என் மலர்tooltip icon

    உலகம்

    • பிரசார நிதிக்காக பல தொழிலதிபர்களை டிரம்ப் சந்தித்து பேசி வருகிறார்
    • பாம் பீச் விமான நிலையத்தில் இருவரின் விமானங்களையும் கண்டதாக செய்திகள் வெளியாகின

    அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதில் போட்டியிட உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

    தனது பிரசாரங்களுக்கு நிதி தேவைப்படுவதால் குடியரசு கட்சி ஆதரவாளர்களில் பல முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து டொனால்ட் டிரம்ப் நிதியுதவி கோரி வருகிறார்.

    இந்நிலையில், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்கை டொனால்ட் டிரம்ப் சந்தித்து பிரசாரங்களுக்கு நிதி கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


    புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் டொனால்ட் டிரம்ப் நடத்திய பல பிரமுகர்களுடனான சந்திப்பில் எலான் மஸ்க் கலந்து கொண்டார்.

    பாம் பீச் விமான நிலையத்தில் எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரின் விமானங்களும் ஒரு மணிக்கும் குறைவான கால இடைவெளியில் வந்திறங்கியது குறித்து முன்னரே தகவல்கள் வெளியாகின.

    2024 அதிபர் தேர்தல் போட்டிக்கு டிரம்பை எலான் மஸ்க் ஆதரிப்பாரா என்பது தற்போது வரை தெரியவில்லை.

    2022ல் தனக்கு ஆதரவாக மஸ்க் வாக்களித்ததாகவும் அதை அவரே ஒப்பு கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை அப்போது மஸ்க் மறுத்தார்.

    இதுவரை அமெரிக்காவின் இரு கட்சிகளில் எந்த கட்சியையும் சாராதவராக தன்னை முன்னிறுத்தி வந்திருக்கும்  உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டிரம்பை ஆதரிக்கும் பட்சத்தில், பைடனின் வெற்றி வாய்ப்புகள் பெருமளவு குறையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்குகின்றன
    • இன்று அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது

    2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg) என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக் (Facebook).

    உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.

    தற்போது மெட்டா (Meta) எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜூக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.

    நேற்று, உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் முடங்கின.

    இதனால், அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.

    சில மணி நேரங்கள் கடந்ததும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

    இந்நிலையில், இன்று அமெரிக்க பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது.

    இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜூக்கர்பர்க், ரூ.25 ஆயிரம் கோடி ($3 பில்லியன்) சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    • விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிகிறது
    • 3 குழந்தைகள் உட்பட 5 பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்

    கடந்த திங்கட்கிழமையன்று, கனடா நாட்டின் ஒன்டாரியோ (Ontario) நகரிலிருந்து சிங்கிள்-எஞ்சின் பொருத்தப்பட்ட ஒரு சிறிய விமானம் புறப்பட்டது. அந்த விமானம் சேர வேண்டிய இடம் மற்றும் பயண திட்டம் குறித்து தற்போது தகவல்கள் இல்லை.

    அந்த சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் குழந்தைகள்.

    அந்த விமானம் அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) மாநில நேஷ்வில் (Nashville) நகர்புறத்தில் உள்ள ஜான் டியூன் (John Tune) விமான நிலையத்தில் 2,500 அடி உயரத்தில் வட்டமிட்டு, சிறிது நேரத்தில் அங்கிருந்து பறந்தது.

    அந்த விமானத்தின் விமானி, தரைக்கட்டுப்பாட்டு தளத்தை ரேடியோவில் தொடர்பு கொண்டு விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறினார்.

    உடனடியாக, ஜான் டியூன் விமான நிலையத்தில் ஓடுதளம் எண். 2ல் (Runway 2) அந்த விமானத்தை இறக்குமாறு  நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானியிடம் கூறினர்.

    ஆனால், சில நொடிகளில் எஞ்சின் முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும் விமான நிலையத்தில் இறக்குவது கடினம் என்றும் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் விமானி கூறினார்.


    இதைத் தொடர்ந்து விமான நிலையத்தை தாண்டி சென்ற விமானம், அங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கீழே விழுந்து நொறுங்கியது.

    இன்டர்ஸ்டேட் 40 நெடுஞ்சாலைக்கு 60 அடிக்கு முன்னர் நேஷ்வில் புறநகர் பகுதியில் மாலை சுமார் 08:00 மணியளவில் இந்த விமான விபத்து நடந்தது. கீழே விழுத்து நொறுங்கிய அந்த விமானம் உடனே தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது.

    இந்த விபத்தில் இந்த விமானத்தில் பயணித்த 3 குழந்தைகள் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர்.

    அந்த 5 பயணிகளின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

    விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (National Transport Safety Board) அதிகாரி ஆரோன் மெக்கார்டர் (Aaron McCarter) தெரிவித்தார்.

    விபத்து நடைபெறும் வரை விமானி பதட்டமாகாமல் தொடர்பில் இருந்ததாக விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த விமானம், 10,500 அடி உயரத்தில் நீண்ட நேரமாக எந்த சிக்கலும் இன்றி பயணித்து வந்துள்ளது தரைக்கட்டுப்பாட்டு நிலைய தகவல்களில் இருந்து தெரிய வருகிறது.

    • ரஷியாவின் 33 சதவீத கப்பல்களை செயல் இழக்க வைத்துள்ளோம் என்கிறது உக்ரைன்.
    • இதுவரை மூன்று கப்பல்களை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது.

    ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டதில் இருந்து ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறது.

    டிரோன் மூலம் ரஷியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இரண்டு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று கருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான செர்கெய் கோட்டோவ் என்ற கப்பலை கெர்ச் ஜலசந்தி அருகே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளோம் என உக்ரைன் பாதுகாப்பு புலனாய்வு தெரிவித்துள்ளது. அந்த கப்பல் 1300 டன் எடை கொண்டதாகும்.

    செர்கெய் கோட்டோவ்-ஐ இதற்கு முன்னதாக தாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது எனவும் உக்ரைன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவுக்கு எதிரான போரில் பின்னடைவை சந்தித்து வந்தாலும், உக்ரைன் கடந்த சில மாதங்களாக ரஷியாவின் போர்க்கப்பல்களை டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் கருங்கடலில் அரிதான மூலோபாய வெற்றி எனக் கருதப்படுகிறது. கடந்த மாதம் ரஷியாவின் லேண்டிங் கப்பல் இதுபோன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது.

    கடந்த மாதம், ரஷியாவின் 33 சதவீத கப்பல்களை (23 கப்பல் மற்றும் ஒரு நிர்மூழ்கி கப்பல்) செயல் இழக்க வைத்து விட்டோம் என உக்ரைன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    2022 ஏப்ரல் மாதம் மோஸ்க்வா என்ற ஏவுகணை வழிகாட்டி கப்பலை ரஷியா இழந்தது பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

    • பிலிப்பைன்சில் வரலாறு காணாத அளவில் அரிசி விலை உயர்ந்துள்ளது.
    • அரிசி விலையை குறைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    மணிலா:

    பிலிப்பைன்சில் சமீப காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த டிசம்பருடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் உயர்ந்து 22.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    அரசின் கையிருப்பில் உள்ள அரிசியை சட்ட விரோதமாக விற்பனை செய்ததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

    இதற்கிடையே அரிசி விலையை குறைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே வேளாண் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டது.

    இந்நிலையில், அரிசி விற்பனை ஊழல் தொடர்பாக தேசிய உணவு ஆணையத்தின் தலைவர், அதிகாரிகள் உள்பட 138 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வேளாண்துறை மந்திரி பிரான்சிஸ்கோ டியு லாரல் கூறினார்.

    • வடகிழக்கு இந்தியர்கள் தோற்றத்தில் தைவான் நாட்டினரை போல் உள்ளனர் என்றார் அமைச்சர்
    • தவறாக புரிந்து கொள்ளப்பட்ட என் கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார் சூ மிங்-சுன்

    கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு, தைவான் (Taiwan). இதன் தலைநகரம் தைபே (Taipei).

    தைவான் நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சர், சூ மிங்–சுன் (Hsu Ming-chun), சில தினங்களுக்கு முன் அந்நாட்டில் பல்வேறு துறைகளில் நிலவும் தொழிலாளர் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து ஊழியர்கள் வருவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து பேட்டியளித்தார்.

    அந்த பேட்டியில் மிங்–சுன் தெரிவித்ததாவது:

    தைவான் தொழிலாளர் துறை, வடகிழக்கு இந்திய மக்களை பணியில் அமர்த்த முன்னுரிமை வழங்க உள்ளது.

    ஏனென்றால் அவர்களின் தோற்றம், தோல் நிறம், உணவு பழக்கவழக்கங்களும் தைவான் நாட்டு மக்களுடன் பெருமளவு ஒத்து போகிறது.

    மேலும், இப்பகுதியில் உள்ள மக்கள் (பெரும்பாலும் கிறித்துவர்கள்) கட்டுமானத்துறை, உற்பத்தித் துறை, விவசாயம் உள்ளிட்டவைகளில் திறன் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

    இவ்வாறு மிங்–சுன் தெரிவித்தார்.

    பாகுபாடுகளை வளர்க்கும் விதமாக மிங்–சுன் கூறிய கருத்துகள் உள்ளதாக இந்தியாவில் அவரது பேச்சிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது.

    இதை தொடர்ந்து, இன்று, அமைச்சர் மிங்–சுன், "இந்திய பணியாளர்களின் திறமையை மேம்படுத்தி நான் பேச முற்பட்டது, தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. தவறாக புரிந்து கொள்ளப்பட்ட என் கருத்துகளுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு பணியாளர்கள் அனைவருக்கும் இடையே எந்தவித பாகுபாடுகளும் இல்லாத வகையில்தான் தைவானின் தொழிலாளர் நல சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன," என தெரிவித்தார்.

    தைவானின் தொழிலாளர் துறை மற்றும் வெளியுறவுத் துறை, முன்னரே அமைச்சரின் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியர்களை பணியில் அமர்த்தும் ஒரு நாடு, இந்திய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளை குறிப்பிட்டு முன்னுரிமை வழங்க உள்ளதாக கூறியது இதுவே முதல்முறை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலிய ராணுவப்படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, இஸ்ரேல் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர்.

    லெபனான் தாக்குதலில் பலியானவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மேக்ஸ்வெல் (31) என்றும், இந்தத் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
    • சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து மாலத்தீவு, சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்நிலையில் சீனா-மாலத்தீவு இடையே புதிய இரண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் மவுமூன், சீன அரசின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுன் ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவிகளை வழங்க சீனா உறுதியளித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தலைமை செயல் அதிகாரியான பராக் அக்ரவாலை மஸ்க் நீக்கினார்
    • தர வேண்டிய தொகையை தராமல் இருப்பது மஸ்கின் வழிமுறை என நால்வரும் குற்றம் சாட்டினர்

    டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (52), கடந்த 2022 அக்டோபர் மாதம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இணையவழி உரையாடல்களுக்கான சமூக வலைதளமான "டுவிட்டர்" (Twitter) எனும் வலைதளத்தை, $44 பில்லியனுக்கு வாங்கினார்.

    டுவிட்டரின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், எலான் மஸ்க், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

    அவற்றில் ஒன்றாக அதுவரை இருந்து வந்த தலைமை செயல் அதிகாரியான "பராக் அக்ரவால்" (Parag Agrawal) எனும் இந்தியரை அப்பதவியில் இருந்து நீக்கினார்.

    மேலும், டுவிட்டர் பெயரை "எக்ஸ்" (X) என மாற்றினார் மஸ்க்.

    எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் குறைய தொடங்கியதை அடுத்து, பல நடவடிக்கைகள் மூலம் அதனை லாபகரமானதாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மஸ்க் எடுத்து வருகிறார்.


    இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தின் முன்னாள் உயர் அதிகாரிகளான பராக் அக்ரவால், நெட் சீகல், விஜய கட்டே, ஷான் எட்ஜெட் உள்ளிட்ட 4 பேர், தங்களை பணிநீக்கம் செய்ததற்கு ஈடாக மஸ்க் வழங்க வேண்டிய $128 மில்லியன் தொகையை வழங்கவில்லை என அவர் மீது சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    மேலும், டுவிட்டரை விலைக்கு வாங்கிய சில நிமிடங்களிலேயே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தங்களை வெளியேற்றியதாக இந்த நால்வரும் மஸ்க் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

    தான் திருப்பி தர வேண்டிய தொகையை தராமல் பிறரை அவர் மீது வழக்கு தொடுக்க செய்து காலம் கடத்துவதுதான் மஸ்கின் வழிமுறை என தங்கள் குற்றச்சாட்டில் அந்த நால்வரும் பதிவு செய்துள்ளனர்.

    தற்போது வரை இது குறித்து எக்ஸ் நிறுவனம், அதிகாரபூர்வமாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    • அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சுமார் 50 சதவீதம் UPF பயன்பாட்டில் உள்ளன
    • சுவை, திடம், நிறம் கெடாமல் இருக்கும் வகையில் செயற்கை முறையில் இவை தயாரிக்கப்படுகின்றன

    அவசர உணவு தேவைக்கு வீடுகளிலும் உணவகங்களிலும் பதப்படுத்தப்பட்ட உணவு (Processed Foods) வகைகளை பயன்படுத்துதல் தவிர்க்க இயலாத நடைமுறையாக மாறி வருகிறது.

    இயற்கை உணவு வகைகளில் பலவிதமான ரசாயன கூட்டுகளை சேர்த்து, தொழில் ரீதியாக தயாரிக்கப்பட்டு, நீண்ட நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், "தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள்" அல்லது "அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகள்" (Ultra-processed Foods) எனப்படும்.

    அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குடிமக்களின் உணவு வகைகளில் சுமார் 50 சதவீதம் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான் பயன்பாட்டில் உள்ளன.


    இத்தகைய உணவு வகைகளினால் உடல்நலனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பல லட்சம் மக்களை உள்ளடக்கி செய்யப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள், கட்டுரையாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (British Medical Journal) எனும் மருத்துவ பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த ஆய்வறிக்கை தெரிவிப்பதாவது:

    அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், 32 வகையான தீவிர உடல்நல கேடுகள் உருவாக வாய்ப்புள்ளது.

    புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள், மனநல பாதிப்பு, சுவாச மண்டல குறைபாடுகள், இருதய மற்றும் ரத்தக் குழாய் குறைபாடுகள், நாளமில்லா சுரப்பி கோளாறுகள், குடல் மற்றும் இரைப்பை கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இவை வழிவகுக்கின்றன.

    உடலாரோக்கிய மேம்பாட்டிற்கு இத்தகைய அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

    இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    பேக்கரி உணவு வகைகள், குளிர்பானங்கள் மற்றும் சோடாக்கள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்படு தயாரிக்கப்படும் உணவுகள், வறுவல் வகைகள், புரதச் சத்து "பார்" மற்றும் பவுடர்கள், உடனடியாக சாப்பிடும் (ready-to-eat) உணவுகள், ஐஸ்கிரீம்கள் உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் அடங்கும்.

    இத்தகைய உணவு பொருட்களை தயாரிக்கும் பொழுதோ அல்லது இவற்றில் பயன்படுத்தப்படும் பல மூலப்பொருள்களை தயாரிக்கும் பொழுதோ, அவற்றில் செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டு, அடர்தன்மைக்காகவும், சுவைக்காகவும், அழகான தோற்றத்திற்காகவும் பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்டு, கெட்டு போகாமல் இருக்க "பிரிசர்வெட்டிவ்" (preservative) எனும் ரசாயனங்கள் கலக்கப்பட்டு, அத்துடன் அளவிற்கு அதிகமாக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ளிட்டவை சேர்த்து செயற்கையான முறையில் சிறு மற்றும் பெரும் உற்பத்திசாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.


    இத்தகைய தயாரிப்புகள் உற்பத்திக்கூடங்களிலிருந்து கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் காலம், மக்களிடம் விற்பனை செய்யப்படும் வரையில் கடைகளில் உள்ள நாட்கள், பயன்படுத்தும் வரை வீடுகளில் ரெஃப்ரிஜிரேட்டர்களில் வைத்திருக்கும் காலம் ஆகியவை கடந்தும் சுவை, திடம், நிறம் கெடாமல் இருக்கும் வகையில் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன.

    இவற்றில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மிக குறைவு என்பதால் மனிதர்களின் சிந்திக்கும் மற்றும் செயலாற்றும் திறனை இவை படிப்படியாக குறைத்து விடும் என ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

    • ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்
    • வாக்குச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது

    2024 இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த 2023ல் இருந்தே அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் மும்முரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.

    டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    2021 ஜனவரி 6 அன்று, அப்போதைய அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான போது, அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக வன்முறையில் ஈடுபடும்படி தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கொலராடோ மாநிலத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், தேர்தல் வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19 அன்று உத்தரவிட்டிருந்தது.

    இதனால் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி இருந்ததுடன், அவருக்கு இது பெரும் பின்னடைவாகவும் கருதப்பட்டது.


    இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

    இதனை விசாரித்த நீதிபதிகள், கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்.

    அதிபர் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் அரசியல் சட்ட பிரிவை மாநிலங்கள் பயன்படுத்த கூடாது என்றும் மத்திய அரசில் பெரும் பொறுப்பு வகிப்பவர்களுக்கு எதிராகவும் தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பாராளுமன்றம் மட்டுமே இச்சட்டத்தை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம், வாக்குச்சீட்டில் டொனால்ட் டிரம்ப் பெயர் இடம்பெறுவதில் தடை ஏதுமில்லை எனும் நிலை உருவாகி உள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள கணக்கில், "அமெரிக்காவிற்கு பெரிய வெற்றி" என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
    • ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

    உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார். நேற்று பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு 7.2 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில் அவரின் நிகர சொந்த மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்கா டாலராக குறைந்துள்ளது.

    இதனால் அமேசான்  நிறுவனர் பெசோஸ் 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    60 வயதாகும் பெசோஸ் ப்ளூம்பெர்க்கின் தரவரிசையில் முதன்முறையாக உலக கோடீஸ்வரரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்- பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

    2022-ல் இருந்து ஏறக்குறைய அமேசானின் பங்குகள் இரண்டு மடங்கு அதிகரித்தது. டெஸ்லாவின் பங்கு 2021-ல் அதன் உச்சத்தில் இருந்து சுமார் 50 சதவீதம் அளவிற்கு குறைந்ததாக கூறப்படுகிறது. இந்த பங்கு சந்தையின் விளைவு காரணமாக அமேசான் டாம் காம் நிறுவனர் பெசோஸ் தற்போது நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஷாங்காயில் இருந்து ஏற்றுமதியாகும் டெஸ்லா காரின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாக குறைந்து வந்த காரணத்தால் பங்கு சந்தையில் சரிவை கண்டுள்ளது. அதேவேளையில் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து ஆன்லைன் விற்பனையில் அபரித வளர்ச்சியை பெற்றுள்ளது.

    ×