு மிக மிக ஏற்ற நேரமாகும்.
இந்த ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி மகா சிவராத்திரி அமைந்துள்ளது. அன்றைய தினம் இரவு 12.09 முதல் 12.59 வரையிலான நேரத்தில் சிவனிடம் நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நடைபெறும்.
விரதத்தை நிறைவு செய்யும் நேரம்:
மகா சிவராத்திரி பூஜையில் மூன்றாம் கால பூஜை என்பது பார்வதி தேவி, சிவ பெருமானை வழிபட்ட காலமாகும். அந்த சமயத்தில் நாமும் வழிபட்டால் சிவபெருமானின் அருளும், பார்வதி தேவியின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகா சிவராத்திரி விரதம் பிப்ரவரி 27-ந் தேதி காலையில் தான் நிறைவடையும். அதனால் அன்று காலை 7 மணிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வதால் செல்வ வளமும், சிவ பெருமானின் அருளும் கிடைக்கும்.






