என் மலர்
நீங்கள் தேடியது "பத்மநாபசுவாமி கோவில்"
- பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். விஷ்ணுவுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து பத்ம நாபசுவாமி கோவிலின் மேலாளர் ஸ்ரீகுமார் கூறியிருப்பதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி கோவிலின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், கடந்த 2021-ம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கி நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றிருக்கிறது.
இதனால் பத்மநாபசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி நடத்தப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள், சன்னதியின் முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல் கோபுரத்தில் இருக்கும் கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் கும்பாபிஷேக நாளில் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.
பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள பத்மநாபசுவாமி பக்தர்களுக்கு கும்பாபிஷேக சடங்குகளை காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவிலின் மரபுகளை பின்பற்றி புனித நிகழ்ச்சிகள் நடைபெறுவதை உறுதி செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
- அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் ஸ்ரீபத்ம நாபசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். சம்பவத் தன்றும் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கோவிலுக்கு வந்திருந்தனர். தரிசன நேரம் முடிந்ததும் கோவில் பணியாளர்கள் நடை சாத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவிலின் கருவறையில் இருந்த நைவேத்ய உருளி (வெண்கல பாத்திரம்) மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உருளியை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. கோவிலை சுற்றி வந்த போது அவர்கள் அதனை எடுத்து உடைக்குள் மறைத்து கொண்டு சென்ற தும் உறுதியானது.இது குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தியபோது, அந்தக் கும்பல், திருவனந்த புரத்தில் இருந்து உடுப்பி சென்றதும், அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானா சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரி யானா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 3 பெண்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற டாக்டர் ஜெகனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதானவர்கள் கூறுகையில், கோவிலில் இருந்து கப்பலை (வெண்கல பாத்திரம்) திருடியது பண ஆதாயத்திற்காக அல்ல. பூஜை அறையில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பியதால் தான் எடுத்து வந்ததாக கூறினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருவனந்தபுரம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பத்மநாபசுவாமி கோவிலில் குறிப்பிடத்தக்க பொக்கிஷங்கள் உள்ளதால், 2011-ம் ஆண்டு முதல் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் உள்ளது. இந்த நிலையில் கோவிலில் திருட்டு நடைபெற்றுள்ளது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.






